Friday, December 30, 2016

வண்ணப் பொற்சேலைகளாம்! அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!

திரௌபதி முழு மனதுடன் கிருஷ்ணனைச் சரண் அடைந்து அவனை வேண்டிக் கொண்டாள். அவள் அப்படிப் பிரார்த்திக்கும்போதே திடீரென விண்ணில் ஓர் அபூர்வமான பிரகாசம் தென்பட்டு அந்தப் பிரகாசம் அந்த தர்பார் மண்டபத்துக்குள்ளும் சாளரங்கள் வழியாக வந்தது. இது வரை எவரும் இத்தகையதொரு பிரகாசத்தைக் கண்டதில்லை!  தொடர்ந்து திரௌபதி கூப்பிய கரங்களுடன் பிரார்த்தித்துக் கொண்டிருக்க துஷ்சாசனன் அந்த நடு மதியத்து சூரியன் ஒரு நெருப்புக்கோளத்தைப் போல் அதீதப் பிரகாசத்துடன் வேகமாகச் சுற்றுவதைக் கண்டான். அவனுக்கு மயக்கமே வரும்போல் ஆகி விட்டது.  அத்துடன் நில்லாமல் அந்த நெருப்புக் கோளத்திலிருந்து தெரிந்த ஒளிக் கற்றை ஓர் பிரகாசமான போர்வை போல நீண்டு வந்து அந்த அறைக்குள் நுழைந்திருந்தது.  அந்த ஒளிக்கற்றையானது நேரே திரௌபதியைச் சுற்றிக் கொண்டு அவளைப் போர்வை மூடுவதைப் போல் முழுமையாக மூடியது. திரௌபதி நெருப்பையே ஆடையாக அணிந்த வண்ணம் காட்சி அளித்தாள். அதைக் கண்டு மீண்டும் மயக்க நிலைக்கு ஆளான துஷ்சாசனன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் சாளரங்களுக்கு வெளியே பார்த்தான்! அந்த நெருப்புக் கோளத்தின் நட்ட நடுவே அவன் கண்டது என்ன?  ஆஹா! அது கிருஷ்ண வாசுதேவன்! சிசுபாலனை வதம் செய்கையில் எவ்வாறு காட்சி அளித்தானோ அவ்வாறே இப்போதும் அந்த நெருப்புக்கோளத்தின் நடுவே  தனக்குப் பின்னே சக்கரம் சுற்ற எந்நேரமும் சக்கரத்தை எடுத்துப் பிரயோகிப்பான் போல் காட்சி அளித்தான். துஷ்சாசனன் நடுங்கினான். அவன் உடல் வியர்த்தது. கை, கால்கள் நடுங்கின.

அந்த நெருப்புக்கோளத்தையே வியப்புடனும் திகைப்புடனும் பார்த்தான் துஷ்சாசனன்.  அவன் கைகள் திரௌபதியின் புடைவையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாலும் இப்போது அவனுக்குத் தன் கைகள் மரத்துவிட்டாற்போன்ற உணர்வு தோன்றியது.  அப்படியே கைகள் செயலற்று உயிரற்றுப் போய்விட்டாற்போல் தோன்றியது. அவன் கைகளில் இருந்த புடைவை நுனி தானாக அவனை விட்டு நழுவிற்று.  தன்னையறியாமல் துஷ்சாசனன் கீழே விழுந்தான்.  ஆனால் திரௌபதி மிகவும் பயபக்தியுடன் அந்த ஒளிவட்டத்தைப் பார்த்தாள். “ஆஹா, அவன் வந்து விட்டான்! வந்தே விட்டான்! என் பிரபு! என் கோவிந்தன்! என் யஜமானன்! என் ரக்ஷகன்! என்னைப் பாதுகாக்க வந்தே விட்டான்! “ அவள் தனக்குத் தானே கண்ணீருடன் சொல்லிக் கொண்டாள்.  அந்த ஒளிவட்டம் வந்த வேகத்திலே திடீரென மறையவும் செய்தது.  அந்தத் திறமையான ஒளிவட்டம் மெல்லமெல்ல ஓர் நிஅழலைப் போல் மறைந்து போய் மதிய நேர சூரிய வெளிச்சத்தில் இரண்டறக் கலந்தது. பிதாமஹரின் உயரமான உருவம் தன் கைகளில் பரசுராமரிடம் குருகுலத்தை முடிக்கையில் அவரால் அளிக்கப்பட்ட கோடரியுடன் எழுந்து நின்றது.

