Sunday, November 8, 2015

ச்யமந்தக மணியைக் கொடுத்துவிடு!

சத்ராஜித்தின் கோபத்தைப்பார்த்துக் கிருஷ்ணன் அவனை எரிச்சலூட்டும் விதத்தில் ஒரு விசித்திரச் சிரிப்புடன், “ கோபம் அடையாதீர்கள், சத்ராஜித் அவர்களே! நீங்கள் உங்கள் விருப்பத்தைச் சொன்னீர்கள்! நான் அதை நிராகரித்துவிட்டேன். இப்போது என் முறை! நான் என் விருப்பத்தைச் சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் ஒத்துக்கொள்ளுங்கள் இல்லை எனில் நிராகரிக்கலாமே! கோபம் ஏன்?” என்றான் கிருஷ்ணன் நிதானமாக. “என்ன நடந்தாலும் சரி! நான் ஒரு போதும் ச்யமந்தக மணியை விட்டுப் பிரிய மாட்டேன். அது கடவுளால் எனக்கு அளிக்கப்பட்டது! எனக்கு மட்டுமே உரியது!அதைப் பிரிய நான் சம்மதிக்க மாட்டேன்!” என்று குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்தான் சத்ராஜித்.

“சத்ராஜித் அவர்களே! இப்போது சற்று முன்னர் தான் நீங்கள் உங்கள் மகள் சத்யபாமாவை மிகவும் விரும்புவதாகச் சொன்னீர்கள். அதோடு மட்டுமில்லாமல் உங்கள் அருமை மகள் சாத்யகனுக்கு மருமகளாக விரும்புவதையும் கூறினீர்கள். சாத்யகன் குடும்பத்தின் மருமகளாக உங்கள் மகள் செல்ல வேண்டுமெனில் அதற்குச் ச்யமந்தகம் ஒரு சிறு பரிசு தான். சிறிய விலை தான்! சாத்யகன் குடும்பத்தின் மதிப்பைக் குறித்து நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் என எண்ணுகிறேன். நம் யாதவ குலத்திலேயே மிகவும் அருமையான மனிதர் அவர்.”

“ச்யமந்தகம், ச்யமந்தகம்!” திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தான் சத்ராஜித். அவனால் இன்னமும் கிருஷ்ணன் ச்யமந்தகத்தைக் கேட்டதை நம்பவே முடியவில்லை. தன்னிடம் வந்து கூட ஒருவனால் இப்படி எல்லாம் கேட்க முடியுமா என்னும் வியப்பு அவனை விட்டு மறையவில்லை. “இல்லை, ஒருக்காலும் இல்லை! என்னால் ச்யமந்தக மணியைப் பிரிய இயலாது!” என்று மீண்டும் தனக்குத் தானே கூறிக்கொள்வது போல் கூறினான். “அப்படி எனில் நான் கேட்ட விலையைக் கொடுக்க நீங்கள் தயாராக இல்லை! என் விருப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது! அல்லவா?” என்றான் கிருஷ்ணன். “நான் சொல்வது சரிதானே?” என்றும் கேட்டான்.

“வாசுதேவ கிருஷ்ணா! உன் யோசனை மிகவும் அபத்தமானது! இதை எனக்குக் கொடுத்தது சூரிய பகவான் ஆகும். யாதவர்கள் அனைவருக்கும் என்று சொல்லிக் கொடுக்கவே இல்லை! அதை முதலில் புரிந்து கொள். சூரிய பகவானுக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். எனக்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன.” என்று மிகக் கோபமாகச் சொன்னான். இதை ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொண்டவன் போல் கிருஷ்ணன் பரிகாசச் சிரிப்புச் சிரிக்க சத்ராஜித்தின் கோபம் அதிகம் ஆனது. ஆனால் கிருஷ்ணன் விடாமல், “எந்தக் கடவுளும் ஒரு தனி மனிதனின் பயன்பாட்டுக்கு மட்டுமே என எதையும் கொடுப்பதில்லை; ஒரு தனிமனிதனின் ஆடம்பர வாழ்க்கைக்காக எதுவும் கொடுப்பதில்லை; இவ்வுலகத்து மாந்தர் அனைவருக்குமாய்த் தான் கொடுக்கிறார்.” என்றவன் தொடர்ந்து, “நாங்கள் உன்னை உன் பொறுப்புக்களிலிருந்து விடுவிக்கிறோம்.” என்றும் கூறினான்.

அதற்கு சத்ராஜித் கிருஷ்ணனை அவமதிக்கும் குரலில், “என் பொறுப்புக்களை நானே சுமக்கிறேன்; அதிலிருந்து விடுபட நான் விரும்பவே இல்லை!” என்றான். கருணையுடன் சிரித்தான் கிருஷ்ணன். “அதனால் பரவாயில்லை, சத்ராஜித் அவர்களே! நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நான் உங்களை உங்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்போகிறேன்.” என்றான். மேலும் தொடர்ந்து, “உங்கள் நன்மைக்காகவும் சொல்கிறேன். மற்ற யாதவர்களின் நன்மைக்காவும் சொல்கிறேன். ச்யமந்தமணிமாலை இருக்க வேண்டிய இடம் உக்ரசேன மஹாராஜாவின் கஜானாவில் அக்ரூரரின் பாதுகாப்பில் மட்டுமே! அது இருக்க வேண்டிய இடம் அது தான்!” என்றான் தீர்மானமாக!

