Tuesday, May 27, 2014

நான் உன் சகோதரன்!

திரௌபதிக்குத் தலையோடு கால் நடுங்கியது. அவள் உடலே ஆடியது; மிதந்தது; எல்லையற்ற பெருவெளியில் பறந்தது.  பல வண்ணமயமான காட்சிகளைக் கண்டு இன்புற்றது.  அவள் வாழ்நாளிலேயே இன்று வரை கண்டிராத ஓர் அதிசய உலகில் அவள் இருந்தாள்.  அங்கே அழகும் இருந்தது.  ஆபத்தும் இருந்தது.  ஆனால் அதைக் கண்டு அவள் இப்போது அஞ்சவில்லை.  மனம் உடைந்து போகவில்லை.  அவள் கனவில் கண்டிராத ஓர் அற்புத உலகில் அவள் அதன் ஓரத்தில் நின்று கொண்டு அந்த பயங்கரங்களை ஒரு மூன்றாவது மனுஷியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  சட்டெனத் தன்னை உலுக்கிக் கொண்டாள் திரௌபதி.  அவள் தன்னையே மறந்திருந்தாள்.  இந்த அதிசயங்களைப் பார்த்ததில் இவ்வுலகையே மறந்து விட்டாள்.  மிக மெல்லிய ரகசியம் பேசும் குரலில் ,”வாசுதேவா, அது , அதாவது அந்த வாசுதேவன், பர வாசுதேவன் அனைவரிடமும் உள்ளான்.   ஆனால்…. ஆனால் நீ யார்? நீ அந்தப் பர வாசுதேவன் இல்லையா?”

இப்போது கண்ணன் சகஜ நிலைக்கு வந்துவிட்டான். “நான் யாரெனக் கேட்கிறாயா? திரௌபதி நான் உன்னுடைய சகோதரன்.  என்னுடைய கஷ்டங்களை, பாரங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  ஒரு எளிய சகோதரன் நான்.”

“உன்னுடைய பாரங்களும், கஷ்டங்களும் தான் என்ன, எப்படிப்பட்டவை?  இவ்வுலகிலேயே நீ தான் மகிழ்ச்சியான மனிதன் என நினைத்திருந்தேனே!  நீயும் அப்படித் தான் தோன்றினாய்!” தன்னை மீறிக் கேட்டாள் திரௌபதி.

“ஓ, மிகப்பெரியதொரு பாரத்தை நான் சுமந்து கொண்டிருக்கிறேன்.  சொன்னால் புரிந்து கொள்வாயா? அது என்னவெனத் தெரிந்து கொள்ள விரும்புகிறாயா? அதர்மத்திலிருந்து மனிதனை சுத்தம் செய்வதே அது.  பரிசுத்தமாக்குவது.”

“அதர்மம்? அப்படி என்றால் என்ன?”

“என்னால் அதை விளக்க முடியாது.  ஆனால் அதை நான் உணர்கிறேன்.  ம்ம்ம்ம்ம்….. வாசுதேவன், பர வாசுதேவன் நம்மிடம் இல்லை என மறுப்பது கூட ஒரு வகையில் அதர்மம் தான்.  அவன் இருப்பை அவனை உணராமல் இருப்பதும் ஒரு வகையில் அதர்மமே!” கண்ணனின் இந்த வார்த்தைகள் திரௌபதிக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது.  அவளுக்கு என்ன கேட்பது என்றே புரியவில்லை.  கண்ணன் மேலும் பேசினான்.

“நான் பாஞ்சாலத்தில் தர்மம் சிங்காதனம் ஏறுவதைப் பார்க்க விரும்புகிறேன்.  பாஞ்சாலம் மட்டுமில்லை, ஹஸ்தினாபுரத்தில், ஆர்யவர்த்தத்தின் அனைத்து நாடுகளிலும் தர்ம சிங்காதனம் அமைய விரும்புகிறேன்.  அதற்காகத் தான் நான் ஓய்வில்லாமல் உழைக்கிறேன்.  திரௌபதி, நீ எனக்கு இதற்காக உதவி செய்வாயா? “ கேட்டுக் கொண்டே கெஞ்சும் கண்களால் திரௌபதியைப் பார்த்தான் கண்ணன்.  “நான் எவ்வகையில் உனக்கு உதவமுடியும் எனத் தெரியவில்லை, கண்ணா.  ஏனெனில் எனக்கு என்ன வேண்டும் என்பதே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. “  கேள்விக்கணைகளைத் தவிர்க்கும் வண்ணம் பேசினாள் திரௌபதி.

