Wednesday, December 17, 2014

பீஷ்மரின் யோசனை!

“தாயே, நாம் இவற்றிலிருந்து தப்ப முடியாது.  தப்பிச் செல்லும் வழியையும் பார்க்கக் கூடாது.  இந்த நாட்டையும் இதன் அரசாட்சியையும் காக்கவேண்டியது நம் பொறுப்பு.  நம் தர்மம். அதிலிருந்து நாம் எக்காரணத்தைக் கொண்டும் விலகக் கூடாது. கடைசி வரைக்கும் நாம் நம் முயற்சிகளைத் தொடரவேண்டும்.  நம்மால் செய்ய முடிந்ததைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். நம் உயிரைவிட மேலான இந்த நாட்டுக்கு நம் கடமையைச் செய்தாக வேண்டும். ஒருவேளை துரியோதனன், கர்ணன், அஸ்வத்தாமன், துஷ்சாசனன் ஆகியோரின் உதவியோடு இந்த ஹஸ்தினாபுரத்தை ஆள ஆரம்பித்தான் எனில்! நம் கட்டுப்பாடுகளையும் மீறி அப்படி நடந்ததெனில்! இங்கே எதுவுமே புனிதமாக இருக்காது.  நல்லவை எதுவும் நடைபெறாது.கடவுளருக்கே மதிப்பில்லாமல் போய்விடும்.  பெண்கள் அவமதிக்கப்படுவார்கள். பெரியோரைக் கேவலமாக நடத்துவார்கள்.  கால்நடைகளைக் கூடத் துன்புறுத்துவார்கள். முக்கியமாக நாம் கடவுளென மதிக்கும் ஆநிரைச் செல்வங்களைத் துன்புறுத்துவார்கள். எந்த ரிஷியும், முனிவரும் இங்கே ஆசிரமங்கள் அமைத்துப் பாடசாலைகள் அமைத்து மாணாக்கர்களுக்குப் போதிக்க முன்வர மாட்டார்கள்.  வேதங்கள் கற்ற வேதியர்கள் இங்கே வரவே அஞ்சுவார்கள். தர்மம் சுக்குச் சுக்காக நொறுங்கிவிடும்.:

“ஆனால் காங்கேயா! ஆனால் இது துரியோதனன் ஆட்சிக்கு வந்தால் தானே நடக்கும்? நாம் இங்கிருந்தாலும் இல்லை என்றாலும் துரியோதனன் ஆட்சிக்கு வந்தான் என்றால் மட்டுமே இவை நடக்கும் அல்லவா? அவனை வரவிடாமல் செய்து விட்டால்?” பீஷ்மரின் முகத்தையே ஆவலுடன் பார்த்தாள் சத்யவதி.
“ஆம், தாயே, பெரியோரை நிந்திப்பவர்கள் இருக்கும் குடும்பங்களில், குடும்பமே நசித்துப் போகிறது.  அது போல் பெரியோரை நிந்திக்கும் இளைஞர்கள் ஆட்சியாளர்கள் ஆனால் அந்த ராஜ்யத்தின் கதி! நினைக்கவே முடியவில்லை. ஆட்சியாளர்கள் சரியில்லை எனில் ஆட்சியும் நல்லாட்சியாக இருக்காது.  தர்மத்துக்கு அங்கே வேலையில்லை.  தர்மம் விலகிவிடும். அதர்மம் கூத்தாடும். ஆகையால் தாயே, நாம் நம்மால் முடிந்ததைச் செய்துவிடுவோம். அது வெற்றியடைவதும், தோல்வியடைவதும், கடவுளின் கைகளில் இருக்கிறது.”

“காங்கேயா, என்ன நடந்தாலும், எது நடந்தாலும் நீ பாண்டவர்களுக்குக் கொடுத்த வாக்கினை நிறைவேற்றியே ஆகவேண்டும். அது நம்முடைய தர்மம்.”

யோசனையுடன் நிமிர்ந்து பார்த்தார் பீஷ்மர்.  “யுதிஷ்டிரன் மூத்தவன் தாயே!  அவன் இருக்கும்போது அவனுடைய உரிமைகளை நாம் இன்னொருவருக்கு எவ்வகையில் தூக்கிக் கொடுக்க முடியும்? “திட்டவட்டமாகச் சொன்ன பீஷ்மர் மேலும் தொடர்ந்தார்:” தாயே, ஏற்கெனவே துரியோதனனின் விருப்பத்துக்கு இணங்கி பாண்டவர்களை நான் வாரணாவதத்துக்கு நாடு கடத்தியதே என்னை இன்னும் முள்ளாய்க் குத்துகிறது.  அந்தக் குற்ற உணர்விலிருந்தே நான் இன்னமும் மீளவில்லை. நான் பலஹீனன் ஆகிவிட்டேன் தாயே! அப்படிச் சொன்னதன் மூலம் மாபெரும் பாவம் புரிந்திருக்கிறேன்.  அந்தப் பாவத்திற்கு நான் இப்போது பரிகாரம் தேடி ஆகவேண்டும்.”

“ஹூம், க்ருஷ்ண த்வைபாயனன் மட்டும் இப்போது இங்கிருந்தால்!  ஆஹா, அவன் இங்கே இருக்கமாட்டானா என நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். இவ்வளவு பிரச்னைகள் நிறைந்த இந்தச் சூழ்நிலையில் அவனால் தக்கதொரு யோசனை கூறமுடியும் என நினைக்கிறேன்.”  சத்யவதிக்குத் தன் மகன் கிருஷ்ணத்வைபாயனர் என்னும் வியாசரின் நினைவு வந்தது.

“ஆம், தாயே, தாங்கள் சொல்வது சரியே!  ஆனால் ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். யுதிஷ்டிரன் தான் ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் ஏற வேண்டும். அதுதான் நான் செய்த பாவத்துக்குச் சரியான பரிகாரம்.  ஒருவேளை இதுவே பீஷ்மனின் கடைசிச் செயலாக இருக்கும்!” பீஷ்மர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார்.

No comments: