Tuesday, October 7, 2014

நகுலன் கவலை அடைகிறான்!

கொஞ்சம் பின்னோக்கிப் போய் பீமனுடன் ஒரே குடிசையில் தங்கிய நகுலனைச் சிறிது கவனிப்போம்.  பீமனோடு ஒரே குடிசையில் தங்கினான் நகுலன்.  அன்றிரவு அனைவரும் படுத்துக் கொண்ட பிறகு வெகு நேரம் பீமன் தூங்கவில்லை.  நடு இரவுக்குச் சிறிது முன்னர் அவன் எழுந்து எங்கோ வேகமாக வெளியேறியதை நகுலன் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.  உடனே தானும் எழுந்து அவனைப்பின் தொடர்ந்தான்.  அவன் பீமனைக் கவனித்தவரையில் விரைவில் ஏதோ குறும்புத்தனமான சேட்டைகள் செய்ய அவன் தனக்குள் தயார் ஆகிக்  கொண்டிருப்பதை நகுலன் உணர்ந்தான்.  உடனே அவன் மனம் இதை சுஷர்மாவோடு இணைத்து நினைக்க ஆரம்பித்தது.  அன்று மதியம் தான் நகுலன் சுஷர்மாவைக் கிருஷ்ணனின் குடிலில் பார்த்திருந்தான்.  அவனிடம் பீமன் தயவாகக் கேட்டுக் கொண்டும் சுஷர்மா தரைவழிப் பயணத்துக்கு மறுத்ததையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

நகுலனுக்குத் தன் சகோதரனின் இந்தக் குறும்புகளிலும் சேட்டைகளிலும் சிறிதளவு நம்பிக்கை கூட இருந்ததில்லை.  என்னதான் அவை எந்தவிதமான தீமையையும் விளைவிக்காவிட்டாலும் பல சமயங்களில் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு விடுகிறது. பீமன் இருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நகுலன் பீமன் நதியில் நீந்தி படகுகளுக்கு அடியில் சென்றதையும், சற்று நேரத்தில் திரும்பியதையும் கவனித்தான். அதன் பின்னர் சற்று நேரத்திலேயே படகுகளுக்குள் நீர் புகுந்து படகுகள் மூழ்க ஆரம்பித்ததையும் கவனித்தான்.  அப்போது உடனேயே பீமன் மறுபடி நீரில் பாய்ந்து படகுகளுக்கு அருகே சென்றதையும் சுஷர்மாவை நீந்த வைத்ததையும், ஜாலந்தராவைத் தன் தோள்களில் சுமந்து கொண்டு கரைக்கு வந்து சேர்ந்ததையும் கவனித்துக் கொண்டான்.  இதை எல்லாம் சத்தம் போடாமல் கவனித்த நகுலன் பீமனும், சுஷர்மாவும் வரும் முன்னரே விரைவாக குடிலுக்குச் சென்று அங்கே தன் படுக்கையில் படுத்துத் தூங்குவது போல் நடித்தான்.


சற்று நேரத்தில் சுஷர்மா குடிலுக்குள் சொட்டச் சொட்ட நனைந்த வண்ணம் குளிரில் நடுங்கிக் கொண்டும், அதே சமயம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டும், வசைமாரி பொழிந்து கொண்டும் நுழைவதைக் கண்டான்.  பீமன் குரலும் அப்போது கேட்டது:”இளவரசே, நான் என் தாயிடம் உங்கள் சகோதரியை ஒப்படைத்துவிட்டு வருகிறேன்.” என்றது அந்தக் குரல்.  பீமனின் நோக்கம் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது நகுலனுக்கு.  பயத்தில் திகைத்துப் போன நகுலன் தன் தமையனின் இந்தச் சிறுபிள்ளைத் தனமான போக்கினால் ஏற்படப் போகும் விளைவுகளை எண்ணி மீண்டும் கவலை அடைந்தான்.  சுஷர்மா பீமனின் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டான்.  சிறிது நேரத்தில் தன் குடிலுக்குத் திரும்பிய பீமன் உலர்ந்த ஆடைகளை உடுத்தி இருந்தான்.  எவ்விதமான ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அங்கேயே தரையில் படுத்தவன் உடனே தூங்கியும் போனான். சீரான அவன் குறட்டை ஒலி அவன் ஆழ்ந்து உறங்குவதை நிச்சயம் செய்தது.  நகுலனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. பீமன்,  தன் இந்தச் சிறுபிள்ளை விளையாட்டால், சுஷர்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் தர்மசங்கடமான நிலைமையை நினைத்துக் கொண்டு அதனால் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும் இன்பக்கனா கண்டு கொண்டிருப்பான் என நகுலன் நினைத்துக் கொண்டான்.


விடிவெள்ளி முளைக்கும் முன்னரே நகுலன் எழுந்து தன் வாளை உருவிச் சரிபார்த்த வண்ணம் கிருஷ்ணனின் குடிலுக்குச் செல்ல ஆயத்தமானான்.  குடிலுக்குள் மெதுவாக சப்தமின்றி அவன் நுழைந்தாலும் நுண்ணுணர்வு அதிகம் கொண்ட கிருஷ்ணன் எப்படியோ தன் குடிலுக்கு யாரோ வந்திருப்பதை அந்த ஆழ்ந்த உறக்கத்திலும் அறிந்து கொண்டுவிட்டான்.  “யாரது?” என்றும் கேட்ட வண்ணம் எழுந்து அமர்ந்தான்.  “கோவிந்தா, நான் நகுலன்.  உன்னுடன் தனிமையில் பேச வேண்டும்.”  “வா, நகுலா, வா! உள்ளே வா!” என வரவேற்றான் கிருஷ்ணன்.  கிருஷ்ணனின் குரலைக் கேட்ட சாத்யகி உடனே படுக்கையிலிருந்து எழுந்து தன் வாளை உருவிக்கொண்டு பாய ஆயத்தம் ஆனான்.  “சாத்யகி, சாத்யகி, இது நகுலன்!” என்று நிதானமான குரலில் கிருஷ்ணன்கூறினான்.   தன்னைச் சுதாரித்துக் கொண்ட சாத்யகி, “உள்ளே வா நகுலா, இவ்வளவு அதிகாலையில் நீ இங்கே வரவேண்டிய அவசியம் என்னவோ?  எந்த விஷயம் உன்னை இங்கே வரவழைத்தது?” என்று வினவினான்.


“அண்ணன் பீமனின் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு ஒன்றினால் விரும்பத் தகாத விளைவுகள் நேருமோ என அஞ்சுகிறேன்.”  மெதுவாகக் கூறினான் நகுலன்.  “என்ன விஷயம்?” என்றான் கிருஷ்ணன்.  “கோவிந்தா, உனக்குத் தெரியுமா?  பீமன் காசி தேசத்து இளவரசன், இளவரசி இருவரையும் தரை வழிப் பயணம் மேற்கொள்ள வற்புறுத்திக் கொண்டிருந்தான்.  பார்த்தாயா?” என்று நகுலன் கேட்டான்.  “ஓ, ஓ, நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.  சுஷர்மா அதை மிகவும் புத்திசாலித்தனமாக மறுத்துவிட்டான்.  அவனுக்கு துரியோதனனிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.  சுஷர்மாவை ஹஸ்தினாபுரத்துக்கு உடனே வரச் சொல்லி அந்தச் செய்தி கூறுகிறது.  சுஷர்மா மட்டும் இந்தத் திருமணத் தம்பதிகளின் ஊர்வலத்தோடு வந்தானானால் துரியோதனன் பானுமதியின் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வான் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.  அது சரி, அதற்கு என்ன?” கிருஷ்ணன் மீண்டும் கேட்டான்.



