Monday, February 2, 2015

ஜாலந்திரா திட்டம் போடுகிறாள்!

“ஆர்யபுத்திரர் வாசுதேவனைச் சந்திப்பதிலிருந்து என்னைத் தடுத்துவிட்டதைச் சொல்லி அவனிடம் மன்னிப்புக் கேள் ஜாலா!  வாசுதேவன் புரிந்து கொள்வான்.”

“ஆம், பானு, ஆம்!  வாசுதேவன் உன் கஷ்டங்களை நன்கு புரிந்து கொள்வான். நான் அவனுடன் பேசியது இல்லை;  ஆனால் சுஷர்மா சொல்கிறான், இவ்வளவு பெருந்தன்மையுள்ள ஒரு மனிதனைக் காண்பது அரிது என்று!”

“ஓ, அவன் அற்புதமான மனிதன்! அருமையானவன்!” பக்திபூர்வமான அர்ப்பணிப்பு உணர்வில் பானுமதியின் கண்கள் ஒளி விட்டுப் பிரகாசித்தன.  அவள் மேலும் சொல்வாள்:” ஜாலா, நீ வாசுதேவனைக் கட்டாயமாய்ச் சந்திப்பாய்!  அவனிடம் சொல்! “வாசுதேவா! நீ உன் துரதிர்ஷ்டம் பிடித்த ஸ்வீகாரத் தங்கைக்கு மேன்மேலும் அன்பையும், பாசத்தையும் வாரி வாரி வழங்கி வருகிறாய். ஆனாலும் அவளுக்கு உன்னிடம் கேட்கவேண்டியது ஒன்றிருக்கிறது.  அதற்கு அவளுக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனாலும் கேட்டே ஆக வேண்டும்;  இது தான் கடைசித் தடவையாக அவள் உன்னிடம் உதவி கேட்கப் போகிறாள். அது இதுதான்! ஆர்யபுத்திரரை ஹஸ்தினாபுரத்தை ஆட்சி செய்ய அனுமதிப்பாய்! அதன் பின்னரே என் மகன், அவனுக்குரிய நேரமும் காலமும் வரும்போது இந்தச் சிம்மாதனத்தை அலங்கரிக்க இயலும். இதுதான் நான் உன்னிடம் வேண்டுவது!”

ஹஸ்தினாபுரத்தின் உள்ளரசியல் தெரியாத ஜாலந்திரா மிகவும் அப்பாவியாகக் கேட்டாள்! “ ஏன்? பானு? என்ன ஆயிற்று? ஹஸ்தினாபுரத்தையும் குரு வம்சத்து சாம்ராஜ்யத்தையும் ஆள்வதிலிருந்து ஆர்யபுத்திரரை எவர் தடுக்கின்றனர்?”

“ஓ,ஓ,ஓ! உனக்கு எதுவும் தெரியாது, புரியாது ஜாலா! சில அதிசயமான வித்தியாசமான நிகழ்வுகள் இங்கே நடந்து வருகின்றன. இதிலிருந்து ஆர்யபுத்திரரை மீட்க கோவிந்தன் ஒருவனாலேயே முடியும்.  வேறு எவராலும் முடியாது!”

“எனக்கு இதைப் பற்றியெல்லாம் புரிந்து கொள்ளும் ஆர்வம் ஏதும் இல்லை, பானு. வாழ்க்கை இன்பமயமானது. ஒவ்வொரு நொடியும் விலை மதிப்பற்றது. இத்தகைய சூழ்ச்சிகளில் நம் வாழ்நாளை வீணடிக்க இயலாது.  நான் இத்தகைய அரசியல் சூழ்ச்சிகளை வெறுக்கிறேன்.” என்றாள்  ஜாலந்திரா.  கண்ணீர் வழிந்தோடும் பானுமதியின் முகத்தைத் துடைத்துக் கொண்டே அவள், “ஆனால் நீ என்னிடம் என்ன செய்யச் சொன்னாயோ அதைக் கட்டாயமாய்ச் செய்து விடுகிறேன்.”

“மதிப்புக்குரிய நம் தந்தையின் பெயரால் ஆணையிடு ஜாலா!  நான் சொன்னவற்றை அப்படியே கோவிந்தனிடம் சொல்வதாகச் சொல்!”

“நம் தந்தையின் பெயரால் ஆணையிடுகிறேன், பானு! நீ சொன்னவற்றைக் கட்டாயமாய்ச் செய்வேன்.”

மேலும் அங்கேயே தங்கிய ஜாலந்திரா, பானுமதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் அவள் அருகிலேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.  அவள் அருகிலேயே அவள் படுக்கையைப் பகிர்ந்து கொண்டாள்.  அவள் தாதி ரேகாவும் அந்த அறையிலேயே அவர்களுடன் தங்கினாள்.  தன் சகோதரியை உற்சாகப்படுத்த வேண்டி காசி நகரத்து விஷயங்களையும், தந்தை, தாய், நண்பர்கள் குறித்தும், காம்பில்யத்தில் நடந்தவை குறித்தும் உத்கோசகத்தில் நடந்தவை குறித்தும் பானுமதியிடம் பேசினாள். பின்னர் பானுமதி உறங்கும் வரை காத்திருந்தாள்

பானுமதி உறங்கியதும், ஜாலந்திரா தான் இருக்கும் விசித்திரமான சூழ்நிலையை எண்ணி வியப்பும், கவலையும் ஒருங்கே அடைந்தாள்.  அந்த நேரத்தில் ஏற்பட்டதொரு மனவெழுச்சியில் அவள் தன் சகோதரிக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டாள்.  கோவிந்தனை எவரும் அறியாமல் சந்தித்து பானுமதியின் செய்தியை அவனிடம் சேர்ப்பிப்பதாக வாக்குக் கொடுத்துவிட்டாள்.  ஆனால் அது எவ்வாறு நடக்கப் போகிறது? அவள் கோவிந்தனை தூரத்திலிருந்து சில நிமிடங்களே பார்த்திருக்கிறாள்.  அவனிடம் பேசியதே இல்லை.  மேலும் அவள் திருமணம் ஆகாத இளம் கன்னிப் பெண். அவள் எப்படி அவனைத் தனிமையில் சந்திக்க இயலும்? அதிலும் அவனைத் தனிமையில் சந்தித்து ரகசியம் பேச வேண்டும்! ஆஹா! இது மட்டும் வெளியே தெரிந்தால்????

