Thursday, December 31, 2015

வாசுதேவக் கிருஷ்ணா, நீ திருடன்!

அறைக்குள் நுழைந்த மூவரில் சத்ராஜித் தன்னுடைய சுயக் கட்டுப்பாட்டிலேயே இல்லை. ஆகவே வழக்கமாய் அரசரைச் சந்திக்கையில் செய்யும் வணக்கங்களைக் கூட அவன் தெரிவிக்கவில்லை. அதே போல் மரியாதையுடனும் பேசவில்லை. உக்ரசேனரைச் சந்தித்ததுமே அவரைப் பார்த்துக் கூச்சல் போட்டான். “என் ச்யமந்தகம் திருடப்பட்டுவிட்டது. அதை அந்தத் திருடன் கிருஷ்ணன் தான் திருடி இருக்கிறான். இப்போது நான் இங்கே வந்ததன் காரணமே கிருஷ்ணன்ன் உடனே அதைத் திரும்பத் தரவேண்டும், இல்லை எனில் அவன் என்னால் கொல்லப்படுவான் என்பதைத் தெரிவிக்க மட்டுமே! என் வழியில் குறுக்கே எவர் நின்றாலும் என்னால் கொல்லப்படுவார்கள்.” என்று கூவினான்.

உக்ரசேனருக்குச் சற்றும் மரியாதையின்றி சத்ராஜித் இப்படி நடந்து கொண்ட விதம் ஆச்சரியத்தை அளித்தது. எனினும் அதை வெளிக்காட்டாமல், “மாட்சிமை பொருந்திய சத்ராஜித்! வருக, வருக! இப்படி இந்த ஆசனத்தில் அமரவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அழைத்துத் தன்னருகே இருந்த ஆசனத்தைக் காட்டினார். மேலும் பங்ககராவையும் ஷததன்வா மற்றும் கூடவே கூட்டமாய் வந்திருந்த அதிரதிகள் அனைவரையும் பார்த்து, “நீங்களும் இங்குள்ள ஆசனங்களில் அமருங்கள்!” என உபசரித்தார். பின்னர் சத்ராஜித்தைப் பார்த்து, “உன்னை நீயே அமைதிப் படுத்திக் கொள் சத்ராஜித்! அமைதி கொள். என்னிடம் நிதானமாக என்ன விஷயம் என்பதைத் தெரியப்படுத்துவாய்! என்னால் நீ சொல்வதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை!” என்றும் கூறினார்.

மிகவும் சிரமத்துடன் அங்கிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தான் சத்ராஜித். ஆனாலும் அவன் உடலே நடுங்கிக் கொண்டிருந்தது. கைகளும் நடுங்கின. கண்களை இப்படியும் அப்படியும் உருட்டினான். “சாந்தம், சாந்தம், சத்ராஜித்! அமைதி கொள்! என்ன விஷயம் என்பதை என்னிடம் சொல்!” என்று சாந்தமாகச் சொன்னார். தன் கதையைச் சொல்லும் முன்னர் தன்னைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டான் சத்ராஜித். பின்னர் மேலும் பேசினான். “கிருஷ்ணன், அந்தத் திருடன், என்னுடைய ச்யமந்தகமணியைத் திருடிவிட்டான். நேற்று அவன் என்னிடம் கூறி இருந்தான். நேற்று மாலை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அவன் என் ச்யமந்தகத்தை என்னிடமிருந்து எடுத்துவிடுவதாய்க் கூறி இருந்தான். அதே போல் செய்து விட்டான். அரசே, ஆணையிடுங்கள்! அந்தத் திருடன் கிருஷ்ணனை என் ச்யமந்தகத்தை உடனே திருப்பும்படி கூறுங்கள். இல்லை எனில் நானும் என் நண்பர்களும் அந்த ச்யமந்தகத்தைத் திரும்பப் பெறுவதற்காகப் போர் நடத்தக் கூடத் தயங்க மாட்டோம்.”