“பீமன் தன் நோக்கத்தில் ஜெயித்துவிட்டான்.  அவன் நதிக்குச் சென்று நதியின் நீர்மட்டம் உயர்ந்து படகுகள் செலுத்தத் தயாரானதும், நங்கூரத்தை எடுத்த கணமே படகினுள் நீர் புகும்படி பார்த்துக் கொண்டு விட்டான். அதன் பின்னர் அவர்களைக் காப்பாற்றச் செல்பவன் போல் நடித்துக் கொண்டு அங்கே சென்று அவர்கள் இருவரையும் ஆசிரமத்துக்கு அழைத்து வந்துவிட்டான்.”

Monday, October 6, 2014

பீமனின் சதியும், ஜாலந்தராவின் சந்தோஷமும்!

நள்ளிரவு நேரம்.  எங்கும் நிசப்தம்.  அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு அவ்வப்போது நதியின் அலைகள் கரையில் மோதும் சப்தமும், துடுப்புக்களால் நதியலைகள் தள்ளப்படும் சப்தமும், அமைதியற்ற குதிரைகள் அவ்வப்போது கனைக்கும் சப்தமும், தூரத்துக் காடுகளில் இருந்த நரிகளின் ஊளைச் சப்தமும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.  எங்கும் இருட்டுக் கருமையாக அப்பிக் கிடந்த அந்த இரவிலே விண்ணில் நக்ஷத்திரங்கள் மட்டுமே அவ்வப்போது கொஞ்சம் ஒளியை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தன.  பீமன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்தான்;  அவன் கையில் ஓர் அங்குசம் இருந்தது.  யானைப் பாகர்கள் யானைகளை அடக்கி ஆளப் பயன்படுத்தும் அந்த ஆயுதத்தை வைத்து அவன் என்ன செய்யப் போகிறான்? கரைக்கு வந்த பீமன் நதியில் மிதந்து கொண்டிருந்த படகுகளைக் கவனமாகப் பார்த்தான். இளவரசன் சுஷர்மா, இளவரசி ஜாலந்தரா மற்றும் அவர்களுக்கு உதவி செய்ய வந்த வேலையாட்கள் அனைவருமே படகினுள் அமைக்கப்பட்டிருந்த கூடார அறையில் தூங்கி விட்டிருந்தனர்.  ஒரு சில படகோட்டிகள் மட்டுமே நதியின் நீர்மட்டம் உயர்ந்து வந்ததும் நங்கூரத்தை எடுத்துவிட்டுப் படகைச் செலுத்தத் தயாராகக் காத்திருந்தனர்.



பீமன் சத்தமில்லாமல் நதிக்கரையில் நடந்து நதியில் இறங்கும் இடத்துக்கு அருகே வந்து, நீரின் அலைகள் எழுப்பும் சப்தம் வராத நேரமாகப் பார்த்து நதியில் இறங்கினான்.  காசி அரசகுமாரனும், அரசகுமாரியும் உறங்கிக் கொண்டிருந்த பெரிய படகை நோக்கி சப்தம் எழுப்பாமல் நீந்தினான். நீருக்குள்ளேயே நீந்தியவன் படகுக்கு அடியில் போனான்.  அங்கே படகை நங்கூரத்துடன் பிணைத்திருந்த இடத்துக்குச் சென்றவன், தன் கையில் இருந்த அங்குசத்தினால் படகில் துளைகள் போட முனைந்தான்.  தன் பலத்தை எல்லாம் பிரயோகித்து மிகவும் பிரயாசைப்பட்டுத் துளைகள் போட்டு முடித்தான் பீமன்.   அதன் பின்னர் அருகே இருந்த மற்றொரு படகுக்குச் சென்றான்.  இந்தப் படகில் தான் சாப்பாடு தயாரிக்கப்பட்டதோடு, சமையல் பொருட்களும் நிரம்பி இருந்தன.  அதிலும் இப்படியே துளைகள் போட்டான். இந்த வேலை முடிந்ததும், வந்தது போலவே சப்தமின்றிக் கரைக்குத் திரும்பினான்.  தன் துணிகளைப் பிழிந்து காய வைத்துக் கொண்டு அரச குமாரனின் படகுக்கு எதிரே சற்று தூரத்தில் சென்று அமர்ந்த வண்ணம் என்ன நடக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.



அவன் எதிர்பார்ப்புப் பொய்யாகவில்லை.  சற்று நேரத்தில் நதியின் நீர்மட்டம் உயர்ந்தது.  படகோட்டிகள் நங்கூரத்தை அகற்றினார்கள்.  படகு மெல்ல மெல்ல நீரில் மிதக்க ஆரம்பித்தது.  திடீரென அரசகுலத்தினரின் படகில் இருந்து கூச்சலும், குழப்பமுமாகக் கேட்டது.  படகில் ஏற்படுத்தப்பட்ட துளைகளின் மூலம் தண்ணீர் படகினுள் புகுந்து கொண்டிருந்தது.  மெல்ல மெல்ல உட்புகுந்த தண்ணீர் இப்போது வேகமாகப் புக ஆரம்பித்தது.  படகின் பயணிகள் அதன் மேல் தளத்துக்கு வந்து சேர்ந்து நின்று கொண்டு திடீரெனத் தண்ணீர் புகுந்ததின் காரணத்தை ஆராயந்தனர்.  ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.  தண்ணீர் எப்படி உட்புகுந்தது என்பதை எவராலும் கண்டறிய முடியவில்லை.  விளக்குகளை ஏற்ற முயன்றால் அப்போது வீசி அடித்த காற்றினால் விளக்குகளையும் ஏற்ற முடியவில்லை.  நக்ஷத்திரங்கள் மட்டுமே தந்த அந்தக் குறைந்த ஒளியில் காசி இளவரசனும், இளவரசியும் படகின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்ததையும் அவர்களின் உதவியாட்கள் அவர்களைச் சுற்றி நின்று கொண்டு இருப்பதையும் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்பப் பேசிக் கொண்டிருந்ததையும் ஒருவரும் மற்றவர் சொல்வதைக் கேட்கும் மனதோடு இல்லாமல் இருந்ததையும் பீமன் கண்டான்.



நதி நீருக்குள் வெகுவேகமாய்ப் பாய்ந்த பீமன் இரண்டொரு விநாடிகளில் வேகமாக நீந்திப் படகுக்கு அருகே வந்து விட்டான்.   படகை நோக்கிய வண்ணம், “யுவராஜா, விரைவில் படகை விட்டு வெளியேறுங்கள்.  படகு நதியின் நட்டநடுவில் அலைகளுக்கு நடுவே ஆழமான பகுதியில் மாட்டிக் கொண்டால் வெளியேற முடியாது.  இளவரசி, தாங்களும் வெளியேறுங்கள்.  இருவரும் உடனே குதியுங்கள்!  இளவரசி, நீங்கள் குதிக்கையில் நான் உங்களைத் தாங்கிக் கொள்கிறேன்.” என்று சப்தமாகக் கத்தினான். அனைவரும் ஒருசேரப் பேசிக் கொண்டிருந்த அந்தக் குழப்பமான ஒலியையும், நதியின் அலை ஓசையையும் மீறிக் கொண்டு பீமனின் குரல் காண்டாமணியின் ஓசையைப் போல் கேட்டது.  “ஆஹா, ராக்ஷச அரசர் வ்ருகோதரரா?” இளவரசி கேட்டாள்.