ஜாலந்திரா தானாகவே கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க விரும்பி ரகசியமாகச் சென்று அவனைச் சந்தித்துப் பேசுகிறாள் என்பதோ, பேசவேண்டிச் சென்றிருக்கிறாள் என்பதோ வெளியே தெரிந்தால்! இந்த ஆர்யவர்த்தமே இந்தச் செய்தியால் ஆட்டம் கண்டுவிடும்! அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள்.  ஏற்கெனவே சந்தேக புத்தியுள்ள துரியோதனன், இதை அறிந்தான் எனில்? பானுமதியை உயிரோடு விட்டு வைக்க மாட்டான்.  ஏனெனில் அவனுக்குப் புரிந்து விடும்.  பானுமதி தன் செய்தியைக் கிருஷ்ண வாசுதேவனிடம் சேர்ப்பிக்கத் தன் தங்கையைத் தூது அனுப்புகிறாள் என்பதைப் புரிந்து கொண்டுவிடுவான். தன் ஆணையை மீறி பானுமதி வெகு எளிதாகத் தங்கை மூலம் தன் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வழி தேடிவிட்டதாக நினைப்பான்.


அதோடு இல்லாமல் ஜாலந்திராவுக்கு பானுமதி கிருஷ்ண வாசுதேவனுக்குச் சொல்லச் சொன்ன செய்தியின் முழு அர்த்தமும் புரிபடவே இல்லை.  இதில் என்ன கஷ்டம்? இதில் என்ன பிரச்னை?  என்றே ஜாலந்திரா நினைத்தாள்.  ஏனெனில் இன்று வரை அவள் வாழ்வது ஒரு மகிழ்ச்சியான, சந்தோஷம் நிறைந்த உலகில்.  ஒளிவீசிப் பிரகாசிக்கும் ஓர் அழகான உலகில் தன் கனவுகளுக்கும், ஆர்வங்களுக்கும் எல்லையே இல்லை என்னும்படியான உணர்வுகளோடு வாழ்ந்து வருகிறாள். ஹஸ்தினாபுரத்து அரண்மனையில் நடக்கும் சூழ்ச்சிகள், சதித்திட்டங்கள், வெறுப்பு, உறவுகளின் மனக்கசப்பு ஆகியவை குறித்து அவள் சிறிதும் கவலைப்படவே இல்லை.  அவற்றை அப்படியே கடந்து சென்றுவிடவே நினைத்தாள்.

துரியோதனனின் வருத்தமோ, அவன் மகிழ்ச்சியாக இல்லை என்பதோ அவளுக்குப் புரியவில்லை.  அவன் வருத்தத்தின் காரணமும் தெரியவில்லை. ஆனால் துரியோதனன் பானுமதியைக் கிருஷ்ண வாசுதேவனைச் சென்று சந்திக்கக் கூடாது எனத் தடுத்தது மட்டுமே மிகக் கொடூரமான, கடுமையான உத்தரவு என்பது அவளுக்குப் புரிந்தது. ஆனால் கிருஷ்ண வாசுதேவனை ஏழை, எளியவரிலிருந்து மிகவும் உன்னத பதவியில் இருப்பவர்கள் கூடச் சென்று வெகு எளிதாகச் சந்திக்க முடிகிறதே! அது எப்படி?  எப்படியோ போகட்டும்!  நாம் எப்படியாவது கிருஷ்ண வாசுதேவனைத் தனியாகச் சந்திக்க வேண்டும்.  பானுமதியின் செய்தியை அவனிடம் சேர்ப்பித்தே ஆக வேண்டும்.

இரவு முழுவதும் இதை எப்படிச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு தூங்காமல் இருந்தாள் ஜாலந்திரா.  அவள் ஒரு வித்தியாசமான வீட்டில், அரண்மனையில் இப்போது இருக்கிறாள்.  இங்குள்ள சேடிகளோ, காவலாளிகளோ அவளுக்குப் பரிச்சயமற்றவர்கள்.  அவளிடம் விசுவாசம் இல்லாதவர்கள். ம்ம்ம்ம்ம்……..எல்லோரையும் சொல்ல முடியாது!  அதோ கீழே தூங்குகிறாளே, ரேகா! பானுமதியை எடுத்து வளர்த்த தாதி!  அவளைக் கொஞ்சமேனும் நம்பலாம். மற்றபடி நம் அண்ணன் சுஷர்மாவைக் கூட நம்ப முடியாது.  அவனுக்கு மட்டும் தெரிந்துவிட்டால் கிருஷ்ண வாசுதேவனைச் சந்திப்பதிலிருந்து அவளைத் தடுப்பான்.  துரியோதனனிடம் அவனுக்கு மிகவும் பயம். பயந்து நடுங்குவான்.

ம்ம்ம்ம்ம்…இப்படிச் செய்தால் என்ன? திரௌபதி மூலம் கிருஷ்ண வாசுதேவனைச் சென்று சந்திக்க முடிந்தால்???

1 comment:

ஸ்ரீராம். said...

.ம்ம்....... ஜாலந்திராவின் எண்ண ஓட்டங்கள்...