Friday, June 21, 2013

உத்தவன் அருகில் ஒரு நாக கன்னி!

மணிமானின் இரட்டைச் சகோதரிகள் ஆன பிங்கலை, கபிலா இருவரும் அழகும், எழிலும் நிரம்பியவர்களாக ஒரே உயரத்திலும் பருமனிலும், இதய வடிவ முகத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.  அவர்கள் கன்னங்களில் விழுந்த அழகான குழி அவர்கள் முகத்தைப் பிரகாசப் படுத்தியது.  யார் பிங்கலை, கபிலா யார் எனக் கண்டுபிடிப்பதும் முதலில் கஷ்டமாகவே இருந்தது.  ஒரே மாதிரியாக மஞ்சள் நிற உடை, தலை அலங்காரம், தலையில் பூச்சுடி இருப்பதும் இருவருமே தாமரை மலர்கள்,  ஒரே மாதிரி பாவனைகளும். சிரிப்பது கூட ஒரே சமயம் சிரித்தனர்.   

ஆரிய இளவரசிகளின் நாகரிகமான நடத்தைகள் இல்லைதான்.  ஆனாலும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த உத்தவனின் வருகை அவர்கள் மகிழ்ச்சியைக் குறைக்கவில்லை.  இயல்பாக அவனை ஏற்றுக் கொண்டதோடு அவனும் மகிழ்வோடு இருக்கத் தங்களால் இயன்றதைச் செய்தனர்.  அவன் என்ன சொன்னாலும் அதை ரசித்தனர். அவன் சொல்வதை வேத வாக்காக நினைத்தனர். அவர்களால் இயன்ற அளவுக்கு அவனை சந்தோஷமா வைத்திருக்கவும் முயன்றனர்.  தங்கள் கண்கள் வியப்பால் விரிய அவன் சொல்லும் விஷயங்களைக் கேட்டார்கள்.  மெல்ல மெல்ல உத்தவனை அவனின் இயல்பான கூச்சத்திலிருந்து சகஜ நிலைக்குக் கொண்டு வந்துவிட்டனர்.  அவன் தன்னைப் பற்றிய செய்திகளைக் கூறும்படி கேட்டார்கள்.  உத்தவன் எப்படி ஆரம்பித்தாலும் அது கடைசியில் கிருஷ்ணன் செய்த சாகசங்களைக் குறித்துக் கூறும் ஒன்றாகவே ஆயிற்று என்பதையும் கண்டார்கள்.

கிருஷ்ணனும், உத்தவனும் சேர்ந்த செய்த சாகசங்கள் குறித்துக் கேட்டு அறிந்து கொண்டதோடு அல்லாமல், விருந்தாவனத்தில் கோபியருடன் ஆடிய ராஸலீலை குறித்தும் கேட்டார்கள்.  கம்சனைக் கிருஷ்ணன் கொன்ற விதம், உத்தவனாக இருந்தால் தன்னுடைய வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக இருக்கையில் இப்படிப் பட்ட ஒரு காரியத்தைச் செய்வானா எனக் கேட்டார்கள்.  சாந்தீபனியின் ஆசிரமத்தில் அவர்கள் படித்தது, நாகலோகம் சென்று புநர்தத்தனை மீட்டுக் கொண்டு வந்தது, கோமந்தக மலைக்குச் சென்று ஜராசந்தனிடமிருந்து தப்பியதோடு இல்லாமல், அவனை ஓட ஓட விரட்டியது ஆகியவற்றையும் கேட்டார்கள்.  ஜராசந்தன் குறித்து அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை என்பதை உத்தவன் கண்டான்.  துவாரகைக்கு அவர்கள் சென்ற விதம், கிருஷ்ணன், பலராமன், உத்தவன் மூவரும் துவாரகையை எப்படி வென்றனர் என்பதோடு, கிருஷ்ணன், ருக்மிணி கல்யாணம் குறித்தும், ருக்மிணியைத் தூக்கிவரக் கிருஷ்ணன் போட்ட திட்டமும், உத்தவனின் உதவியையும் குறித்துக் கேட்டு அலுக்கவில்லை அவர்களுக்கு.  கிருஷ்ணனின் இன்னொரு மனைவியான ஷாயிபா பற்றி அறிந்ததும் இருவருக்கும் வியப்பு.  அதிலும் இருவரும் ஒற்றுமையுடன் இருப்பதையும் கேட்டு வியந்தனர். 

இம்மாதிரியான சாகசங்களை அவர்கள் வாழ்நாளில் எவரும் நடத்தியதைப் பார்க்கவும், நடந்ததைக் கேட்டு அறிந்ததும் இல்லை. கிருஷ்ணனை ஒரு கடவுளாகவே நினைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.  தங்கள் இருவருக்குள்ளேயே கிருஷ்ணன், உத்தவன் இருவரைக் குறித்தும் பேசிக் களிப்படைந்தனர்.  இம்மாதிரியான  ஆர்வத்துடன் எல்லா விஷயங்களையும் கேட்டு அறியும் மக்களை உத்தவன் இத்தனை நாட்கள் பார்த்தது இல்லை.  தன்னுடைய சில சாகசங்களும் கிருஷ்ணனுக்கு உதவியாக இருந்ததை நினைத்து மகிழ்ந்த உத்தவன் அவற்றைக் குறித்தும் கூற முடிந்தது.  தன்னை இவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடிந்தது உத்தவனால்.  அந்த இரு பெண்களையும் மிக அற்புதமான குழந்தைகளாகவே உத்தவன் நினைக்க அவர்களோ இருவரும் சேர்ந்தே உத்தவனைத் தங்கள் கணவனாக அடைய வேண்டும் என நினைத்தனர்.


நாகர்களையும், அவர்களின் உபசாரங்களையும் உத்தவன் மிகவும் ரசித்தான்.  அவர்களின் வெகுளித்தன்மையால் கவரப் பட்டான்.ஆர்யகனும் அவன் குடும்பமும் தன்னைக் கவனித்துக் கொண்ட விதத்தில் நெகிழ்ந்து போன உத்தவன், இளவரசன் மணிமானுக்குத் தனக்குத் தெரிந்த ஆயுதப் பயிற்சிகளைக் கற்பித்தான். கார்க்கோடகனும், அவன் மனைவியும், இரு இளவரசிகளும் காட்டிய அன்பிலும் இன்ப நிகழ்ச்சிகளிலும் மனதைப் பறி கொடுத்தான்.  அதோடு உத்தவனுக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக ஐந்து சகோதரர்கள் காட்டுக்குள் இருக்கலாம் என்ற செய்தி கிடைத்துள்ளது.  அவன் இனி அவர்களைத் தேடிக் காட்டுக்குச் செல்ல வேண்டும். இந்தப் புதிய சாகசத்தில் உடனடியாக ஈடுபட அவன் மனம் துடித்தது.  அன்று இரவு மிகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் உத்தவன் உறங்கினான்.  கிருஷ்ணனும், மணிமானும், இரட்டையர்களான இளவரசிகளும் அவன் கனவில் வந்தனர்.  அவனோடு பேசிக் களித்தனர்.  திடீரெனக் கனவு மாறியது. மெல்லியதொரு கரங்களால் அவன் அணைக்கப்பட்டான்.  இது என்ன?? உத்தவன் திடுக்கிட்டு விழித்தான்.  அவன் அருகே நாககன்னி ஒருத்தி படுத்திருக்கிறாள்.  உத்தவனுக்கு முழுக்க விழிப்பு வந்துவிட்டது.  யார் இது??

