Friday, October 30, 2015

கண்ணன் கேள்வி! பாமா தவிப்பு!

மீண்டும் தன் கண்களை உருட்டி விழித்தான் சத்ராஜித்! தான் அடிக்கடி அப்படிச் செய்வதால் அனைவரும் பயப்படுவார்கள் என்ற எண்ணம் அவன் உள் மனதில் இருந்தது. பின்னர் பேச ஆரம்பித்தான். “வாசுதேவா, நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். கேள்! நான் ஏன் சாத்யகியின் திமிர்த்தனத்தைக் குறித்து வெளிப்படையாகக் குறை கூற ஆரம்பித்தேன் என்பதை நீ அறிவாயா? சூரியபகவானின் கட்டளை அது! அவரின் உரிமைக்கட்டளை! ஆணை! அதை ஏற்காமல் அவன் மறுதலித்தான்,. இதன் மூலம் சூரிய பகவானையே அவமதித்திருக்கிறான். என்னையும் இவ்வுலகுக்கு முன்னர் அவமானம் செய்து விட்டான். அவன் மனதில் என்ன நினைக்கிறான்? என் மகளுக்கு அவன் மகனைத் திருமணம் செய்து வைப்பதன் மூலம் என் மகளுக்கு மாபெரும் பரிசு கிட்டும் என்ற எண்ணமோ? அவ்வளவு உயர்வானவனா அந்த யுயுதானா சாத்யகி? ஹூம்! இதைத் தவிர வேறே என்ன எண்ணமோ, காரணமோ அந்த சாத்யகனுக்கு இருக்க முடியும். மனதில் குமுறும் எண்ணங்களைக் கட்டுப்படுத்திய வண்ணம் சத்யபாமா கதவுக்குப் பின்னால் கிருஷ்ணனின் பதிலுக்குக் காத்திருந்தாள்.

“சத்ராஜித் அவர்களே! கொஞ்சம் யோசியுங்கள்! உங்கள் மகளை நீங்கள் எவ்வாறு வளர்த்திருக்கிறீர்கள் என்பதை நினைவு கூருங்கள். எங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் சில நிமிடங்களே நான் அவளைப் பார்த்தேன். அவள் அழகாகப் பார்க்க லட்சணமாக இளம்பெண்ணாகவும் இருக்கிறாள் தான்! அங்கே கதவின் வெளியே நின்றிருந்த சத்யபாமாவின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. நாணம் அவள் முகத்தில் செம்மையைப் போர்த்த அவள் குனிந்து தன் செல்லப் பூனையான ஊரியின் காதில், “ஊரி, ஊரி, கேட்டாயா? வாசுதேவக் கிருஷ்ணன் என்ன சொல்கிறான் கேட்டாயா? நான் அழகான லட்சணமான இளம்பெண்ணாம்! கேட்டாயா?” அதற்குள்ளாக உள்ளே கண்ணன் தொடர்ந்து பேசவே அதைக் கவனித்தாள் பாமா.

“ஐயா, உங்கள் மகளை நீங்கள் மிக ஆடம்பரத்திலும், மிதமிஞ்சிய செல்வத்திலும் வளர்த்திருக்கிறீர்கள். உங்களிடம் இருக்கும் செல்வத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் நீங்கள், உங்கள் அதே நடைமுறையை உங்கள் பெண்ணிற்கும் பழக்கப்படுத்தி இருக்கிறீர்கள்.”

“எதனால் அப்படிச் சொல்கிறாய்?”

“அன்று வரவேற்புக்கு வந்த யாதவகுலப் பெண்டிர், எளிமையான ஆடைகளோடும் அனைவரின் தலையிலும் செப்புப் பானைகளையே சுமந்து வந்திருந்தார்கள். ஆனால் உங்கள் பெண்ணோ ஆடை, ஆபரணங்களினாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்ததோடு அல்லாமல் தங்கப்பானையைச் சுமந்து வந்திருந்தாள். அத்தனை பெண்களுக்கு நடுவே இவள் ஒருத்தி மட்டும் தங்கப்பானையைச் சுமந்து வருவது அனைவர் மனதையும் புண்படுத்தாதா? அவர்களின் சுய கௌரவத்தைப் பாதிக்காதா?” வெளியே இருந்த சத்யபாமாவுக்குத் தன் கன்னத்தில் கிருஷ்ணன் ஓங்கி ஓர் அறை கொடுத்தாற்போல் இருந்தது. தன் கன்னத்தைத் தன்னையுமறியாமல் பிடித்துக் கொண்டாள்.