“ஆம், இளவரசி, நானே தான்.  விரைவில் குதியுங்கள். “ என்றான் பீமன். இளவரசி சிறிதும் தயக்கமின்றி நீரில் குதிக்க பீமனும் அவளைப் பிடித்துக் கொண்டான்.  அவளை அடுத்து இளவரசனும் நீரில் குதித்தான்.  நீரில் குதித்த இளவரசன் தன்னைச் சமாளித்துக் கொண்டு நீந்த உதவிய பீமன் இளவரசியை நீருக்கு மேல் பிடித்துக் கொண்டு நீந்த ஆரம்பித்தான்.  ஒரு கையால் நீந்திய வண்ணம் இன்னொரு கையால் இளவரசியை நீருக்கு மேல் பிடித்துக் கொண்டு இருந்தான் பீமன்.  படகில் இருந்த ஆட்களிடம், “இளவரசியையும் இளவரசனையும் நான் நன்றாகக் கவனித்துக் கொள்கிறேன்.” என சப்தம் போட்டுக் கத்தினான்.  படகு மூழ்காமல் நீர் வரும் துளைகளை அடைக்கும்படியும் அவர்களைக் கேட்டுக் கொண்டான்.   இதற்குள்ளாக நதியிலிருந்து வந்த கூச்சல், குழப்பம் போன்ற சப்தங்களால் கரையிலும் மனிதர்கள் கூடி விட்டனர். சிலர் கைகளில் விளக்குகளையும் ஏந்திய வண்ணம் வந்தனர்.  அவர்களை பீமன் நீந்திப் படகுகளுக்குச் சென்றுப் படகின் துளைகளை அடைக்கும் ஆட்களுக்கு உதவும்படியும் படகுகள் முழுகாமல் காக்கும்படியும் கட்டளையிட்டு அனுப்பினான்.  பீமன் கரைக்குப் போய்ச் சேர்வதற்குள்ளாக ஜாலந்தரா அவன் கைகளிலேயே மயக்கம் அடைந்தாள்.



சுஷர்மாவுக்கு பீமன் ஜாலந்தராவைத் தொட்டுத் தூக்கிச் சென்றதைப் பொறுக்க முடியவில்லை.  ஆனால் இப்போது வேறு வழியும் தெரியவில்லை.  இந்த அவமானத்தைச் சகிக்க முடியவில்லை தான்.  ஆனால் அவனே வலுவில்லாதவன்.  நதியில் குதித்ததில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். அவனைக் கவனித்துக் கொள்வதே அவனுக்குப் பெரும்பாடாக இருந்தது. இதில் ஜாலந்தராவை எவ்வாறு கவனிக்க முடியும்?  வேறு வழியில்லை!  பொறுக்க வேண்டியது தான்!



அப்போது பீமன், “இந்தக் குளிர் காற்றிலே இங்கே வெட்ட வெளியில் இருப்பது உடல் நலனுக்கு உகந்தது அல்ல இளவரசே, வாருங்கள்.  உங்கள் இருவரையும் நான் ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்கிறேன்.” என்றான்.  அரை மனதாக இளவரசன் செய்த ஆக்ஷேபங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு ஓர் ஆள் விளக்குடன் வழிகாட்ட பீமன் இளவரசி ஜாலந்தராவைத் தன் தோள்களில் சுமந்த வண்ணம் ஆசிரமத்தை நோக்கி நடந்தான்.  வேறு வழியின்றி இளவரசனும் அவனைப் பின் தொடர்ந்தான்.  ஜாலந்தரா கொஞ்சம் கூட கனமாக இல்லாமல் லேசாக ஒரு குழந்தையின் எடையுடன் இருப்பதைக் கண்டு பீமன் வியந்தான்.  அவனுக்கு ஹிடும்பியின் நினைவு வந்தது.  அவளுடைய எடையையும், இவள் எடையையும் ஒப்பிட்டுப் பார்த்த பீமனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது.  “ஆஹா, இவளைப் பூக்களாலேயே பிரமன் படைத்திருப்பானோ!” என எண்ணிக் கொண்டான்.  தன் சுயநினைவின்றி அவள் ஓர் குழந்தையைப் போல் அவனைச் சார்ந்திருப்பதை மிகவும் விரும்பினான்.  அவள் உடலின் ஸ்பரிசம் பட்டதுமே தனக்குக் குளிரெல்லாம் அகன்று உடல் சூடானதாகவும் உணர்ந்தான்.



அவர்கள் சென்று கொண்டிருக்கும்போதே, பீமன் காதுகளில் ஓர் குரல் மெலிதாகக் கிசுகிசுத்தது.  “நீங்கள் தானே படகுகளை மூழ்கடித்தீர்கள்?” பீமன் தூக்கிவாரிப் போட ஜாலந்தராவைப் பார்த்தான்.  அப்படி என்றால் அவளுக்குச் சுய நினைவு வந்துவிட்டதா?  ம்ம்ம்ம்?  ஒருவேளை சுயநினைவு வந்திருக்கலாம்; அல்லது வராமலும் இருக்கலாம்.  ஆனால் அவள் தன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு செல்ல விரும்பவில்லை.  ஆகையால் ஜாலந்தரா சுய நினைவின்றி இருக்கிறாள் என்னும் எண்ணத்திலேயே அவளைத் தூக்கிச் செல்லவே பீமன் விரும்பினான்.  ஆசிரமத்தை அடைந்ததும் சுஷர்மனிடம் திரும்பிய பீமன், “இளவரசே, உங்கள் தங்கையை நான் என் தாயிடம் விட்டு விட்டு வருகிறேன்.  நீங்கள் அதோ இருக்கும் என் குடிசைக்குச் சென்று உடனடியாக உடையை மாற்றிக் கொண்டு தூங்கச் செல்லுங்கள்.  இந்தக் குளிரில் உங்களுக்குக் கடுமையான ஜலதோஷம் பிடிக்கப் போகிறது.” என்றான்.



சுஷர்மாவுக்கு அந்தச் சூழ்நிலையில் தான் செய்யவேண்டியது என்னவென்று புரியவில்லை.  வேறு வழியின்றி பீமன் கூறியபடி அவன் குடிசைப் பக்கம் திரும்பிச் சென்றான்.  பீமன் அவளைத் தன் தாயிடம் தூக்கிச் செல்கையில் அவள் காதுகளில் கேட்கும்படி மெல்லிய குரலில், “என்னை விட்டு விட்டு நீ ஹஸ்தினாபுரத்துக்குப் படகுப் பயணமாகச் செல்ல நினைத்தாயா?  நல்லது, இப்போது முயன்றுதான் பாரேன்!” என்றான் அவளிடம்.  ஜாலந்தராவுக்கு நினைவு திரும்பியதாகத் தெரியவில்லை.  ஆனால் அவள் இதழ்களில் மெல்லிய புன்முறுவல் தோன்றியது.  அதைக் கண்ட பீமன் உள்ளம் சந்தோஷத்தில் கூத்தாடியது.


Saturday, October 4, 2014

பீமனின் திருட்டுத் தனம்!

