Friday, November 27, 2015

சாத்யகன் பெருமை! சத்ராஜித் சிறுமை!

“உன்னுடைய இந்தக் கோரிக்கைக்கு அவன் என்ன பதில் சொன்னான்?” உக்ரசேனர் கேட்டார். “அரசே, சத்ராஜித் இவ்வாறு பதில் கூறினார்:”இந்த ச்யமந்தகமணிமாலை சூரியதேவனால் எனக்கு அளிக்கப்பட்டது. என் நன்மைக்காகவும், என் குடும்ப நன்மைக்காகவுமே இது அளிக்கப்பட்டது. இதை நான் ஒருக்காலும் பிரிய மாட்டேன்.” என்று கூறினார். பின்னர் நான் கூறினேன், “மேற்கண்ட பேரங்களை எல்லாம் விட்டுவிடுவோம். உங்கள் சொந்த நன்மைக்காக நீங்கள் ச்யமந்தக மணிமாலையை அக்ரூரரிடம் கொடுத்துத் தான் ஆகவேண்டும்.” என்றேன். அதற்கு அவர் மிகக் கோபம் கொண்டார். ஆனால் எனக்குச் சிறிதும் கவலையோ, பயமோ ஏற்படவில்லை. அவரின் கோபத்தை நான் ரசிக்கவே செய்தேன். அவர் எந்த நிமிடமும் என்னைத் தாக்கும் மனோநிலையில் இருந்தார்; அதை நான் கவனிக்கவே இல்லை. அவர் ஆசனத்திலிருந்து குதித்து எழுந்ததும், நான் அவரிடமிருந்து ச்யமந்தகமணிமாலையைப் பிடுங்கப் போகிறேன் என எண்ணி அவர் மிக எரிச்சல் அடைந்தார். ஆகவே உடனடியாகத் தன் கைகளை என் தோள்களின் மேல் வைத்து என்னை ஆசனத்திலே அப்படியே பின்னால் அழுத்தினார். அப்படியே அழுத்தியவண்ணம் என் கழுத்தை நெரிக்க முயன்றிருக்கலாம். அது அவர் எண்ணமாக இருந்திருக்கலாம். நான் அவர் என்ன தான் செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்தேன். அவரைத் திரும்பத் தாக்கவேண்டும் என்னும் என் எண்ணத்தை மிகக் கஷ்டத்தோடு அடக்கிக் கொண்டு காத்திருந்தேன். என்னைக் காத்துக்கொள்ளவும் முயலவில்லை!”

“இம்மாதிரியான கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கு ஏன் பேசாமல் இருந்தாய் கிருஷ்ணா? ஒரே குத்தில், ஒரே அடியில் நீ அவனை வீழ்த்தி இருக்கலாம் அல்லவா?” என்று உக்ரசேனர் கேட்டார்.

“அவர் கோபமும், ஆங்காரமும் இன்னும் எவ்வளவு தூரம் போகிறது என்பதைப் பார்க்க விரும்பினேன்.” என்றான் கிருஷ்ணன். கிருஷ்ணனைப் பெருமிதம் பொங்கப் பார்த்தார் சாத்யகர். பின்னர், “ கோவிந்தா, நீ இத்தனை கடினமான வேலையில் இறங்கி இருக்கக் கூடாது. உன் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் நீ தனியாகவும் அங்கே சென்றிருக்கக் கூடாது. என் நிலையை நீ நியாயப்படுத்தி இருக்கவும் தேவை இல்லை. சத்ராஜித் ஒருக்காலும் என்னை மன்னிக்கமாட்டான். அவன் பெண்ணை நான் மருமகளாக ஏற்க மறுத்ததோடு அல்லாமல் இங்குள்ள யாதவர்கள் அனைவரையும் தங்கள் சொத்திலிருந்து பங்கைக் கொடுக்கச் செய்ததும் நான் தான் அல்லவா? அதன் மூலம் இப்போது அவன் தன்னுடைய பங்கைக் கொடுக்க வேண்டிச் சொத்தைப் பிரியவேண்டி நேரும் அல்லவா?”