“ஐயா, நாம் போர் வீரர்கள். இந்த ஆர்யவர்த்தத்தின் பொறுக்கி எடுக்கப்பட்ட தேர்ந்தெடுத்த க்ஷத்திரியர்கள் ஆவோம். க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் சிறந்தவர்கள். அதற்கென ஒரு தனிப்பாரம்பரியமே நமக்கு உள்ளது. நேர்மையோடு கூடிய ஒரு அற்புதமான வீரம் நிறைந்த முடிவையே நாம் எதிர்பார்க்கிறோம். அதற்காகவே வாழ்கிறோம். நம் வாழ்க்கையை அந்த வீரம் செறிந்த தினத்துக்காகவே அர்ப்பணித்தும் வருகிறோம். நாம் அப்படி வாழ்வதோடு அல்லாமல், நம் குழந்தைகளையும் அத்தகையதொரு வாழ்க்கைக்கே பழக்கப்படுத்திக் கொண்டு வருகிறோம். இப்போது கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஆடம்பரத்திலும் மிதமிஞ்சிய செல்வ வாழ்க்கையிலும் பழகிய உங்கள் பெண்ணுக்கு ஒரு வீரனுக்குப் போருக்குச் செல்லும்போது  விடை கொடுத்து அனுப்பும் மனைவியால் பாடப்படும் “பிரியாவிடைப்பாடல்” ஒன்று இருப்பதாவது தெரியுமா? இந்தப் பாடலைப் பாடித் தான் தன் கணவனை, தன் மகனை ஒவ்வொரு யாதவகுல க்ஷத்திரியப் பெண்ணும் மிகவும் கர்வத்துடனும், பெருமையுடனும் போர்க்களத்துக்கு அனுப்புவதை அவள் அறிவாளா? இதைப் பாடும்போது அவர்கள் அடையும் பெருமிதம் குறித்து அவள் உணர்ந்திருக்கிறாளா?”

அவமதிப்பைக் காட்டும் வகையில் ஒரு சீற்றம் மிகுந்த ஒலியை எழுப்பினான் சத்ராஜித். “இப்படி எல்லாம் சொல்வதன் மூலம், நீங்கள் மட்டுமே மிகவும் ஒழுங்காகவும், கட்டுப்பாடுடனும் வளர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறாய்! அல்லவா? அப்படியே இருக்கட்டும்! மேலே சொல்! கேட்போம். உன் மனதிலுள்ளதை வெளிப்படையாகக் கூறு!”

கிருஷ்ணன் தொடர்ந்தான்.”ஐயா, சாத்யகரைக் குறித்துத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா? மாட்சிமை பொருந்திய சாத்யகர் க்ஷத்திரிய தர்மத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருவதை அறிவீர்கள் அல்லவா? அவருடைய நேர்மையும் வீரமும் இந்த ஆர்யவர்த்தம் முழுவதும் பேசப்படுவதை அறிவீர்களா? அவர் தன் வாழ்நாள் முழுவதையும் இந்த க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கெனவே அர்ப்பணித்திருக்கிறார். நாங்கள் அனைவரும் அவரை எங்கள் முன் மாதிரியாகக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு மானசிகத் தலவர் அவரே!”
“ஹா! எனக்குத் தெரியாதா அவனைப் பற்றி? அவன் ஓர் ஏழை! பரம ஏழை!” என்றான் சத்ராஜித் ஏளனம் தொனிக்க. “ஏழையாக இருப்பது மாபெரும் மன்னிக்கவே முடியாத குற்றம் அல்ல ஐயா! அது கீழான ஒன்றும் இல்லை. ஆனால் அவர் இப்படி ஓர் நிலைக்கு ஏன் வந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்! அவர் ஒன்றும் இல்லாமல் இருந்து விடவில்லை! அவருடைய இந்நிலைக்கு நீங்களே காரணம்! நீங்களே பொறுப்பு!”

“நானா? ஹூம், நான் தான் காரணம் எனில் அதற்குத் தகுந்த மறுக்கமுடியாத காரணம் ஒன்று இருந்தாக வேண்டும்.”