Friday, June 14, 2013

காட்டுக்குள்ளே பாண்டவர்களா?

பெண்கள் அனைவரும் உத்தவனைப் பார்த்த பார்வையிலும், செய்த ஆராய்ச்சியிலும் மிகவும் வெட்கம் கொண்ட உத்தவனுக்கு அங்கிருந்து ஓடிவிடலாமோ என்ற எண்ணமே தோன்றியது.  அவனுடைய இத்தனை வருட வாழ்க்கையில் இத்தனை பெண்களால் ஒரு போதும் முற்றுகை இடப்பட்டதில்லை. அதிலும் இளம்பெண்களாலும் சூழப்பட்ட உத்தவன், அந்தப் பெண்கள் மிக இயல்பாக இருந்ததைக் கண்டு ஆச்சரியமும் அடைந்தான்.  அவர்கள் உடல் மிக அழகான வடிவமைப்பெற்றிருந்ததும், ஆரியர்களைப் போல் அவ்வளவு சிவந்த நிறம் இல்லை எனினும், தொடர்ந்த மஞ்சள் தேய்ப்பால் தங்கம் போல் பளபளத்த மேனியும் அவன் கண்களைக் கவர்ந்தது.  அவர்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசிகளும் இருந்தனர்.  அனைவரும் மிகவும் நட்புடனும், ஆத்மார்த்தமான அன்புடனும் உத்தவனோடு பேசினார்கள்.  நடக்கையில் அவர்கள் நடையில் தெரிந்த வளைவுகளும், நெளிவுகளும், அவர்கள் நாககன்னிகள் என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது. 

உத்தவன் அவன் மாமனான கார்க்கோடகனிடம் அழைத்துச் செல்லப்பட்டான்.  கார்க்கோடகனோ உத்தவனைப் பிறந்தது முதல் அறிந்தவன் போல் நடந்து கொண்டான்.  எள்ளளவும் தயக்கமின்றி மிகவும் வெளிப்படையாகவும், அதைக் காட்டும் முகபாவத்துடனும் பேசினான்.  அவன் மகனான மணிமான் என்பவனோ உத்தவனை விடச் சில ஆண்டுகள் சிறியவனாக இருந்தான்.  அதோடு உத்தவனின் வில், அம்பு, அம்புறாத்தூணி அவனின் வாள் போன்றவை அவனை மிகவும் கவர்ந்தது என்பது அவன் பேச்சில் இருந்து தெரிந்தது.  அடுத்த பட்டத்து இளவரசன் அவன் தான் என்பதற்கான அடையாளம் அவன் உடை அலங்காரத்தின் மூலம் தெரிந்தது.  மணிமானுக்கு உத்தவனுக்குத் தெரிந்த எல்லாப் போர்க்கலைகளையும் தானும் கற்றுத் தேற வேண்டும் என்ற ஆசை மிகுந்ததோடு அதை உத்தவனிடமும் கூறினான். 

ஆயிற்று!  அடுத்து வந்த பெளர்ணமி தினத்தன்று உத்தவன் நாக கூடம் வந்ததற்கான கொண்டாட்டங்களோடு கூடிய தினமாக அமைந்தது.  மிகப் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆர்யகனும், வியாச முனிவரும் சாதாரணப் பொதுமக்களோடு தாங்களும் ஒருவராக விருந்துண்ண அமர்ந்தனர்.  வியாசர் அந்த மாபெரும் கூட்டத்தில் தனித்துத் தெரிந்ததோடு அல்லாமல் மிகப் பெரிய குடும்பத்தின் வயது முதிர்ந்த பாட்டனாரைப் போன்ற அன்புடன் அனைவரையும் நலம் விசாரித்துக் கொண்டு முகமன் கூறி வரவேற்று அமரச் சொல்லி உபசரித்தும் கொண்டிருந்தார். விருந்து முடிந்ததும் ஆரம்பமான நாட்டியங்கள் மறுநாள் காலை விடியும் வரை நீண்டது.  பல வண்ண போர்க்குறிகளைக் கொண்ட வண்ணங்களை உடலில் தீட்டிக் கொண்டு, கைகளில் ஆயுதங்களை ஏந்திய வண்ணம், தலையில் இறகுகளால் ஆன கிரீடத்தைச் சூட்டிக்கொண்டு ஆண்கள் அலங்கரித்துக் கொண்டு ஆட வந்தனர்.  கூடவே பெண்களும் ஆடினார்கள்.  மணிக்கட்டிலிருந்து ஆரம்பித்து முழங்கை வரை வளையல்களை அணீந்திருந்தார்கள் அந்தப் பெண்கள்.  கால்களிலோ தண்டைகளும் கொலுசுகளும் முழங்கால் வரை வந்திருந்தன. 

கார்க்கோடகனும், மணிமானும் உத்தவனையும் தங்களோடு ஆட்டத்துக்கு இழுத்துவிட்டனர்.  மிக அழகாக ஆடிக் கொண்டிருந்த அந்த நாக கன்னியர்களின் முன்னே தன்னுடைய ஆட்டத்தின் மோசமான தன்மை உத்தவனுக்கே புரிந்தது.  இயற்கையாகவே போர்க்குணம் மிகுந்திருந்தும் அவர்களிடம் ஆடல், பாடல் போன்ற கலைகளை அப்யசிக்கவும் நேரமும், விருப்பமும் இருப்பதை உணர்ந்து உத்தவன் ஆச்சரியமும் அடைந்தான்.  போருக்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட தாமிரத்தினால் ஆன பல்வகை ஆயுதங்களையே அவர்கள் பயன்படுத்தினார்கள்.  அவற்றில் சிறிய குத்தீட்டிகளும், ஈட்டிகளுமே பிரதானமாக இருந்தன.  ஆனாலும் அவர்கள் பெரும்பாலும் மிருகங்களை வேட்டையாடுகையில் கைகளையே பயன்படுத்தியதாகவும் அவர்கள் பேச்சிலிருந்து அறிந்து வியந்தான்.  அது தான் உண்மையான வீரனின் அடையாளமாக அவர்கள் நினைப்பதையும் புரிந்து கொண்டான்.  விற்களையும், அம்புகளையும் பயன்படுத்திப் போரிடுவதை உண்மையான வீரத்துக்கு ஏற்றதாகக் கருதவில்லை என்பதை அறிந்தும் வியப்படைந்தான்.  அவனால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் போன்ற சுத்தமான, வலிமையும், வல்லமையும் பொருந்திய வில் வீரர்கள் கூட இதில் அடங்குவார்களா என்பதையும் எண்ணி வியந்தான்.  அவர்களுக்கெல்லாம் இது பொருந்தாது என்றும் நினைத்தான்.  ஆனால் நாகர்களின் சமூகச் சூழ்நிலைகளுக்கும், பழக்க, வழக்கங்களுக்கும் இது ஏற்றதாக இருக்கலாம்.   அடிக்கடி நடந்த ஆரியர்களோடான அவர்களின் யுத்தங்களின் போதெல்லாம் நாகர்களுக்குப் பெரும் நஷ்டமே விளைந்து வந்திருக்கிறது.   அதனாலேயே இவர்கள் இன்னமும் காட்டுக்கு உள்ளே சென்று இப்படியான ஒரு வாழ்க்கையை நடத்துகின்றனரோ!


