Wednesday, March 15, 2017

வசுதேவர் எங்கே?

பிரத்யும்னனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.   அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அதே சமயம் தான் வஜ்ரநபுக்கு இவ்வளவு அருகே இருந்தும், கிட்டத்தட்ட அவன் பிடியில் இருந்தும் அவன் ஏன் தன்னைக் கொல்ல இவ்வளவு தயங்குகிறான் என்பதைப் பிரத்யும்னனால் புரிந்து கொள்ள முடியவில்லை.  வஜ்ரநப் அவனிடம் மெல்லிய குரலில் பேசினான். “முட்டாள், முட்டாள்! நீ ஏன் இன்னமும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறாய்? விரைவில் என்னைக் கீழே தள்ளு! முட்டாள், முட்டாள்! இன்னமும் என்னைப் பிடித்து உன் வசப்படுத்தாமல் பார்த்துக்கொண்டே நிற்கிறாயே!” என்றான்.

பிரத்யும்னனுக்கு வஜ்ரநபின் நோக்கம் தெளிவாகப் புரிந்தது. வஜ்ரநப் தன்னைக் கொல்வதற்கு வந்த கொலையாளியாக இல்லாமல் தன்னிடம் சிறைப்பட்டவனைப் போல் நடிக்க விரும்புகிறான். தான் தன்னுடைய திறமையாலும், வலிமையாலும் வஜ்ரநபைப் பிடித்தது போல் காட்டிக் கொள்ளச் சொல்கிறான்! பிரத்யும்னன் தயார் ஆவதற்குள்ளாக வஜ்ரநபே தன் ஒரு கையால் பிரத்யும்னனைப் பிடித்த வண்ணமும் இன்னொரு கையால் தன் வாளைக் கீழே தள்ளிய வண்ணமும் நின்றான். பிரத்யும்னனுக்கு இந்த விளையாட்டின் தன்மை முற்றிலும் பிடிபட்டது!  ஆகவே வஜ்ரநபின் வாள் கீழே விழும் முன்னரே அதைத் தன் கைகளால் பிடித்து விட்டான்.  வாள் இல்லை என்ற சாக்கை வைத்து வஜ்ரநப் பிரத்யும்னன் தன்னைத் தள்ளியது போல் பாவனை செய்த வண்ணம் அவனும் கீழே சாய்ந்தான்.  பிரத்யும்னன் அவன் மார்பில் ஏறி அமர்ந்தான். அங்கே காவலுக்கும் துணைக்கும் இருந்த அடிமைகள் கூட இதைப்பார்த்து வஜ்ரநபின் துணைக்கு வராமல் அதற்கான முயற்சிகளைக் கூடச் செய்யாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

வஜ்ரநப் பிரத்யும்னனைப் பார்த்துக் கெஞ்சினான். “என்னைக் கொன்று விடாதே, பிரத்யும்னா, கொன்று விடாதே!” என்றான். பிரத்யும்னன் வஜ்ரநப் சொல்வதை மேலும் தெளிவாகப் புரிந்து கொண்டு அவனுக்குத் தன் கைகளாலும் கால்களாலும் இரண்டு உதைகள் கொடுத்துவிட்டுப் பின்னர் அவனை மெல்ல எழுந்திருக்கச் சொன்னான். வஜ்ரநபும் எழுந்து கொண்டு ஒரு கயிறைப் பிரத்யும்னன் கைகளில் கொடுத்தான். அந்தக் கயிறு ஒரு பக்கம் வஜ்ரநபின் இடுப்பைச் சுற்றிக் கட்டி இருந்தது.  அதன் மறுமுனையைப் பிரத்யும்னனிடம் கொடுத்துவிட்டு வஜ்ரநப், “முட்டாள், இந்தக் கயிறை வைத்து என்னை நன்றாக இறுக்கிக் கட்டு!” என்று சொல்லிக் கொடுத்தான்.

அப்போது அங்கே தெரிந்த இருட்டிலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது. ஓர் காட்டுவாசிப் பெண்போல் காட்சி அளித்த அந்த உருவத்தின் கைகளில் ஓர்வாள் தென்பட்டது. பிரபாவதி அதிர்ச்சி அடைந்தாள். காட்டு வாசியைப் போல் காணப்பட்ட ஓர் வயதான பெண்மணி, தலையெல்லாம் அலங்கோலமாய்க் காட்சி தர, தன் கணவன் பிரத்யும்னனைத் தன் கைகளில் எடுத்து அணைத்ததைக் கண்டு திகைத்தாள் அந்தப் பெண்மணி பிரத்யும்னனிடம், “என் கண்ணே! கவலைப்படாதே! இது நான் தான்! சரியான சமயத்துக்கு நான் உன்னிடம் வந்துவிட்டேன்!” என்றாள்.