“ஹா! ஹா! எப்படி அதை என்னிடமிருந்து எடுத்துச் செல்வாய்? உன்னால் அது முடியுமா? உன்னைத் தானே எல்லோரும் கடவுள் என்று சொல்கின்றனர்? நீ எடுத்துவிடுவாயா? நான் சவால் விடுகிறேன்! எவரால் இயலும் அது? ச்யமந்தக மணியை என்னிடமிருந்து பிரிப்பதற்காகவே நீ கடவுளைப்போல் நடிக்கிறாய்! உன்னால் ஒருக்காலும் இயலாது!” என்றான் சத்ராஜித். “அதை நீங்களாகவே கொடுத்துவிடுவீர்கள்! அது சரி, உக்ரசேன மகாராஜாவின் ஆணை கிடைத்தால்? அப்போது என்ன செய்வீர்கள்? ச்யமந்தகத்தைக் கொடுக்க மாட்டேன் என்று உக்ரசேனரிடம் சொல்வீர்களா?”

“கேட்டுப் பார்க்கச் சொல் அவரை!” வெடுக்கென்று பதில் சொன்ன சத்ராஜித் தன் குரலை உயர்த்தி, “ச்யமந்தகம் உங்களுக்கு வேண்டுமென்று நீங்கள் அனைவரும் விரும்பினால், நான் ஒவ்வொரு யாதவனுடனும் போரிடுவேன். ச்யமந்தகத்தை மீட்கப் போரிடுவேன். கடைசியில் பணபலமும், படைபலமும் உள்ள நானே வெற்றி பெறுவேன்.” என்றான்.

“நான் சொல்வது உங்கள் காதுக்கும், கருத்துக்கும் இனிமையானதாக இருக்காது சத்ராஜித் அவர்களே! உங்கள் சொந்த நன்மைக்காகவே சொல்கிறேன்! ச்யமந்தகத்தை அக்ரூரரிடம் கொடுத்துவிடுங்கள். இந்த ஆபரணம் மெல்ல மெல்ல உங்களை அழித்துவிடும்!” என்றான் கிருஷ்ணன். “என்னை அழிக்குமா? வாசுதேவ கிருஷ்ணா! இதைக் கேள்! நீ ஆர்யவர்த்தத்தில் பெற்றதாகச் சொல்லப்படும் வெற்றிகள், ஆனால் எனக்கு இதைக் குறித்து சந்தேகம் இருக்கிறது! உண்மையாகவே நீ வெற்றி பெற்றிருப்பாயா? தெரியவில்லை! அப்படி ஒரு வேளை வெற்றிகளை அடைந்திருந்தாயானால் அவற்றால் உன் கர்வம் அதிகம் ஆகிவிட்டது. அவை உன் தலையை அதன் இடத்தில் வைக்க மறுக்கிறது. தலை தெரியாமல் நீ ஆடுகிறாய்!” என்று சத்தமாகக் கூவின சத்ராஜித் தன் ஆசனத்திலிருந்து எழுந்து நின்றான்.

ஒரு குழந்தையைப் போல் அவனை வேடிக்கை பார்த்த கிருஷ்ணன், “என் தலை என் உடம்பில் இருக்கிற இடத்திலேயே இருக்கும்! அதைக் குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலை கொள்ள வேண்டியது உங்களைக் குறித்து! உங்கள் தலையைக் குறித்து! அதை நீங்கள் இழக்காதிருக்க வேண்டுமானால் ச்யமந்தகத்தைக் கொடுத்தே ஆக வேண்டும்!” என்றான் கிருஷ்ணன்.

“ஹா, ஹா, என்னைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்துகிறாயா? வாசுதேவா?”

“இல்லை, ஐயா, இல்லை!நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்: ச்யமந்தகத்தை விரும்பினால் நானே எடுத்துக் கொண்டிருப்பேன். இப்படிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் ஆகவே நீங்களாகவே கொடுத்துவிடுங்கள்!”

1 comment:

ஸ்ரீராம். said...

// “எந்தக் கடவுளும் ஒரு தனி மனிதனின் பயன்பாட்டுக்கு மட்டுமே என எதையும் கொடுப்பதில்லை; ஒரு தனிமனிதனின் ஆடம்பர வாழ்க்கைக்காக எதுவும் கொடுப்பதில்லை; இவ்வுலகத்து மாந்தர் அனைவருக்குமாய்த் தான் கொடுக்கிறார்.”//

"உனக்காக ஒன்றும் எனக்காக ஒன்றும் ஒருபோதும் தெய்வம் கொடுப்பதில்லை.. கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.. அவன் யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான்? இல்லை ஊருக்காகக் கொடுத்தான்.." பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.