Sunday, March 5, 2017

பிரபாவதி தவிப்பு! பிரத்யும்னன் சிரிப்பு!

அவள் தாயிடம் இதைக் குறித்தெல்லாம் அவளால் எதுவும் கேட்க முடியாது!  அவள் தாய் இளம்பெண்ணாக இருக்கையில் இதைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கலாம். அதனால் அவள் தாய்க்குத் தெரிந்திருக்கலாம். அவள் தந்தை வஜ்ரநபைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவள் யாரையேனும் இம்முறையில் கொல்ல நேரிட்டிருக்கலாமோ! தெரியவில்லை. அவள் தந்தையும், தாயும் அடிக்கடி பொருள் பொதிந்த பார்வைகளைப் பரிமாறிக்கொள்வதை அவள் கண்டிருக்கிறாள். அதன் உட்பொருள் இதுவாக இருக்கலாமோ! அவள் தந்தை எதையும் ஒளித்து மறைத்துப் பேசுபவர் அல்ல! வெளிப்படையானவர். அவர் ஏன் இதைக் குறித்து மறைக்க வேண்டும்? ரகசியமாக வைத்திருக்க வேண்டும்?

இந்த தர்மசங்கடமான ஆணையிலிருந்து அவள் எப்படி வெளியே வரப் போகிறாள்? அவள் கணவனையும் எப்படி வெளியே கொண்டு வருவாள்? இதிலிருந்து தப்புவது எப்படி? அவள் தன் கணவனைக் கொல்லாமல் விட்டு விட்டாலும், இது தெரிந்து மன்னன் உடனே அவனைக் கொன்றுவிடுவான்.  கொல்வதைத் தள்ளிப் போடு என மன்னனிடம் போய்க் கேட்கவும் முடியாது!  அவளுக்கு இருப்பது இரு வழிகள் தான்! மன்னன் சொல்படி கேட்டுக் கணவனைக் கொல்ல வேண்டும். அல்லது அதைக் கேட்காமல் இருந்தால் மன்னனின் கொடூரத்தை மறுநாள் தைரியமாக எதிர்நோக்க வேண்டும்.  இரண்டிலுமே நஷ்டம் அவளுக்குத் தான்! அவளுக்குத் தப்பிக்க வேறு வழியில்லை!

அங்கே அவர்களைக் கண்காணிக்கவும், அவர்கள் தப்பாமல் அல்லது பிரத்யும்னனை அவள் தப்புவிக்காமல் பார்த்துக்கொள்ளவும் தான் அந்த அடிமைகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.  அப்படி அவர்கள் இருவரும் தப்பி ஓடினால், அவர்கள் யாருடைய ஆலோசனைகளைக் கேட்டு மேலே செல்வது? அவள் தாய் இதை எல்லாம் அவளுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லவில்லை. அவளை இதிலிருந்து ஒதுக்கியே வைத்திருந்தாள். ஏனெனில் அவள் தாயும் தன் மகளும், மாப்பிள்ளையும் மன்னனால் கொல்லப்படுவதை விரும்பி இருக்கமாட்டாள். தன் மகளும் விரும்ப மாட்டாள் என்றே அவளுக்கும் தெரிந்திருக்கும்.  பிரபாவதி செய்வதறியாது தவித்தாள்.

பிரத்யும்னன் அவளை அணைத்துக் கொண்டான். அவளும் அந்த அணைப்பை ஏற்றுத் தான் இப்போது உலகிலேயே மிகவும் சந்தோஷம் நிறைந்த பெண்ணாக இருப்பதாக நினைத்துக் கொண்டாள். ஆனாலும் அவள் மனம் நிறைவடையவில்லை. அவளுக்கு எந்த சந்தோஷத்தையும் அந்த நினைப்பால் கொண்டு வர முடியவில்லை. அவள் மன்னனின் ஆணையை மீறினாள் என்பதை அவள் தாய் அறிந்தால் ஒருக்கால் அவளை மன்னிக்க மாட்டாள். ஆனால் அவளுக்குத் துணிவு வரவில்லையே! அவள் கணவன் அப்படி என்ன கொடுமைக்காரனா என்ன? அப்படி எல்லாம் இல்லை.

