Sunday, March 29, 2015

பீமன் மறுப்பு! ஜாலந்திரா அதிர்ச்சி!

பீமன் சீறினான்! “என்ன கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க வேண்டுமா? அதற்கு என் உதவி தேவையா உனக்கு? எதற்காக என் உதவியுடன் அவனைச் சந்திக்க விரும்புகிறாய்? அவன் தான் நாள் முழுவதும் அமர்ந்த வண்ணம் மாறாப்புன்னகையுடன், அவனிடம் வருபவர்கள் அனைவரிடமும் தன் மாறா அன்பைக் காட்டிக் கொண்டிருக்கிறானே! அது ஆணோ, பெண்ணோ, குழந்தையோ, கிழவனோ யாராக இருந்தாலும் சரி அவனுக்கு. நீயும் அவர்களோடு ஒருத்தியாய் அவனைப் போய்ச் சந்திக்க வேண்டியது தானே! இதற்கு என் உதவி ஏன்? ம்ம்ம்ம்ம்ம்??? அநேகமான பெண்கள் தங்களுக்கு ஆண் மகவு பிறக்க வேண்டும் என்று அவனிடம் போய்ப் பிரார்த்திக்கின்றனர். அப்படி ஏதேனும் உனக்கும் பிரார்த்தனை இருக்கிறதோ?”

“முதலில் எனக்கு ஒரு நல்ல கணவனை அளிக்கச் சொல்லி அவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.  ஆனால் இப்போது அது முக்கியம் இல்லை!” என்று அதே கேலியுடன் கூறிய ஜாலந்திரா, கொஞ்சம் முக்கியத்துவம் நிறைந்ததொரு குரலில், “பிரபு! நான் இப்போது கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க விரும்புவது எவரும் அறியாமல்!  ஆம்! ரகசியமாகச் சந்திக்க விரும்புகிறேன்!” என்றாள்.

“ஹா, உன் வேண்டுகோள் மறுக்கப்பட்டு விட்டது!  என்னை யாரென்று நினைத்துக் கொண்டாய் நீ? நான் இங்கே இருக்கும் ஒவ்வொரு இளவரசியையும், மற்ற அழகான பெண்களையும் என்னுடைய அந்த வசீகரமான அத்தை வழிச் சகோதரனோடு சந்திக்க வைக்கத் தான் இருப்பதாக எண்ணுகிறாயா? அவன்  பெண்களைக் கவர்ந்திழுப்பதோடு, அவர்கள் மனதை அவன் பால் திருப்பி, அவனுக்காக மனது உடைந்து போகவும்  வைக்கிறான். அத்தகையக் கவர்ச்சியான  அத்தை வழி சகோதரனுடன்  பெண்களை ரகசியச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும் காரியக்காரன் என நினைத்து விட்டாயா? இத்தகைய வேலைகளைச் செய்யும் ஆள் நான் இல்லை! இதற்கெல்லாம் வேறு ஆளைப் பார்!” தன் இரு கைகளையும் விரித்துத் தன்னால் இயலாது எனத் தெரிவித்ததோடு அல்லாமல் கைகளைக் கூப்பியும் மறுத்தான் பீமன். “ஆஹா, இந்தக்  கண்ணன் தான் எப்படிப் பட்ட மனிதன்! அனைவரையும் தன்பால் கவர்ந்திழுக்கிறானே! எத்தனை வயதாக இருந்தாலும்! ஆணோ, பெண்ணோ எவராக இருந்தாலும் அவனைக் கண்டால் மயங்காதவரே இல்லை!”

“ஆஹா, வ்ருகோதர அரசரிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. உண்மையாகச் சொல்கிறீர்களா? கொஞ்சம் தீவிரமாகச் சிந்தித்துப் பேசுங்கள் ஐயா! இது மிக முக்கியமான ஒரு விஷயம்! என் சகோதரி பானுமதி கிருஷ்ண வாசுதேவனிடம் சேர்ப்பிக்கச் சொல்லி ஒரு செய்தியை என்னிடம் கொடுத்திருக்கிறாள்.  அதை நான் நேரடியாகக் கிருஷ்ணனிடம் சொல்ல வேண்டும்.”தன் அழகான விழிகளால் பீமனைக் கெஞ்சும் விதமாகப் பார்த்துக் கொண்டே சொன்னாள் ஜாலந்திரா.

“யார், உன் அக்கா? துரியோதனன் மனைவி தானே!  ஏன், அவளுக்கு என்ன?  அவளே நேரிடையாகக் கிருஷ்ண வாசுதேவனிடம் போய்ப் பேச வேண்டியது தானே!”

