Saturday, August 3, 2013

பீமனின் சாகசங்கள் தொடர்ச்சி!

“உன்னுடைய இந்தத் தன்னலம் நிறைந்ததொரு தாக்குதலுக்கு அந்த ராக்ஷசக் குடியினரின் வரவேற்பு எப்படி இருந்தது?” உத்தவன் கேட்டான்.  “ஹா, அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அப்பா.  நான் ஹிடும்பனைக் கொன்றுவிட்டேன் என்பது தெரிந்ததுமே அவர்கள் அனைவரும் என் கால்களில் விழுந்துவிட்டனர்.  அந்த ஹிடும்பனின் ஆவி மட்டுமில்லாமல், அவர்களின் பூர்வ முன்னோரான விரோசனனின் ஆத்ம பலமும் என்னிடம் புகுந்திருப்பதாக நினைத்து விட்டார்கள்.  இன்றளவும் அப்படியே நினைக்கின்றனர்.  “


“ஓஹோ, இப்படித் தான் நீ அவர்களின் அரசனாக ஆன கதையா?” உத்தவன் கேட்டான்.


“ஹிஹிஹி, இல்லை உத்தவா, இதில் உள்ள மிக மிக வேடிக்கையான சம்பவமே இனி தான் வரப்போகிறது.  ஹிடும்பியும் என் கால்களில் விழுந்தாள்.  என் பாதங்களைப் பிடித்துக் கொண்டாள்.  அவள் பிடியில் மிகுந்த மரியாதையும், என்னிடம் அவள் கொண்டிருந்த அளவு கடந்த நன்மதிப்பும் தெரிந்தது.  பொதுவாக ராக்ஷசப் பெண்களே தங்கள் தந்தையையோ, சகோதரனையோ எவனாவது வென்றாலோ, கொன்றாலோ அவனையே மிக பலவான் எனக் கருதி நேசிக்கத் தொடங்குவார்கள்.  இங்கேயோ அதுதான் பொதுவானதொரு விதியாகவும் அமைந்துவிட்டது.  ஹிடும்பியைத் திருமணம் செய்து கொள்பவன் அவள் சகோதரன் ஹிடும்பனை வெல்பவனாக இருக்க வேண்டும் என்பது இங்குள்ள நிபந்தனை.  ஆகவே இப்போது என் காலடிகளில் மிகவும் சக்தி வாய்ந்ததொரு ராக்ஷசி, நான் கோரும் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டு விழுந்து கிடக்கிறாள்.” இதைச் சொல்லிவிட்டு பீமன் சிரித்ததைப் பார்த்தால் ஒரு விளையாட்டுச் சிறுவன் விளையாட்டுக்களில் முதலிடம் பெற்றால் எப்படி சந்தோஷம் அடைவானோ அது போல் காணப்பட்டது.  மேலும் தொடர்ந்து, “ஆனால் அம்மா குந்தியோ இதையெல்லாம் பார்த்துத் திகைத்து பிரமித்துப் போய்விட்டாள்.  ஒரு ராக்ஷசி அவள் மருமகளாக வந்ததை நினைத்து அவள் திகைப்பு இன்னமும் நீங்கவில்லை.”  கடகடவெனச் சிரித்தான் பீமன்.  


“ஆனால் அவர்கள் உன்னை இந்த ராக்ஷசவர்த்தத்தின் தலைவனாக ஏற்றுக் கொண்டதை நினைத்தால் எனக்கு இன்னமும் ஆச்சரியமாகவே இருக்கிறது.”  என்றான்  உத்தவன்.  “ஓஹோ, உத்தவா, அப்படி எளிதாக எதுவும் நடக்கவில்லையப்பா.  கடுமையான தேர்வுகளை நான் எதிர்கொள்ள நேர்ந்தது.” என்றான் பீமன்.


