Thursday, March 2, 2017

பிரபாவதிக்கு இடப்பட்ட ஆணை!

பிரபாவதியும் பிரத்யும்னனும் அவர்களுக்கெனத் தனியாக அலங்கரிக்கப்பட்டிருந்த அழகான குடிசைக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பிரபாவதி கிட்டத்தட்ட மூர்ச்சித்து விழும் நிலைக்கு வந்திருந்தாள். அவள் மனதில் சந்தோஷமும் இல்லை, அமைதியும் இல்லை. கண்கள் நிறையக் கண்ணீருடனும் கொந்தளிக்கும் மனதுடனும் அங்கே அமர்ந்திருந்தாள்.  பிரத்யும்னனுக்கு அவள் நிலைமை புரிந்தாலும் காரணம் புரியவில்லை. மெல்ல மிருதுவாகத் தன் கைகளை அவள் தோள்களில் வைத்தான்.  இப்போது அவள் தன் மனைவியாகி விட்டாள். ஆகவே அவளை இறுக அணைக்கலாமே! அப்படியே அணைத்துக் கொண்டான். அவளும் தன்னைத் தேற்றுவாரில்லாமல் இந்த ஆறுதலான அணைப்பை மிகவும் விரும்பினாள்.

ஒரு மனைவியாகத் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் குறைவின்றிச் செய்தாள்.  அவனுடன் முழுமையாக ஒத்துழைத்தாள். அதன் பின்னர் இருவரும் நிதானமாக அமர்ந்துகொண்டு அப்போது அவர்கள் இருவரும் எதிர்நோக்கி இருக்கும் பிரச்னைகள் நிறைந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது எனச் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

பிரத்யும்னன் பிரபாவதியிடம் கேட்டான், “என்ன விஷயம் பிரபாவதி? உங்கள் மன்னாதி மன்னரைச் சந்தித்து விட்டு வந்ததும் நீ மிகவும் அதீதமான துக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கிறாயே!”

“நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பதை நான் நன்கு புரிந்து கொண்டு விட்டேன்!” என்றாள் பிரபாவதி.

“நாம் மோசமானதொரு சோகமான சூழ்நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்!” என்றான் பிரத்யும்னன்.  பிரபாவதி தன் கணவனையே இமைக்காமல் சற்று நேரம் பார்த்தாள். அவள் கண்களில் நம்பிக்கையும் அவன் மேல் அவள் வைத்திருக்கும் அளவற்ற பாசமும் தெரிந்தன. அவனைப் பார்த்து, “இப்போது நாம் திருமணம் புரிந்து கொண்டு கணவன், மனைவியாக ஆகி விட்டோம். இனி இந்த உலகை நாம் இருவருமாகச் சேர்ந்து எதிர்த்துப் போராடலாம்!” என்றாள்.

பிரத்யும்னன் சொன்னான். “இந்த நிமிஷத்திலிருந்து நாம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் நேரத்தைக் கவனிக்க வேண்டும். உங்கள் மன்னாதி மன்னரால் அளிக்கப்பட்ட அந்த நேரத்துக்குள்ளாக நாம் நமக்குத் தேவையானதைச் சரியானபடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரச்னையே உங்கள் மன்னரால் எழுப்பப்பட்டிருக்கும் இந்த மோசமான சூழ்நிலையை ஆபத்தான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதில் தான் இருக்கிறது!”

சற்று நேரம் நிறுத்திவிட்டு யோசித்த பிரத்யும்னன் மீண்டும் பேசினான். “ இந்த பயங்கரமான சூழலில் இருந்து நாம் தப்பிப்பது கடினம். தப்ப முடியாது. உன்னிடம் தைரியம் இன்னும் அதிகம் வேண்டும் பிரபாவதி! தைரியமாக இரு! அதோடு உனக்கு நன்றாகத் தெரியும். உன் தந்தை உங்கள் மன்னர் மன்னரால் போடப்பட்ட இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டதோடு நமது இந்தக் கல்யாணமே என்னை அழிப்பதற்கும் என்னோடு சேர்ந்து உன்னையும் அழிப்பதற்கான ஆயுதம் என்பதை நீ அறிய மாட்டாயா?”

“எவ்வளவு மோசமான நிலை நமக்கு! ஒரு வேளை நான் என் தந்தையை வேண்டிக் கேட்டுக் கொள்ளலாமோ! யாதவர்களுடன் போரிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கலாமோ!  இப்போது அப்படிக் கேட்கலாமா? அப்போது அவர் என்ன சொல்வார்?”