தன் சொந்த யாதவ குலத்து வாழ்க்கையையும், தன் பாட்டியார் வந்த நாக குலத்து வாழ்க்கையையும் பார்த்த  உத்தவனுக்கு அதிலிருந்த வேறுபாடுகள் புரிந்ததோடு இருவரையும் ஒருங்கிணைத்த முனி வேத வியாசரின் அரும்பெரும் தொண்டையும் குறித்துப் புரிந்து கொண்டான்.  மேலும் அவர் இருவரையும் தனித்தனியாக வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவரையும் ஒன்றாகவே கருதியதோடு தாமும் அவர்களில் ஒருவராகவே கருதிக் கொண்டார்.  இந்த இயல்பு அவரிடம் வெகு சாதாரணமாக அமைந்திருந்தது.  இதன் காரணமாகவே குரு வம்சத்தினர்களின் பிதாமகரும், அனைவரும் கண்டு அஞ்சும் பீஷ்மர் முதல் குரு சாந்தீபனி, மேலும் நாகர்களின் தலைவன் ஆர்யகன் வரை ------அவ்வளவு ஏன்?  மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒரு சாதாரணக் குடிமகன் கூட அவரைத் தங்களில் ஒருவராகவே கருதிக் கொண்டனர்.  பிரமனால் படைக்கப்பட்ட உலகை விட அதி அற்புதமான ஒரு உலகை வியாசமுனி அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தார் எனலாம். 

உத்தவன் கார்க்கோடகனோடு தங்க வைக்கப்பட்டான்.  மூன்று மனைவியரைக் கொண்ட கார்க்கோடகன் தன் பெரிய குடும்பத்துடன் அங்கிருந்த சில குடிசைகளில் வசித்து வந்தான்.   மணிமான், அவன் மனைவி, மணிமானின் இரட்டைச் சகோதரிகள் பிங்கலை, கபிலை ஆகியோர் உத்தவனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.   அவர்களின் தனிப்பட்ட அக்கறை உத்தவனுக்குப் புரிந்தாலும் இப்படியான கவனிப்புகளுக்குப் பழக்கமில்லாத காரணத்தால் அவன் தர்மசங்கடமாகவே உணர்ந்தான்.  ஆனால் இதன் விளைவாகவோ என்னமோ, உத்தவனுக்குள்ளாக மறுநாளே பெரிய மாற்றம் தெரிந்தது.   இதுகாறும் தன்னை ஒரு துறவியாகவே கருதி வந்த உத்தவன் தன்னுடைய சுயக்கட்டுப்பாடுகள் தன்னை விட்டு நீங்கி விடுமோ என அச்சமும் கொண்டான்.  ஷாயிபாவை மனதில் நினைத்துப் பின்னர் கிருஷ்ணனிடம் தன்னை வெளிப்படுத்தியபின்னர் உத்தவன் மனதில் எத்தகைய உல்லாச உணர்வுகளும் தோன்றியதில்லை.  தன்னுடைய வாழ்க்கையை இத்தனை எளிமையாகக் கழித்ததில் அவனுக்குக் கொஞ்சம் அதிருப்தி கூடத் தோன்றி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.  அவனால் அதைக் கட்டுப்படுத்த இயலவில்லை.  தன் வாழ்க்கையில் எதையோ இழந்துவிட்டதாய் உணர்ந்தான்.

ஆனாலும் தான் மேற்கொண்டு வந்த வேலையை விரைவில் முடிப்பதற்கு ஆர்வம் காட்டினான்.  மூன்றுநாட்கள் கழிந்ததும், மெல்ல வியாசமுனியிடம் தான் அவரோடு வந்ததின் காரணத்தை விளக்கினான். பெரிதாகச் சிரித்த வியாசர், “உத்தவா, இதைக் கூடவா என்னால் புரிந்து கொள்ள இயலாது?  நான் அன்றே தெரிந்து கொண்டுவிட்டேன்.  கார்க்கோடகனும் ஏற்கெனவே அவன் ஆட்களை அனுப்பிக் காட்டின் உள்ளே புதிதாக ஐந்து சகோதரர்களும், அவர்களின் தாயும் வந்திருக்கின்றனரா எனப் பார்க்கச் சொல்லியுள்ளான்.” என்றார்.

“நாம் கட்டாயமாய் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும், முனிவரே!  கிருஷ்ணன் திரும்பிச் செல்கையில் அவர்கள் ஐவரும் தங்கள் தாய் குந்தியுடன் எங்களுடன் துவாரகை வந்தால் நல்லது!” என்றான் உத்தவன்.

“என்னால் அதிக நாட்கள் இங்கே தங்க இயலாது.  இன்றிலிருந்து பத்தாம் நாள் நான் அகிசத்ராவில் இருந்தாக வேண்டும்.  நீ இங்கே தங்கி இருந்து கிடைக்கும் செய்திகளைச் சேகரித்து வா.  உனக்குத் துணைக்கும், உதவிக்கும், என் மாணாக்கர்களில் சிலரை விட்டுச் செல்லவா?” என்றார் வியாசர்.

“வேண்டாம், மஹரிஷியே, என் மாமன் கார்க்கோடகன் அளித்து வரும் உதவியே போதுமானது!”



அப்போது கார்க்கோடகன் உள்ளே வந்து, வியாசரை நமஸ்கரித்தான்.  “ஆசாரியரே, ஒரு செய்தி! உத்தரவு கொடுங்கள்!” எனக் கேட்க, வியாசரும் அனுமதி கொடுத்தார்.  “எங்கள் தலைவர்களில் ஒருவனான சிகுரி நாகன் அனுப்பிய செய்தி இது. நம் எல்லைக்குட்பட்ட கிராமம் லஹூரியாவின் ஒரு நாகன் அனுப்பிய செய்தியாம்.  சில மாதங்கள் முன்னர் ஐந்து ஆரியர்களைக் காட்டின் உட்பக்கத்தில் பார்த்திருக்கிறான்.  அவர்களில் ஒருவன் மிகுந்த பலவானாகக் காணப்பட்டதோடு ஒரு வயதான பெண்மணியைத் தன் தோள்களில் சுமந்தும் சென்றானாம். "

"ஆஹா, அவர்கள் சகோதரன் பீமனும், அவர்கள் தாய் குந்தியுமாகவே இருக்கவேண்டும்." உத்தவன் கூறினான்.

"ஆனால் அவர்கள் எங்கேதான் சென்றனராம்?" வியாசர் கேட்டார்.