சத்ராஜித் தன்னுடைய கதையைச் சொல்லி முடித்த அதே கணம் வசுதேவர், கிருஷ்ணன்,  மற்றும் யாதவகுலத் தலைவர்கள் அனைவரையும் உடனே அழைத்துவரச் சொல்லி உக்ரசேனரால் அனுப்பப்பட்டிருந்த ப்ருஹத்பாலன் திரும்பினான். அவனுடன் வசுதேவர், சாத்யகன், அவன் மகன் யுயுதானா சாத்யகி ஆகியோரும் இருந்தனர். உக்ரசேனரின் அழைப்பின் பேரில் சாத்யகனும், வசுதேவரும் உக்ரசேனரின் படுக்கையில் அவருக்கு அருகே மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டனர்.

“சத்ராஜித் அவனுடைய ச்யமந்தகமணி இன்று காலை அதன் வழிபாட்டு அறையிலிருந்து திருடப்பட்டதாகக் கூறுகிறான்.” என்ற உக்ரசேனர் சத்ராஜித்தை மீண்டும் அவன் பக்கத்து நியாயத்தைச் சொல்லும்படி கூறினார். ப்ருஹத்பாலனை மீண்டும் அனுப்பிக் கிருஷ்ணனை அழைத்துவரச் சொன்னார். சத்ராஜித் தன் கதையை மீண்டும் அனைவருக்கும் எடுத்துச் சொன்னான். சாத்யகன் முகத்தில் கோபம் எழுந்தது. சத்ராஜித்தைப் பார்த்துக் கடுமையாக, “ நைனனின் மகனே! நீ சொல்வதில் ஒரு வார்த்தை கூட நம்பும்படியாக இல்லை. நான் அதை நம்பவும் இல்லை. கிருஷ்ணன் உன்னுடைய ச்யமந்தகத்தைத் திருடும்படியான கீழ்த்தரமான வேலையை ஒருக்காலும் செய்யமாட்டான். நேற்றே அதை உன்னிடமிருந்து பிடுங்க நாங்கள் அனைவரும் நினைத்தோம்; ஆனால் கிருஷ்ணன் தான் எங்களைத் தடுத்து நிறுத்தினான்.”

“அப்போது நான் பொய்யனா? அதைத் தானே நீ சொல்ல விரும்புகிறாய்? நான் பொய் சொல்வதாகக் குற்றம் சாட்டுகிறாயா நீ? வ்ருஷ்ணியின் மகனே! நீ ஆரம்பத்திலிருந்தே எனக்கு எதிராகச் சதி செய்வதையும் சூழ்ச்சிகள் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறாய். என்னை எப்போது அவமானப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறாய். என்னுடைய பொறுமை எல்லை கடந்து விட்டது.” என்று சீற்றத்துடன் கூவினான். சாத்யகன் எதற்கும் அசைந்து கொடுக்கவே இல்லை. அப்படியே தன் கண்களை சத்ராஜித்தின் மேல் நிலைநாட்டி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். “நான் நீ என்ன நினைக்கிறாய் என்பதைக் குறித்துக் கவலைப்படவில்லை, சத்ராஜித்! அதே போல் நீ செய்ய உத்தேசித்திருப்பதைக் குறித்தும் எனக்குக் கவலை இல்லை! ஆனால் எனக்குக் கிருஷ்ணன் அவன் சிறு பிள்ளையாக மத்ராவுக்கு வந்ததில் இருந்து நன்கு அறிவேன். அவன் தர்மத்தின் மறு உருவம். தர்மத்தின் அவதாரம். அவன் உன்னுடைய ச்யமந்தகத்தைத் திருடி இருப்பான் என்பதை நான் சிறிதும் நம்பவில்லை; நம்பவும் மாட்டேன்.”

“ஓ, பெரியவர்களான உங்கள் முடிவும், பார்வையும் இப்படியொரு கோணத்தில் இருக்கிறதா? எனில் நான் எனக்கு நியாயத்தை என் வழியிலே தேடிக் கொள்ளவேண்டியது தான். நான் இப்போது கிருஷ்ணனின் மாளிகைக்குச் செல்லப் போகிறேன். தேவைப்பட்டால் அந்த மாளிகையை அவனை உள்ளே வைத்து எரித்துச் சாம்பலாக்குவேன்.” என்று சீறியவண்ணம் தன் ஆசனத்திலிருந்து எழுந்தான் சத்ராஜித்.