“இது என்ன சிறுபிள்ளைத் தனமான விளையாட்டா பிரபாவதி? இப்போதைய முக்கியப் பிரச்னையே அவர் என்னை ஏன் இத்தனை அதிகப்பாராட்டுக்களுடன் வரவேற்க வேண்டும்? நம்முடைய இந்தக் கல்யாணத்தை அவர் ஏன் இத்தனை சிறப்பாக நடத்த வேண்டும்? நான் ஏன் இங்கேயே தங்க வேண்டும்? பிரபாவதி, அத்தனையையும் மறந்துவிடுவோம். இப்போது இன்றைய இரவை மட்டும் கவனிப்போம். நீ ஏற்கெனவே சொன்னாய் அல்லவா இந்த இரவு இடிகளையும், மின்னல்களையும் கொண்டு வரப் போகிறது என்றாய் அல்லவா? ஒரு வேளை அது உண்மையாகலாம். ஆனால் நீ ஒன்றை மறக்காதே! நம் வசம் கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் மிகக் குறைவு!”
மன்னனின் ஆணையைப் பெற்றதிலிருந்தே பிரபாவதி தன் வசத்தில் இல்லை.  சற்று நேரத்துக்கு ஒரு முறை தனக்கு அளிக்கப்பட்டிருந்த அந்த மெல்லிய கருவியை அவள் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அவள் தன் தலையில் அதை மறைத்து வைத்திருந்தாள். மற்ற தானவப் பெண்களைப் போல அவள் இப்போதும் என்ன நடந்தாலும் தானவ குலத்தின் மரியாதையைக் காப்பாற்றி ஆகவேண்டும். அந்தக் கருவியைச் சரியான நேரத்தில் உபயோகிக்க வேண்டும். அது என்னவாக இருந்தாலும் சரி! ஏற்கெனவே அங்கே பலவிதமான வதந்திகள் உலவிக் கொண்டிருந்தன. ஒரு சில குறிப்பிட்ட தானவ குலப் பெண்களுக்கு மன்னனின் ஆணை பிறப்பிக்கப்பட்டதும் அதை அந்தப் பெண்கள் நிறைவேற்றியதும், ஆனால் அவை எத்தகைய ஆணைகள் என்பது எவரும் அறியாதது என்பதும் அவள் பலமுறை கேள்விப் பட்டிருந்தாள். இப்போது இவளுக்கே அது வந்து விட்டது.

இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டதின் உண்மையான காரணம் அவள் அறிய மாட்டாள். ஆனால் ஆணை நிறைவேறியாக வேண்டும்! அவளுக்குத் தன் தாயிடம் இதைக் குறித்துக் கேட்கப் பிடிக்கவும் இல்லை. தைரியமும் இல்லை. அவள் தாயிடம் இதைக் குறித்துப் பேச முடியாது! ஆனால் இது ஓர் பேரழிவைத் தான் கொண்டு வரப் போகிறது என்பதை மட்டும் நன்கறிவாள்.  இதை அவள் நிறைவேற்றினால் அவள் சொந்த வாழ்க்கை முற்றிலும் பாழ்பட்டுப் போகும். அவள் வீடு, அவள் கணவன்! அவள் மிகவும் மதித்துப் போற்றி வரும் அன்பு செலுத்தும் அவள் கணவன்! அவன் இல்லாமல் போவான்!

இதை அவளால் முழு மனதுடன் நிறைவேற்ற முடியுமா? அவள் செய்வாளா? அவளிடம் அதற்கான தைரியமும் மன உறுதியும் இருக்கிறதா? ஆனால் அவளால் அதை நிறைவேற்ற முடியாவிட்டால்! அவள் மன்னனின் ஆணைக்குக் கீழ்ப்படியவில்லை எனில்! அடுத்து நடப்பதை அவளால் நினைத்தும் பார்க்க முடியாது! அடுத்த நாளே அவள் தந்தை அவள் மொத்தக் குடும்பம் அனைவரும் மன்னர் மன்னரால் கொல்லப்படுவார்கள். எது பரவாயில்லை? அவள் ஒருத்தியின் வாழ்வா? அனைவரின் சாவா? தன் கணவனை மீண்டும் ஏறெடுத்துப் பார்த்தாள் பிரபாவதி.  அவள் அவ்வாறு பார்க்கும்போதெல்லாம் அவள் தொண்டை அடைத்துக் கொண்டு உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கிவிடுகிறாள். எத்தனை அழகான இளைஞன்? எவ்வளவு புத்திசாலி!

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன். பிரபாவதி எப்படி நிலைமையை சமாளிக்கப் போகிறாள்? இந்தக் கதை எல்லாம் நான் கேள்விப்பட்டது கூட இல்லை.