Saturday, December 21, 2013

வியாசர் விடை பெற்றார்!

“ஐயா, கடோத்கஜன் அரசனாவது எல்லாம் சரியே!  ஆனால் அதற்காக  அரசர் வ்ருகோதரர் ஏன் எங்களை விட்டுப் பிரிய வேண்டும்? “ இதைக் கேட்கையில் ஹிடும்பி தன் கணவன் பீமன் எவ்வாறு வியாசரிடம் பேசுகையில் இரு கைகளையும் கூப்பிய வண்ணம், பணிவையும், மரியாதையையும் காட்டுவானோ அவ்வாறே தானும் காட்ட நினைத்துக் கைகளைச் சிரமப் பட்டுக் கூப்பிய பாணியில் வைத்துக் கொண்டாள். உடலையும் முன்னே வளைத்துக் கொண்டாள்.  தன் கணவன் துணை இல்லாமல் தன் சொந்த ராக்ஷச மக்களை ஆட்சி செய்வதில் அவள் மிகவும் பதட்டம் அடைந்திருக்கிறாள் என்பதை வெளிப்படையாகவே காட்டினாள்.  ஆகவே மீண்டும் வியாசரைப் பார்த்து, “அவர் இங்கேயே இருக்கட்டும்!” என்று வேண்டிக் கொண்டாள்.

அவளைப் பார்த்துப் புன்னகைத்தார் வியாசர். ஒரு சின்னக் குழந்தையை அதன் தாய் தட்டி சமாதானம் செய்வது போல அவளையும் தன் கரங்களால் தட்டிச் சமாதானம் செய்தார்.  பின்னர் “குழந்தாய், வ்ருகோதரனுக்கு ராக்ஷசர்களைக் காக்கும் வேலை மட்டுமே இல்லை, மகளே!  அவனுக்கு என ஒரு அரச தர்மம் இருக்கிறது.  அதை அவன் கடைப்பிடிக்க வேண்டும்.  அந்த தர்மத்தை நிலைநாட்டப் போரிடவும் தயாராக வேண்டும்.  உயிரை விடவும் மேலானது அரச தர்மத்தையும், ஆட்சி தர்மத்தையும் கடைப்பிடிப்பது என்பது நான் சொல்லியா தெரியவேண்டும் உனக்கு?  அனைத்து உயிர்களுக்குமே அவரவருக்கென ஒரு தர்மம் உள்ளது.  அதை நியமத்தோடு கடைப்பிடித்து வாழ வேண்டும்.  ஆனால் நான் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன் உனக்கு.  ராக்ஷச வர்த்தத்தில் எப்போதெல்லாம் ஆபத்து நேரிடுகிறதோ, அப்போதெல்லாம் நீ உன் கணவனை நினைத்தாலே போதும்.  அவன் உனக்கு வந்து உதவிகளைக் கட்டாயமாய்ச் செய்வான்.  தானே நேரில் வந்து உதவுவான்.  நான் ஒரு ஆலோசனையும் கூறுகிறேன்.”

“பீமன் இங்கிருந்து செல்லுகையில் கும்பனை உன்னையும், உன் ஆட்சியையும் மேற்பார்வை பார்த்து உனக்கு உதவ நியமிக்கச் சொல்லுகிறேன்.  உன் தேவைகளையும் கும்பன் பார்த்துக் கொள்வான். ஒவ்வொரு வருடமும் உங்களில் மிகவும் வலுவானவரைத் தேர்ந்தெடுத்து கடோத்கஜனைக் காத்து வரவும், அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யவும், அவனுக்குப் பயிற்சி அளிக்கவும் வைத்துக்கொள்ளுங்கள். அப்படியே நீ செய்து வா மகளே!  விரைவில் உன் முன்னோரான விரோசனனின் புனிதமான ஆவி கடோத்கஜனுக்குள்ளும் புகுந்து கொள்ளும். அவனை நல்வழிப்படுத்தும்.  விரைவில் கடோத்கஜனே உன்னைக் கவனித்துக்கொள்ளும் தகுதியைப் பெற்றுவிடுவான்.”  என்றார் வியாசர்.

இவ்வளவில் கடோத்கஜன் அரசனாவது குறித்து மகிழ்ச்சி அடைந்த ராக்ஷச குருமார்கள் தாங்கள் அந்தரங்கமாய்க் கூடுமிடத்துக்குச் சென்று விரோசனனின் ஆவியை அழைத்துத் தங்களில் ஒருவர் உடலில் புகுந்து கொள்ளுமாறு வேண்டினார்கள்.  அப்படியே நடக்க சிறிது நேரத்தில் விரோசனனின் கட்டளையும் அவர்களுக்குக் கிடைத்தது.  கடோத்கஜன் அரசன் ஆவதில் எந்தத் தடையும் இல்லை என்பதே அது.  அடுத்த நாள் மிகப் பெரிய கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்தனர்.  முறைப்படியான மதச் சடங்குகள் நடைபெற்றன.  தன் தாயின் மடியில் நின்றிருந்த கடோத்கஜனுக்கு ராக்ஷச அரசனாகப் பட்டாபிஷேஹம் நடைபெற்றது.  அவனுடைய நெற்றியிலும், தோள்பட்டைகளிலும் முறைப்படி மனித ரத்தத்தால் பொட்டு வைக்கப்பட்டது.  ஆனால் ஒரு வித்தியாசம்.  இம்முறை எந்த மனிதனையும் கொன்று ரத்தம் எடுக்கவில்லை.  ராக்ஷச குருமார்களே தங்கள் கட்டைவிரலைக் கத்தியால் கீறி ரத்தம் வரவழைத்துக் கொண்டு பொட்டு இட்டனர்.  தங்கள் அரசனுக்காக இந்த மாதிரியான ஒரு தியாகத்தைச் செய்வதில்  அவர்கள் மிகவும் பெருமையும் அடைந்தனர்.