வருடக் கணக்காக அனைவரும் பிதாமஹருக்குச் செய்து வந்த மரியாதை அப்போதும் சற்றும் தவறவில்லை. திரௌபதி கூடத் தன் விம்மல்களையும், புலம்பல்களையும் அடக்கிக் கொண்டு தன் மேல் துணியை எடுத்துத் தன்னைப் போர்த்திக் கொண்டு பின்னே சென்று விட்டாள்.  பிதாமஹர் தான் அமர்ந்திருந்த உயர்ந்த மேடையிலிருந்து கீழிறங்கினார். தன் வலக்கையை உயர்த்திக் கொண்டு அனைவரையும் அமைதியுடன் இருக்கச் சொல்லி ஜாடை காட்டினார்.  அவர் அப்படிக் கையை உயர்த்தியதும், அரண்மனையின் நிகழ்வுகளை அறிவிப்புச் செய்யும் காரியஸ்தர் தன் சங்கை எடுத்து முழக்கம் செய்தார்.  அந்த முழக்கம் முடிந்ததும், தன் கைகளைக் கீழிறக்கிய பிதாமஹர் அங்கே வீற்றிருந்த அரச குடும்பத்தவரை நோக்கித் திரும்பினார்.  அவர்களோ தாங்கள் முழுக்க முழுக்க பூமியில் புதைக்கப்பட்டு விட்டவர்கள் போல் அங்கிங்கும் எங்கும் நகரக் கூட முடியாதவர்களாக வாய் திறந்து பேசக் கூட முடியாதவர்களாகக் காட்சி அளித்தனர்.

“மதிப்புக்குரிய தலைவர்களே, நான் உங்களுக்கு இப்போது ஓர் உயர்ந்த கட்டளையைப் பிறப்பிக்கப் போகிறேன்.  அதை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் இறப்பார்கள்!” என்றார்.

பின்னர் தொடர்ந்து, “ என் மதிப்புக்குரிய தந்தை, மஹாராஜா சக்கரவர்த்தி ஷாந்தனு, இப்போது பித்ரு லோகத்தில் முன்னோர்களுடன் வீற்றிருப்பவர்,  தன் வாழ்நாளில் இப்படி ஓர் கட்டளையை ஒரே ஒரு முறை கொடுத்திருக்கிறார்.  அது எப்போதெனில் ஹைஹேயர்களால் ஆரியர்களுக்கு நேரிட்ட பேரிடரின் போது குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவருக்கும் இட்டிருக்கிறார்.  இன்று வரை எனக்கு அப்படிக் கட்டளை இடும்படியான சந்தர்ப்பம் ஏதும் வாய்க்கவே இல்லை!”

“ஆனால் இப்போது மீண்டும் முன்போல் ஆரியர்களின் நல்வாழ்வுக்கு பங்கமும் அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கிறது.  குரு வம்சத்துப் பெயர்பெற்ற சக்கரவர்த்தியின் குமாரர்களே!  இந்த ஆணைக்குக் கீழ்ப்படியுங்கள்.  உங்கள் வாள்களை உருவி என் முன்னர் தரையில் போடுங்கள்.” என்றார் பீஷ்மர்.  ஒவ்வொரு குரு வம்சத்துத் தலைவனும் அடுத்தவன் என்ன செய்கிறார் என்பதையே பார்த்தார்கள்.  அவர்கள் செய்வதையே தாங்களும் செய்ய யத்தனித்தார்கள். ஆனால் துரியோதனனின் ஆதரவாளர்கள் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். செய்வதறியாது துரியோதனனையே பார்த்தார்கள். துரியோதனன் அதைவிடக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். மிகவும் அச்சத்தில் உறைந்து போயிருந்தான். அவன் கண்கள் வியப்பிலும் அச்சத்திலும் விரிந்திருந்தன.