"சிகுரி அனுப்பிய செய்தி என்னவெனில் முதலில் வேற்று மனிதர்களைத் தங்கள் பிராந்தியத்தில் பார்த்த அதிர்ச்சியில் அந்த நாகன் ஓட்டமாக ஓடி ஒளிந்துவிட்டானாம்.  ஆகையால் அவர்கள் எங்கே சென்றனர் என்பது அவனால் கூற முடியவில்லை.  ஆனால் ஆசாரியரே, கவலை வேண்டாம்.  லஹூரியாவுக்கு சிகுரியே நேரில் சென்றிருக்கிறான்.  கட்டாயமாய் நல்ல செய்தி கொண்டு வருவான்."


Friday, June 7, 2013

நாகர்களின் நடுவே உத்தவன் தொடர்ச்சி!

நீங்கள் மத்ரா நகருக்குச் சென்றிருக்கீறீர்களா?” என்று உத்தவன் கேட்டான்.

உன் பாட்டியைத் திருமணம்செய்து கொள்கையில் உன் தாத்தா மத்ராவில் குடியிருக்கவில்லை.  பின்னர் நான் மத்ரா ஒரே ஒருமுறை உன் பெரியப்பா வசுதேவன் பிறந்த போது போனேன்.”   ஆர்யகனோடு பேசிக் கொண்டே நாகர்களையும் கவனித்த உத்தவனுக்கு  இந்த நாகர்கள் மிகவும் எளிமையானவர்கள் என்பது புரிந்தது. அதோடு ஆரியர்கள் அளவுக்கு  நாகரிகம் தெரியாதவர்கள். இங்குள்ள மண்ணாலான குடிசைகளிலும், செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளிலும் வசிக்கின்றனர் . இவர்களுக்குக் காட்டில் தானாகவே விளையும் பார்லி, பருப்பு வகைகள், பழங்கள், காய்கள் போன்றவையே உணவு. அதோடு மிருகங்களையும் அவ்வப்போது வேட்டையாடுகின்றனர்.   அவர்களின் உடைப்பழக்கமும் ஆரியர்களிலிருந்து மாறுபட்டு இருந்தது.  அங்கிருந்தபெண்களில் பலருக்கு மேலாடை இல்லை.  ஆண்களும் மேலாடை ஏதுமின்றி இடுப்புக் கீழ்ப்பாகத்தை மட்டுமே மறைத்துக் கொண்டுள்ளனர்.   ஆரியர்களிடம் இம்மாதிரியான வழக்கம் பாபம் எனக் கருதப்படும்.  ஆகவே முதலில் உத்தவன் மேலாடை இல்லாத பெண்கள் சர்வ சகஜமாக உலா வருவதும், ஆண்களோடு எந்தவிதமான கூச்சமும் இன்றிக் கலந்து பழகுவதும் காணவே அதிர்ச்சி அடைந்தான்.  இது மன்னிக்க முடியாத குற்றமாக ஆரியர்களிடையே கருதப்படும். 



ஆனால் இந்த மக்கள் வெகுளியானவர்கள், வாழ்க்கையை சந்தோஷமாகக் கழிப்பவர்கள், எல்லாரும் சொல்வது போல் எந்தவிதமான கெட்ட எண்ணங்களும் இல்லாதவர்கள் என்பதைப் புரிந்து கொண்டான் உத்தவன். 
பழகவும் எளிமையானவர்களாக இந்த நாகர்கள் இருப்பதை உத்தவன் கவனித்தான்.  அவர்களின் மதகுருமார்கள் வேத வியாசருக்குப் பெரிய மரியாதை கொடுத்து வரவேற்றதையும் கண்டு ஆச்சரியம் அடைந்தான்.  இருவரின் வழிபாட்டு முறைகளிலும் காணப்படும் பெருத்த வேறுபாடுகளையும் கண்டான்.  நாகர்களின் மாபெரும் கடவுளான பசுபதியை அவர்கள் முறைப்படி மலர்கள், இலைகள், நீர் போன்றவை அளித்து வழிபட்ட நாகர்கள், இன்னொரு பக்கம் வேத வியாசரும் அவரின் சீடர்களும் ஹோமகுண்டத்தில் அக்னி வளர்த்து ஹோமம் செய்து யாகங்கள் செய்வது எதற்கும் தடை சொல்லவில்லை. அவரவர் வழக்கப்படி அவரவர் செய்தனர்.  திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்த நாகர்களின் கடவுள் பசுபதியின் கோயிலுக்கு  முன்னால் வேத வியாசர் மந்திரங்களைச் சொல்லி அக்னி வளர்த்து தினசரிக் கடமையான ஹோமம் செய்கையில் நாகர்களின் மத குருமார்கள் அங்கேயே அருகே அமர்ந்து உற்சாகத்துடனும், முழுக் கவனத்துடனும் அனைத்தையும் கவனித்து வந்தார்கள்.  


அவர்களுக்குள்ளேயே இருந்த தந்திர மந்திரங்களில் சிறந்த மதப் பூசாரிகள் கூட வியாசரிடம் தங்கள் நோய் குணமாக நாகர்கள் மருந்து கலந்த பாலை வாங்கிக் கொண்டதற்குத் தடை சொல்ல வில்லை.  அனைத்தும் நடந்து முடியும் வரை வயதான மன்னன் ஆர்யகன் தன் பல்லக்கிலேயே அமர்ந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்தான்.  இது ஒரு வேளை வேத வியாசரின் வசீகரத்தால் இருக்குமோ?  எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைக் காண தூர தூரங்களிலிருந்தெல்லாம் ஓடோடி வருகின்றனர்.  அவரின் பாதத்தில் நமஸ்கரிப்பதையே பெரிய விஷயமாகக் கருதுகின்றனர்.  அவரைப்போற்றி ஆராதிக்கின்றனர்.  ஏகச்சக்கரத்துக்கு அவர் வந்து விட்டதை அறிந்ததுமே மன்னன் அவருக்கு நாககூடம் வரும்படி அழைப்பு விடுத்தான்.  வியாசர் வரும்போதெல்லாம் தன்னுடைய பழைய சக்தி அனைத்தும் மீண்டும் தனக்குள் திரும்புவதாக உணர்வதோடு அல்லாமல் அவன் பெரிய குடும்பத்தினரும் அனைவருமாகச் சேர்ந்து சில காலம் கழிக்க முடியும்.  மேலும் நாகர் குடிமக்களும் வேத வியாசரை ஒரு ஆரியனாக, அந்நியராகக் கருதவில்லை.  தங்களில் ஒருவராகவே கருதினர். 

