Monday, January 30, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம்! சௌப நாட்டில்!

பிரத்யும்னன் அந்த ஒட்டகங்களில் அமர்ந்து ஓட்டி வந்த வீரர்களைப் பார்த்தான். அவர்கள் அனைவருமே ஷால்வனின் படையில் மிக உயர்ந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்தது. அவர்களில் ஒருவன் பிரத்யும்னனைப் பார்த்து, “நீ ஏன் இங்கே வந்தாய்?” என்று வினவினான். “நான் உங்களுடைய மன்னர் மன்னனைச் சந்திக்க வந்திருக்கிறேன். அவரைக் குறித்து நான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன்.” என்றான் பிரத்யும்னன். “உன் பெயர் என்ன?” என்று அந்தத் தலைவன் கேட்டான். அதற்கு பிரத்யும்னன் நேரிடையாக பதில் கூறாமல், தலைவனிடம், “என்னை உங்கள் மன்னர் மன்னரிடம் அழைத்துச் செல் தலைவா! அவரிடம் நான் யாரென்று கூறுகிறேன். நான் ஏற்கெனவே சொன்னதைப் போல் நான் அவரிடம் நேரிடையாகச் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு வந்த வேலையைக் குறித்துச் சொல்லும்படி ஆணையிடப் பட்டிருக்கிறேன்.” என்றான்.

“உங்கள் தரப்பு வீரர்களிடம் உன்னுடைய தகுதி எவ்வகைப்பட்டது? நீ தலைவனா? அல்லது வெறும் படை வீரன் மட்டுமா?” தலைவன் கேட்டான்.

“நான் ஓர் மஹாரதி! உங்கள் அரசன் ஷால்வன் சௌராஷ்டிரத்தை முற்றுகை இடாவிட்டால் நான் மஹாரதி என்னும் நிலையிலிருந்து அதிரதியாக ஆகி இருப்பேன்!” என்றான் பிரத்யும்னன்.

தலைவன் மற்றவர்களைப் பார்த்து, “நான் இன்று திரும்பிச் சென்று விட்டு நாளை மறுநாள் திரும்பி வருகிறேன். இவர்கள் அனைவரும் நம் விருந்தாளிகள். இப்போது நாம் அவர்களின் ஒட்டகங்களை மட்டுமல்லாமல் அவர்கள் சேமித்து வைத்திருந்த சாப்பாடையும் எடுத்துச் செல்கிறோம். ஆகவே அவர்களுக்கு உணவு கொடுத்துப் பாதுகாக்கவும்!” என்றான். அவர்கள் அந்த ஒட்டகங்களின் மேல் மேலும் இரு நாட்கள் பயணம் செய்தனர். முழுக்க முழுக்கப் பாலைவனமாக இருந்த அந்தப் பாதையில் எங்கெல்லாம் சோலைகள் தென்படுகின்றனவோ அங்கே அவர்கள் தங்கி ஓய்வெடுத்தனர். மூன்றாம் நாள் மாலை அவர்கள் ஓர் பெரிய பாலைவனச் சோலைக்கு வந்து சேர்ந்தனர். அன்றிரவை அங்கேயே கழித்தனர். நான்காம் நாள் அவர்கள் கிளம்பும்போது சில வீரர்கள் ஒட்டகங்களில் பயணம் செய்து கொண்டு அங்கே வந்தனர். அவர்களை நெருங்கினார்கள். அவர்களில் பலரிடமும் வில்லும் அம்புகளும் இருந்தன.  தலைவனாகக் காணப்பட்டவன் ஆயுதம் தரித்திருக்கவில்லை. அவர்கள் அருகே நெருங்கியதும் ஒட்டகங்களை நிறுத்திவிட்டு அதிலிருந்து கீழே இறங்கினார்கள்.