அதைப் பார்த்த பீமன் உள்ளூரச் சிரித்தபடி, தாமரைப்பூப்பாதங்களைக் கொண்ட இளவரசி, இப்போது ஆசிரமத்திற்கு வந்துவிட்டாள் என எண்ணிக் கொண்டான். மீண்டும் இளவரசியைப் பார்க்கும் ஆவல் மேலிட்டாலும் அனைவரும் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதே இப்போது அவன் முதல் வேலையாக இருந்ததால் கவனத்தை அதில் தான் திருப்ப இயலும்.   ஏமாற்றத்துடன் பெருமூச்சு விட்டான் பீமன்.  ஆசிரமத்திற்கு வந்த பீமன் தன் அண்ணன் யுதிஷ்டிரனிடம் அனைவரும் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்துவிட்டதாகவும் இரவு உணவு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் கூறினான்.  பின்னர் தௌம்ய ரிஷியின் கால்களில் விழுந்து வணங்கினான்.  அவரைப் பார்த்து, “குருதேவரே, உங்களால் என்னை எவ்வளவு ஆசீர்வதிக்க முடியுமோ அவ்வளவு ஆசீர்வதியுங்கள்.  அதற்கான கையிருப்பு இல்லை எனில் என் சகோதரர்களுக்கென வைத்திருக்கும் ஆசீர்வாதங்களில் இருந்து கடன் பெற்று என்னை ஆசீர்வதியுங்கள்.” என்றான்.



பின்னர் தன் தாய் தங்கியிருந்த குடிசைக்குச் சென்று தாயின் கால்களிலும் விழுந்து வணங்கினான்.  பின்னர் அங்கே தன் தாயுடன் அமர்ந்திருந்த திரௌபதியைக் கடைக்கண்களினால் பார்த்துவிட்டு அங்கு அமர்ந்திருந்த மற்றப் பெண்மணிகளிடம் யாரையோ தேடினான்.  என்ன ஏமாற்றம்!  அவன் எதிர்பார்த்த நபர் அங்கில்லை! பறக்கும் தாமரைப்பூப்போன்ற பாதங்களைக் கொண்ட அந்தக் காசி இளவரசி அங்கில்லை.  அரை மனதாக சமையல் நடைபெறும் இடத்திற்குச் சென்றான்.  சமையலில் கெட்டிக்காரனான அவன் மனம் இப்போது சமையலில் லயிக்கவில்லை.  ஆனாலும் என்ன நடக்கிறது என்று பார்த்தான்.  ராக்ஷச அரசன் வ்ருகோதரனின் மகத்தான பசியை நன்கு அறிந்திருந்த தௌம்ய ரிஷி அவனுக்காக ஏராளமான உணவுகளைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார்.  நிதானமாக அமர்ந்து ஒவ்வொன்றாக ருசி பார்த்தான் பீமன்.  பின்னர் அங்கிருந்து கிளம்பி கிருஷ்ணன் தங்கி இருக்கும் குடிசைக்குச் சென்றான்.


“கோவிந்தா!  உன்னை இப்போது நான் பார்க்க வரலாமா?” என்று கேட்ட வண்ணம் உள்ளே நுழைந்த பீமன், அங்கே கிருஷ்ணன், சாத்யகி ஆகியோருடன் அமர்ந்திருந்த தன் சகோதரன் நகுலனையும் இன்னொரு மனிதனையும் பார்த்தான்.  அந்த மனிதன் முகம் எங்கோ பார்த்தது போல் இருந்தது பீமனுக்கு.  சட்டெனப் பொறிதட்ட ஜாலந்தராவின் முக ஜாடையில் அவன் இருப்பதைப்பார்த்து, இவன் தான் காசி இளவரசன் சுஷர்மனாக இருக்க வேண்டும் என முடிவு கட்டினான்.  சற்று உயரம் குறைவாகவும், தேக அமைப்பில் மென்மையாகவும் காணப்பட்ட அந்த இளைஞனுக்கு 25 வயதிருக்கலாம் என நினைத்தான் பீமன்.



அப்போது கிருஷ்ணன், “என்னிடம் கேட்பதில் என்ன பலன்?  நீ ஏற்கெனவே உள்ளே நுழைந்து என்னைப் பார்க்கவும் பார்த்துவிட்டாய்!  என்ன விஷயம்?  எல்லாம் சரியாகப் போகிறது அல்லவா?” என்று பீமனிடம் கேட்டான்.  “ஆஹா, எல்லாம் நன்றாகப் போகிறது.” என்றான் பீமன்.  “ஆனால் கிருஷ்ணா, சில மனிதர்கள் மிகவும் வருத்தமாக உன்னைப் பார்க்க வேண்டிக் காத்திருக்கின்றனர்.”  என்றும் கூறினான்.  “அதோ கேள்! மக்களின் பொறுமையின்மையை!  “ஜெய ஜெய கிருஷ்ண வாசுதேவா!” எனக் கூக்குரல் போட்டுக் கொண்டு உனக்காகக் காத்திருக்கின்றனர்.  விரைந்து செல் கிருஷ்ணா!  உன் மக்களைச் சமாதானம் செய்!” என்ற வண்ணம் கிருஷ்ணனுக்கும், சுஷர்மாவுக்கும் இடையில் அமர்ந்தான் பீமன்.



“உண்மை தான்.  அவர்களை நான் காக்க வைக்கக் கூடாது.  வெகு தூரத்தில் இருந்தெல்லாம் என்னைப் பார்க்க வேண்டியே வந்திருக்கின்றனர்.  அது சரி, பீமா!  உனக்கு சுஷர்மாவைத் தெரியுமா?  மாட்சிமை பொருந்திய காசி அரசரின் புதல்வன்!  துரியோதனன் மனைவி பானுமதியின் உடன் பிறந்த சகோதரன்!” என்றான் கிருஷ்ணன்.



“நீ ஸ்வீகாரம் செய்து கொண்டிருக்கும் சகோதரிகளில் பானுமதியும் ஒருத்தி! அல்லவா! கிருஷ்ணா! “ என்று பீமன் சிரித்துக் கொண்டிருக்கும்போதே, கிருஷ்ணன் தன் கிரீடத்தையும், உத்தரீயத்தையும் அங்கேயே விட்டு விட்டு சாத்யகியுடன் குடிசையை விட்டு வெளியேறினான். சுஷர்மாவுக்கோ தர்ம சங்கடமாக இருந்தது. தன்ந்தங்கை கணவன் ஆன துரியோதனன் பீமனை எவ்வளவு வெறுக்கிறான் என்பதை அவன் நன்கறிவான்.  ஆகவே பீமனுடன் நட்புப் பாராட்ட அவன் விரும்பவில்லை.  அவன் அங்கிருந்து கிருஷ்ணனோடு வெளியேற விரும்பி எழுந்தபோது பீமனின் கரங்கள் அவன் தோள்களில் படிந்து அவனைத் தடுத்தது.



“உத்கோசகத்துக்கு எப்போது வந்தீர்கள், இளவரசே?” நட்புப் பாராட்டும் தொனியில் பீமன் கேட்டான்.  “மூன்று நாட்கள் ஆகின்றன!” என்றான் சுஷர்மன்.  பீமனுக்கு சுஷர்மனுக்குத் தன்னோடு உரையாடுவதில் விருப்பமோ, மகிழ்ச்சியோ இல்லை என்பது புரிந்தது.  சம்பாஷணையை வளர்த்த விரும்பாதவனாகக் காணப்பட்டான்.  அவனை வெறுப்படைய வைக்கும் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான் பீமன்.  “உத்கோசகத்தில் இருந்து எப்போது கிளம்புகிறீர்கள்?” என்று கேட்க, “இன்று மாலையே கிளம்புகிறோம்!” என்று பதிலளித்தான் சுஷர்மன்.  பீமன் அதற்கு, “என்ன அவசரம்?  கொஞ்சம் தங்கி எங்களுடன் சில நாட்களைக் கழித்த பின்னர் செல்லலாமே!” என்றான்.  சுஷர்மனின் புருவங்கள் நெரிந்தன.  “என் சகோதரி பானுமதிக்கு உடல்நலம் சரியில்லை.  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் நாங்கள் ஹஸ்தினாபுரம் போயாக வேண்டும்!” என்றான் சுஷர்மன்.