“அப்படி முடிந்தால் தான் பரவாயில்லையே! ஐயா, துரியோதனன் என் அக்காவைக் கிருஷ்ணனைச் சந்திப்பதில் இருந்து தடுத்து விட்டார். கிருஷ்ணனைத் தன் எதிரியாகக் கருதுகிறார் அவர்!”

“ம்ம்ம்ம்ம்? அப்படி எனில் தன் கணவனின் எதிரிக்கு என்ன செய்தியை அனுப்ப விரும்புகிறாள் உன் அக்கா?” பீமனுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

“ஐயா, அது எங்கள் ரகசியம்! என்னுடையதும், என் அக்காவினுடையதும் ஆன ரகசியம்!”

“ என்ன சொல்கிறாய் நீ? உனக்கு ஒன்று தெரியுமா? துரியோதனன் என்னைத் தான் அவனுடைய முக்கிய எதிரியாக நினைப்பதை நீ அறிவாயா? துரியோதனன் எனக்கும் எதிரி தான்.  என் எதிரியின் மனைவிக்கு நான் ஏன் உதவ வேண்டும்?”

“ஏனெனில் துரியோதனனைப் போல் கொடுமைக்காரர் அல்ல வ்ருகோதர அரசர்.  மென்மையானவர்.  ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவி செய்யும் நல்ல மனம் படைத்தவர். “உடனடியாகப் பதில் சொன்னாள் ஜாலந்திரா. பீமனுக்கு உள்ளுக்குள் இந்தப் புகழ்ச்சி வார்த்தைகளினால் சந்தோஷம் வந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “இந்த உலகிலேயே நான் ஒருத்தன் தான் இருக்கிறேனா உனக்கு உதவ?  என் என்னைத் தேர்ந்தெடுத்தாய் இந்த மர்மமான உதவியைச் செய்ய?” என்று ஜாலந்திராவிடம் கேட்டான்.

“அது என் ரகசியம்!” என்றாள் ஜாலந்திரா. பீமனைப் பார்த்து வசீகரமான புன்னகை ஒன்றையும் சிந்தினாள்.  ஆனால் “உன் வழியில் செல்ல உன்னை விட்டு விட்டேன் ஆனால், துரியோதனன் என்னைச் சும்மா விடமாட்டான். என்னை மட்டுமில்லாமல் எங்கள் அனைவரின் எதிர்காலத்தையும் சுட்டுப் பொசுக்கி விடுவான்.” என்றான் பீமன்.

“ஆஹா, வ்ருகோதர அரசரின் தைரியமும், துணிச்சலும் நான் அறியாததா?  அவரை எவராலும் வெல்ல முடியாது.  அவரின் எதிர்காலத்தையும் எவராலும் சுட்டுப் பொசுக்க முடியாது. எப்போதுமே அவருக்கு ஜெயம் தான்!” மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னாள் ஜாலந்திரா.

“எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை, அந்த ரகசியத்தை அதுவும் என் எதிரியின் மனைவியினால் அனுப்பப்பட்ட செய்தியை என் சகோதரன் முறையான கிருஷ்ண வாசுதேவனுக்கு ரகசியமாகச் சொல்லுவதில் நானும் எப்படிப் பங்கெடுப்பது என்றே எனக்குப்புரியவில்லை.  இதைக் குறித்து நான் எதுவுமே அறிய மாட்டேனே!” என்றான் பீமன். ஜாலந்திராவை அனுப்பித் தன்னிடம் உதவி கேட்பதன் மூலம் துரியோதனன் ஏதோ பெரிய சதி செய்கிறான் என்னும் சந்தேகம் முற்றிலும் அகலவில்லை பீமனுக்கு.  அவனுக்கு இன்னமும் சந்தேகமாகவே இருந்தது.

“ஐயா, நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேனே! அப்புறமும் சந்தேகமா?” என்று தயவாகக் கேட்டாள் ஜாலந்திரா!  “ஆம்” என்று சற்றும் தயங்காமல் பீமன் சொல்ல, ஜாலந்திரா அதிர்ச்சி அடைந்தவளாகக் காணப்பட்டாள். மெல்லத் தனக்குள் பேசிக் கொள்வது போல்!”ஆஹா, மஹாதேவா, கடவுளே!  நான் எவ்வளவு முட்டாள்! பெரிய தவறு ஒன்றை அல்லவோ செய்து விட்டேன்!  என்னைப் போல் முட்டாள் உண்டா?” என்று கூறினாள்.


3 comments:

msuzhi said...

நல்ல கொக்கியோட நிறுத்தியிருக்கீங்க.

ஸ்ரீராம். said...

பீமனைச் சீண்டும் அடுத்த அஸ்திரம் தயார்!

மோகன்ஜி said...

என்னவொரு பாத்திரப் படைப்பு வீமன்? அழகான நடையில் எழுதியிருக்கிறீர்கள்.