தொடர்ந்து சீராகத் தலைவன் அவர்கள் மேல் மரியாதை காட்டி வந்தாலும் அவர்களிடம் அக்கறையுடன் நடந்து கொண்டாலும், அவர்கள் செல்லுமிடம் குறித்த எந்தத் தகவலையும் அவன் பகிர்ந்து கொள்ள மறுத்தான்.  ஐந்தாம் நாள் அவர்கள் இன்னும் பெரியதொரு பாலைவனச் சோலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கே ஆயுதபாணியாகப் பல தலைவர்கள் அவர்களை வரவேற்றனர். அவர்களுடன் வந்த தலைவனின் யோசனைப்படியும் வழிகாட்டுதலின் பேரிலும் இரண்டு வீரர்கள் பிரத்யும்னனுக்குப் புதிய ஆடைகளைக் கொண்டு வந்து கொடுத்தனர். அவன் அணிந்திருந்த பழைய துணிகளை அவர்கள் வாங்கிக் கொண்டு விட்டனர். இது என்ன புதிய உத்தி என்னும் சிந்தனையில் பிரத்யும்னன் ஆழ்ந்தான்.

அப்போது தலைவன் அவனிடம், “எவ்விதத் தந்திரமும் செய்ய நினைக்காதே! நீ இப்போது அரசர்க்கரசர், மஹா சக்கரவர்த்தியைப் பார்க்கப் போகிறாய்! ஆகவே நீ உன்னுடைய இந்தப் பழைய ஆடை மண்ணும், புழுதியும் நிரம்பிக் காணப்படுவதால் அதை அணிந்து செல்ல முடியாது!” என்றான்.  ஆறாவது நாள் வந்தது. விடிகாலை வேளை!அவர்கள் ஓர் நகரத்துக்கு வந்து சேர்ந்திருந்தனர். அங்கே பல உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் தங்கி இருக்கிறார்கள் என்னும் வண்ணம் மாளிகைகள் காட்சி அளித்தன. தெருவின் இரு பக்கங்களிலும் மாளிகைகள் காணப்பட்டன. ஆனால் தெருக்கள் எல்லாம் குப்பைகள் மிகுந்து காணப்பட்டது. ஆடையே அணியாத சின்னஞ்சிறு குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு அந்தப் புழுதியில் விளையாடிக் கொண்டு இருந்தன. அவர்கள் தெருக்களைக் கடந்து செல்கையில் பிரத்யும்னனுக்கு இது ஒட்டகம் சார்ந்த பொருளாதாரம் என்பது திடீரென உதயம் ஆனது. சில ஒட்டகங்கள் அங்கே உள்ள கம்பங்களில் கட்டிப் போடப்பட்டிருந்தன. சிலவற்றிலிருந்து பால் கறந்து கொண்டிருந்தனர். இவற்றைத் தவிர அங்கே ஆடுகள், செம்மறியாடுகள், கோவேறு கழுதைகள் ஆகியனவும் காணப்பட்டன. ஆனால் அங்கே மாடுகளையோ பசுக்களையோ அல்லது குதிரைகளையோ காணமுடியவில்லை.

வீரர்களின் தலைவன் பிரத்யும்னனையும் மற்றவர்களையும் ஒரு முகாமுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வயிறு நிரம்ப உணவளித்தான். ஆடம்பரமான உணவாக அது இருந்தது. மீண்டும் அவர்கள் பயணத்தைத் தொடங்குகையில் தெருக்கள் எல்லாம் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்த பல மேன்மையான மனிதர்கள் காணப்பட்டனர். அவர்களில் யாரேனும் ஒருவரிடம் பேசுவதற்கு பிரத்யும்னன் முயற்சி செய்தான்.  ஆனால் வீரர்களின் தலைவன் அவனைப் பிடித்து இழுத்து, “இப்போது நீயும் உன்னுடன் வந்தவர்களும் என் கைதிகள்!” என்று பேசுவதிலிருந்து அவனைத் தடுத்தான்.

“நாங்கள் கைதிகள் அல்ல! இங்கே என்ன யுத்தமா நடந்தது? யுத்தத்தில் தோற்பவர்களைத் தான் கைதிகளாகப் பிடித்துச் செல்வார்கள். நாம் எந்த யுத்தத்திலும் ஈடுபடவே இல்லையே! இங்கே எந்தப் போரும் நடைபெறவே இல்லையே!” என்று பிரத்யும்னன் அதை மறுத்தான்.

