Friday, November 6, 2015

கண்ணன் கேட்ட விலை! சத்ராஜித் அதிர்ச்சி!

“மிகச் சரியாகச் சொல்கிறீர்கள். சரியான ஊகமும் கூட! இப்படிப்பட்ட ஒரு அசாதாரண சூழ்நிலையில் சாத்யகி மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றே அவனைத் தப்புவிப்பதற்காக மாட்சிமை பொருந்திய சாத்யகர் இம்முடிவை எடுத்திருக்கிறார்.” என்றான் கண்ணன். “இதோ பார் வாசுதேவா! அவள் மிகவும் நல்ல பெண். என் குழந்தைகள் அனைவரிலும் இவளே மிகப் பிடித்தமானவள். மற்றக் குழந்தைகளை விடவும் இவளை நான் அதிகம் நேசிக்கிறேன்.” என்றான் சத்ராஜித்.

“அப்படியா? நீங்கள் சத்யபாமாவை மிகவும் அதிகமாக நேசிக்கிறீர்களா? அப்படி எனில் நீங்கள் உங்கள் ஆடம்பரத்துக்காகவும், தற்பெருமைக்காகவும் அவளை சாத்யகிக்குத் திருமணம் முடிக்க நினைப்பதை அவள் அறிய நேர்ந்தால்? அவள் மனம் வருந்த மாட்டாளா? இதை ஏற்றுக்கொள்வாள் என்று நினைக்கிறீர்களா? இதைக் குறித்து யோசித்துப் பார்த்தீர்களா?”

அதற்கு சத்ராஜித் மிகவும் கர்வத்துடனும், அகந்தையுடனும், “என் குழந்தைகள் திருமணம் அவர்களின் நன்மைக்காகவே நான் ஏற்பாடு செய்கிறேன். என் பணபலத்தையோ, தற்பெருமையையோ நிலை நாட்ட அல்ல!” என்றான். பின்னர் என்ன நினைத்தானோ மேலும் கூறினான்:”வாசுதேவா, நாம் பேச நினைத்த விஷயத்திலிருந்து வெகு தூரம் நாம் விலகி வேறு மார்க்கத்தில் பேச ஆரம்பித்துவிட்டோம். இப்போது மீண்டும் கேட்கிறேன். என் கேள்விக்கு என்ன பதில்? நான் கேட்ட விலையைக் கொடுக்க நீ சம்மதிக்கிறாய் அல்லவா?” என்று கேட்டான்.

“ஐயா, இதன் முக்கியத்துவம் குறித்து நான் நன்கு அறிந்துள்ளேன். நீங்கள் சாத்யகரைப் பயமுறுத்த நினைக்கிறீர்கள். அல்லது இதன் மூலம் மற்ற யாதவத்தலைவர்களான எங்கள் அனைவரையும் மிரட்டி அடிபணிய வைக்க நினைக்கிறீர்கள்.’ சத்யபாமா மூச்சு விடக்கூட மறந்து அங்கே நடந்த பேச்சு வார்த்தையைக் கேட்டாள். அவள் இதயம் “தட், தட்” என்று மிகப் பலமாக சப்தித்தது. எங்கே அந்த சப்தம் உள்ளிருந்தவர்களுக்குக் கேட்டுவிடுமோ என்று பயப்படுபவள் போல் அவள் தன் நெஞ்சின் மேல் கையை வைத்து அழுத்திக் கொண்டு மேலும் உன்னிப்பாகக் கேட்டாள்.

“நான் மிரட்ட நினைக்கவில்லை, வாசுதேவா! இந்த உலகில் எல்லாவற்றுக்கும் ஓர் விலை உண்டு. அதைக் கொடுத்தே ஆகவேண்டும். ஏன்! நீ நிலைநாட்டுவதற்கு முயலும் அந்த தர்மம்! அதற்கும் ஓர் விலை உண்டு! அதைக் கடைப்பிடிக்கவும் உரிய விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்!” ஏளனம் பொங்கச் சிரித்தான் சத்ராஜித்!

“பேரம் பேசியே அனைத்தையும் வாங்கி விடலாம்! அதுவும் உங்கள் பணபலத்தினால் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்! ஆனால் இவ்வுலகில் என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத சில நல்ல விஷயங்கள் உண்டு! அவற்றை நம்மால் பணத்தைக் காட்டி வாங்கவோ, விற்கவோ முடியாது!” என்றான் கிருஷ்ணன். வெளியே பாமாவின் இதயம் குதூகலத்தில் ஆழ்ந்தது. “விரைவில் என் உதவிக்கு வா கோவிந்தா! எனக்கு உதவி செய்! நான் என் வாழ்நாள் முழுவதும் உன் அடிமையாக இருப்பேன்! உனக்கே சேவைகள் செய்வேன்!” என்று தன் மனதிற்குள்ளாகப் பிரார்த்தித்தாள் சத்யபாமா.

