Friday, September 16, 2011

எங்கிருந்தோ வந்தான்! இடைச்சாதி நான் என்றான்!

“கோவிந்தா, இது விளையாடும் நேரம் இல்லை; ருக்மிணி உண்மையாகவே தீவிரமாக இருக்கிறாள். மணந்தால் வாசுதேவ கிருஷ்ணன்; இல்லை எனில் மரணம்! இது தான் அவள் ஒரே முடிவு. அவள் தகப்பன் முடிவையும், அண்ணன் முடிவையும் முழுமையான தீவிரத்துடன் எதிர்க்கிறாள். கண்ணா! நீ எப்படியாவது சரியான நேரத்துக்குச் சென்று அவளைத் தூக்கிக் கொண்டு போய் மணந்து கொள்வாய் என எதிர்பார்க்கிறாள்.”

கண்ணனும் இப்போது தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். “திரிவக்கரை! நான் ருக்மிணியைத் தூக்கிச் செல்வதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. நடக்கவும் நடக்காது.” என்றான். ஆனாலும் அவன் மனம் இன்னமும் தீவிர சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தது. “ஏன் கோவிந்தா ஏன்? அரச குடும்பங்களில் இது நடக்கும் ஒரு விஷயம் தானே! எத்தனை அரசர்கள் அவர்களுக்குப் பிடித்த அரச குமாரிகளைத் தூக்கிச் சென்று கந்தர்வ மணம் புரிந்து கொண்டிருக்கின்றனர். அதைப் பின்னர் அவர்கள் இருவரின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டதில்லையா??” திரிவக்கரை தீர்மானமாய்க்கூறினாள். கண்ணன், அவளைப் பார்த்து, “திரிவக்கரை! நான் சொல்லும் விஷயத்தை ருக்மிணியிடம் போய்ச் சொல்வாய்!:

“ருக்மிணி, என் மாமன் கம்சனை நான் கொன்ற சமயம் நீ என்னை முதல் முதல் மதுராவில் பார்த்தாய். அன்றிலிருந்து இன்று வரையிலும் நீ என்னிடம் மாறாத தீவிர அன்பு பூண்டிருக்கிறாய் என்பதை நான் நன்கறிவேன். அவ்வளவு ஏன்? என்னைப் பெற்ற தாயான தேவகிக்கும் நான் உன்னை மணந்து கொள்வது உவப்பான ஒரு விஷயமே! “

திரிவக்கரை குறுக்கிட்டாள்.”கண்ணா! அப்புறம் என்ன கவலை! தேவகி அம்மாவின் சொல்லுக்கும், அவர்கள் விருப்பத்திற்கும் மறுப்பு ஏதும் உண்டா? நீ நடத்து உன் வேலையை!”

கண்ணன் இப்போது சற்றுக்கடுமையாகவே திரிவக்கரையிடம் சொன்னான்: “இதோ பார், நான் சொல்வதை மட்டும் நீ ருக்மிணிக்குத் தெரிவித்தால் போதுமானது:

ருக்மிணி, நான் இங்கே வந்திருப்பது உன்னை மணந்து கொள்ளவோ, அல்லது தூக்கிச் சென்று காந்தர்வ விவாஹம் செய்யவோ அல்ல. தர்மத்தை நிலைநாட்ட வந்துள்ளேன். தர்மத்திற்கும், நியாயத்துக்கும் விரோதமாக இங்கே நடக்கப் போகும் சம்பவங்களையும், நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் தடுக்க வேண்டியது என் கடமை. அதற்காகப் போர் செய்ய வேண்டுமென்றாலும் நான் தயாராக வந்துள்ளேன். இந்த என் கடமையை முடிக்காமல், நான் உன்னை மணந்து கொண்டு நான் வந்திருக்கும் வேலையை விட்டு விட்டு சுயநலமுள்ளவனாக என்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.”

திரிவக்கரை குறிக்கிட்டாள். “கண்ணா, உன்னை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை!”