இதற்குள்ளாக நகர் முழுவதும் ச்யமந்தகம் திருடப்பட்டது என்னும் செய்தியும் அதைக் கிருஷ்ணன் தான் திருடி இருக்கிறான் என சத்ராஜித் சொல்வதும் பரவிவிட்டது. மன்னரின் மாளிகையின் நிலா முற்றம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.அதோடு அரசமாளிகைக்குள் போர்க்கோலத்துடன் சத்ராஜித்தும் அவன் மகன் மற்றும் நண்பர்கள் சென்றதையும் அனைவரும் அறிந்திருந்தார்கள். ஆகவே அங்கு ஆவலுடன் அடுத்து என்ன என்று மக்கள் ஒருவருக்கொருவர் ஆவலுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணன் அங்கே வர சத்ராஜித்தின் ஆத்ரவாளர்களில் சிலர், அவனைப் பார்த்து, “திருடன், திருடன்” என்று கூக்குரல் இட்டனர். கிருஷ்ணனை அவர்கள் திட்டியது குறித்தும் குற்றம் சாட்டியதும் குறித்தும் கோபம் அடைந்த மக்களில் பலருக்கும் சத்ராஜித்தின் ஆதரவாளர்கள் மேல் கோபம் வர, அவர்கள் சத்ராஜித்தின் ஆதரவாளர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். சிறிது நேரத்தில் அங்கே மாபெரும் கலவரம் ஒன்று உருவானது. மேலும் மேலும் யாதவர்கள் அங்கே வர, வர கூச்சல், குழப்பம் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டுவது என்று தொடர்ந்து குழப்பமான நிலை உருவானது.

கிருஷ்ணன் உக்ரசேனரின் படுக்கை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கே தன் தந்தையும் சாத்யகரும் உக்ரசேனரின் படுக்கையிலேயே அமர்ந்திருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். சத்ராஜித் உக்ரசேனருக்கு எதிரே நின்று கொண்டிருக்க அவனுக்கு இருபக்கமும் பங்ககராவும் ஷததன்வாவும் நின்றிருந்தனர். கிருஷ்ணனைப் பார்த்ததுமே சத்ராஜித், “இதோ! திருடன் வந்துவிட்டான்!” என்று கூச்சல் இட்டான். “திருடனா? நான் எதை எப்போது திருடினேன்?” கிருஷ்ணனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. “ஹூம், நடிக்கிறாயா? அடே வாசுதேவக் கிருஷ்ணா! என் ச்யமந்தகத்தை இன்று காலை அதன் வழிபாட்டு அறையிலிருந்து நீ திருடிச் சென்று விட்டாய்!” என்றான் சத்ராஜித்.

“இன்று காலை நான் அதைத் திருடினேனா? ச்யமந்தகத்தையா?” மீண்டும் ஆச்சரியம் மேலோங்கக் கேட்டான் கிருஷ்ணன்.

“ஆம், இன்று காலைதான் திருடினாய். நான் அறைக்கு வெளியே தான் காவல் இருந்தேன். சில கணங்கள் அறையை விட்டு வெளியே செல்லும்படி நேரிட்டது. நீ அப்போது வழிபாட்டு அறையின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து ச்யமந்தகத்தை எடுத்துச் சென்று விட்டாய்! நான் திரும்பியபோது நீ நுழைவாயிலை நோக்கி ஓடியதைக் கண்டேன்!” என்றான்.

“ஆஹா, சத்ராஜித், சத்ராஜித்! ஒரு சாதாரணப் பாமரனைப் போல் நான் நீங்கள் சொல்வதை நம்பவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? நான் உங்கள் வழிபாட்டு அறையின் கதவுகளை உடைத்து ச்யமந்தகத்தைத் திருடினேன் என நீங்கள் சொல்வதை நான் நம்பவேண்டுமா?” எனச் சற்றும் கலங்காமல் கேட்ட கிருஷ்ணன் கடகடவெனச் சிரித்தான். “ஆஹா, நான் ஓடியதை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா? ஏன் என்னை ஓடி வந்து பிடிக்கவில்லை?” என்றும் கேட்டுவிட்டுச் சிரித்தான். “நீ அதற்குள்ளாகச் சில அடிகள் முன்னே ஓடி விட்டாய்! என்னால் அந்த இடைவெளியைக் கடந்து வந்து உன்னைப் பிடிக்க முடியவில்லை.” என்றான் சத்ராஜித்.

