Thursday, January 12, 2017

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், எட்டாம் பாகம், குருக்ஷேத்திரம்!

ஆரியவர்த்தம் முழுவதும் ஏகக் கொந்தளிப்பாக இருந்தது. ஆரிய வர்த்தத்தின் மிகச் சிறந்த குலமான பரத வம்சத்தின் வாரிசுகளான குருவம்சத்தின் இரு மாபெரும் கிளைகள் இரண்டும் இரண்டாகப் பிரிந்து விட்டன. திருதராஷ்டிரன் மக்களான கௌரவர்கள் ஒரு பக்கமும் பாண்டவர்கள் இன்னொரு பக்கமுமாகப் பிரிந்து விட்டதோடு இருவரும் ஒருவருக்கொருவர் தாயாதிச் சண்டையிலே மூழ்கிவிட்டனர். ஷாந்தனு இருந்தவரையில் ஒன்றாக இருந்த குடும்பம் இப்போது இரண்டாக உடைபட்டு விட்டது. ஷாந்தனுவின் இரு மகன்களான சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் மிக இளம் வயதிலேயே இறந்து விட்டனர். சக்கரவர்த்தி ஷாந்தனுவின் குலம் அதன் பின்னர் தழைக்காமல் போய்விடுமோ என்னும் அச்சத்தின் பேரில் முனிவர்களில் மிகச் சிறந்தவரான வேத வியாசர் மூலம் நியோக முறையில் விசித்திர வீரியனின் இரு மனைவியரான அம்பிகையும், அம்பாலிகையும் ஆளுக்கொரு பிள்ளையைப் பெற்றெடுத்திருந்தனர்.


துரதிருஷ்டவசமாக அம்பிகாவுக்குப் பிறந்த குழந்தை பிறவிக்குருடாகப் பிறந்து விட்டது. அம்பாலிகாவின் குழந்தையோ பிறக்கையிலேயே பலஹீனனாகப் பிறந்திருந்தான். ஆகவே ஆரியர்களின் பழமையான வழக்கப்படி பிறவிக்குருடான திருதராஷ்டிரன் பட்டமேற முடியாது என்பதால் இளையவன் ஆன பாண்டுவுக்குப் பட்டம் கட்ட நேர்ந்தது.  பாண்டுவால் மனைவியுடன் சேர்ந்து குழந்தை பெற முடியாமையால் அவன் மூத்த மனைவி குந்தி தேவி நியோக முறையில் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள், மூத்தவன் யுதிஷ்டிரன் என்னும் பெயரிலும், அடுத்தவன் பீமன் என்னும் பெயரிலும் மூன்றாமவன் அர்ஜுனன் என்னும் பெயரிலும் வளர்க்கப்பட்டனர்.  பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்ரிக்கு நகுலன், சஹாதேவன் என்னும் இரட்டையர்கள் குழந்தைகளாகப் பிறந்திருந்தனர். பாண்டு இறக்கையில் அவன் இளைய மனைவி மாத்ரி தன்னிரு குழந்தைகளையும் குந்தியின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டுத் தான் பாண்டுவோடு உடன்கட்டை ஏறிவிட்டாள்.


குந்தி தன் கணவனின் இளைய மனைவியின் குழந்தைகளைத் தன் குழந்தைகளாகப் பாவித்து வளர்த்தாள். ஐவருக்கும் வித்தியாசம் சிறிது கூடக் காட்டவில்லை. ஐவருமே பாண்டவர்கள் என அழைக்கப்பட்டனர். ஐவரின் ஒற்றுமையையும் குந்தி கட்டிக் காத்துப் பராமரித்தாள். எந்தக் காரணத்திற்காகவும் ஐவரும் பிரியக்கூடாது என்றும் எது கிடைத்தாலும் ஐவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்திருந்தாள். திருதராஷ்டிரனுக்குப் பல பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் கௌரவர்கள் என அழைக்கப்பட்டனர். மூத்தவன் துரியோதனன் என அழைக்கப்பட்டான். அவனுக்கு இளையவன் துஷ்சாசனன் என்று அழைக்கப்பட்டான்.