ஒவ்வொரு நாளும் தூரதூரங்களில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் வந்து வியாசரைத் தரிசித்து அவர் ஆசீர்வாதங்களைப் பெற்றுச் சென்றது.  தினசரி பெரிய அளவில் ஹோமங்கள் நடந்தன.  பால் சேகரிக்கப்பட்டு மண் குடுவைகளில் ஊற்றப்பட்டு மூலிகை இலை போடப்பட்டு மக்களுக்குக் கொடுக்கப் பட்டது.  அதோடு அல்லாமல் வேத வியாசர் தன் கரங்களால் அனைவருக்கும் நெற்றியில் புனிதச் சாம்பலைத் திருநீறாக இட்டுவிட அதிசயங்கள் நடக்க ஆரம்பித்தன.  கண் தெரியாதவர்களுக்குக்கண் தெரிய ஆரம்பித்தது.  நடக்க இயலாதவர்கள் நடக்க ஆரம்பித்தனர்.  உடலில் ஒருவித ரோகம் பிடித்துப் பேய் பிடித்தது போல் காணப்பட்டவர்கள் ஒளியுடன் கூடிய முகத்தையும் ரோகம் அற்ற தேகத்தையும் பெற்றனர்.  அன்றாடம் நடக்கும் விருந்துகளின் போது வேத வியாசரே தன் கரஙக்ளால் மக்களுக்கு உணவு பரிமாறினார்.  மக்களின் சந்தோஷக் கூச்சலைக் கேட்டு அனுபவித்த் வண்ணம் ஆர்யகனுடனும், கார்க்கோடகனுடனும் அமர்ந்திருப்பார் வேத வியாசர்.

அனைவருக்கும் உத்தவன் மரிஷாவின் பேரன் என்ற செய்தி எட்டியது.  உத்தவனைச் சுற்றி நாகர்களின் சிறந்த தலைவர்கள் உடலில் போருக்கான வண்ணங்களைத் தீட்டிய வண்ணம் கைகளில் பல ஆயுதங்களை ஏந்தி அவனுக்கு மெய்க்காவலர்கள் போல் சூழ்ந்து கொண்டு உத்தவன் எங்கு சென்றாலும் கூடவே சென்றனர்.  இது உத்தவனுக்கு மிகுந்த தர்ம சங்கடமாக இருந்தது.  அனைவரும் அவனை அன்புடன் நடத்தினாலும், வீரர்களில் இளையவர்கள் அனைவரும் உத்தவனைத் தங்கள் கதாநாயகனாகவே நினைத்தனர்.  உத்தவனின் அழகான கட்டமைப்புடன் கூடிய உடலும், அவனின் விசாலமான கண்களும், தலையில் அணிந்திருந்த கிரீடமும், கைகளில் அவன் சுமந்திருந்த வில்லும், அம்புகளோடு கூடிய  அம்புறாத்தூணியும் பார்த்துப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.   பெண்களோ எனில் வெகுநாட்களாகக் காணாமல் போய்த் திரும்பக் கிடைத்திருக்கும் ஒரு மகனைக் கண்டால் தாய்மார்கள் எவ்வளவு உவகை கொள்வார்களோ அவ்வளவு உவகையுடனும், பாசத்துடனும் அவனை நடத்தினார்கள்.  மொத்தத்தில் நாகர்களிலிருந்து வித்தியாசமானவனாகத் தெரிந்தாலும் அவர்களுக்குள்ளே இவன் தங்கள் ரத்தம் என்னும் உணர்வு மிகுந்திருந்தது.


Tuesday, June 4, 2013

நாகர்களின் நடுவே உத்தவன்!

நாகர்களின் முக்கியக் கடவுளான பசுபதியிடம் இருந்து நேரடியாக உத்தரவுகளை ஆர்யகன் பெற்று வருவதாகவும் ஒரு நம்பிக்கை அந்த மக்களிடம் இருந்து வந்தது.  ஆகவே அவன் தங்களுக்கு அரசன் எனச் சொல்வதை விடக் கடவுளாகவே அம்மக்கள் நினைத்தனர்.  மஹரிஷி உத்தவனைக் காட்டி, ஆர்யகனிடம் இவன் உன் பெண்ணின் பேரன்;  உனக்குக் கொள்ளுப் பேரன் என்றதும் ஆர்யகன் மனம் மகிழ்ந்து உத்தவனை அருகே அழைத்து உச்சி முகர்ந்து தன் மூத்த பேரனும், தன் மகன்  கார்க்கோடகனின்  மூத்தமகனுமான மணிமானிடம் உத்தவனைக் கவனித்துக்கொள்ளுமாறு ஒப்படைத்தான்.  ஐம்பது வயதான கார்க்கோடகனும், இருபத்தி ஐந்து வயதிருக்கும் மணிமானும் நாகர்களில் சிறந்த வீரர்களாகக் காணப்பட்டனர்.   உடல் முழுதும், சிவப்பு, வெள்ளை நிறங்களில் கோடுகள் தீட்டி இருந்தது.  தலையில் இறகுகள் கொண்ட கிரீடமும், அரச குலத்தவரான நாகர்களின் பாரம்பரிய ஆயுதமான ஈட்டியும், கேடயமும் கைகளில் ஏந்தி இருந்தனர். 

புனர்தத்தனை மீட்க வேண்டிக் கடலுக்கு அப்பால் இருந்த நாகலோகத்துக்குக் கிருஷ்ணனுடன் சென்றிருந்தான் உத்தவன்.  எனினும் இப்போது தான் தன் தந்தையின் தாயார் எங்கிருந்து வந்தாளோ அவர்களுக்கு நடுவே இருக்கிறான்.  அவர்களைச் சந்திப்பதில் உற்சாகம் கொண்டான். ஆர்யகன் உத்தவனைத் தன் பல்லக்கின் அருகிலேயே கூடவே வரச் சொல்லி வற்புறுத்தினான்.  அங்கே  பல்லக்கின் இரு பக்கங்களிலும் பசுபதி நாதருக்கு வழிபாடுகள் செய்து வரும் பூசாரிகள் கைகளில் பெரிய தண்டத்தைத் தூக்கிக் கொண்டு மழுங்க மொட்டை அடித்த தலையோடு வந்து கொண்டிருந்தனர்.   செல்கையில் உத்தவனிடம் ஆர்யகன் உத்தவனோடு பேசிக் கொண்டே வந்தான்.  உத்தவனின் தாத்தா ஷூரன் எப்படித் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள நேரிட்டது என்பது தெரியுமா என்றும் கேட்டான்.  உத்தவன் அதைக் குறித்துத் தனக்குத் தெரியாது என்றதும், ஆர்யகன் தன் மகள் மரிஷா எப்படி யாதவர் தலைவன் ஷூரனைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தது என்பதைச் சொல்ல ஆரம்பித்தான்.