“என்ன ஆயிற்று பானுமதிக்கு?” பீமன் விடாமல் கேட்டான்.
“ஓ, அவள் துரியோதனனின் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள்.  விரைவில் அவளுக்குப் பிரசவம் ஆகிவிடும்.  அந்த சமயம் நாங்கள் அவளுடன் இருக்க விரும்புகிறோம்.”  இதைச் சொல்வதற்குள் சுஷர்மாவுக்கு வேர்த்து விறுவிறுத்து விட்டது.  “ஓ, அப்போது நீங்கள் ஹஸ்தினாபுரத்தில் பல நாட்கள் தங்கும்படி நேரும்!” என்றான் பீமன்.  “ஆம், இப்போது நாங்கள் புனித யாத்திரை செய்யப் போகிறோம்.  அதை முடித்துக் கொண்டு ஹஸ்தினாபுரம் வருவோம்.  என் தங்கை பானுமதிக்குக் குழந்தை நல்லபடி பிறந்து அவளும் உடல் நலம் தேறும் வரையில் நாங்கள் ஹஸ்தினாபுரத்தில் இருப்போம்.” சொல்லிக் கொண்டே அங்கிருந்து எழுந்து செல்ல ஆரம்பித்தான் சுஷர்மன்.



“ஏன், எங்களுடன் தரைவழிப் பயணம் மேற்கொள்ளலாமே?” என்று கேட்டான் பீமன்.  உடன் தானும் எழுந்து சுஷர்மாவுடன் செல்ல ஆயத்தமானான்.  பீமனுக்கு எப்போதுமே அவனை இப்படிப் பேசும்போது  நட்ட நடுவில் தவிக்க விட்டுச் செல்பவர்களைக் கண்டால் பிடிக்காது.  இவனும் இதையே செய்யப் பார்க்கிறானே! “நாங்கள் படகுப் பயணத்தையே விரும்புகிறோம்.” என்றான் சுஷர்மன்.  பீமன் சிரித்தான்.  “ஆம், ஆம், தூசி இருக்காது. உடலில் அழுக்குச் சேராது.  பாதையில் மேடு பள்ளங்கள் இருக்காது என்பதால் தூக்கிப் போடாது. அதோடு நதியில் போவதால் எப்போதும் குளிர்ந்த காற்று வீசும்.  ஆனால் தரை வழிப் பயணத்தில் நாங்களும் உங்கள் துணைக்கு இருப்போம். நீங்களும் எங்கள் துணைக்கு இருக்கலாம்.”



“இல்லை, நாங்கள் படகுப் பயணத்தையே விரும்புகிறோம்!” என்ற வண்ணம் பீமனைப் பார்த்துக் கும்பிட்டு விட்டுக் குடிசையின் வாயிலை நோக்கிச் சென்றான் சுஷர்மன்.  தன்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு சட்டென அவன் கிளம்புவதால் அமைதியை இழந்த பீமன், “படகுகளுக்கு எப்போது போவீர்கள்? என்று கேட்ட வண்ணம் சுஷர்மனோடு சேர்ந்து கொண்டான். அலைகளின் ஏற்ற, இறக்கத்தையும், நீரின் மட்டத்தையும் பொறுத்து நங்கூரம் எடுக்கப்படும்.  ஆனால் நாங்கள் இரவு உணவுக்குப் பின்னர் படகுக்குப் போய்விடுவோம்.” என்றான்.



“நீங்கள் செல்லும்போது விடை கொடுக்க நான் வருகிறேன்.” என்றான் பீமன்.  அவனுக்கு இப்போது தான் செய்யவேண்டியது என்ன என்பது புரிந்தது.  நகுலனுக்கு பீமன் இப்படி வலுவில் அவனுடன் நட்புப் பாராட்டுவது ஆச்சரியத்தை அளித்தாலும், இதில் ஏதோ உள் நோக்கம் உள்ளது என்ற அளவில் புரிந்து கொண்டிருந்தான்.  ஆகவே அனைத்தையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.   தான் சொன்னபடியே இரவு உணவுக்குப் பின்னர் பீமன் நதிக்கரைக்குச் சென்ற தௌம்ய ரிஷியோடும், மற்றவர்களோடும் சேர்ந்து கொண்டு காசி இளவரசனும், இளவரசியும் அங்கிருந்து கிளம்புகையில் விடை கொடுக்கச் சென்றான்.  அவன் எதிர்ப்பார்ப்புப் பொய்யாகவில்லை.  ஜாலந்தராவுக்கும் அவனுக்கும் கண்களாலேயே ரகசியப் பேச்சு வார்த்தை நடந்தது.  திருட்டுத் தனமாகத் தன் பக்கம் அவள் பார்ப்பதையும், கண்களால் விடைபெறுவதையும் பார்த்த பீமன் ஆகாயத்தில் பறந்தான்.  அவன் உள்ளம் சந்தோஷத்தில் கூத்தாடியது.

Saturday, September 27, 2014

உத்கோசகம் வந்த ஊர்வலம்!

பீமன் மிகவும்  மனக்கிளர்ச்சியுடன் காணப்பட்டான்.  மணமக்கள் ஹஸ்தினாபுரம் செல்லும் ஊர்வலம் ஆரம்பித்து விட்டது.  அதன் தலை பாகத்தில் ஓர் அழகான யானை மேல் அமர்ந்த பீமனுக்கு அமரும்போதே மனம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டது. ஒரு மாபெரும் படையையே வென்று விட்டு நாட்டுக்குத் திரும்பும் உணர்வு அவனுள் ஏற்பட்டிருந்தது.  வெற்றி கண்ட படையை தான் வழிநடத்திச் செல்லப் போவதாகவும் அவனுக்குள் ஓர் உணர்வு.   எங்கே பார்த்தாலும் பீமன் காணப்பட்டானோ என்னும்படிக்கு பீமன் எங்கும் இருந்தான். மனம் விட்டு அனைவருடனும் மென்மையாகவும், கனிவாகவும் பேசிக் கொண்டு, களைப்புற்றிருந்தவர்களை உற்சாகப்படுத்திய வண்ணம், சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கு உதவிகள் செய்த வண்ணம், நடுவே சமையல் மேற்பார்வைகளும் பார்த்துக் கொண்டும், தன்னுடன் கூட வந்த அனைவருக்கும் எல்லாவிதமான சௌகரியங்களும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறதா?  அனைவருக்கும் உணவு சரியாகப் போய்ச் சேர்கிறதா என்பதை எல்லாம் கவனித்துக் கொண்டும் அங்குமிங்கும், எங்கும் பீமன் காணப்பட்டான்.


இத்தனைக்கும் நடுவே கூடப் பயணம் செய்யும் பெண்களோடு அவ்வப்போது தன் நகைச்சுவை உணர்வைக் காட்டிப் பேசிச் சிரிப்பதிலும் பின்வாங்கவில்லை.  அந்தப் பெண்மணிகள் எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் சரி;  சேடிகளாக இருந்தாலும் சரி; பீமன் அதைக் குறித்துக் கவலை கொள்ளவில்லை.  தன் வார்த்தைகளால் அவர்களை முகம் சிவக்க வைத்தான்.  ஒரு சில பெண்கள் வெட்கம் தாங்க முடியாமல் அவர்கள் புடைவை முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு வேறுபக்கம் திரும்பிச் சிரித்தனர்.     பீமனின் இந்த உற்சாகமான மனோபாவம் அந்த ஊர்வலத்தில் பயணம் செய்த அனைவரையும் தொற்றிக் கொண்டது.  காம்பில்யத்தில் ஆரம்பித்த அந்த ஊர்வலம், கங்கைக் கரையோடு சென்று உத்கோசகத்தில் தண்டு இறங்கியது.  அங்கே தான் அவர்கள் ஆஸ்தான குரு மற்றும் அரசியலில் ஆசானாக சுயம்வரத்துக்குச் செல்லும் முன்னர் நியமிக்கப்பட்டிருந்த தௌம்ய ரிஷியின் ஆசிரமம் இருந்தது.


