Thursday, December 10, 2015

ச்யமந்தகத்தை அடைந்தே தீருவேன்!

“ஆனால், இப்போது தானே நீ சொன்னாய்? சத்ராஜித்தைப் பயமுறுத்தியதாகச் சொன்னாய் அல்லவா?”வசுதேவர் கேட்டார்.

“ஆம், தந்தையே, நான் சொன்னேன்!”

“உன்னால் எப்படிச் செய்ய முடிந்தது? அவனைப் பயமுறுத்தினால் கூட அவன் ச்யமந்தகமணிமாலையைப் பிரியமாட்டான். அவனிடம் தான் அது இருக்கும். அவனிடம் அது இருக்கையில், நீ இப்போது அனைவருக்கும் முன்னே அதைப் பிடுங்கிவிடுவதாய்க் கூறி இருக்கிறாய். இது நம் மக்களுக்கு நம் வ்ருஷ்ணி குலத்தோருக்கு ஒரு அவமானம்! அவர்கள் நம்பிக்கையை அழித்து ஒழுக்கத்தைச் சிதைத்துவிடும். உன்னை எவராலும் எதிர்க்க முடியாது என மிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அவர்கள் நம்பிக்கையையும் சிதைத்ததாக ஆகி விடும்.” வசுதேவர் தன் மெல்லிய குரலில் நிதானமாகச் சொன்னார்.

பலராமனுக்குப் பொறுமை போய்க் கொண்டிருந்தது. “கோவிந்தா, உன்னை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சத்ராஜித் உன்னைக் கொல்ல முயன்றிருக்கிறான்; ஆனால் நீ அவனைத் திரும்பத் தாக்கவே இல்லை நீ ச்யமந்தகத்தை எடுத்துக் கொள்ளப் போவதாகச் சொல்லி இருக்கிறாய்; ஆனால் உன்னால் அது இயலாது! அது உனக்கே தெரியும். ஹூம், என்னை விட்டிருந்தால் சில நொடிகளில் அவனை அழித்திருப்பேன்.ச்யமந்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு வந்து அக்ரூரரின் கஜானாவில் சேர்த்திருப்பேன்.”

“அண்ணா, தயவு செய்து நீங்கள் சத்ராஜித்தை நானே எதிர்கொள்ளும்படி விடுவீர்களா? என்ன காரணமோ தெரியவில்லை. சாத்யகர் அவர்களை சத்ராஜித் தன்னுடைய எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கோபத்தை நான் என்பால் திருப்பிக் கொண்டிருக்கிறேன். நான் அவருடைய வெறுப்பை அடியோடு களையப் பார்க்கிறேன்.”

“தப்பு செய்கிறாய் கோவிந்தா!”சாத்யகர் குறுக்கிட்டார். “சத்ராஜித் ஒருக்காலும் திருந்தப் போவதில்லை. அவனுடைய தற்பெருமை அழியப் போவதில்லை. மேலும் உன்னால் மென்மையாகப் பேசி எல்லாம் ச்யமந்தக மணிமாலையைச் சத்ராஜித்திடமிருந்து கொண்டு வர முடியாது. அதற்கு வலிமையைப் பிரயோகிக்க வேண்டி இருக்கும்.”

“உங்கள் தரப்பு நியாயத்தை நான் நன்கு புரிந்து கொள்கிறேன், ஐயா!ஆனால் அவருடைய வலிமையும், வளங்களும் இத்தனை ஆண்டுகளில் பல்கிப்பெருகி விட்டன. நாம் இல்லாமல் இருந்த இந்தச் சில ஆண்டுகளில் அவருடைய நடத்தைகளும் மாறிவிட்டன. ராஜ்யசபையில் அவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அன்று நான் இவ்விஷயத்தைப் பிரஸ்தாபிக்கையில் நீங்கள் அனைவரும் எவ்வளவு தர்மசங்கடமான மனோநிலையில் இருந்தீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  பார்க்கப் போனால் தன் பணபலத்தை வைத்து அவர் நம்மை எல்லாம் மிரட்டிப் பணிய வைக்க நினைக்கிறார். அவ்வாறே நடந்து கொண்டார்; இப்போதும் நடந்து கொள்கிறார் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் அதை மௌனமாகப் பொறுத்துக் கொள்ளும் நம் மக்கள்! அவர்களுக்காகவே நான் ராஜ்யசபைக் கூட்டத்தில் இதைக் குறித்துப் பேச ஆரம்பித்தேன்.”

“அவனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்னும் முடிவை நாம் எடுப்பதற்கு இது ஒன்றே போதுமானது!” என்றான் பலராமன்.

“மன்னியுங்கள், அண்ணாரே! சத்ராஜித் நம் யாதவர்களுடன் சண்டை போடத் தான் விரும்புகிறார். நமக்குள்ளாகவே நாம் போர் புரிந்து கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார். அதன் மூலம் சாத்யகர் அவர்களை அழித்துவிடலாம் என எண்ணுகிறார். ஆகவே நான் நம்முடைய நிலையைத் தெளிவாக அவரிடம் எடுத்துக் கூறிவிட்டேன். க்ஷத்திரிய தர்மத்தின் உயர்வை ஒப்புக் கொள்ள வேண்டும். அதன் படி நடந்து கொள்ளவேண்டும். சித்தப்பா சாத்யகரை மரியாதையுடன் நடத்த வேண்டும்.இல்லை எனில் நீ சிதறிப் போவாய் என எச்சரித்துவிட்டேன்!”

“ஆஹா! அவனை எப்படி அழிக்க எண்ணி இருக்கிறாய் கோவிந்தா? சத்ராஜித் தந்திரங்கள் நிறைந்தவன். சூழ்ச்சிகள் செய்வதில் வல்லவன்!” என்றார் சாத்யகர்.

“சித்தப்பா, கவலைப்படாதீர்கள்! ஏன் கவலைப்பட வேண்டும்? நான் உங்கள் கவலைகளையும் கஷ்டங்களையும் என் தோள்களில் சுமந்து கொள்கிறேன்.”

“என்னதான் செய்யப் போகிறாய், கிருஷ்ணா?” வசுதேவர் கேட்டார்.

“”அவர் இப்போது என்ன செய்திருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். அதை நான் கவனித்துக் கொள்கிறேன். ஆனால் தந்தையே, நிச்சயமாய் ச்யமந்தகம் கிடைத்துவிடும். அதை அக்ரூரரின் கஜானாவில் சேர்த்துவிடுவேன். இந்த விஷயத்தில் நீங்கள் என்னை முழுதாக நம்பலாம்!” என்றான் கிருஷ்ணன்.

“ஹூம், உன்னை மாதிரி மென்மையாக இருப்பவர்களுக்கு அது கனவு தான். நீ ஒருக்காலும் ச்யமந்தகத்தை அடையப் போவதில்லை. அது உனக்குக் கிடைக்காது!” பலராமன் கோபத்துடன் கூறினான். கிருஷ்ணன் தன் வசீகரமான புன்னகையுடன், “அண்ணா, அண்ணா, எப்போதாவது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் தந்திருக்கிறேனா? வாக்குறுதி கொடுத்தபின்னர் அது என்னால் நிறைவேற்றப்படாமல் இருந்திருக்கிறதா?” என்று கேட்டான்.


1 comment:

ஸ்ரீராம். said...

//எப்போதாவது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் தந்திருக்கிறேனா? வாக்குறுதி கொடுத்தபின்னர் அது என்னால் நிறைவேற்றப்படாமல் இருந்திருக்கிறதா?”//

அதானே!