Wednesday, June 1, 2016

தாயும் மகனும்!

அப்போது த்வைபாயனர் சற்றும் கலங்காமல் தன் கைகளை உயர்த்திய வண்ணம், :யுவராஜா! நான் இங்கிருந்து எதையும் எடுத்துச் செல்ல வரவில்லை. கொடுத்துச் செல்லவே வந்திருக்கிறேன்.” என்றார். ஆனால் யுவராஜா காங்கேயனோ த்வைபாயனரைச் சற்றும் மதிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். இந்த இளம் துறவிக்கு மரியாதை என்பதே இல்லை என்றே அவர் எண்ணினார். த்வைபாயனர் வேறு வழியின்றி தள்ளி இருந்தே சக்கரவர்த்திக்கு நலம்பெறும்படி ஆசிகளைக் கூறிவிட்டு கனத்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினார்.

அவர் ஹஸ்தினாபுரத்திற்கு எதற்காக வந்தாரோ அந்த எண்ணம் முழுவதுமே இப்போது வீணாகிவிட்டது. சக்கரவர்த்தி ஷாந்தனுவின் துணையோடு தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்ய வேண்டும் என்னும் அவர் ஆசை! இப்போது முற்றிலும் மறைந்தே போய்விட்டது. இந்த யுவராஜாவின் உதவியை நாடலாம் எனில் அவன் உதவி செய்பவனாகத் தெரியவில்லை. த்வைபாயனரின் தன்னம்பிக்கை சற்றே ஆட்டம் கண்டது. இப்போது தன்னைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் இந்தக் கருமையான இருட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றத் தன் தந்தை மட்டும் பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும். ஆஹா! தந்தை மட்டும் இப்போது இங்கிருந்தால்!

அரசமாளிகையின் வெளி மைதானத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தார் த்வைபாயனர். அப்போது ஓர் வயதான பெண்மணி அங்கே அவரை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தால் மிகவும் உயர்ந்த இடத்தில் வேலை செய்பவளைப் போல் இருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடை, அணிமணிகள் அரச மாளிகையில் வேலை செய்பவர்கள் அணிவது! அவரை நோக்கி வேகமாய் கிட்டத்தட்ட ஓடியே வந்தாள். த்வைபாயனரை நமஸ்கரித்து விட்டு அவள் கேட்டாள். “மாட்சிமை பொருந்திய ரிஷியே! நீங்கள் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பது போல் தெரிகிறது! ஏதேனும் உண்ணக் கிடைத்ததா உங்களுக்கு? உண்டீர்களா?” என்றாள். “இல்லை!” என்று தலை அசைத்த த்வைபாயனர், “நான் கோயிலுக்கு வரும்போது அங்கே உணவுப் பரிமாற்றங்கள் அனைத்தும் முடிந்து விட்டன. வந்திருந்த விருந்தாளிகள் அனைவரும் உண்டு முடித்துவிட்டனர்.” என்றார்.

“என் தலைவி, மதிப்புக்குரிய மஹாதேவி, மஹாராணி, தங்களை என்னுடன் வந்து மாளிகையில் உணவருந்தி விட்டுச் செல்லும்படி பணித்திருக்கிறாள்.” என்றவள், “தாங்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும் இருப்பதை அவள் கவனித்திருக்கிறாள்.அதோடு யுவராஜா காங்கேயரால் நீங்கள் திருப்பி அனுப்பப்பட்டதும் அவளுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அவள் யுவராஜா காங்கேயர் சார்பில் உங்களிடம் மன்னிப்பை வேண்டுகிறாள். தன் தகப்பனின் உடல் நிலையால் யுவராஜாவுக்கு மிகுந்த மனக்கஷ்டமும், வருத்தமும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அப்படி நடந்து கொண்டிருக்கிறார்.” என்றாள். தன் கௌரவத்தை இழக்காமல் த்வைபாயனர் பேசினார். “என்னைத் திருப்பி அனுப்பியதிலேயே எனக்கு இனிமேல் ஹஸ்தினாபுரத்தில் எந்த வேலையும் இல்லை என்று புரிந்து விட்டது! மதிப்புக்குரிய மஹாராணியிடம் ஒருவேளை உணவில்லாவிட்டால் எனக்கு ஒன்றும் ஆகிவிடாது என்றும் அது அப்படி ஒன்று கஷ்டம் இல்லை என்றும் என் சார்பில் சொல்லிவிடு!” என்றார்.

“இல்லை, ஐயா! மதிப்புக்குரிய மஹாராணி ஒரு சபதம் எடுத்திருக்கிறார். அதன்படி எந்த ஸ்ரோத்ரியரையும் உணவு உண்ணாமல் மாளிகையை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்பது தான் அது! அதோடு அவள் உங்களைச் சந்திக்கவும் விரும்புகிறாள்.”

“ஏன்?” த்வைபாயனர் கேட்டார்.