“அது நடந்து பல வருடங்களுக்கும் மேல் இருக்கும்.  யமுனைக்கரையில் யாதவக் குடிமக்களான விருஷ்ணி குலத்தவர், ஷூரர்கள், அந்தகர்கள் அனைவரும் காடுகளை அழித்துத் தாங்கள் குடியிருக்க ஒரு நகரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.  ஷூரன் மிகவும் தைரியசாலியான தலைவன்.னொரு முறை வேட்டைக்குச் சென்ற அவன் மிகக் கொடூரமான காட்டு ஓநாய்களால் சூழப்பட்டான்.  அந்த ஓநாய்களோடு போரிட்டதில் கிட்டத்தட்ட அவை அவனைக் கொன்றே போட்டிருக்கும்.  அப்போது தான் அதிசயம் நிகழ்ந்தது.  நாகர்கள் அங்கே வந்தனர்.  ஒரு குழுவாக வந்த நாகர்கள் ஷூரனைக் காப்பாற்றினார்கள்.   என்றாலும் ஓநாய்களின் தாக்குதலால் காயமடைந்த ஷூரன் மயக்கமாகவும் கிடந்தான்.  அங்கிருந்த நாகத் தலைவர்கள் தங்கள் அரசன் ஆன ஆர்யகன் இருக்கும் இடத்துக்கு அவனைத் தூக்கி வந்தனர்.  “

இது வரை கதை போல் சொல்லி வந்த ஆர்யகன் இப்போது நேரிடையாக உத்தவனிடம், “நான் பார்த்ததுமே அவன் மஹா வீரன் என்பதைப் புரிந்து கொண்டு விட்டேன்.  என் சொந்தக் குடிலுக்கே அவனை எடுத்துச் சென்று என் குடும்பத்தினரை விட்டே மருத்துவமும் பார்க்கச் செய்தேன்.   அப்போது தான், மரிஷா, என் மூத்த மகள், உடல்நலமின்றி இருந்த ஷூரனை மிகக் கவனமாகப் பாதுகாத்தாள்.”  தன் மகளைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியவாறே தொடர்ந்து, “ மரிஷா ஒரு அழகான பெண் மட்டும் இல்லை; விவேகம், புத்தி சாதுர்யம், தைரியம் அனைத்தும் நிரம்பியவள்.  எழில் நிரம்பிய அவளின் நடை, உடை, பாவனைகள் அனைத்துமே ஒரு அழகான பெண் பாம்பைப் போல் இருக்கும்.  அவள் மனதில் யாதவத் தலைவன் ஷூரன் நிரம்பி விட்டான்.  அவனையே மணக்கவேண்டும் என நினைத்தாள்.  ஷூரனுக்கும் மெல்ல மெல்ல நினைவு திரும்பியது.  மரிஷா தன்னைக் கவனித்துக் கொண்டதோடு அல்லாமல் தன் மேல் வைத்திருக்கும் அன்பையும் நினைத்து அவனும் அவள் பால் ஈர்க்கப் பட்டான்.”

சற்றே நிறுத்தி விட்டு மேலே தொடர்ந்தான் ஆர்யகன்:” யாதவத் தலைவர்கள் வேட்டைக்குச் சென்ற ஷூரனைக் காணவில்லை எனத்  தேடிக் கொண்டு வந்தார்கள்.  அப்போது அவர்களுடன் ஷூரன் சென்றாலும் அவன் மனமெல்லாம் மரிஷாவிடமே.  யாதவர்களின் இருப்பிடம் சென்ற ஷூரன் தன் உடல்நிலை நன்கு தேறியதும் மீண்டும் என்னைத் தேடி வந்தான்.  மரிஷாவைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாய்க் கேட்டான்.  ஆனால் யாதவர்கள் எவருக்கும் இதில் சம்மதமே இல்லை;  மிகக் கோபம் அடைந்தனர்.  அவர்கள் தங்களைக் குறித்தும், தங்கள் குலம் குறித்தும் மிகவும் கர்வம் கொண்டவர்கள்.  அப்படிப் பட்ட குலத்தின் தலைவன் நாகர்களின் மகளையா திருமணம் செய்து கொள்வது?  ஆனால் ஷூரன் கெட்டிக்காரன் மட்டுமல்ல; திறமைசாலியும் கூட.  என்னுடன் நாககூடத்துக்கு வந்து என் மகளை முறைப்படி திருமணம் செய்து கொண்டு பின்னர் அவளையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான்.”


சற்று நேரம் மூச்சு விட்டுக் கொண்ட, ஆர்யகன்,”ஆஹா, அது எத்தனை பெரிய விழாவாக நடந்தது தெரியுமா?  யாதவர்கள் ஒரு பக்கம், நாகர்கள் இன்னொரு பக்கம், பெரிய பெரிய விழாக்களை எடுத்து விருந்து வைத்துக் கொண்டாடினார்கள்.  என் மரிஷாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  அருமையான பெண் அவள்!  விரைவில் பல திறமையான கெட்டிக்காரர்களான மகன்களைப் பெற்றாள்:  அவளைப் போன்ற அழகான பெண்களையும் பெற்றாள்.”  ஆர்யகன் குரலில் தன் மகளைக் குறித்த கர்வம் மேலோங்கியது.

கண்ணன் தடையின்றி வருவான்!

கண்ணன் கதைகளை மொழி பெயர்த்து வந்தாலும் உள்ளூரக் கொஞ்சம் நம நமவென இருந்தது.  எல்லாம் காப்பிரைட் குறித்தே.  ஏப்ரலில் வந்த சம்பந்தியும் அதையே சொல்ல, அதுக்கப்புறமா மேற்கொண்டு மொழி பெயர்ப்பையே நிறுத்தி வைத்துவிட்டு திரு திவாகரின் ஆலோசனையின் பேரில் பாரதீய வித்யா பவன் மும்பை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டேன்.  அவங்க தற்சமயம் முன்ஷிஜியின் 125 ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்பாடுகளில் இருப்பதால் தங்களால் ஏதும் செய்ய இயலாது என்றும், சென்னை அலுவலகம் தான் தமிழ் மொழிபெயர்ப்புக்களைக் கவனிக்கணும் என்றும் சொல்லிச் சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.  சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டேன்.  காப்பிரைட் பிரச்னை பப்ளிகேஷன்ஸ் மூலமாகத் தான் வரும்னு சொன்னதோடு, மொழிபெயர்க்கத் தடை இல்லைனும் சொல்லிட்டார்.  தமிழில் பப்ளிஷ் பண்ணினால் மார்கெட்டில் விற்பனை ஆகுமானு தெரியலையேனு திரு ராமசாமி சொல்கிறார்.  அதே சமயம் சொந்தமாக என்னை பப்ளிஷ் பண்ணிக்கோ அதுக்கு அநுமதி தரோம்னு சொல்றார்.  மொத்தத்தில் மொழிபெயர்ப்புத் தொடரலாம் என்பதே எனக்கு சந்தோஷமான விஷயம்.  மற்றவை போகப் போக.  மொழி பெயர்த்ததை அவங்களுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி இருக்கார்.  அதுக்குக் கொஞ்சம் நகாசு வேலை இருக்கு. செய்துட்டு ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கிறேன்.   நேரிலேயும் வந்து பார்க்கச் சொல்கிறார்.  போகணும்.  கண்ணன் தொடர்ந்து உதவுவான் என்ற நம்பிக்கையுடன் இனி தொடர்ந்து கண்ணன் வந்து அனைவரையும் மகிழ்விப்பான் என்றும் சொல்லிக்கிறேன்.

Friday, April 26, 2013

உத்தவன் தேடக் கிளம்பி விட்டான்.