“ஓ, அப்போது நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டீர்கள்! அப்படித்தானே?”

சத்ராஜித் ஆமெனத் தலையசைத்தான். “ஓ, நான் தப்பி ஓடிக் கொண்டிருந்தேன் என்பது உண்மையானால், உங்களால் என் முகத்தை எப்படிப் பார்த்திருக்க முடியும்?”

“வேறு யார் ச்யமந்தகத்தைத் திருடப் போகிறார்கள்? நீ தான் என்னை மிரட்டினாய். அதை நீயாகவே எடுத்துக் கொள்வேன் என்று சொன்னாய். நேற்று மாலை சூரியோதயத்துக்குள்ளாக அதை எடுக்கப் போவதாகவும் சொல்லி இருந்தாய். ஆகவே நீ தான் இந்தத் திருட்டை நடத்தி முடித்திருக்கிறாய்!” என்று திருப்பிச் சொன்ன சத்ராஜித், தன் கண்களை மேலே உயர்த்தி, தன்னுடைய குடும்பத்துக்குப் பாதுகாவலாக இருக்கும் தெய்வம் என அவன் நம்பும் சூரிய பகவானைப் பிரார்த்திக்க ஆரம்பித்தான். “நான் சூரிய தேவன் சாட்சியாகச் சொல்கிறேன். நீ ஒருவனே, ஆம் நீ மட்டுமே ச்யமந்தகத்தைத் திருடி இருக்கிறாய். இது நிச்சயம்!” என்றான்.

சாத்யகர் அப்போது குறுக்கிட்டார். தன் பயங்கரமான விழிகளை மீண்டும் சத்ராஜித்தின் மேல் நிலை நாட்டினார். “கிருஷ்ணன் சொல்வது தான் சரியானது. நைனனின் மகனே! நீ கிருஷ்ணன் தான் திருடினான் என்பதற்கு அவன் முகத்தைப் பார்க்கவே இல்லையே! இங்கே எவ்விதமான சாட்சியங்களும் கிருஷ்ணன் தான் திருடினான் என்று காட்டிக் கொடுக்கவே இல்லை!” என்றார்.

“அது கிருஷ்ணன் தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், இதோ பாருங்கள்! சாட்சி வைத்திருக்கிறேன். இது கிருஷ்ணனின் காதுக் குண்டலம். அவன் தப்பி ஓடுகையில் நழுவ விட்டது. இதை நான் நுழைவாயிலுக்கு அருகாமையில் பார்த்தேன்.” என்ற வண்ணம் தன்னிடமிருந்த காதுக் குண்டலத்தை எடுத்துக் காட்டினான் சத்ராஜித். “இது உன்னுடையது தானே! சொல், உடனே!” என்றான். கிருஷ்ணன், “ஆம், இது என்னுடையது தான். இது நேற்று உங்கள் மாளிகைக்கு நான் வந்தபோது நீங்கள் என்னைத் தாக்கியபோது கீழே விழுந்து விட்டது. என்னைக் கழுத்தை நெரிக்க முயல்கையில் கழன்று விழுந்து விட்டது.” என்றான்.

“பொய்யன், பொய்யன்! பொய் சொல்கிறான்.” என்று கூவினான் சத்ராஜித்.

அப்போது வெளியே பெரிய சப்தம் கேட்டது. வெளி முற்றத்திலும் அதை ஒட்டிய மைதானத்திலும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று உராயும் சப்தமும் மக்கள் கூக்குரலும் கேட்டது. ஆயுதங்கள் வேகமாய் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.

1 comment:

ஸ்ரீராம். said...

உண்மையைச் சொல்ல பாமா வருவாளோ!