“எப்படிப்பட்ட தேர்வுகள் அவை?” உத்தவன் கேட்டான்.  “அதை ஏன் கேட்கிறாய் அப்பா!  ஒரு மிகப் பெரிய விருந்து ஏற்பாடு செய்தார்கள்.  நான் அரசனாக ஒத்துக்கொள்ளும் முன்னர் அந்த விருந்து நடந்தது.  அதில் அனைத்து உணவு வகைகளையும் தயாரித்தனர்.  என்னவெல்லாமோ போட்டுத் தயாரித்திருந்தார்கள்.  எல்லாவற்றையும் மலை போல் ஓரிடத்தில் குவித்திருந்தார்கள்.  அதன் முன்னே என்னை அமர வைத்தனர்.  எனக்கு எதிரே ஒரு ராக்ஷச குண்டன் அமர்ந்தான்.  அவன் அவர்களின் மதகுருவாம். அவன் என்னை மிகவும் உபசரித்தான்.  வெளிப்படையாகப் பார்த்தால் நான் பசியில்லாமல் நன்கு உண்ண வேண்டும் என்றே அவன் சொல்வதாகத் தெரியும்.  ஆனால் அவர்கள் உள் நோக்கம் அதுவல்ல. எல்லாரும் உணவருந்த ஆரம்பித்ததும், அவனும் உண்ண ஆரம்பித்தான்.  அவன் உண்ணும் ஒவ்வொரு கவளமும் ஒரு பெரிய பாறை போல் இருந்தது என்றால் பாரேன்.  என்னையும் அவ்வாறே உண்ண வற்புறுத்தினான். அவனுடைய ஒவ்வொரு கவளத்திற்கும் ஏற்றாற்போன்றதொரு கவளத்தை நானும் உண்ண வேண்டும்.”


“அவன் ஏன் அப்படிச் செய்தான்?”


“அங்கே தான் சூக்ஷ்மமே இருக்கிறது அப்பா.  இது வெறும் விருந்தோம்பல் இல்லை.  நான் ஒரு அரசனாக ஆக முடியுமா, அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா எனச் சோதிக்கும் ஒரு போட்டி இது.” பீமன் தனக்குள்ளே நகைத்துக் கொண்டான்.  “ஒவ்வொரு ராக்ஷசனும் இந்தப் போட்டியையே கவனித்தார்கள்.  ஆகவே நான் அவர்கள் விரும்பின வண்ணமே நடந்து கொண்டேன்.  அவன் அது தான் அவர்கள் மத குரு எனக்கு ஒரு கவளம் கொடுத்தான் எனில் நான் ஒரு கவளத்தை அவனுக்குத் திரும்பக் கொடுத்தேன்.  இது கொஞ்ச நேரம் நடந்தது.  அவன் நன்றாய்த் தின்பவன் தின்று கொழுத்தவன் என்பது தெரிந்தது.  அவனைப் போன்ற ஒருவனை நான் பார்த்ததில்லை;  அதே போலவே என்னைப் போன்றவனையும் அவன் பார்த்திருக்க முடியாது.  உத்தவா, உனக்குத் தான் தெரியுமே, நான் சாதாரணமாகவே நான்கு பேர் உண்ணும் உணவை உண்ணக் கூடியவன் என! இப்போதோ நான் தீர்மானமே செய்துவிட்டேன். என் வயிற்றை மெல்ல மெல்ல இந்த உணவால் நிரப்பியாகவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டும் விட்டேன்.  ஆகவே, என் எதிரே அமர்ந்திருந்தவனால் இனி ஏதும் சாப்பிட முடியாது என்னும் நிலை வரும் வரைக்கும் நானும் அவனும் மாறி மாறி ஒருவருக்கொருவர் உணவைப் பரிமாறிக் கொண்டோம்.  ஒரு நிலையில் அவனுக்கு வயிறே வெடித்துவிடுமோ என்ற சந்தேகம் வந்திருக்க வேண்டும்.”


“சற்று நேரத்தில் அவனால் இயலவில்லை.  உணவைத் துப்பிக் கொண்டும், ஏப்பங்களைப் பெரிதாக விட்டுக் கொண்டும் அவனுடைய பெருத்த வயிற்றைத் தடவிக் கொடுத்துக் கொண்டும் இருந்தான்.  பீமனால் மீண்டும் சிரிப்பை அடக்க முடியவில்லை. பெருங்குரலெடுத்துச் சிரித்தான்.  அவன் கண்ணெதிரே அந்தப் பழைய நிகழ்ச்சிகள் அனைத்தும் மீண்டும் தோன்றினவோ என்னும்படி இருந்தது அவன் முகபாவம்.  “அவன் கண்களில் நீர் வர ஆரம்பித்துவிட்டது.  அவனால் இனி ஒரு சின்னக் கவளம் கூட உண்ண முடியாது என்று தோன்றியது.  ஆனால் நான் என் விருந்தோம்பலை நிறுத்தவே இல்லை.  மீண்டும் மீண்டும் அவனுக்கு உணவை உபசாரம் செய்தேன். கவளங்களாக உணவை எடுத்து அவன் வாயருகே கொண்டு சென்றேன்.  அவனால் இயலவில்லை என்று தெரிந்தும் அவன் வாயில் உணவைத் திணித்தேன்.  என் வாயில் ஒரு கவளம் போட்டுக் கொண்டால் அவனுக்கும் ஒரு கவளத்தை ஊட்டி விட்டேன். மற்ற ராக்ஷசர்கள் அனைவரும் உணவு உண்ணுவதை நிறுத்திவிட்டார்கள்.  அனைவரும் எங்களைச் சூழ்ந்து கொண்டு எங்களுக்குள் நடக்கும் இந்தப் போட்டியின் முடிவு என்ன என்று காண ஆவலோடு காத்திருந்தார்கள்.”