கங்கைக்கரையின் இருபுறமும் வசித்த நாகர்கள் மற்றும் ஆரியர்கள் மத்தியில் வாரணாவதத்தில் இறந்து போனதாகக் கருதப்பட்ட பாண்டவர்கள் உயிருடன் இருக்கும் செய்தியும், காம்பில்யத்தில் சுயம்வரத்தில் அர்ஜுனன் கலந்து கொண்டு திரௌபதியை வென்ற நிகழ்ச்சியும், பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை மணந்த செய்தியும் பரவி இருந்தமையால் அப்போது அங்கே அனைவரும் அதைக் குறித்தே பேசி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தனர். அதோடு அவர்களுடன் கிருஷ்ண வாசுதேவன் வரும் செய்தியும் பரவியதால் மக்கள் அலை அலையாக வந்து பழங்கள், பூக்கள், பால், தேன், தேங்காய்கள் போன்றவற்றைக் கிருஷ்ணனுக்குச் சமர்ப்பித்தனர்.  அவன் கால்களில் விழுந்து ஆசிகளைப் பெற்றனர்.  அவனைக் கட்டித் தழுவி மனமாரத்  திருப்தி கொண்டனர்.



பீமன் நினைத்தமாதிரியே அனைத்தும் நடந்து கொண்டிருந்தது.  ஊர்வலத்தின் முன்னிலையில் இருந்தபடியால் பலரும் அவனைத் தான் கிருஷ்ண வாசுதேவன் என நினைத்து மரியாதைகளைச் செய்ய உள்ளூரச் சிரிப்புடன் பீமன் அதை ஏற்றுக் கொள்வான்.  அவர்கள் மரியாதைகளைச் செய்து முடித்ததும், வந்திருக்கும் மக்களைப் பார்த்து இடி இடியெனச் சிரித்து அவர்கள் தவறைச் சுட்டிக்காட்டுவான் பீமன்.  தன் யானையும், தானும் செய்யும் இந்தத் தந்திரங்களை எல்லாம் ஒரு நொடிக்காகக் கூட வீணாக்காமல் அங்கே கூடி இருக்கும் கூட்டமும், மற்றும் ஊர்வலத்தில் வரும் மக்களும் இதன் மூலம் மகிழ்ச்சி அடையும்படி பார்த்துக் கொண்டான் பீமன்.


 உத்கோசகத்தில் தௌம்ய ரிஷியின் ஆசிரமம் பெரிதாக இருந்தது.  நதிக்கரையோடு பல காத தூரம் சென்றது.  பல வருடங்களாக தௌம்ய ரிஷியும், அவருடைய சீடர்களும் இங்கே ஆசிரமம் அமைத்துத் தங்கியதில் வெறும் கல்வி மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை.  காட்டுக்குள் வசித்து வந்த பல மக்களை ஆரியர்களின் வாழ்க்கை முறைக்கு மாற்றியும் வந்தனர். அவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை போதித்து, திருமண நடைமுறைகள், குடும்ப வாழ்க்கை, இல்லற தர்மம் ஆகியவற்றையும் போதித்து, மத ரீதியான சடங்குகளைக் கற்றுக் கொடுத்து அவர்களை நல்வழிப் படுத்தி வந்தனர்.  இந்த ஊர்வலம் ஆசிரமம் வந்ததும் தௌம்ய ரிஷியும், சீடர்களும் வந்திருக்கும் அரச குடும்ப விருந்தினர்களுக்காகத் தங்கள் குடில்களை ஒழித்துக் கொடுத்தனர்.  மற்றவர்கள் ஆங்காங்கே கங்கைக்கரையிலும் அடுத்திருந்த மைதானத்திலும் கூடாரங்களை அமைத்துக் கொண்டு தங்கினர்.  யானைகள், குதிரைகள் ஆகியன அவற்றைப் பராமரிப்பவரின் மேற்பார்வையிலேயே விடப்பட்டன.  மாட்டு வண்டிகளில் இருந்து மாடுகள் அவிழ்க்கப்பட்டு கங்கையில் குளிப்பாட்டப்பட்டு தீவனம் போடப் பட்டு ஓய்வில் இருந்தன.  ரதங்களை ரத சாரதிகளும், மற்றவர்களும் கங்கையில் கழுவிச் சுத்தம் செய்து மீண்டும் செல்ல வேண்டிய பயணத்துக்குத் தயார் செய்தனர்.



இத்தனைக்கும் பீமனின் அயராத உழைப்பும் ஒரு காரணம்.  அவனும் ஓய்வு எடுக்காமல் வேறு எவரையும் ஓய்வு எடுக்க விடாமலும் அவன் கடுமையாக உழைத்தான்.  தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட இந்த உத்தியோகத்தில் அவன் மகிழ்வும் அடைந்தான். இவ்வளவு வேலைகளுக்கு இடையேயும், இத்தனை பேரோடு பயணம் செய்து வந்த போதும், தாமரைப்பூப் போன்ற பாதங்களுக்குச் சொந்தக்காரியான காசி ராஜகுமாரி ஜாலந்தராவை பீமனால் மறக்கவே முடியவில்லை.  அவள் அழகான முகம் கண்ணெதிரே வந்த போதெல்லாம் பீமன் முகத்தில் விளக்கேற்றினாற் போன்றதொரு பிரகாசம். அவள் அண்ணன் சுஷர்மா இவர்களுடன் தரைவழிப் பயணம் செய்ய மறுத்து கங்கையில் படகுப் பயணத்தையே விரும்பினான்.  வேறு வழியில்லாமல் பீமனும் இதை  ஒரு சவாலாக ஏற்க நேர்ந்தது.



உத்கோசகத்தை  அவர்கள்  ஊர்வலம் நெருங்கியதும், பீமன் தன் அருமை யானையை ஓட்டிக் கொண்டு கங்கைக்கரையில் அதைக் குளிப்பாட்டும் சாக்கில் போய் நின்று கொண்டிருந்தான்.  சற்று நேரத்திலேயே அவன் எதிர்பார்த்தது நடந்தது.  அதைக் குறித்து அவனுக்கு மகிழ்ச்சியும் ஏற்பட்டது.  இரண்டு பெரிய படகுகள் கங்கையில் மிதந்து வந்தன.  அதில் அன்ன பக்ஷியைப் போல் அலங்கரித்திருந்த படகில் காசி ராஜகுமாரன் சுஷர்மாவும், அவனருகே அவன் சகோதரி ஜாலந்தராவும் அமர்ந்திருந்தனர்.  இரு படகுகளும் கங்கைக்கரையில் அந்தத் துறைக்கு வந்ததும், அங்கே நங்கூரமிட்டு நின்றன.  இதைப் பார்த்த பின்னால் வந்த பரிவாரங்களும் ஆங்காங்கே நின்றன.

Wednesday, September 24, 2014

பீமன் பயண ஏற்பாடுகளைச் செய்கிறான்!