வஜ்ரநப் அப்போது குறுக்கிட்டு, “கவலைப்படாதே பிரத்யும்னா! எங்கள் மன்னாதி மன்னர் புஷ்கரவர்த்தம் சென்றிருக்கிறார்.  அந்தப் பகுதி முழுவதும் யாதவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எங்கள் மன்னர் மட்ரிகோவட்டாக் கோட்டையின் பாதுகாப்பை என் பொறுப்பில் விட்டுச் சென்றிருக்கிறார்.  நான் பொறுப்பேற்றதும் செய்ய வேண்டிய முதல் வேலை இது தான்! அது தான் உன்னைப் பிடிப்பது!” என்றவன் சத்தமாகச் சிரித்தான். பின்னர் தொடர்ந்து, “எங்கள் மன்னாதி மன்னர் தொலைதூரத்தில் எட்ட முடியாத தூரத்தில் பத்திரமாக இருக்கட்டு. நீ இங்கிருந்து தப்பிச் செல்வதற்கான வழியைப் பார்!” என்றான்.

அப்போது பிரத்யும்னனைத் தேடி வந்த மாயாவதியைப் பார்த்த பிரபாவதி, “இந்தப் பெண்மணி யார்?” என்று கேட்டாள். “ஓ! இவள் தான் நான் சொன்ன என் “தாய்”! இவளைக் குறித்து நான் உன்னிடம் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேனே!” என்றான்.

அவளைப் பார்த்த பிரபாவதி, “நீ யாராக இருந்தாலும் எங்களை எங்கள் விருப்பம் போல் வாழவிட்டு விட்டுச் சென்றுவிடு!” என்று கூறிய வண்ணம் அழுதாள். அதற்கு மாயாவதி, “முதலில் அழுகையை நிறுத்து பெண்ணே! நீ இங்கே தானே நின்று கொண்டிருக்கிறாய்? உன்னை வேறெங்கும் அனுப்பவில்லையே! நீ என்ன குழந்தையா?” என்று கேட்டவண்ணம் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.  பிரபாவதிக்கு அவள் நடத்தையைக் குறித்தும் அவளுடைய பேச்சும் சரிவரப் புரியவில்லை. அதோடு அவளுக்கு இந்த பிரத்யும்னனின் “தாய்” பற்றிய செய்திகளும் சரி, அவளுடைய வழிமுறைகளும் சரி பிடிபடவே இல்லை. அவளுக்கு அதில் அனுபவங்களும் இல்லை. ஆகவே அவள் வாய் விட்டு அழுத வண்ணம், “நான் அவர் மனைவி!” என்று புலம்பினாள்.

“விரைவில் நீ என்னைப் பற்றி நன்கு புரிந்து கொள்வாய்! அது தான் உனக்கு நல்லது!” என்றாள் “தாய்” மாயாவதி! “நான் பல வருடங்களுக்கு மேலாக இவனுக்குத் தாயாக இருந்து வருகிறேன். அப்போது அவனுக்கு இவ்வுலகில் வேறு யாரும் இல்லை. நான் தான் தாய், தந்தை எல்லாமும்!” என்றாள். சற்று நேரம் நிறுத்திவிட்டு மௌனமாக இருந்தவள், “கவலைப்படாதே, பிரபாவதி! இவன் என்னையும் மணந்து கொண்டிருக்கிறான்!” என்றாள்.

அப்போது வஜ்ரநப் பிரபாவதியைப் பார்த்து, “பிரத்யும்னனைக் கொல்வதற்கென உனக்களிக்கப்பட்ட அரசாணையின் கதி என்ன? நான் மட்டும் சரியான நேரத்தில் வரவில்லை எனில் அவன் எப்போதோ இறந்து போயிருக்கக் கூடும். இப்போது என்ன கஷ்டம் எனில் இந்தப் பாலைவன மணல் பிரதேசத்தை விட்டு இவனை எவ்விதம் வெளியே அனுப்புவது என்பது தான்!” என்றான்.  அப்போது பிரபாவதி, “அப்படி அனுப்ப முடிந்தால் என்னையும் சேர்த்து அனுப்பி விடுங்கள்!” என்றாள்.