மன்னனின் ஆணை குறித்து அவன் அறிந்திருப்பானோ? இருக்கும். ஏதோ ஆபத்து காத்திருக்கிறது என்ற வரையில் தெரிந்திருக்கலாம். அதிலும் மன்னன் அவளைத் தன் தனி அறைக்கு அழைத்துச் சென்று பேசியதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் புரிந்திருக்கலாம்.  இது என்னவாக இருக்கும் என்று யோசித்திருப்பான். பிரத்யும்னன் அவளை மிகவும் அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவளை அணைத்துக் கொண்டு மகிழ்ந்தான். அவன் கண்களில் அவள் மேல் அவன் கொண்டிருக்கும் அக்கறையும் கனிவும் தென்பட்டன. ஒரு தாய் தன் அருமை மகளை எவ்வாறு நடத்துவாளோ அவ்வளவு அருமையாகப் பிரத்யும்னன் அவளை அன்புடன் நடத்தினான்.  மன்னன் அவளைத் தனியே அழைத்துப் பேசிய போது அவளுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றைச் சொல்லி இருக்க வேண்டும். அவளுக்குச் சிறிதும் பிடிக்காத காரியத்தைச் செய்யச் சொல்லி இருக்க வேண்டும். வார்த்தைகளால் விவரிக்க ஒண்ணாத துயரத்திற்கு அவள் ஆளாகி இருப்பதை அவன் புரிந்து கொண்டிருந்தான்.

பிரபாவதி தன்னால் இயன்ற வரை மன்னன் சொல்லிக் கொடுத்த மாதிரியில் பிரத்யும்னனிடம் நடந்து கொள்ள முயற்சித்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. பின்னர் நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டாள். இன்று ஒரு நாள் மட்டும், ஒரே நாள் மட்டும் அவளால் சந்தோஷமாக இருக்க முடியும். இன்றைய நாள் அவள் சந்தோஷத்தின் கடைசி நாள். நாளை முதல் எல்லையற்ற துக்கத்தை அவள் காணப் போகிறாள்.  அவள் மன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை எனில் அது அவள் கணவனை எவ்வகையிலாவது காப்பாற்றுமா? அப்படி ஏதும் நடக்காது. ஏனெனில் அவள் கொல்லவில்லை எனில் உடனே மறுநாளே மன்னன் அவனைக் கொன்று விடுவான்.  அவள் மன்னனின் ஆணையைச் சிரமேற்கொண்டால் அதனால் அவளுக்கு ஏதும் நன்மை கிட்டுமா? அதுவும் எங்கே கிடைக்கப் போகிறது! நிச்சயமாய்க் கிடைக்காது!

அவள் மனதின் உணர்ச்சிப் பிரவாகம் மேலெழுந்து மனம் விம்மியது. அந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் அவள் தங்கள் குலதெய்வமான உமாதேவியைப் பிரார்த்தித்தாள்.  தன்னையும், தன் அருமைக்கணவனையும் இந்தப் பேராபத்திலிருந்து அவள் காப்பாற்றுவாளா? அவள் மன்னனின் கட்டளையை நிறைவேற்றாவிட்டால் மன்னன் அவள் தந்தையையும் கொன்று விடுவானே! அதன் மூலம் மன்னனுக்கு என்ன உதவியோ, நன்மையோ கிட்டும் என்பது அவளுக்குப் புரியவே இல்லை! அவள் தந்தையை அவன் ஏன் மன்னிக்கவே மாட்டான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனிப்பட்ட முறையில் தந்தையும், மன்னனும் அவளிடம் பேசியதிலிருந்தும் நடந்து கொண்டதிலிருந்தும் இருவருமே ஒருவரை ஒருவர் எதிரிகளாக நினைக்கிறார்கள் என்பதை அவள் புரிந்து கொண்டிருந்தாள். ஆனால் இன்றிரவே மன்னனின் ஆணையை அவள் ஏற்று நடத்தவேண்டும் என்பது அவளால் முடியாது. தவிர்க்க வேண்டும் என்றே நினைத்தாள்.

பிரத்யும்னன் மிகவும் கெட்டிக்காரன்! அவள் மனப்போக்கை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. சிரித்தான்! முதலில் சிறு புன்னகையாக இருந்தது பின்னர் சிரிப்பாக மலர்ந்தது! அவளைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் செய்தான். அவ்வப்போது அவளுக்கு ஆறுதல் கூறி அவளைத் தேற்றுவது தவிரத் தனக்கு வேறு வேலையே அந்த உலகில் இல்லை என்பது போல் நடந்து கொண்டான்.  அவள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டங்களால் அவளுக்கு ஏற்படும் சிரமங்களை அவன் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டான். அடுத்து அவள் செய்யப் போவதற்காகக் காத்திருந்தான்.

1 comment:

ஸ்ரீராம். said...

புரிந்துகொண்டான் போலும்! தொடர்கிறேன்.