“நான் உன்னுடன் ஒத்துப்போகிறேன். போரினாலும் யுத்தத்தினாலும் என்ன கிடைக்கிறது! எதுவும் இல்லை. ஆகவே போரும் யுத்தமும் தேவையற்ற ஒன்று!” என்று சிரித்தான் அந்தத் தலைவன். “ஆனால் ஒன்று! எங்கள் மன்னாதி மன்னர் எனக்குச் சில தனிப்பட்ட முக்கியமான கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறார்.  உன்னுடைய உடலின் எந்த பாகத்திலும் சின்னக் கீறல் கூட இல்லாமல் உன்னைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே அது!  ஆகவே நான் உன்னைப் பாதுகாக்கவே வந்தேன்!” என்றான்.

“என் தோழர்கள்? அவர்கள் கதி என்ன?” பிரத்யும்னன் கேட்டான்.

“ஓ, அவர்கள் இல்லாமலா! அவர்களும் எங்கள் விருந்தினர்களே! சரி, சரி, சீக்கிரம் வா! நாம் இன்னமும் சில யோஜனை தூரம் பிரயாணித்துச் செல்ல வேண்டும்!” என்றான்.  அவர்கள் சூரிய உதயத்திற்கு முன்னால் சில மணி நேரங்கள் பயணம் செய்தனர்.  சூரிய உதயம் ஆகி வெப்பம் அதிகரித்ததும் அவர்கள் ஏதேனும் ஓர் பாலைவனச் சோலையில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.  இந்த சௌப நாட்டுக்காரர்களின் விசித்திரமான நடத்தையை பிரத்யும்னனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர்கள் எங்கே தங்கினாலும் சரி! அங்கே முன் கூட்டியே செய்திருந்த ஏற்பாடுகள் மூலம் அவர்களுக்கெல்லாம் நல்ல உணவும் மற்ற சௌகரியங்களும் தடையின்றிச் செய்து கொடுக்கப்பட்டது.  பார்க்கிறவர்கள் பிரத்யும்னன் தான் அந்த நாட்டின் இளவரசனோ என்று நினைக்கும் வண்ணம் அவர்கள் உபசாரம் இருந்தது.

ஓர் களிமண்ணால் கட்டப்பட்ட கோட்டை வந்தது. தன் ஒட்டகத்தை அதன் அருகே நிறுத்தினான் அந்த வீரர் தலைவன். “நாம் இப்போது மாட்ரிகோவட்டாவை அடைந்து விட்டோம். இது தான் நாம் வந்து சேரவேண்டிய இடம்.  நம் பயணம் இத்துடன் முடிவடைந்தது!” என்ற வீரர் தலைவன் சற்று நிறுத்தி யோசித்துவிட்டுத் தொடர்ந்தான். “உனக்கு என்னுடைய பெயர் தெரியவேண்டும் அல்லவா? என் பெயர் வஜ்ரநப் ஆகும். சௌபவீரர்களின் படைத்தலைவன் நான். ஹூம்! உன் பெயர் என்னவென்று நீ சொல்லவில்லை அல்லவா? அல்லது உனக்குத் தெரியாதா? நான் சொல்லட்டுமா? உன் பெயர் பிரத்யும்னன். கிருஷ்ண வாசுதேவனின் குமாரன். “ அதைக் கேட்ட பிரத்யும்னன் சிரிக்க தலைவனும் சிரித்துக் கொண்டே பிரத்யும்னன் இறங்க உதவி செய்தான். இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்ற நினைத்ததை எண்ணிச் சிரித்துக் கொண்டே பிரத்யும்னனும் கீழே இறங்கினான்.

1 comment:

ஸ்ரீராம். said...

ஊரைப் பற்றியும், தெருக்களைப் பற்றியும் என்னவொரு நுண்ணிய வர்ணனை!
தொடர்கிறேன்.