பரசுராமரால் அளிக்கப்பட்ட அந்த பயங்கரமான கோடரியைக் கண்டு துரியோதனன் நடுங்கினான். பிதாமஹர் எப்போது வேண்டுமானாலும் அந்தக் கோடரியை வீசி அவனைத் துண்டாக்கிவிடலாம். அவரை அவனால் இப்போதைய நிலையில் எதிர்க்க முடியாது. வேறு வழி என்ன? பிதாமஹர் சற்று நேரம் பொறுத்திருந்து விட்டு மீண்டும் சொன்னார்.” என் ஆணைக்குக் கீழ்ப்படி!” அவர் குரலில் இத்தனை வருஷங்களாகப் பேரன் என்று அவர் காட்டி வந்த அன்பும், ஆதரவும், மென்மையும் சற்றும் இல்லாமல் வறண்டு கடுமையாக இருந்தது. அதிகாரத் தொனி காணப்பட்டது.  இப்போது அவன் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கிழவனின் அடக்குமுறைக்கு அடங்கி நடப்பதா அல்லது இவனை எதிர்த்து நிற்பதா? பீஷ்மரின் கண்கள் துரியோதனனின் மேலேயே  நிலைத்திருந்தன.  “என் ஆணையை மீறப்போகிறாயா?” என்று கேட்டார் அவர். துரியோதனனுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டாற்போல் இருந்தது.  இப்போது திருதராஷ்டிரன் பக்கம் திரும்பிய பீஷ்மர் மெல்லிய குரலில் அவனிடம், “மகனே,  நீ பாண்டவகுமாரர்களை இங்கே பொழுதுபோக்குவதற்காகத் தான் அழைத்திருந்தாய்! இப்போது விளையாட்டு முடிந்து விட்டது! இல்லையா மகனே!” என்றார்.

திருதராஷ்டிரன் இந்த நெருக்கடியான நேரத்தில் அனைத்தையும் மறந்தே போய்விட்டான். அவன் என்ன சொன்னான் என்பதையோ, என்ன நடந்தது என்பதையோ, என்ன செய்தான் என்பதையோ முற்றிலும் மறந்துவிட்டுப் பிதாமஹரிடம், “ஆம், தாத்தா! இது வெறும் விளையாட்டுத் தான். பொழுதுபோக்குத் தான்! இந்த விளையாட்டு இப்போது முடிந்து விட்டது. தாத்தா, விளையாட்டு முடிந்து விட்டதால் பணயமாக ஈடு கட்டியவை அனைத்தையும் இப்போது திருப்பிக் கொடுத்தாகவேண்டும்.” என்றும் கூறினான். “ஆம், மகனே! ஆம்! நீ சொல்வது சரி! இப்போது உன் கட்டளையை அறிவி! இந்த மாபெரும் சபையில் அறிவிப்புச் செய்!” என்றார்.

 திருதராஷ்டிரன் பேச ஆரம்பித்தான். அவன் உதடுகள் நடுங்கின. ஏற்கெனவே மெல்லிய குரலில் பேசுபவன் இப்போது அச்சத்தில் இன்னமும் பலஹீனமான குரலில் “பாண்டவர்கள் ஐவரும், திரௌபதியும் சுதந்திரமானவர்கள்.  என் அருமை மக்களே! இவர்களிடமிருந்து நீங்கள் வென்ற செல்வங்கள், நாடுகள், மண்டலங்கள் மற்றும் அனைத்தும் இப்போது இவர்களிடம் திரும்பக் கொடுத்தாக வேண்டும்!” என்று அறிவித்தான்.


“மாட்சிமை பொருந்திய குரு வம்சத் தலைவர்களே, என் அருமை மக்களே! கௌரவர்களே! என்னுடைய இந்த ஆணைக்குக் கீழ்ப்படியுங்கள்.  உங்களில் எவரேனும் இந்த ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அவர் கழுத்து இந்தக் குருவம்சத்துக்கு அர்ப்பணிக்கப்படும்.”


பீஷ்மர் ஷகுனியின் பக்கம் திரும்பினார். “காந்தார இளவரசே, ஷகுனி, விளையாட்டு இப்போது முடிந்து விட்டது. ஆகையால் நீ இனிமேல் குரு வம்சத்தவருக்கு தர்மத்தை எப்படிப் பாதுகாப்பது, நீதியை எப்படிப் பின்பற்றுவது என்பது குறித்துப் பாடம் எடுக்க வேண்டாம்!” என்றவர் துரியோதனன் பக்கம் திரும்பி, “ குழந்தாய். குரு வம்சத்தின் அதிகாரம் கொண்ட இந்தப் புனிதமான தர்பார் மண்டபத்தை ஓர் கொலைக்களமாக அதுவும் ஆடு, மாடுகளை வெட்டும் கொலைக்களமாக மாற்றி விடாதே!” என்றார்.

1 comment:

ஸ்ரீராம். said...

தானாக வராமல் தாமதமாக வந்த ஞானம்!