“என் அருமைச் சகோதரியே, நீ உணமையை அறிந்து கொள்வதில் விருப்பமாக இருக்கிறாய். அதற்காகத் துடிக்கிறாய்.  ஆனால் அதை எப்படி அடைவது, அறிவது என்பதே உனக்குத் தெரியவில்லை.” என்றான் கண்ணன்.  கண்ணன் கண்கள் முன்பிருந்ததைப்போல இப்போது அதீதக் களைப்புடனும், அயர்ச்சியுடனும், சோகத்துடனும் தெரியவில்லை.  அதே சமயம் அந்தப் பர வாசுதேவனின் பிரகாசமான ஒளிக்கதிர்கள் வீசியதைப் போலவும் ஒளிமயமாகத் தெரியவில்லை.  மாறாக அவன் இயல்பாக இருந்தான்.  ஒரு புரிதல் நிறைந்த அன்னை தன் குழந்தையை எவ்வாறு விவேகத்துடனும், கருணை கலந்த அன்போடும்  பார்ப்பாளோ அவ்வாறு உணர்ந்தாள் திரௌபதி. அவள் பிறந்ததுமே அவள் தாய் இறந்துவிட்டாள். இப்போது தாயின் முகம் கூட நினைவில் இல்லை திரௌபதிக்கு.   இனம் புரியாததொரு ஏக்கம் அவளைச் சூழ்ந்து கொண்டது.  எதற்கு என்றே தெரியாமல் கண்ணன் காலடிகளில் வீழ்ந்து வாய் விட்டு அழவேண்டும் போல் இருந்தது அவளுக்கு.  ஆம், கண்ணன் சொல்வது உண்மைதான்.  அவளுக்கு எல்லாவற்றிலும், எதிலும் நம்பிக்கை என்பதே இல்லாமல் போய்விட்டது.  தன் நம்பிக்கையை மீட்டெடுக்க அவள் ஆவலோடு காத்திருந்தாள்.

திரௌபதியின் கர்வம் முழுவதும் பொசுங்கியது.  அவளுடைய நிமிர்ந்த தலை தானாகவே குனிந்தது.  “நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்ட வண்ணம் பரிதாபமாக அழுதாள் அவள்.


கிருஷ்ணன் புன்னகைத்தான். “நான் சொல்லட்டுமா?  திரௌபதி நீ பேரழகு வாய்ந்தவள்.  பொதுவாகப் பெண்களுக்கே இப்படி அழகானவர்களாக இருந்தால் மிக மகிழ்வோடு இருப்பார்கள்;  ஆனால் நீ மகிழ்ச்சியாக இல்லை. நேர்மையும், நீதியும் வெற்றியடைய வேண்டும் என்னும் ஆவல் உன்னிடம் இயல்பாகப் பொருந்தி உள்ளது.  ஆனால் கர்வம், அகங்காரம், மனக்கசப்பு போன்றவற்றால் உன்னால் அவற்றிற்கு ஏற்றாற்போல் நடக்க முடியவில்லை.

“ஆம், நான் கெட்டவள்.  மிக மோசமானவள். “ என்று தனக்குள்ளே முணுமுணுத்தாள் திரௌபதி.  அவளுக்கு இப்போது தான் புரிந்தது.  இத்தனை வருடங்களாக அவள் குடும்பமும், குடும்ப அங்கத்தினர்களும் மனக்கசப்பிலும், கர்வத்திலும், அகங்காரத்திலுமே வாழ்ந்து வந்ததால் ஏற்பட்டிருக்கும் பரிதாபமான நிலையை எண்ணிப் பார்த்து வெட்கம் அடைந்தாள்.

 “உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளாதே! திரௌபதி, உன்னிடம் தர்மத்தைக் காக்கும் அறிவு இயல்பாகவே இருக்கிறது.  அதற்காகப் போரிடவும் நீ தயங்க மாட்டாய்.  வேண்டாத விஷயங்களில் மனதைச் செலுத்தி அதற்காகப் பெருமை அடையாதே! தர்மத்துக்காகப் போராடு!” என்றான் கண்ணன்.

2 comments:

பித்தனின் வாக்கு said...

\\வேண்டாத விஷயங்களில் மனதைச் செலுத்தி அதற்காகப் பெருமை அடையாதே! தர்மத்துக்காகப் போராடு!” என்றான் கண்ணன். \\ ithu kannan anaivarukkum sonnathu pola irukku. innum eluthungal. nanri

ஸ்ரீராம். said...

//என்று கேட்ட வண்ணம் பரிதாபமாக அழுதாள் அவள்.//

இப்போது எதற்காக அழ வேண்டும்? ஆனாலும் பழி வாங்கும் மன நிலையிலேயே தான் நிலையை திரௌபதி அறிவது உணர முடிகிறது.