Friday, January 30, 2015

பானுமதியின் வருத்தம்! ஜாலந்திராவின் ஆறுதல்!

“உன் கணவர் அப்படியா சொன்னார்?  நீ கிருஷ்ண வாசுதேவனை ஏன் பார்க்கக் கூடாதாம்?  என்ன காரணம்?  சுஷர்மா சொல்கிறான்: கிருஷ்ண வாசுதேவன் நம் சகோதரி பானுமதியிடம் மிகவும் பாசமும், அன்பும் பாராட்டுகிறான்.  உண்மையான சகோதரியைப் போலவே அவளை நினைக்கிறான். என்றெல்லாம் என்னிடம் சொல்கிறானே! வாசுதேவனைச் சந்திக்க துரியோதனனிடம் நீ ஏன் அனுமதி வாங்க வேண்டும்? வாசுதேவனை அனைவருமே சென்று எளிதாக தரிசித்து வருகின்றனர். இதற்கு உன் கணவன் ஏன் அனுமதிக்க வேண்டும்? தௌம்யரின் ஆசிரமத்தில் கூட நான் பார்த்தேன்.  அனைத்து மக்களும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உட்படக் கிருஷ்ண வாசுதேவனைச் சென்று தரிசித்த வண்ணம் இருந்தனர். “ ஜாலந்திரா கோபமாய்க் கேட்டாள்.

பானுமதி தழுதழுக்கும் குரலில் பேசினாள். “கிருஷ்ண வாசுதேவன் ஹஸ்தினாபுரம் வரப்போவதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.  அவனைச் சந்திக்கவேண்டும் என்று ஆவலுடன் துடித்துக் கொண்டிருந்தேன்.  ஜாலா, நான் ஏற்கெனவே உன்னிடம் கூறியுள்ளேனே!  எப்படி ஒரு இக்கட்டான நிலையில் இருந்து என்னைக் கிருஷ்ண வாசுதேவன் காப்பாற்றி உயிருடன் கௌரவமாக உலவ விட்டிருக்கிறான் என்பதை! இல்லை எனில் நான் ஓர் நடைப்பிணமாகவே வாழ்ந்திருப்பேன். அவனிடத்தில் வேறு எவராவது இருந்திருந்தால்!  ஜாலா! ஜாலா!  நினைக்கவே பயமாக இருக்கிறது!  அப்படி ஓர் பாசத்துடன் என்னைக் கவனித்துக் கொண்டு என்னைப் பாதுகாத்தான்! “ இதற்கு மேல் பேச முடியாமல் பானுமதிக்குக் குரல் உடைந்து விட்டது. விம்மி, விம்மி அழ ஆரம்பித்து விட்டாள். ஜாலந்திரா தன் சகோதரியை அன்புடன் அணைத்துக் கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொன்னாள்.

“ஒரு வேளை……ஒரு வேளை……நான் அவனைச் சந்திக்கவே இல்லை எனில்!  இப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை எனில்…….. அப்போது நான் இதைப் பொருட்படுத்தியே இருக்க மாட்டேன்.  ஆனால் ஜாலா!  நான் இப்போது ஆர்யபுத்திரரின் நன்மைக்காவே வாசுதேவக் கிருஷ்ணனைச் சந்திக்க நினைக்கிறேன்.  உனக்குத் தெரிந்திருக்கும்.  கோவிந்தன் அதிசயங்களைச் சாதித்துக் காட்டுவான்.  நீ அறிந்திருப்பாய்!  பாண்டவர்கள் ஐவரையும் அவன் காப்பாற்றி உயிருடன் கொண்டு வந்ததை விடவா ஓர் அதிசயம் இனிமேல் நடக்கப் போகிறது?  ஜாலா!  அவனால் நிச்சயம் ஆர்யபுத்திரரைக் காக்க முடியும். ஆனால்……ஆனால் ஆர்யபுத்திரரோ!  வாசுதேவனை வெறுக்கிறார்.  அவனால் தான் காப்பாற்றப்பட வேண்டாம் எனப் பிடிவாதம் பிடிக்கிறார். “

திடீரென்று அவள் கண்கள் செருக மயக்கத்தில் ஆழ்ந்தாள். தலை சுற்றியது பானுமதிக்கு. தன் தங்கையின் மேல் சாய்ந்து கொண்டாள்.  அந்த அரை மயக்கத்திலேயே கண்களைத் திறந்து, தன் தங்கையிடம் சொன்னாள்.”ஜாலா! இப்போது இருக்கும் நிலவரப் படி ஆர்யபுத்திரருக்கு ஹஸ்தினாபுரத்து சிம்மாதனம் கிடைக்கப் போவதில்லை;  என் வயிற்றில் பிறக்கப் போகும் பிள்ளை அந்த சிம்மாதனத்துக்கு வாரிசாக ஆகப் போவதும் இல்லை. குரு வம்சத்து சாம்ராஜ்யத்துக்குச் சக்கரவர்த்தியாக அவன் ஆகப் போவது இல்லை.” பானுமதி மீண்டும் குரல் உடைய, மெல்லிய அவள் உடல் துயரத்தில் குலுங்க விம்மி விம்மி அழுதாள். பெருகி ஓடும் நதியின் வெள்ளப்பெருக்கிலே அகப்பட்டுக் கொண்ட மலர்க்கொடி ஒன்று புயல்காற்றில் அங்குமிங்கும் அலைபடுவதைப் போல் அவள் உடல்  துன்ப சாகரத்தில் தத்தளித்தது.