“நீங்கள் சொத்தை மட்டும் பிரியவில்லை சித்தப்பா சாத்யகரே! அதற்கும் மேல் நீங்கள் அவனுக்குப் பாடம் புகட்டி இருக்கிறீர்கள். ஒரு மனிதனின் பெருந்தன்மையும், எதையும் விட்டுக் கொடுக்கும் போக்கும், தர்மத்திற்காக எதையும் தியாகம் செய்யும் மனப்பான்மையுமே அவனை மனிதரில் சிறந்தவனாக ஆக்குகிறது என்பதைப் புரிய வைத்து விட்டீர்கள்!” என்றான் கிருஷ்ணன்.

“நான் அப்படி எல்லாம் நினைத்து எதையும் செய்யவில்லை, கோவிந்தா!” என்று அவையடக்கத்துடன் சொன்ன சாத்யகர், “நான் தர்மம் என்னவோ அதைக் கைவிடாமல் பின்பற்ற நினைக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை பின்பற்றுகிறேன். நீ எங்கள் சார்பில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற எங்கள் உயிரைக் கூடக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.”

“பிரியமான சித்தப்பா, உங்கள் பெருந்தன்மை மட்டும் இல்லை என்றால் பாண்டவர்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதியைச் சிறிதும் நிறைவேற்றி இருக்க இயலாது. உங்களிடம் இருந்த அனைத்தையும் அல்லவோ கொடுத்திருக்கிறீர்கள்!” என்று கிருஷ்ணன் மிகுந்த விநயத்துடன் சொன்னான். “ஆனால், கோவிந்தா, நீ எனக்காக சத்ராஜித்துடன் சண்டை போட்டிருக்கக் கூடாது! அதைத் தவிர்த்திருக்கலாம்.” என்றார் சாத்யகி.

“ஐயா, அது சத்ராஜித் அவர்களோடு உங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சண்டை எதுவும் இல்லை! அது என்னுடனான சண்டையே! அல்லது சத்ராஜித் தர்மத்திற்கு எதிராகச் செயல்படுவதை எதிர்த்துச் செய்யும் போர் என்றும் சொல்லலாம்.” என்றான் கிருஷ்ணன்.

“ஆனால் இதன்மூலம் நீ என்னை ஒரு தர்மசங்கடமான நிலையில் கொண்டு விட்டிருக்கிறாயே, கிருஷ்ணா! அவன், அதாவது சத்ராஜித் ச்யமந்தகமணிமாலையைப் பிரியும் பட்சத்தில் நான் அவன் மகளை எனக்கு மருமகளாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். யுயுதானா சாத்யகியின் மனைவியாக ஆக்க வேண்டும். ஆனால், அந்த இளம்பெண்ணோ! உயர்குடிப் பிறப்புக்கு உரிய லட்சணங்கள் ஏதும் இல்லாமல், அவற்றைப் பின்பற்றாமல், அவற்றைப் பொருட்படுத்தாமல் செல்வச் செழிப்பில் அலட்சியமாக வளர்ந்தவள். அவளுக்கு என் மகன் மூலம் பிறக்கும் என் பேரக்குழந்தைகள் பின்னர் க்ஷத்திரிய தர்மம் என்றால் என்ன என்பதையே மறந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட பேரக்குழந்தைகள் எனக்கு வேண்டாம்! என் முன்னோர்களின் ஆசிகளும் எனக்கும், என் குடும்பத்துக்கும் கிடைக்காது!”

“ஆஹா, என்னை மிக மிக மன்னியுங்கள் சித்தப்பா அவர்களே!” என்ற வண்ணம் கிருஷ்ணன் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் சாத்யகியைப் பார்த்துத் தன்னிரு கரங்களையும் கூப்பினான். “ஆனால் சத்ராஜித் ச்யமந்தகமணிமாலையைப் பிரியவே மாட்டான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்!” என்றும் கூறினான்.