இறந்த தன் சக்கரவர்த்திக்கணவன் ஷாந்தனுவின் மூலம் ஹஸ்தினாபுரத்தின் ராணிமாதாவாகக் கௌரவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த ஷாந்தனுவின் மனைவி சத்யவதியும் ஷாந்தனுவுக்கு கங்கையின் மூலம் பிறந்த மகன் தேவ விரதன் என்னும் பீஷ்மரும் குந்தியின் மக்கள் ஐவரையும் பாண்டுவின் புத்திரர்களாக அங்கீகரித்து அவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரனுக்கு யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்து வைத்தனர்.  இது துஷ்சாசனனுக்குப் பிடிக்காத காரணத்தால் அவன் மனதில் கசப்புணர்ச்சி வளர்ந்தது. ஆகவே அவர்களுக்கிடையிலே மறைமுகமாக அதிகாரத்தைக் கைப்பற்றப் பல்வேறு முயற்சிகள் நடந்தன.  இது இப்படி இருக்கையில் மத்ராவில் வசித்து வந்த யாதவர்கள் அங்கிருந்து சௌராஷ்டிரம் சென்றதும் மிகுந்த வல்லமை பெற்றவர்கள் ஆனார்கள்.

அங்கே வல்லமை பெற்ற யாதவர்களின் தலைவன் ஆன வாசுதேவக் கிருஷ்ணன், தன் அத்தை மகன்களான பாண்டவர்கள் ஐவருக்கும் ஆரிய வர்த்தத்தில் குறிப்பிட்ட இடம் கிடைக்கும்படி செய்யப் பல்வேறு முயற்சிகளைச் செய்தான். குறிப்பாக பாஞ்சால இளவரசியான திரௌபதியின் சுயம்வரத்தில் பாண்டவர்களைக் கலந்து கொள்ள வைத்துக் குறிப்பாக அர்ஜுனனை அதில் வெற்றி பெற வைத்துத் திரௌபதியைப் பாண்டவர்கள் ஐவரும் திருமணம் செய்து கொண்டதன் மூலம் அவர்களுக்கு நல்ல வலிமையான துணையைத் தேடிக் கொடுத்தான்.


அதன் பின்னர் பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தில் தங்கள் ராஜ்யத்தை நிறுவிக்கொண்டு அரசாளுமாறு அனுப்பி வைக்கப்பட அங்கேயும் வாசுதேவக் கிருஷ்ணன் அவர்களுக்கு உதவி செய்தான். பின்னர் யுதிஷ்டிரனை ராஜசூய யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வைத்தான்.  அப்போது மகதத்தின் அதிபதியாக இருந்த ஜராசந்தன் அழிக்கப்படும் வரை ராஜசூய யாகம் செய்வதின் நோக்கம் நிறைவேறாது என யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் எடுத்துரைத்தான். யுதிஷ்டிரனும் ஜராசந்தன் ஆரியவர்த்தம் முழுவதையும் தன்னுடைய ஆளுமைக்குக் கீழ் கொண்டு வர முயற்சிப்பதைப் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறினான். மேலும் வாசுதேவக் கிருஷ்ணனும், பலராமனுமே ஆரியவர்த்தத்தின் இயற்கையான தலைவர்கள் என்றும் அவர்கள் இருவரின் மேலும் அவன் காட்டிய அளவற்ற வெறுப்பின் காரணமாகவே அவனுடைய அனைத்து முயற்சிகளும் அவர்கள் இருவரால் முறியடிக்கப்பட்டது என்பதையும் சுட்டிக் காட்டினான்.


அதற்குக் கிருஷ்ணன் யுதிஷ்டிரனை ராஜசூய யாகத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டால் அதன் பின்னர் அவனே ஆரிய வம்சத்தின் மஹா சக்கரவர்த்தியாக அங்கீகரிக்கப்படுவான் என்றும் எடுத்ஹ்டுச் சொன்னான். ஆனால் இந்த ராஜசூய யாகம் ஆரிய வர்த்தத்தின் அனைத்து அரசர்களையும் அழைத்து அவர்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கிருஷ்ணன் கூறினான். ஜராசந்தன் இருக்கும்வரை இது நடக்கவிடாமல் தடுக்கவே முயற்சிப்பான் என்றும் கூறினான். யுதிஷ்டிரன் கவலை அடைந்து இது மாபெரும் போருக்கு வழி வகுக்கும் என்று கூறினான்.  அதற்குக் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் அவன் சமாதானத்தையே விரும்புவதைத் தான் அறிந்திருப்பதாகக் கூறினான்.  அதே போல் தானும் போரை விரும்புவதில்லை என்றும் ஜராசந்தனைப் போரில்லாமல் எதிர்கொள்ள இருப்பதாகவும் கூறினான். இதற்கு யுதிஷ்டிரன் தடை ஏதும் சொல்ல மாட்டான் என்றும் கிருஷ்ணன் எதிர்பார்த்தான்.