“மஹாராணி நீங்கள் பேசிய விதத்தில் மிகவும் ஈர்க்கப்பட்டு விட்டாள். “நீங்கள் நான் எடுத்துக்கொள்ளவரவில்லை! கொடுத்துச் செல்லவே வந்திருக்கிறேன்.” என்று சொன்னது அவளை மிகவும் கவர்ந்து விட்டது. இது வெறும் வார்த்தையல்ல என்பதை அவள் உணர்கிறாள். நம்புகிறாள். ஆகவே நீங்கள் வந்து பரதகுலத் தோன்றலான எங்கள் சக்கரவர்த்தி இந்த உடல்நலக் குறைவிலிருந்து மீண்டு வர வழி செய்வீர்கள் என்பதும் அவள் நம்பிக்கை!”

“அம்மா, அரச குடும்பத்தினரோடு என்னைத் திணித்துக் கொண்டு உறவாட நான் விரும்பவில்லை!” என்றார் த்வைபாயனர்.

ஆனால் அந்தப் பெண்மணி மிகவும் கெஞ்சும் குரலில், “தயவு செய்து என்னுடன் வாருங்கள். உங்களை நான் இப்போது அழைத்துச் செல்லவில்லை எனில் ராணிக்கு மிகவும் வருத்தமாகி விடும். என்னையும் மன்னிக்கவே மாட்டாள்!” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள். த்வைபாயனர் கொஞ்சம் யோசித்தார். பின்னர், “சரி அம்மா! நான் வரவில்லை என்பதற்காக உன்னை ராணி குற்றம் சொல்லிக் கடிந்து கொள்வதை நான் விரும்பவில்லை. ஆகவே நான் உன்னுடன் வருகிறேன்.” என்றவர் அந்தப் பெண்மணியைத் தொடர்ந்து சென்றார். அரச மாளிகையை நோக்கிச் சென்ற அவர்கள் ஒரு பெரிய அறையை அடைந்தனர். அந்த அறையின் ஒரு மூலையில் அவர் மஹாராணி நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அவள் நின்ற தோரணையே எழிலார்ந்து இருந்தது. உருவத்தில் சிறிய உருவமாக இருந்தாலும் அழகு படைத்தவள் என்பதைப் புரிந்து கொண்டார். அங்கே ஒரு சின்னக் கோயில் இருந்தது; அந்தக் கோயிலின் கருவறையில் இருந்த விக்ரஹங்களுக்கு எதிரே அவள் வணங்கி வழிபடும் தோரணையில் அமர்ந்திருந்தாள். ஆகவே அவள் முகம் அவருக்குத் தெரியவில்லை. அதோடு அவள் அந்தக் கால வழக்கப்படி தலையிலிருந்து முகத்தை மூடி முக்காடும் போட்டிருந்தாள்.

த்வைபாயனர் மஹாராணியின் எதிரே எவ்வளவு தூரம் தள்ளி நிற்கலாமோ அவ்வளவு தூரம் தள்ளி நின்றிருந்தார். மஹாராணி அந்தத் துறவியைப் பார்த்ததும் எழுந்து கொண்டு தன்கைகளைக் கூப்பியவண்ணம் அவரை நோக்கி வர ஆரம்பித்தாள். த்வைபாயனரும் அவளை ஆசீர்வதிக்கத் தயாராகத் தன் கரங்களை உயர்த்தினார். அப்போது அவள் முகத்தை மூடி இருந்த துணி சற்றே நகர்ந்தது. தலையிலிருந்து முக்காடு நழுவித் தோளில் விழுந்தது. அவள் முகத்தைப் பார்த்த த்வைபாயனர் அதிர்ந்தே போனார் என்றால் மிகையல்ல! எல்லையற்ற திகைப்பில் அவர் கண்கள் விரிந்து முகம் ஆச்சரியத்தில் காணப்பட அவர் கைகளிலிருந்து தண்டமும் சுரைக் குடுக்கையும் நழுவிக் கீழே விழுந்தன.

 இந்த அழகான எழிலார்ந்த வடிவத்தை அவர் எப்படி மறந்தார்? இந்த வசீகரத்தை எப்படி மறந்தார்? அந்த ஒளி பொருந்திய விசாலமான கண்கள், சின்னஞ்சிறிய அழகிய பாதங்கள், ஒளி பொருந்திய அழகிய வடிவான முகம்! இத்தனை வருடங்கள் ஆகியும் அந்த முகத்திலோ, உடலிலோ கொஞ்சம் கூட வயதான தன்மை தெரியவில்லை. அந்த அழகு அப்படியே இருந்தது. த்வைபாயனரின் திகைப்பையும் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்த பொருட்களையும் பார்த்த மஹாராணி ஸ்தம்பித்துப் போனாள். அதே சமயம் சாதாரணமாக ரிஷிகள், முனிவர்கள் தான் ராஜ வம்சத்தினருக்கு ஆசிகள் கொடுப்பார்கள். அவர்கள் வயது குறைவாக இருந்தாலும்! ஆனால் அந்தச் சம்பிரதாயங்களை எல்லாம் மீறி இந்த இளம் துறவி மஹாராணியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான்.