“ஒருவேளை அவன் அதைப் பிரிந்துவிட்டான் எனில்? பின்னர் என்ன செய்வது?” சாத்யகிக்குக் கவலை வந்தது. “அப்படி எனில் அவன் மீண்டும் புதிதாய்த் தான் பிறக்கவேண்டும் ஐயா! அப்போது தான் அது நடக்கும். அவருடைய சுயநலத்துக்காகவும், அகந்தைக்காகவும், தற்பெருமைக்காகவும் அவர் சேர்த்த பொருட்கள் அனைத்தையும் பிரிவதன் மூலமாக அவர் தன்னைத் தானே புனிதப் படுத்திக் கொள்ளலாம் அல்லவா?” என்றான் கிருஷ்ணன். பின்னர் உக்ரசேனரைப் பார்த்து ஒரு புன்னகையுடன், “உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், பிரபுவே! யுயுதானா சாத்யகியை சத்ராஜித்தின் மகளை மணம் செய்து கொள்ளச் சம்மதிக்கச் சொல்லுங்கள். அப்போதாவது அவள் தந்தை தான் செய்த பாவங்களிலிருந்து விடுதலை பெறட்டும். இது தான் அவர் செய்த பாவங்களுக்குச் சமன் செய்யும் ஒரே விஷயமாகவும் இருக்கும்.”

பலராமனுக்குப் பொறுமை போய்க் கொண்டிருந்தது. “இந்த விஷயங்களைப் பேசுவதனால் என்ன பலன் ஏற்படப் போகிறது? இப்போது எதற்கு இந்தத் தேவையற்ற விஷயங்களைப் பேச வேண்டும்? கோவிந்தா, உன்னைக் கொலை செய்யும் அளவுக்குத் தாக்கிய சத்ராஜித்தை நான் நொறுக்கித் தூள் தூளாக்கப் போகிறேன்.”என்றான். அவனைப் பார்த்துத் தன் காந்தக் குரலில்கிருஷ்ணன் சொன்னான்.” அண்ணா, தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். என்னிடம் நீங்கள் வைத்திருக்கும் அளப்பரிய அன்பினால் தான் உங்களால் சத்ராஜித் என்னிடம் நடந்து கொண்ட முறையைப் பொறுக்க முடியாமல் அவரைத் தாக்கவேண்டும் என நினைக்க வைக்கிறது. அதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் தாற்காலிகமாக உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி வையுங்கள். இதை நான் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நானே அவனை என் முறையில் பார்த்துக் கொள்கிறேன்.”

“கோவிந்தா, சத்ராஜித்துக்கும் அவன் நண்பர்களுக்கும் யாதவர்கள் நீதி, நியாயம் செய்வதில் மோசமானவர்கள் அல்ல என்பதைப் புரிய வைக்கவேண்டும்!” என்று சாத்யகி கூறினார்.

“ஆமாம், சித்தப்பா! நீங்கள் சொல்வது சரியே! ஒரே அடியில் என்னால் சத்ராஜித்தை வீழ்த்தி இருக்க முடியும் தான்! அவ்வளவு ஏன்? அவரைக் கொன்றிருக்கவும் முடியும். ஆனால் நான் சத்ராஜித் என்னும் தனி மனிதனோடு போராட விரும்பவில்லை. அவர் அகந்தையைத் தான் அழிக்க நினைக்கிறேன். அவர் கொடுங்கோலராக இருப்பதால் நானும் ஒரு கொடுங்கோலனாக இருக்கவும் விரும்பவில்லை.” என்றவன் திரும்பி உக்ரசேனரைப் பார்த்து, “ என்னை அவர் தாக்கியபோது அவர் மகள் வந்து குறுக்கிட்டாள், பிரபுவே! அப்போது நீங்கள் அவர் முகத்தைப் பார்த்திருக்க வேண்டுமே! அவர் பெருமை எங்கோ போய்விட்டது. அகந்தை வீழ்ந்தது! அவர் வாழ்நாளிலேயே முதல்முறையாகத் தான் அதிகாரங்களையும், ஆணைகளை இடுவதையும் இழந்துவிட்டோம் என்பதை அவர் புரிந்து கொண்டிருப்பான். மீண்டும் தன் தான் தன்னுடைய தன்னம்பிக்கையைப் பெற முடியாது என்பதையும் அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவரால் மீண்டும் தன்னம்பிக்கையைப் பெறவே இயலாது!” என்றான் கிருஷ்ணன்.

1 comment:

ஸ்ரீராம். said...

அனைத்தையும் அறிந்த கிருஷ்ணா.. பாமா மனம் எப்போது அறிவாய்!