“நீ வெளிப்படையாகப் பேசுவதாக நீ தான் சொல்லிக் கொண்டாய்! ஆகவே நானும் அப்படியே பேசினேன்! பேசுவேன்! இந்த ஈரேழு பதினாலு உலகங்களிலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கத்தான் செய்கிறது. அதை எவராலும் மறுக்க இயலாது!” என்றான் சத்ராஜித். கிருஷ்ணன் சற்று நேரம் தான் பேச வேண்டியது என்ன என்று சிந்திப்பவன் போல் மௌனம் காத்தான். அதன் பின்னர் அவன் எவ்விதப் பற்றுதலையும் பேச்சில் காட்டாமல் பேச ஆரம்பித்தான்.” மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நீங்கள் ராஜா உக்ரசேனரை அவமதிக்கிறீர்கள் என்பதை உணரவில்லையா? அதோடு மட்டுமில்லாமல் மற்ற யாதவத் தலைவர்களையும் அவமதிக்கிறீர்கள். அவர்களை அவமானம் செய்கிறீர்கள். உங்கள் கால்நடைச் செல்வங்களையும், குதிரைகள், ரதங்கள் போன்றவற்றையும் உங்கள் பண்ணைகளையும் மற்றும் உங்கள் அளப்பரிய செல்வங்களையும் காட்டிப் பிரமிக்க வைத்து உங்களுக்கு அடி பணிய வைக்க நினைக்கிறீர்கள். உங்கள் பங்கைக் கொடுக்காமல் ஏமாற்றியதன் மூலம் மற்ற யாதவர்களை ஏழையாக்கினீர்கள். ஐந்து சகோதரர்களுக்கும் தேவையான நேரத்தில் உதவி செய்ய மறுத்து விட்டீர்கள். அப்படியும் உங்களுக்குத் திருப்தியாக இல்லை. இப்போது மீண்டும் உங்கள் செல்வ வளத்தின் மூலம் அனைத்து யாதவர்களையும் பயமுறுத்த நினைக்கிறீர்கள். உங்கள் அடியாட்களைக் காட்டி மிரட்ட எண்ணுகிறீர்கள். இந்த வீரர்கள், குதிரைகள், ரதங்கள் அனைத்தையும் வைத்து ஒரு சிறுபடையைத் திரட்டி வைத்து இதன் மூலம் ஒரு மாபெரும் சிக்கலை உண்டாக்க நினைக்கிறீர்கள். வீரர்களுக்கும் மோதலை உருவாக்க எண்ணுகிறீர்கள்.   சாத்யகர் தன் மகனுக்கு உங்கள் மகளை மணமுடிக்க மறுத்ததன் மூலம் உங்கள் கௌரவத்திற்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதாக எண்ணுகிறீர்கள். அதற்காகவே, அதைச் சரி செய்வதற்காகவே மீண்டும் உங்கள் மகளை வியாபாரப் பொருளாக்கி அவளை சாத்யகிக்கு மணமுடிக்க நினைக்கிறீர்கள். அதன் மூலம் இழந்த கௌரவம் மீண்டும் வந்துவிடும் என்று எண்ணுகிறீர்கள்!” கிருஷ்ணன் சற்றே நிறுத்தினான்.

“வாசுதேவா, சில சமயங்களில் நீ மிகவும் புத்திசாலியாக இருக்கிறாய்! எனக்கு அப்போது உன்னை மிகவும் பிடிக்கிறது. நீ எல்லாவற்றையும் மிக நன்றாக அலசி ஆராய்ந்திருக்கிறாய்! உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளாய்!” என்று ஏளனமாகச் சொன்னான் சத்ராஜித்!  “ஆமாம், நான் உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளேன்! எல்லாவற்றையும் கவனமாகப் பார்க்கிறேன். உங்கள் பார்வையில், உங்கள் நோக்கத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையைக் கொடுத்து அதை வாங்கிவிடலாம்!” என்றான் கிருஷ்ணன். சத்ராஜித் மௌனமாகத் தலையை அசைத்தான்.