“திரிவக்கரை, என்னுடன் பழகி, என்னுடன் கூடவே இருக்கும் நீயும் என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் அது என் துரதிர்ஷ்டம் தான்! எனக்காகவோ, என் சொந்த நலனுக்காகவோ எதையும் செய்ய நான் விரும்பவில்லை; நான் இங்கே வந்திருப்பது தர்மத்தைக் காக்க வேண்டியே! அதர்மமாய்ச் சென்று கொண்டிருக்கும் இந்த அரசர்கள் அனைவரும் அவரவருக்கு என விதித்ததர்மத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.”

“நீ இப்படியே பேசிக்கொண்டிருந்தால், கிருஷ்ணா, இந்தச் சுயம்வரம் நடந்தே தீரும்!”
“இல்லை திரிவக்கரை! நிச்சயம் நடைபெறாது.”

“ஆஹா, அப்படி என்றால் நீ ருக்மிணியைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஒருவரை ஒருவர் விரும்பும் நீங்கள் இருவரும் சேர்ந்து மணந்து கொண்டு இல்வாழ்க்கை நடத்தத் தடையாக இருப்பது எது? “

“தர்மம்! அது தான் எங்களைத் தடுக்கிறது.” கண்ணன் தொடர்ந்து பேசினான்:”ஜராசந்தன் என்னை எவ்வாறேனும் கொல்ல வேண்டும் எனத் திட்டமிடும் இந்த நேரத்தில் விதர்ப்ப இளவரசியை மட்டும் அல்ல; வேறு எவரானாலும் என்னால் திருமணம் செய்து கொள்ள இயலாது. நான் மணந்து கொண்டால் இப்போது என் மனைவிக்கு என்னால் என்ன கொடுக்க இயலும்?? என் மனைவிக்கென ஒரு அழகான வீடும், அந்த வீட்டில் அவள் எவ்வாறு இருந்தால் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்க இயலுமோ அவ்வாறான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க விரும்புகிறேன். அதற்கென நான் தயாராக வேண்டும். இப்போது மணந்தால் அவளை எங்கே கொண்டு வைத்துக்கொள்வேன்? ஆகவே திரிவக்கரை! நீ ருக்மிணியிடம் சொல்! என்னால் மேற்கண்ட செயல்கள் செய்து முடிக்கும்வரை திருமணம் செய்து கொள்ள முடியாது; வேறு எந்த மணப்பெண்ணையும் நான் தேர்ந்தெடுக்கப் போவதில்லை; இதையும் சொல்லிவிடு. ஆனால் ருக்மிணி சர்வ சுதந்திரமாக அவளுக்குப் பிடித்த மணமகன் கிடைத்தால் தாராளமாய் மணக்கலாம். நான் அதில் தலையிட மாட்டேன். தர்மத்தை நோக்கிச் செல்லும் என் நீண்ட நெடிய இந்தப் பிரயாணத்தில் இறை அருள் கூட்டினால் அப்போது ருக்மிணியை என் துணைவியாகக் கொள்ள முடியும் எனில் எனக்கு மகிழ்ச்சியே. அதை என் பேரதிர்ஷ்டம் என்றே கருதுவேன்.”

இதற்குள்ளாக ஜராசந்தனும் அவன் நண்பர்களுமாய்க் கூடிப் பேசி சுயம்வரத்தைத் தள்ளிப் போடுவது என்ற முடிவிற்கு வந்தனர். யாதவர்களின் மாபெரும் படையே இங்கு வந்திருக்கையில், கிருஷ்ணனும் தலைமை தாங்கி வந்திருக்கையில் ஏதேனும் கலகம் நடைபெற வேண்டாம் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது. ஆகவே ஜராசந்தன் மிகக் கஷ்டப்பட்டுத் தன் போக்கை, மனநிலையை மாற்றிக்கொள்ள நேர்ந்தது. மேலும் அவன் நண்பர்களாக அவனால் அழைக்கப்பட்டு வந்திருந்த அரசர்கள் அனைவருக்கும் கண்ணனைப் பார்க்கவும் அவனுக்குக் கெளசிகன் கொடுக்கப் போகும் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் ஆவலும் இருந்தது. ஆகவே ஜராசந்தன் இப்போது இதிலிருந்து ஒதுங்கி இருப்பதே நலம் என எண்ணினான்.