மூன்றாம் நாள் அனைத்து ராக்ஷசர்களும் ஒன்று கூடி வியாசரை எல்லை வரை சென்று வழியனுப்பினார்கள்.  அனைவரையும் வியாசர் ஆசீர்வதித்தார். அவரால் குணம் பெற்றவர்கள் அவர் காலடியில் விழுந்து ஆசிகளை மீண்டும் பெற்றனர்.   எல்லைக்கருகே சென்ற வியாசர் சகோதரர் ஐவரையும் தன்னருகே அழைத்தார்.  மெதுவாக அதே சமயம் நிதானமாகக் கூறினார்:” நீங்கள் ஐவரும் இறந்தவர்கள் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்கு உரிய நேரம் வரும் வரையிலும் நீங்கள் காத்திருக்கத் தான் வேண்டும்.  அதுவரை பாண்டு புத்திரர்கள் நீங்கள் என்பதை எவரிடமும் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம். உரிய நேரம் வருகையில் உங்களுக்கே தெரியும் வெளிக்காட்டிக்கொள்ளலாம் என்பது.  ஆகவே அதுவரையும் பொறுத்திருங்கள்.” என்றார்.

“ஆசாரியரே, நாங்கள் வெளிப்படச் சரியான தருணம் எது என்பது எங்களுக்கு எப்படித் தெரிய வரும்?” யுதிஷ்டிரன் கேட்டான்.  “நீங்கள் பாண்டுவின் புத்திரர்கள் என்பதை அறிவிக்காமலேயே துருபதன் மகள் திரெளபதியின் சுயம்வரத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் எனக் கிருஷ்ண வாசுதேவன் நினைக்கிறான்.  ஆகவே இங்கிருந்து பிராமணர்களைப் போல வெளியேறுங்கள்.  உங்கள் நீண்ட தலைமுடியை உச்சியில் முடிந்து கொண்டு இளம் துறவிகளைப் போல மாறுங்கள்.  கிருஷ்ண வாசுதேவனுக்குத் தெரியும்.  நீங்கள் எப்போது பாண்டுவின் புத்திரர்கள் என அறிவிக்கலாம் என்பதை அவனே முடிவு செய்து கொள்வான்.  அப்போது நீங்கள் வெளிப்படுங்கள்.  பாண்டுவின் புத்திரர்களாக அறிவித்துக்கொள்ளுங்கள்.” என்றார்.

“தங்கள் கட்டளைப்படியே ஐயா!” என்றான் யுதிஷ்டிரன்!”

“நீங்கள் ஐவரும் சுயம்வரத்துக்குச் செல்லும் முன்னர், உத்கோசகம் சென்று அங்கே உள்ள தெளம்ய ரிஷியை உங்கள் புரோகிதராக நியமித்துக் கொள்ளுங்கள்.  ஒரு தபஸ்வியின் வழிகாட்டுதல் இல்லாமல் எந்த க்ஷத்திரியனாலும் அவனுடைய கடமைகளைச் சரிவர நிறைவேற்ற இயலாது. தங்கள் ஆன்ம வழிகாட்டிகள் இல்லாமல் எந்த க்ஷத்திரிய அரசனாலும் சரியான முறையில் அரசாட்சி செய்ய முடியாது.  மேலும் ஒன்றை நினைவில் வைத்திருங்கள் : நீங்கள் ஐவரும் ஐந்து சகோதரர்கள் என்றாலும் ஐவரும் ஒருவரே.  ஒரு கையில் உள்ள  ஐந்து விரல்களைப் போல நீங்கள் ஐவரும் ஒருவரே என்பதையும் நினைவில் இருத்தவும்.  ஒருவர் மற்றவரிடமிருந்து எப்போதும், எந்நிலையிலும் பிரியாதீர்கள்.  என்னுடைய ஆசிகள் எப்போதும் உங்களுடன் இருக்கும்.  குந்தி, உனக்கும், உன் மக்களுக்கும் என் ஆசிகள் எப்போதும் உண்டு. எல்லாரும் சந்தோஷமாக இருங்கள்.”

இவ்வளவில் ஆசாரியர் தனக்கென ராக்ஷசர்கள் கட்டி வைத்திருந்த கூண்டில் ஏறிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தார்.  ராக்ஷசர்கள் அவரை நாக நாட்டின் எல்லைக் கிராமம் ஆன லஹூரியாவுக்குத் தூக்கிச் சென்றார்கள். கார்க்கோடகனும், அவன் ஆட்களும் அங்கே வியாசருக்காகக் காத்திருந்தனர். வியாசர் பயணத்தைத் தொடங்கட்டும்.  பாண்டவர்களும் போகட்டும்.  நாம் இப்போது அவசரமாக துவாரகை வரை செல்ல வேண்டும்.  அங்கே என்ன என்னமோ நடந்துவிட்டது. கிருஷ்ணன்  மனம் அமைதியற்று இருக்கிறது. என்ன ஆயிற்று?


4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுவாரஸ்யமான பகுதி.

பகிர்வுக்கு நன்றிகள்.


"வியாசர் விடை பெற்றார்!”

சந்தோஷம்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆவலுடன் தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

வியாசர் தான் வந்த வேலையைச் செவ்வனே முடித்துப் புறப்படுகிறார். எங்கே துவாரகை?

sambasivam6geetha said...

வைகோ சார்,

டிடி,

ஶ்ரீராம்,

நன்றி.

ஶ்ரீராம், எங்கே துவாரகை?? புரியலையே? :))))