“இல்லை ஐயா, அவர் உங்களுக்கும் மற்றவர்க்கும் தக்க பாடத்தைப் புகட்டி இருக்கிறார். க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாமல் இருந்ததன் மூலம், அவருடைய வீரத்தின் மூலம், நேர்மையின் மூலம் அனைவருக்கும் ஓர் நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கிறார். அது மட்டுமா? தன்னுடைய செல்வம் முழுவதையும் பாண்டவர்களின் ராஜ்யம் நிலைபெற்று நிற்பதற்காகக் கொடுத்துவிட்டார். அதுவும் நீங்கள் கொடுக்காமல் மறுத்ததால் ஏற்படுத்தப்பட்ட செல்வக் குறைவை ஈடுகட்ட தன்னுடைய அனைத்தையும் கொடுத்தார். அவருடைய இந்தச் செய்கையால் தான் மற்ற யாதவர்களால் அவரளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்குக் கணிசமான செல்வத்தைக் கொடுக்க முடிந்தது. அவர் கொடுப்பதைப் பார்த்துவிட்டே அவர்களும் மனமுவந்து கொடுத்து உதவினார்கள். செல்வக் குறைவினால் ஏற்பட்டிருந்த இடைவெளியை இட்டு நிரப்பினார்கள்.”

“போனதெல்லாம் போகட்டும்! நான் அவனுக்கு ஓர் வாய்ப்புக் கொடுக்கிறேன். என் மகளை அவன் மகனுக்கு மணமுடிப்பதன் மூலம் அவன் மீண்டும் பணக்காரன் ஆகலாம்! இதற்கு அவன் ஒத்துக்கொள்ள வேண்டும்.”

“உங்கள் செல்வத்துக்கு ஈடாகத் தன் மகனைப் பேரம் பேசி விற்க சாத்யகர் ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்.”

“இது உனக்கும் அவனுக்கும் உள்ள தற்பெருமை! அதனால் விளைந்த அகந்தை! உங்களுடன் பிறந்தது!”

“ஐயா, இந்தத் தற்பெருமையினால் விளைந்த அகந்தை வீரர்களுக்கே உரியது. பணத்துக்கு அடி பணிய மாட்டோம் என்பவர்களுக்கே உரியது. ஒரு பெண், தன் வாழ்நாளில் பணத்தைத் தவிர, செல்வத்தையும் அது அளித்த சுகபோகங்களையும் தவிர வேறொன்றையும் அறியாதவள்! இப்படிப்பட்ட ஒரு பெண்ணால் கடுமையான கட்டுப்பாடுகளும், நியம, நிஷ்டைகளும் கொண்டதொரு பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பமான சாத்யகன் குடும்பத்து மருமகளாக எப்படிப்பொருந்தி வருவாள்? அவளால் அங்கே நிலைத்து வாழ இயலுமா?


“அது மட்டும் இல்லை! சாத்யகன் மட்டுமில்லாமல் அவர் குடும்பத்தின் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் க்ஷத்திரிய தர்மத்தை விடாமல் கடைப்பிடிப்பவர்கள். அதற்காகத் தங்கள் உயிரையும் அர்ப்பணிப்பவர்கள். அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள். போர்க்களத்திற்கு எந்நேரமும் சென்று தங்கள் நாட்டுக்காகவும், நட்புக்காகவும் போரிட்டு மரணத்தைப் புன்னகையுடன் வரவேற்பவர்கள்! அவர்கள் வீட்டுப் பெண்களோ எனில் இத்தகைய ஆண்களைப் போர்க்களத்திற்குப் புன்னகையுடன் அனுப்பி வைப்பதோடு அல்லாமல் அவர்களுக்குத் தங்கள் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்துடன் வாழ்பவர்கள். இப்படிப்பட்ட ஆண்களையும், பெண்களையும் கொண்ட அந்தக் குடும்பத்தில் உங்கள் மகளால், ஆடம்பரமாகச் செல்வ போகத்தில் வளர்க்கப்பட்டவளால் ஒத்திசைவுடன் வாழ முடியுமா? அவர்களுக்குள் ஒத்துப் போகுமா?”

“என் மகள் மாறலாம். அல்லது அவளுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி யுயுதானா சாத்யகியைத் தன் பக்கம் அவள் மாற வைக்கலாம். எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.” என்றான் சத்ராஜித்!

1 comment:

ஸ்ரீராம். said...

பா.....பா....பா....பா.... பாவம் பாமா!