இது என்ன? சரியாகவே இல்லையே! என்று யோசித்த மஹாராணி த்வைபாயனர் எழுந்து நின்று கொண்டதும் அவர் முகத்தைப் பார்த்தாள். உடனே அவளுக்குப் புரிந்து விட்டது. இது அவள் கிருஷ்ணா தான்! அதே சந்தோஷத்தில் மிதக்கும் கண்கள், எப்போதும் புன்னகையுடன் இருக்கும் முகம், பெரியோர்களிடம் காட்டும் மரியாதை! ஒளி பொருந்திய கண்களிலிருந்து பெருகும் கருணை! அங்கே அப்போது இருந்த ஊழியர்களையும் மறந்தாள் மஹாராணி! அவள் கிருஷ்ணன்! அனைத்து சம்பிரதாயங்களையும் தான் ஒரு மஹாராணி என்பதையும் மறந்து, “கிருஷ்ணா!” என்று கூவினாள்.

த்வைபாயனரால் பேசவே முடியவில்லை. ஆகையால் விம்மி அழுதார். நடப்பவற்றைப் பார்த்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஊழியர்கள் ஒருவரும் சொல்லாமலேயே அங்கிருந்து வெளியேறினார்கள். தாயும் மகனும் தனித்து விடப்பட்டனர்.

“கிருஷ்ணா, உன் தந்தை மதிப்புக்குரிய முனி, பராசரர் இப்போது எங்கே?”

“தாயே, அம்மா, அவர் இறந்து நான்கு மாதங்கள் ஆகின்றன! அவர் ஓநாய்களால் கொல்லப்பட்டார். அவருடைய ஆசிரமம் இருந்த சாம்பல் பிரதேசத்தை அவர் சென்று பார்த்தபோது ஓநாய்கள் அவரைத் தாக்கின.”

“கிருஷ்ணா! நீ உன் பிரமசரிய விரதத்தை அவர் மேற்பார்வையில் முடித்துவிட்டாயா?”

“ஆம், தாயே!”

“நீ தனியாகவா இருக்கிறாய்?”

“தாயே, பைலரை உங்களுக்குத் தான் தெரியுமே! அவர் என்னுடன் இருக்கிறார். ஆனால் இப்போது அவர் என்னுடன் வர முடியவில்லை. அவருக்கு மிகவும் மோசமாகக் காயங்கள் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப் பட்டிருக்கிறார். அவரை ஓர் ஆசிரமத்தின் மனிதர்களின் கண்காணிப்பில் விட்டு வந்திருக்கிறேன். தாயே, இத்தனை வருடங்கள் ஆன பின்னரும் தாங்கள் என்னை அடையாளம் தெரிந்து கொண்டீர்களா?”

“மகனே, உன்னுடைய முகம் எனக்கு மறக்குமா? தெளிவாக நினைவில் உள்ளது! நான் அடிக்கடி கனவிலும் நினைவிலும் உன் முகத்தைப் பார்த்து வருகிறேன். எப்படி உன்னுடைய சிரிக்கும் கண்களை மறப்பேன்? உன் புன்னகையை எப்படியப்பா மறக்க இயலும்? நான் பார்த்த மனிதர்களிலேயே இவ்வளவு கருணையுடன் சிரிக்கும் ஒரே மனிதன் நீ தானே அப்பா! உன்னை நான் மறப்பேனா! ஆனால், மகனே, நீ என்னை நினைத்தாயா? என் நினைவு உனக்கு வந்ததா?” என்று மஹாராணி மூச்சு விடாமல் கேட்டாள்.

“தாயே, தாயைச் சேய் மறக்கலாகுமோ? நான் உங்களை மறக்கவே இல்லை! தந்தை பித்ருலோகம் போன பின்னால் நான் உங்களைத் தேடிக் கொண்டு கல்பிக்குச் சென்றிருந்தேன்.”

“கல்பியில் உள்ள மனிதர்கள் சௌக்கியமாக இருக்கின்றனரா?”

“நான் கிராமத்தில் இருந்த அனைவரையும் சந்தித்தேன். அவர்கள் கூறியவற்றிலிருந்து நீங்கள் ஓர் அரசனுடன் சென்று விட்டதை அறிந்தேன். ஆனால் எங்கே என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தாத்தாவும், பாட்டியும் கூட மற்ற மனிதர்களோடு அங்கிருந்து சென்று விட்டார்கள் என்றும் அறிந்தேன்.”

1 comment:

ஸ்ரீராம். said...

உணர்ச்சிகரமான கட்டம்!