வெகு நாட்களாக நாம் உத்தவனைக் காணவே இல்லை.  அவன் எங்கே போனான், என்ன செய்கிறான் என்பதை இப்போது பார்ப்போமா?  உத்தவன் பார்க்க மிகவும் ஒன்றும் தெரியாதவனாகவும், அவ்வளவு விரைவில் முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறுபவனாகவுமே இருந்தான்.  எனினும் சில சமயங்களில் அவன் எடுக்கும் முடிவுகள் ஆச்சரியகரமானதாக இருக்கும்.  அதே சமயம் அந்த முடிவின்படி நடந்து கொள்ளவும் ஆரம்பிப்பான்.  இப்போது அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கும் தருணம் இது.  கிருஷ்ணன் அவனிடம் எப்போது பாண்டவர்கள் இறந்திருக்க மாட்டார்கள் என்றும், அரக்கு மாளிகையிலிருந்து தப்பி எங்கோ ஒளிந்து வாழ்ந்து வரலாம் என்னும் சந்தேகத்தைத் தெரிவித்தானோ அப்போதே அவன் தங்கள் தந்தைமார்களின் தாய்வழிப் பாட்டன் ஆன நாகர்களின் அரசன் ஆர்யகனைச் சந்திக்க முடிவு செய்தான்.  ஆர்யகன் கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட இடங்களில் செழித்துக் காணப்பட்ட காடுகளுக்குள்ளாக வசித்து வந்தான்.  ஆகவே அவனால் மட்டுமே அரக்கு மாளிகை எரிக்கப் பட்டபோது அங்கிருந்து தப்பிய பாண்டவர்களை ஒளித்து வைத்துக் காப்பாற்ற இயலும்.

தெளமிய முனிவரின் ஆசிரமத்தில் நடந்த வேத வியாசரின் சந்திப்பின் போது வியாசர் அடுத்து நாககூடம் செல்லப் போவதை அறிந்தான் உத்தவன்.  முனி சிரேஷ்டரின் மூலம் இந்தப் புதிரின் விடையை அவிழ்க்க முடிவு செய்த உத்தவன் அனைவரும் உறங்கிய பின்னர் அன்று வியாச முனியைத் தனிமையில் சந்தித்து அவருடன் தானும் நாககூடம் வர அனுமதி கேட்டான்.  உத்தவனின் நோக்கத்தை அறிந்தோ என்னமோ வியாசர் உடனடியாகச் சம்மதம் கொடுத்துவிட்டார்.   ஜைமினி மஹரிஷியின் தலைமையில் வியாசரின் முக்கியமானப் பத்து சீடர்களும், நாகர்களின் முக்கியத் தலைவர்களும் உடன் வர வியாசரின் குழு அங்கிருந்து கிளம்பிப் படகுகளின் மூலமாக மூன்று நாட்களில் ஏக சக்ரதீர்த்தக்கரையை அடைந்தது.  வியாசருக்கு ஆரியர்களிடம் மட்டுமில்லாமல், நாகர்கள், நிஷாதர்கள் போன்ற அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருந்த செல்வாக்கை உத்தவன் நன்கறிந்தான்.  வியாசரின் வரவை அறிந்த மக்கள் அந்த அந்த ஊரின் நதிக்கரைகளில் கூடி இருந்து வியாசரை வரவேற்று நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றதோடு அல்லாமல் அவருக்கும், சீடர்களுக்கும் வேண்டிய உணவு, உடை போன்ற வசதிகளையும் தந்து பெருமைப் படுத்தினார்கள்.  வியாசரும் அவ்வப்போது படகில் இருந்து கீழே இறங்கி மக்களை ஆசீர்வதித்தும், அவர்களின் விருந்தோம்பலை ஏற்றும், தக்க உபதேசங்களைச் செய்தும், அவர்களின் குறைகளைக் கேட்டும் அவர்களை உற்சாகப் படுத்தி வந்தார்.

இரவு தங்கும் இடத்தில் ஹோமம் செய்ய வியாசர் மறக்கவில்லை.  தன் வெண்கலக் குரலால் வேத மந்திரங்களை முழக்கிய ஜைமினி மஹரிஷியும், யாகங்களை முன்னின்று நடத்திய வியாசரின் சீடர்களும் அனைவர் மனதிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தினர்.  அஸ்வினி தேவர்களை வேண்டிக் கொண்டு வியாதியஸ்தர்களுக்குப் பெருமளவு மருத்துவ உதவியும் செய்தனர்.  மேலும் அனைவருக்கும் வியாசர் நேரிலேயே தன் கைகளால் உணவு அளித்தது அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  அனைவருக்கும் ஒரு புதிய நம்பிக்கை ஒளி தோன்றியது.  ஏகசக்ர தீர்த்தத்தில் இருந்து அனைவரும் கால்நடையாகவே நாககூடத்துக்குச் சென்றனர்.  செல்லும் வழியெங்கும் நாகர்கள் கூடி இருந்து அவர்களை வரவேற்று நமஸ்கரித்து மரியாதை செய்தனர்.  சிறு வயதில் இருந்தே வியாசரைக் குறித்துக் கேள்விப் பட்டிருந்தான் உத்தவன்.  எனினும் அவரின் பெருமையை இப்போதே நன்கு உணர்ந்தான்.  அவருடைய இருப்பே அனைவர் மனதிலும் ஏற்படுத்தும் மாற்றங்களை ஒரு அதிசயமாக உணர்ந்தான்.  எத்தனை வருடங்கள் எனச் சொல்ல முடியாத வருடங்களாக வியாசர் கங்கையின் கரைகளிலும், யமுனையின் கரைகளிலும் ஆசிரமம் ஆசிரமமாகச் சென்று அங்குள்ள ரிஷி, முனிவர்களுக்கு உபதேசித்து வந்தார்.  ஆரியர்களை ஒரு நல்வழிப் படுத்தி வந்ததோடு காடுகளிலேயே வசித்த நாகர்களையும் நன்முறையில் திருப்பி அவர்களையும் ஆரியர்களின் பாதையில் மெல்ல மெல்ல மாற்றி வந்தார். 

நான்கு நாட்கள் நடைப்பயணத்தின் பின்னர் அவர்கள் நாககூடம் வந்தடைந்தனர்.  ஆர்யகன் தன் பேரன் ஆன கார்க்கோடகனுடன் வியாசரையும் அவர் குழுவையும் எதிர்கொண்டு அழைத்தான்.  நூறு வயதைத் தாண்டிய ஆர்யகனைப் பார்க்கக் கொஞ்சம் பயமாகவே இருந்தது.  உடலில் எலும்பும், தசைகளும் இருக்க வேண்டிய அளவை விடக் கொஞ்சமாகவே இருந்தன.   முடக்கு வாதத்தால் வளைந்த கால்கள், நீண்ட எலும்புகள் துருத்திக் கொண்டு தெரியும் கைகள்,  உயிர்க்களையே இல்லாத சுருங்கிய முகம், மஞ்சள் வண்ணக் கண்கள், ஆனால் அந்தக் கண்கள் அனைவரையும் கவனித்துக் கொண்டே இருந்தது எப்படி இருந்தது எனில்   அவன் மூளை மட்டும் எப்போதும் தயார் நிலையில், எந்தவிதமான சூழ்நிலையையும் ஈடு கொடுக்கும் விதத்தில் இருக்கிறது என்பதைக் காட்டின.  கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட  அந்தப் பிரதேசத்தில் அவன் வைத்தது தான் சட்டம் என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவன் கண்கள். ஆறு மனைவிகளும், பதினோரு பிள்ளைகளையும் கணக்கற்ற பேரப்பிள்ளைகளையும் பெற்றிருந்த ஆர்யகன், பார்க்க எலும்புக்கூடாக உயிரோடு நடமாடும் பிணம் போன்று தெரிந்தாலும் இன்னமும் அந்த உலகை அவனே கட்டி ஆண்டு கொண்டிருந்தான் என்பதும், அவன் சொல்லை மீறி அங்கு எதுவும் நடக்காது என்பதும் தெரிந்தது.