இருவரும் துருபதனைப் பார்க்க வேண்டி அங்கிருந்து அகன்றதும் பீமன் சற்று நேரம் காசி ராஜகுமாரியையே பார்த்து அவள் தைரியத்தை நினைத்து வியந்து கொண்டிருந்தான். அவள் பாதங்கள் சிறியனவாயும், அழகாயும் தாமரை மொட்டுக்களைப் போலவும் காட்சி அளித்தன. தன்னை உலுக்கிக் கொண்டான் பீமன். ஆஹா, நான் எவ்வளவு பொல்லாதவன்!  இப்போது தான் திரௌபதியுடன் திருமணம் முடிந்திருக்கிறது.  அதை மறந்து விட்டு…… இன்னொரு பெண்ணைக் குறித்து நினைப்பது…….ஆஹா, அவள் பானுமதியின் தங்கையல்லவோ!  பானுமதி துரியோதனன் மனைவி. ஆஹா, அக்கா, தங்கைகளை நாங்கள் இருவரும் முறையே திருமணம் செய்து கொண்டிருந்தால் நல்ல வேடிக்கையாக இருந்திருக்கும்.  ஒரு பெருமூச்சுடன் பீமன் அங்கிருந்து நகர்ந்தான்.


தன் சகோதரர்களைப் பார்த்ததும், அவர்களிடம் துருபதன் தங்களுக்கு அளிக்கவிருக்கும் பரிசுகளைப் பற்றி பீமன் கூறினான்.  அனைவரும் மனம் நெகிழ்ந்தனர்.  70 யானைகள், நூறு ரதசாரதிகள், போர் வீரர்கள், 400 கறவைப் பசுக்கள், 200 குதிரைகள், அத்துடன் சேர்ந்து பராமரிப்புப் பணிக்கான ஊழியர்கள், மற்றும் படை வீரர்கள், தேவையான சாமக்கிரியைகள், தங்கம், வெள்ளி, ரத்தினங்களால் ஆன ஆபரணங்கள், தங்கக் கட்டிகள், வெள்ளியிலான பாத்திரங்கள்.  இன்னும் கணக்கில்லா சீர் வரிசைகள்.



“மிக அதிகம், மிக அதிகம்,  ஆம் உண்மையிலேயே இவை அதிகம்.” என்றான் யுதிஷ்டிரன்.  “ஆஹா, பீமா, நீ கேட்டாயா இவற்றை எல்லாம்?”


“இல்லை, இல்லை;  நான் கேட்கவே இல்லை.” அவசரம் அவசரமாக மறுத்தான் பீமன்.  “அரசர் தான் இவற்றை எல்லாம் அளித்தே தீருவேன் எனப் பிடிவாதம் பிடித்தார்;  வேறு வழியின்றி நான் ஒத்துக் கொண்டேன்.”


“வற்புறுத்தினாரா?  உண்மையாகவா?  பீமா, நீ சொல்வதெல்லாம் உண்மைதானா?”


“அண்ணாரே, என் பெரிய அண்ணாரே!  உமக்கு என்னைப் பற்றித் தெரியாதா?  நான் பிறந்ததில் இருந்து இன்று வரை ஒரு சின்னப் பொய் கூடச் சொன்னதில்லையே!” அர்ஜுனனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான் பீமன்.  “நான் சொல்வதெல்லாம் உண்மைதான்;  இல்லையென்றால் நான் சொன்னதும் அவை உண்மையாகிவிடும். என் அண்ணாவே, இப்போது புரிந்ததா?”


“அதெல்லாம் சரியப்பா!  இவ்வளவு பெரிய குழுவை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? நமக்கு எதற்கு இவ்வளவு ஆட், படைகள்?” யுதிஷ்டிரனுக்கு என்ன முயற்சித்தும் பீமனின் விளையாட்டுத் தனத்தைப் போக்கவே முடியவில்லையே என்னும் கவலையும் அதிகம் இருந்தது.  பீமனோ இன்னும் விளையாட்டாகவே பேசினான்.


“அது என்னோட ரகசியம், அண்ணாரே!  ஹஸ்தினாபுரப் பயணத்துக்குப் பாதுகாவலனாக நீங்கள் என்னை நியமித்துவிட்டீர்கள் அல்லவா?  அத்துடன் விடுங்கள்!  சுகமான பயணத்துக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணி வைத்துள்ளேன்.  நீங்கள் அவற்றைத் திரும்ப ஒருமுறை பார்க்கவேண்டிய அவசியமே இல்லை.”


“என்ன முடிவு செய்திருக்கிறாய் பீமா?”


“நாம் ஹஸ்தினாபுரத்துக்குச் செல்ல வேண்டிய வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.  யானைகள் நம் பயணத்தில் முன்னிலை வகிக்கும்.  நான் அனைவருக்கும் முன்னால் ஒரு தலைவனாகச் செல்லப் போகிறேன்.  காலாட்படை வீரர்களோடு கால்நடைகள் வரும். அதன் பின்னர் வரும் குதிரைப்படையை நகுலனின் பொறுப்பில் விட்டிருக்கிறேன்.  அவன் அதைக் கவனித்துக் கொள்வான்.  அதன் பின்னர் அதிரதர்கள், மஹாரதர்கள் அனைவரும் அர்ஜுனனின் பொறுப்பில் வருவார்கள்.  அதன் பின்னர் உயர்ந்ததொரு ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் நீரும், திரௌபதியும் புதுமணத் தம்பதிகளாகத் தொடர்வீர்கள்.  உங்களோடு சித்தப்பா விதுரரும் வருவார்.  அதன் பின்னர் மற்ற அரசர்கள், இளவரசர்கள், அவர்களின் பரிவாரங்கள் பலராமர் தலைமையில் பின் தொடர்வார்கள்.  பின்புறப் படைகள் அனைத்தும் சஹாதேவன் பொறுப்பில் இருப்பார்கள்.  ஹாஹா, சஹாதேவன் மனிதப்படைக்குப் பொறுப்பேற்பதற்குப் பதிலாகச் சீர் வரிசைகளையும் மற்றப் பொருட்களையும் சுமந்து வரும் மாட்டு வண்டிகள், ஒட்டக வண்டிகள் ஆகியவற்றைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பான்.”


“அது சரி, கிருஷ்ணன்?  அவன் என்னவானான்?  நீ அவனை மறந்தே விட்டாயே?”அர்ஜுனன் கேட்க, “ என்னவாயிற்று எனக்கு?” என்று கேட்ட வண்ணம் உள்ளே நுழைந்தான் கிருஷ்ணன். மஞ்சள் வண்ணப் பட்டுடுத்தி, தலையில் மயில் பீலியைச் சூடி இருந்த கிருஷ்ணன் வழக்கமான அமைதியான போக்குடன் நிதானமாகவே காணப்பட்டான்.  யுதிஷ்டிரன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்துப் புகார் சொல்லும் தோரணையில், “கோவிந்தா, பீமனை இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்யும்படி சொன்னேன்.  அவன் துருபதனிடம் போய்க் கொள்ளை அடித்துக் கொண்டு வந்திருக்கிறான்.  துருபதனின் படை வீரர்களில் பாதிக்கும் மேல் நம்முடன் வருகின்றனர்.  ஆனால் உன்னை மறந்துவிட்டான் பார்!”


ஆகாயத்தை நோக்கி இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்ட பீமன், “மஹாதேவா, மஹாதேவா, இந்த மக்களின் நன்றி கெட்டதனத்துக்கு ஒரு எல்லையில்லாமல் போய்விட்டது.  என் மூத்த அண்ணா உரிமையுடன் இட்ட கட்டளையை மதித்து நான் கீழ்ப்படிந்தேன்.  எல்லா ஏற்பாடுகளையும் மிக நன்றாகச் செய்திருக்கிறேன்.  ஆனால் எல்லாவற்றையும் செய்வதில் என் நேரத்தை நான் வீணாக்கிவிட்டேனோ?  கிருஷ்ணா, இதோ நீயே பார்க்கிறாயே!  என் மேல் எப்படிக்குற்றம் சாட்டுகின்றனர் என்பதைப் பார்!” எனக் கிருஷ்ணன் பக்கம் திரும்பிக் குற்றம் சாட்டும் தொனியில் கூறி முடித்தான்.