ஒரு சிறு பெண் வலி தாங்க முடியாமல் கத்தி அரற்றுவதைப் போல் அவள் கத்தினாள்.”கடவுளே, கடவுளே, என் மேல் கருணை காட்டுங்கள். இரக்கம் காட்டுங்கள்.  நான் உயிருடன் இருக்கவே விரும்பவில்லை.  என்னை மாய்த்துக் கொள்ளவே விரும்புகிறேன்.  ஆனால்……ஆனால்…….. என் வயிற்றில் வளரும் என் மகன்!  அவன் அப்பாவி! இந்த உலகையே இன்னும் பார்க்கவில்லை.  அவனை நான் எப்படிக் கொல்வேன்! பாவியாகிவிடுவேனே!” எனச் சத்தம் போட்டுக் கதறினாள்.

ஒரு நிமிடம் ஜாலந்திரா கொஞ்சம் யோசித்தாள்.  தயங்கினாள்.  ஆனால் அவள் அக்காவின் நிராதரவான நிலை அவளை யோசிக்க விடவில்லை.  அவள் மீது இரக்கம் கொண்டு அவள் அருகே குனிந்து அவள் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தாள். “பானுமதி, கவலைப்படாதே!  நான் இருக்கிறேன் உனக்கு!  வாசுதேவனுக்கு என்ன செய்தியைச் சொல்லவேண்டுமோ, அதை என்னிடம் சொல்!  நான் எப்படியாவது அவனிடம் சேர்ப்பித்துவிடுகிறேன்.” என்றாள்.

“ஓ, இல்லை, இல்லை, ஜாலா!  இது மட்டும் ஆர்யபுத்திரருக்குத் தெரியவந்தால்!  என்னைக் கொன்றே போட்டுவிடுவார்.” பயத்துடன் கண்ணீர் ததும்பிக் கண்களிலிருந்து கன்னம் முழுதையும் நனைத்துக் கொண்டிருக்கக் காட்சி அளித்த பானுமதியின் முகத்தையே இரக்கம் ததும்பப் பார்த்தாள் ஜாலந்திரா. அத்தனை துயரத்திலும் துரியோதனன் என்ன செய்துவிடுவானோ என்னும் பயம் அவள் கண்களில் தெரிந்ததைக் கண்டதும் அவள் மனம் வருந்தியது.

“துரியோதனனுக்கு இந்தச் செய்தியே போய்ச்சேராவண்ணம் நான் பார்த்துக்கொள்கிறேன், பானு!  கவலைப்படாதே!  நீ மட்டும் மனது வை!  அது போதும். ஏதேனும் உபாயம் செய்து வாசுதேவனைச் சந்திக்கப் பார்க்கிறேன்.  நீ விரும்பினால், உன் கணவன் அறியாமல் நீயும் ரகசியமாக வாசுதேவனைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்.”

“வேண்டாம், வேண்டாம்!”  வேகமாகவும் உறுதியாகவும் மறுத்தாள் பானுமதி!  “ஆர்யபுத்திரரின் விருப்பத்துக்கு மாறாக நான் நடக்க விரும்பவில்லை, ஜாலா!  வேண்டாம். ஆனால் அவர் எப்படியேனும் காப்பாற்றப்பட வேண்டும். அது தான் எனக்கு முக்கியம்!”

“சரி, பானு, உன் விருப்பம் அதுவானால் அப்படியே இருக்கட்டும்.  நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்.  நீ கவலைப்படாதே.  அழவும் அழாதே!  முதலில் உன் அழுகையை நிறுத்து. “

“ஜாலா, வாசுதேவனைச் சந்திக்கையில் அவன் தனியாக இருக்கிறானா என்று பார்த்துக் கொள். அவனிடம் என் சார்பாக இந்தச் செய்தியைச் சொல்வாய்:”வாசுதேவா, உன் சின்னத் தங்கை எந்நேரமும், எந்த நிமிடமும் உன் நினைவாகவே இருக்கிறாள்.  அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அவளால் உன்னை மறக்க முடியாது. அவளே நேரில் வந்து உன்னைச் சந்தித்துத் தன் மரியாதையைத் தெரிவிக்கத் தான் விரும்பினாள்.  ஆனால்……ஆனால்…..அவள் பிரபு, அவள் கணவனின் அனுமதி கிடைக்கவில்லை.  அவள் வாசுதேவனைச் சந்திக்கக்கூடாது என்பது அவள் கணவன் கட்டளை.  அதை மீற அவள் விரும்பவில்லை. “ இதைச் சொல்லிவிட்டு வாசுதேவனிடம் ஆர்யபுத்திரரை மன்னிக்கும்படி கேட்டுக் கொள் ஜாலா!”  பேசும்போதே மீண்டும் குரல் உடைந்து அழுதாள் பானுமதி

1 comment:

ஸ்ரீராம். said...

ஒரே அழுகை மயம்!