Saturday, April 20, 2013

கண்ணன் என் ஆசான்!



“பொறுமையை இழக்காதீர்கள் மன்னரே.  உங்களுக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்கவேண்டும் என்பதே உங்கள் சபதம்.  உங்களை வலுவான நிலையில் நிறுத்திக் கொண்டு துரோணரை இருந்த இடம் தெரியாமல் செய்வதில் உங்கள் சபதம் நிறைவேறியதாகாதா? யோசியுங்கள்.”

கண்ணன் பேசிய தொனியும், அவன் குரலும், அவன் முகத்தில் தெரிந்த உறுதியும், உண்மையும் துருபதன் மனதைக் கவர்ந்தது.  சிறு பிள்ளை போல் பால்வடியும் முகம் கொண்ட இந்த இளைஞன், என்னவெல்லாம் சொல்கிறான்!  அவனுடைய அதிகாரத்தை எப்படி எல்லாம் அழகாய்க் காட்டுகிறான்.  பிறருக்குத் துன்பமோ, வருத்தமோ விளைவிக்காமல் தன் பேச்சை ஒப்புக்கொள்ள வைக்கிறானே.  இவனுடைய சக்தியை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  துருபதன் மனம் கண்ணன் பால் சென்றது.  கண்ணனின் யோசனைக்கு அவன் ஒத்துக் கொண்டான். அவன் மனம் கண்ணனின் சொற்களால் சமாதானம் அடைந்தது.

“எனில் என் சபதம் நிறைவேறும் என உறுதியாகச் சொல்கிறாயா? “ துருபதன் கேட்டான். 

“நிச்சயமாய்.  நான் உறுதியாகச் சொல்கிறேன்.  நானும் இருந்து உங்கள் சபதம் நிறைவேறுவதைப் பார்க்கப்போகிறேனே!’
“நீயும் சுயம்வரத்தில் கலந்து கொள்வாயா கண்ணா?”  துருபதன் மனம் இன்னமும் கண்ணனையே மருமகனாக ஏற்க விரும்பியது.  

“அப்போது அதற்கு ஏற்ற மனநிலையில் நான் இருந்தேன் எனில் பங்கேற்பேன்.  இல்லை எனில் இல்லை. ஆனால் மன்னரே, யாராக இருந்தாலும் இந்தப்போட்டியில் ஜெயிப்பவர்கள் சிறந்த வில்லாளியாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.”

துருபதன் யோசனையுடன் கண்ணனையே பார்த்தான். அவன் மனம் எந்தத் திசையில் செல்கிறது என்பதையோ, அவன் மனதின் ஆழத்தையோ துருபதனால் உணரமுடியவில்லை.    திடீரென அவன் ராஜ்யாதிகாரம் அதிகரித்து விட்டதைப் போலவும், சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாகவும் தன்னை உணர்ந்தான் துருபதன்.  இந்த நம் இளைய விருந்தாளியின் கூற்றுக்கேற்ப திரெளபதியின் சுயம்வரம் மட்டும் நடந்து முடிந்தால்?? இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கும் இந்தத் துன்ப நிலை மாறி துரோணரைப் பழிவாங்க மட்டுமின்றி ஆர்யவர்த்தத்திலேயே வல்லமை பொருந்தியதொரு அரசனாகவும் திகழலாம்.  நன்றியுடன் கண்ணனைப் பார்த்தான் துருபதன்.

“வாசுதேவா, நீ கூறியபடியே திரெளபதியின் சுயம்வரத்தை நடத்துகிறேன்.  நீ கூறியவற்றில் மட்டுமில்லாமல் உன்னிடம் எனக்கு மிக்க நம்பிக்கை உள்ளது.  அப்படி ஒருவேளை இந்த சுயம்வரத் திட்டத்தின் மூலம் தோல்வியையே அடைந்தாலும் எனக்கு நஷ்டம் ஏதும் ஏற்படப் போவதில்லை.”

கிருஷ்ணன் சிறு புன்னகையோடு, “இந்த சுயம்வரம் மட்டும் தோல்வி அடைந்தால், இவ்வுலகிலேயே அனைத்தையும் இழந்தவனாக நான் மட்டுமே இருப்பேன்.  எனக்குத் தான் தோல்வி.”

“அனைத்தையும் இழந்துவிடுவாயா? வாசுதேவா, நீ என்ன சொல்கிறாய்?”

“ஆம், மன்னரே,   உங்கள் நட்பை முதலில் இழப்பேன்.  திரெளபதிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போனவன் ஆவேன்.  இந்தப் பரந்த பரதகண்டத்தின் அனைத்து இளவரசர்கள், அரசர்கள் முன்னிலையில் யாதவர் குலத்துக்கே அபக்கியாதியைத் தேடிக் கொடுத்தவன் ஆவேன்.  யாதவ குலமே அவமானம் அடையும்.”

பின்னர் தனக்குத் தானே மெதுவாக, “பின்னர் கிருஷ்ணன் எதற்கு இவ்வுலகில் தோன்றி இருக்கிறான்?  தர்மம் எங்கே காக்கப்பட வேண்டுமோ அங்கெல்லாம் அதற்குத் தக்கப் பாதுகாப்புக் கொடுத்து தர்மத்தை நிலைநாட்டுவது ஒன்றே அவன் பிறந்ததன் காரணம்.”

மிகவும் ஆவலுடனும், அன்புடனும் கிருஷ்ணனின் தோள்களில் தன்னிரு கரங்களையும் வைத்துக் கொண்டே துருபதன், “ வாசுதேவா, நீ என்ன சொல்கிறாயோ, அதன்படியே செய்கிறேன்.  உன் ஆலோசனையை அப்படியே ஏற்கிறேன்.  அவ்வப்போது உன் ஆலோசனைகளை உத்போதனனுக்கும், ஷ்வேதகேதுவுக்கும் வழங்கி வா. “

“இன்னொரு ஆலோசனையும் உள்ளது மன்னரே!”
“என்ன அது?”

“நாளையே அறிவிப்புச் செய்யுங்கள்.  திரெளபதிக்கு சுயம்வரம் நடத்தப் போவதாகவும், அந்தச் சுயம்வரம் அடுத்த வருடம் சைத்ர மாதத்தில் நடக்கப் போவதாகவும் அறிவியுங்கள்.  உடனடியாக இதைச் செய்யுங்கள்.”

மிகுந்த கிளர்ச்சியுடன் காணப்பட்ட துருபதன், “அப்படியே செய்கிறேன் வாசுதேவா!” என்றான்.