நிலைமை மிகவும் மோசமாய்த் தான் காணப்பட்டது. பீஷ்மகன் மனதளவிலும், உடலளவிலும் மிகப்பலஹீனனாய்க் காணப்பட்டான். மேலும் தாமகோஷனோ, தன் மனைவி வழி உறவினர்களால் பெரிதும் கொண்டாடப்படும் கண்ணனை, அவர்களைப் போலவே மிகவும் மதித்தான். யாதவர்களின் கண்ணின் கருமணியான கண்ணனுக்கு எதிராக எதுவும் நினைக்க முடியவில்லை அவனால். அவ்வளவு ஏன்? போஜ நாட்டின் முக்கியத் தலைவர்களும், மற்ற பிற மூத்தவர்களுமே கண்ணனின் புகழ் பாடுவதில் ஒருவருக்கொருவர் போட்டியில் சளைத்தவர்களாய்த் தெரியவில்லை. இந்த மாட்டிடையனுக்கு இவ்வளவு கெளரவமா? ஜராசந்தன் உள்ளூரக் கொதித்தான். எங்கிருந்தோ வந்து இந்த இடையன் நம் அனைத்து முயற்சிகளையும் கெடுத்துக் குட்டிச் சுவர் செய்து விட்டானே!

ஆனால்…. ஆனால்…… இதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். கண்ணன் அனைவரையும் கவர்ந்திருக்கிறான் என்பது உண்மை எனினும், அதிலும் ஒரு மரியாதையும், கெளரவமும் சேர்ந்தே காணப்பட்டது. கண்ணனை அனைவரும் பயபக்தியோடு மட்டுமில்லாமல் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் கூடிய மரியாதையும் கெளரவும் கொடுத்தே உபசரித்தனர். கண்ணனோ மாபெரும்படையுடன் வந்திருந்தான்; ஆனால் உடனடிப் போருக்கெல்லாம் இறங்கவே இல்லை. சண்டையிட வரவில்லை எனத் தெளிவாய்க் கூறுகிறான். இதிலிருந்து அவன் எண்ணம் சுயம்வரத்தை நிறுத்துவது என்பது தான். எப்படியோ இது போலி என்பதை அறிந்து கொண்டே வந்துள்ளான். மணப்பெண்ணைத் தானே மணந்து கொள்ளும் எண்ணமும் இருப்பதாய்த் தெரியவில்லை. வயதான கிழவன் கெளசிகனுக்குக் கூடப் பரிசுகள் கொண்டுவந்துள்ளான். மணப்பெண்ணான ருக்மிணிக்கும் தனியாகப் பரிசுகளாம்! அனைவர் மனதையும் கவர்ந்துவிட்டானே இந்த இடையன்.

2 comments:

பித்தனின் வாக்கு said...

அனைவர் மனதையும் கவர்ந்துவிட்டானே இந்த இடையன்.

avanthan thiruttu payal aachey. eppadi kavaramal iruppan?.

nalla irukku kathai. thodarungal padikka aavalai ullom.

priya.r said...

இந்த அத்தியாயம் 93 ஐ படித்து விட்டேன் கீதாமா.
ஜரா சந்தன் உட்பட ஒவ்வொருவரின் மன ஓட்டத்தையும் கதையின் ஊடே வெளிப்படுத்தி இருக்கும் அழகுக்கே
ஒரு ஸ்பெஷல் சபாஷ் உங்களுக்கு கொடுக்கலாம் கீதாமா !