“நான் இந்த அரசாணையைப் பல சமயங்களில் பயன்படுத்தி இருக்கிறேன்.” என்றவன் பிரத்யும்னன் பக்கம் திரும்பி, “பிரத்யும்னா! உடனே என்னைக் கட்டிப் போடு! இறுக்கமாகவே கட்டு! என் ஆட்களில் சிலர் இந்த மலைக்குன்றின் அடிவாரத்தில் உனக்காகக் காத்திருப்பார்கள். சீக்கிரம் விரைந்து செயல்படு!” என்றான். “உங்கள் மன்னாதி மன்னரின் கட்டளைக்கு என்ன பதில்?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“நீ இந்த அரசர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே! அவர் தன்னைத் தானே கவனித்துக் கொள்வார்! எங்கள் பகுதியின் எல்லையைக்காப்பாற்ற வேண்டி நூற்றுக்கணக்கான ஒட்டகங்களுடனும் ஆட்களுடனும் அவர் புஷ்கர வர்த்தம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.” என்றான் வஜ்ரநப்!  அவன் தன்னுடைய உத்திகளைத் தயாராக வைத்திருந்தான். ஓட்டகங்களுடன் ஒட்டகங்களை ஓட்டுபவர்களும் தயாராகக் காத்திருந்தனர். மட்ரிகோவட்டாவை விட்டு பிரத்யும்னனை வெளியேற்றக் காத்திருந்தார்கள்.  பிரபாவதி பிரத்யும்னனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். “என் தாய் பிரவிசியை இங்கேயே விட்டு விட்டுச் செல்ல வேண்டுமா?” என்று கதறினாள்.

“பிரபாவதி, நீ ஓர் முட்டாள் பெண்!” என்றாள் மாயாவதி! “அழுவதற்கு இதுவா நேரம்? அதற்கெனத் தனியான நேரம் இருக்கிறது. அதே போல் நம் வேலையைச் செய்வதற்கும் தனியாக நேரம் உள்ளது. மௌனமாகத் துன்பத்தை அனுபவிக்கவும் நேரம் தனியாக இருக்கிறது.  இப்போது இந்த மூன்றும் சேர்ந்து உன் எதிரே வந்து நிற்கவே நீ கிட்டத்தட்டப் பைத்தியமாக ஆகி விட்டாய்! நாம் எப்படிப் பட்ட பேராபத்தில் இருக்கிறோம் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை! உங்கள் மன்னாதி எந்நேரமும் திரும்பி வரலாம். நாளையே கூட வந்துவிடலாம்!” என்றாள்.

பிரபாவதியோ செய்வதறியாது அழுது கொண்டே இருந்தாள்.  “இந்த யாதவன் என்னை இக்கட்டில் மாட்டி விட்டான். என் மனைவி ஒன்று விதவையாக இருக்க வேண்டும் அல்லது என் மகள் விதவையாக வேண்டும்! இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாக்கி விட்டான்!” என்றான் வஜ்ரநப்! அதைக் கேட்டப் பிரத்யும்னன் சிரித்தான். “ஆனால் உங்கள் மன்னரின் ஆணையை நிறைவேற்றுவதில் நீங்கள் தோற்றுப் போய் விட்டீர்கள்!” என்றான்.

அதற்கு வஜ்ரநப், “இப்போது நமக்கு நேரம் மிகக் குறைவு! நம்மை இப்போதைய பேராபத்திலிருந்து நீக்கிக் கொள்ள வேண்டும்! அதுவும் உதயத்திற்குள்ளாக! இங்கே பேசிப் பொழுதைக் கழித்தோமானால் எதற்கும் நேரம் இருக்காது! நாம் பிடிபடுவோம்! உடனடியாகக் கொல்லப்படுவோம்.” என்றான் வஜ்ரநப்! பின்னர் சற்று நேரம் கழித்து மீண்டும், “என்னால் எங்கள் மன்னரின் கொடூரத்தை எதிர்நோக்க முடியவில்லை! உன்னைக் கொல்லவும் முடியவில்லை! நான் இறக்கவும் விரும்பவில்லை! ஆகவே நீ செல்கையில் என்னையும் உன்னுடன் அழைத்துச் சென்று விடு! நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாகச் செல்வோம் அல்லது ஒன்றாக இறந்து படுவோம்!”

பிரத்யும்னன் சிரித்துக் கொண்டே குறுக்கிட்டான். “எல்லோருமே ஒரே மாதிரியான கஷ்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். உங்கள் மன்னரின் கொடூரத்திலிருந்து நாம் தப்பிப்போம். உயிர்வாழ்வோம். ஆனால் எனக்கு இன்னொரு முக்கியக் கடமை ஒன்று இங்கிருக்கிறது. அது தான் என் தாத்தா வசுதேவர் அவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறாரா என்று கண்டு பிடிப்பது! அவர் உயிருடன் இருந்தால் அவரைத் திரும்ப துவாரகை அழைத்துச் செல்வது! இது தான் என் முக்கியக் கடமை! நான் இங்கே வந்ததும் அதற்காகவே!” என்றான்.  அதற்கு வஜ்ரநப், “அவர் இங்கே இல்லை! அவர் நிச்சயமாக மன்னரின் இந்தக் கோட்டையில் இருக்க வாய்ப்பே இல்லை. மண்ணால் ஆன சிறைச்சாலைக் கோட்டையில் சிறைக்கைதியாக அவர் இருக்கலாம்!” என்றான்.

2 comments:

ஸ்ரீராம். said...

சாகசங்கள் தொடர்கின்றன போலும்.

பித்தனின் வாக்கு said...

அருமை, தொடரட்டும்.