மீண்டும் சற்று யோசித்த கிருஷ்ணன் மெல்லப் பேச ஆரம்பித்தான். அவன் முகத்தில் ஒரு விசித்திரமான புன்னகை விரிந்தது. “ உங்கள் எண்ணங்களின் தாக்கம் என்னிடமும் வந்துவிட்டது போல் தெரிகிறது! மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! நானும் இப்போது ஒரு சின்ன பேரம் செய்யப் போகிறேன். எனக்கும் இப்போது அதற்கான சமயம் வந்திருப்பதாகவும் தோன்றுகிறது. மனமும் அதை விரும்புகிறது!” என்று புன்னகை மாறாமலேயே சொன்னான். அவன் புன்னகையைப் பார்த்தால் மிகவும் வெகுளித்தனமாகக் கண்ணன் பேசுவதாகவே தோன்றியது. சத்ராஜித் அவனைப் பார்த்து, “என்னவானாலும் கேள், கிருஷ்ணா! உன்னுடைய பேரம் என்ன? அதை வெளிப்படையாகச் சொல்! அப்போது தான் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள இயலும்!” என்றான்.

“நீங்கள் உங்கள் மகள் சாத்யகியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் அல்லவா? ரொம்ப நல்லது! அதற்கு நான் இப்போது கேட்கப் போகும் விலையைத் தர நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?”

“ஆம், தயாராகவே இருக்கிறேன். சாத்யகியை என் மருமகனாக அடைய நான் என்ன விலையைக் கொடுக்க வேண்டும்? சும்மாவானும் வெட்டிப் பேச்சுப் பேசாமல் விஷயத்துக்கு வா!” என்றான் சத்ராஜித்!

“பொறுமை, பொறுமை! சத்ராஜித் அவர்களே! அவசரம் வேண்டாம்! நீங்கள் தான் பேரத்தை ஆரம்பித்து வைத்தீர்கள். அதனால் தான் நான் இப்போது பேரம் பேசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.”

சத்யபாமா மனம் உடைந்து நைந்து போனாள். கிருஷ்ணன் அப்படி என்னதான் கேட்கப் போகிறான்? “கிருஷ்ணா, கிருஷ்ணா, கோவிந்தா! என் தந்தை என்னை அவருடைய பணத் திமிரில் விற்கும்படி செய்து விடாதே! என்னைக் காப்பாற்று! அவருடைய கௌரவம் இதன் மூலம் திரும்பி வரும் என அவர் நினைப்பதைப் பொடிப்பொடியாக்கு! கிருஷ்ணா! என்னைக் காத்தருள்வாய்! கோவிந்தா! நீயே சரணம்!” அதற்குள்ளாக அங்கே சத்ராஜித் பொறுமை இழந்து மீண்டும் கேட்டான்.”என்ன விலை கேட்கிறாய்? சீக்கிரம் சொல்!” என்று அவசரப் படுத்தினான்.

கிருஷ்ணன் சாந்தமாகத் தன் சுட்டுவிரலை சத்ராஜித்தின் கழுத்தின் மேல் சுட்டினான். அவன் கைவிரல் சத்ராஜித்தின் ச்யமந்தக மணிமாலையைச் சுட்டியது. சத்ராஜித்தின் முகத்தின் கோபம் அந்த மணிமாலையிலும் பிரதிபலித்தது போல் அதுவும் தன் சிவந்த கதிர்களை அந்த அறை முழுதும் பரப்பி அறையையே ஒரு கோபாகிருகமாக மாற்றிக் கொண்டிருந்தது. “சத்ராஜித் அவர்களே! உங்கள் ச்யமந்தக மணிமாலையை மாமா அக்ரூரரிடம் கொடுத்துவிடுங்கள். அது இருக்க வேண்டிய இடம் உக்ரசேன மஹாராஜாவின் கஜானா ஆகும். அக்ரூரர் தான் அரசனின் பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் பொக்கிஷாதிகாரியாக இருக்கிறார்! ஆகவே அவரிடம் கொடுங்கள்!” என்றான். சத்ராஜித்திற்கு அவன் காதுகளை அவனாலேயே நம்ப முடியவில்லை. அவன் முகம் கோபத்தில் சிவந்தது. கிருஷ்ணனையே முறைத்துப் பார்த்தான். அவன் கண்கள் கோபத்தில் அங்குமிங்கும் உருண்டன.

“என்ன? என் ச்யமந்தக மணிமாலையையா நீ கேட்கிறாய்?”கோபத்தில் உறுமினான் சத்ராஜித்!



2 comments:

ஸ்ரீராம். said...

கிருஷ்ணா... பாமாவைச் சோதிக்கிறாயே....

:)))

வல்லிசிம்ஹன் said...

அருமைக் கண்ணன் ,அற்புதக் கண்ணன். அறிவாளி கண்ணன். சத்ராஜித் பணிந்து போகமாட்டான்..
வினாசகால விபரீத புத்தியில் போய்க்கொண்டிருக்கிறான். சுவாரஸ்யம் குன்றாமல் கண்ணனைத் தொடர்கிறேன்.