“இனி அவனால் உண்ண முடியாது என்னும் நிலைக்கு வந்துவிட்டான். ஆனால் நான் அவனை விடவில்லை.  மேலும், மேலும் உணவைக் கொடுத்துத் தின்னச் சொன்னேன்.  வேண்டாம் என அவன் சொல்லாமல் இருக்கும் வண்ணம் அவன் வாய் திறக்கையிலேயே உணவைத் திணித்தேன்.  ஒரு கட்டத்தில் அவனால் உண்ண முடியாமல் உணவைத் துப்பி விட்டான்.  நானோ அவனுக்கு ஒரு கவளம் உணவைக் கொடுத்துக் கொண்டே எனக்கு இரண்டு கவளமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். “ ஏதோ பெரிய நகைச்சுவையைச் சொல்வது போல பீமனின் முகத்தோடு சேர்ந்து அவன் கண்களும் சிரித்து நாட்டியமாடின.  “தன் கெளரவத்தைக் காத்துக்கொள்ள வேண்டி அவன் உணவை உண்ண விரும்பினாலும் அவனால் முடியவில்லை.  உணவைத் துப்பினான் அல்லது தூக்கி எறிந்தான்.  பின்னர் தாக்குப் பிடிக்க இயலாமல் மயங்கி விழுந்தான்.  அவன் வயிற்றைக் கைகளால் குத்திக் கொண்டான். அங்குமிங்கும் புரண்டான். உருண்டான்.  ராக்ஷசர்கள் அனைவருக்கும் இதைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது.  அவர்கள் அன்று வரையிலும் அவன் இவ்வாறு சாப்பாடு வேண்டாம் என மறுத்துப் பார்த்ததே இல்லை.  ஆகவே மிகுந்த திகைப்பும் ஏற்பட்டது.  நான் அவர்களை அழைத்து அவனைத் தூக்கிச் செல்லுமாறு பணித்தேன்.  ஏனெனில் அவனால் தானாக எழுந்து செல்ல இயலாது என்பது புரிந்தது.   பின்னர் நான் பாட்டுக்கு இதைக் கவனிக்காதவன் போல, உணவில் பெரு விருப்பம் கொண்டவன் போல உண்ண ஆரம்பித்தேன். அவர்களுக்கு மேலும் திகைப்பு ஏற்பட்டது.”


“என் எதிரே என் காலடிகளில் விழுந்து வணங்கினார்கள்.  அவர்கள் மொழியில் என்னை அரசனாக ஏற்றுக் கொண்டதைச் சொல்லி ஜயகோஷம் இட்டார்கள்.  ராஜா விருகோதரன் என எனக்கு நாமகரணமும் செய்தனர்.  தெய்வீகமான முன்னோரான விரோசனன் தான் திரும்ப வந்திருக்கிறான் என முழு மனதுடன் நம்பினார்கள்.  உத்தவா, இந்த ராக்ஷசர்களுக்கு முன் நான் பீமன் அல்ல;  ராஜா விருகோதரன்.  விரோசனனே உயிருடன் திரும்பி வந்துவிட்டான் என நம்புகின்றனர்.  அந்த நிமிடத்தில் அவர்கள் என்னை அவர்கள் அரசனாக ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் அவர்கள் கட்டை விரலைக் கீறிக்கொண்டு என் நெற்றியில் ரத்தத்தால் திலகமும் வைத்தார்கள்.”


6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பொடிப்பொடி எழுத்தாக உள்ளன. அதனால் படிக்கக்கஷ்டமாக உள்ளது.

இருப்பினும் படித்து விட்டேன்.

சுவாரஸ்யமான கதையாக உள்ளது.

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா...! ctrl + நான்கு முறை சொடுக்கி படித்து விட்டேன்... நன்றி...

sambasivam6geetha said...

எப்படி அப்படி ஆச்சுனு புரியலை!:( இப்போச் சரியா இருக்கானு பார்த்துச் சொல்லுங்க ரெண்டு பேரும். :))))))

இராஜராஜேஸ்வரி said...

ரத்தத்திலகத்தோடு
வெற்றி வாகை சூடிய பீமன் பிரமிக்கவைத்தான்..!

ஸ்ரீராம். said...

சாப்பிடுவதுதான் அரசனாக ஆக சோதனையா?!!

sambasivam6geetha said...

அனைவருக்கும் நன்றி.