“ஆனால் நீ கிருஷ்ணனுக்கு எங்கேயும் இடம் ஒதுக்கவே இல்லையே அப்பா!” அர்ஜுனன் மீண்டும் குறை கூறினான்.  “என்னை மறந்துவிட்டானா?  ஆஹா, அரசே, வ்ருகோதரரே, இது என்ன?  நீர் என்ன செய்துவிட்டீர்?”  கிருஷ்ணன் பீமனைப் பார்த்துப் புன்னகையுடன் வினவினான்.


“ஆஹா, வ்ருகோதரனா மறப்பவன்?  அவன் யாரையும் மறக்கவே இல்லை.  அதிலும் கோபியர் கொஞ்சம் ரமணனாகிய கோபியரின் உள்ளத்தில் குடி இருப்பவன் ஆன கோவிந்தனையா மறப்பேன்?  ஒருக்காலும் இல்லை.  நான் உனக்கு ஏற்றதொரு நல்ல இடம் கொடுத்திருக்கிறேன் கோவிந்தா!  அரசர்களுக்கும், ஒட்டகங்களுக்கும் இடையில் நீ அம்மா குந்தியுடன் ஒரே ரதத்தில் வருகிறாய்.   ஏனெனில் தனித்து விடப்பட்டால் அம்மாவால் தாங்க முடியாது.  நீ ஒருத்தன் தான் அவளோடு பயணம் செய்ய உகந்தவன்.  அவள் சகோதரர்களைப் பற்றிக் கூறிக்கொண்டு வா!  ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டே பயணம் செய்வாள்.  எங்களோடு பயணம் செய்து, செய்து அவளுக்கு அலுத்துவிட்டது.  போதும், போதுமென்றாகி விட்டது.” என்றான் பீமன்.


“அதெல்லாம் சரி அப்பா!  ஆனால் ஏன் கடைசியில் போக வேண்டும்? அரசர்களுக்கு முன்னால் கம்பீரமாக ஒரு தலைவனைப் போல் வரவேண்டியவன் கிருஷ்ணன்!” அர்ஜுனன் விடாமல் கேட்டான்.


ஆனால் கிருஷ்ணனோ, “பீமன் சொல்வதே சரியென எனக்குப் படுகிறது.  நானோ ஒரு மாட்டிடையன்.  கால்நடைகளைக் கவனித்துக்கொண்டே பின்னாலேயே வந்துவிடுவேன்.”  என்றான்.


“உன்னை நீயே மட்டம் தட்டிக் கொள்ளாதே கிருஷ்ணா!  நான் உன்னைக் கடைசியில் வரச் சொன்னது உன் நன்மைக்காகவே அல்ல.  எல்லாம் என் நன்மைக்குத் தான்.”  என்றான் பீமன்.


“உன் நன்மைக்கா?” ஆச்சரியத்துடன் கேட்டான் யுதிஷ்டிரன்.  “ஆம், என் நன்மைக்குத் தான்.  ஏற்கெனவே ஆர்யவர்த்தம் முழுவதும் இந்தச் செய்தி போய் விட்டது.  என்ன தெரியுமா?  அதிசயங்களை நிகழ்த்தும் கிருஷ்ண வாசுதேவன், பாண்டவர்கள் ஐவரோடு சேர்ந்து ஹஸ்தினாபுரம் செல்கிறான் என்னும் செய்தி தான்.  வழியெங்கும் மக்கள் வெள்ளமாகக் குவிந்து கிருஷ்ணனைக் காணவேண்டித் தவிப்பார்கள்.  நம் எல்லோருக்கும் முன்னால் முதலில் கிருஷ்ணனை வைத்தோமானால் மக்கள் அனைவரும் கிருஷ்ணனைப் பார்த்து நமஸ்கரிப்பதும், கட்டி அணைப்பதும், அவனோடு பேச வருவதுமாக இருப்பார்கள்.  நம்மை எல்லாம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்.  இப்போது என்ன நடக்கும் என யோசித்துப் பார்!  அவர்கள் அனைவரும் முதலில் பார்க்கப் போவது என்னைத் தான்.  என்னைப் பார்த்துக் கிருஷ்ணன் என நினைக்கப் போகின்றனர்.  கிருஷ்ணனுக்குக் கிடைக்கவிருக்கும் மாலைகள், தேங்காய்கள் அனைத்தையும் எனக்குக் கொடுக்காவிட்டாலும் பாதியாவது கிடைக்கும்.  அதுக்கப்புறம் புதுமணத்தம்பதிகளுக்கு மிச்சத்தைக் கொடுப்பார்கள்.  வயதான குந்தியுடன் வரும் கிருஷ்ணனைக் கண்டுபிடிப்பதற்குள்ளாக நம் ஒவ்வொருத்தரையும் பார்த்துப் பாராட்டியே ஆகவேண்டும் அவர்கள் அனைவரும். “ பீமன் இளித்தான்.


“இது ரொம்ப மோசமாக இருக்கிறதே! எனக்கு இதெல்லாம் வேண்டாம்.  மக்களின் பக்திபூர்வமான இந்த மரியாதைகள் எல்லாம் கிருஷ்ணனுக்கு மட்டுமே உரியது. உனக்கில்லை.” அர்ஜுனன் கூறினான்.


“ம்ஹூம், வேறே வழியே இல்லையப்பா.  இந்த ஒரு வழியில் தான் என்னால் மக்களின் பக்திபூர்வமான மரியாதைகளைப் பெற முடியும்.  இல்லைனா என்னையா வந்து அனைவரும் பார்க்கப் போகின்றனர்?  கிருஷ்ணன் சிரித்தான்.  “அர்ஜுனா, பீமன் சரியாகவே சொல்கிறான்.  மக்கள் முதலில் தங்கள் மரியாதைகளை பீமனுக்கும், பிறகு உனக்கும் செலுத்தட்டும்.  அதன் பின்னர் புதுமணத் தம்பதிகளுக்கு.  நான் தான் எப்போதுமே சொல்வேனே!  பீமனைப் போல் புத்திசாலிகள் கிடையாது என!  அது சரிதானே பீமா?”  கிருஷ்ணன் கேட்டான். “என்னைக் குறித்தும் என் புத்திசாலித்தனம் குறித்தும் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை.  ஆனால் உங்களுக்கெல்லாம் தான் அதில் சந்தேகம் இருக்கிறது.  அதனால் தான் ஒவ்வொரு முறையும் என் அண்ணார் கஷ்டங்களில் மாட்டிக்கொள்ளும்போதெல்லாம் நான் வரைத் தப்புவித்து இழுத்துக் கொண்டு வந்து சேர்க்க வேண்டியுள்ளது.”

Saturday, September 20, 2014

துருபதனின் ஒப்புதல்! திரௌபதியின் குழப்பம்!

“ஆஹா, அருமை மாமனாரே, இதை மட்டும் உங்கள் பெண்ணின் காதில் போட்டுவிடாதீர்கள். அவள் என்னை ஒரு வளர்ந்த சிறுவன் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறாள்.  சரி, சரி, இப்போது அனைத்தும் முடிவாகிவிட்டது என நான் எண்ணுகிறேன். எங்களால் எவ்வளவு பொருட்களைக் கொண்டு செல்ல முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அத்தனை பொருட்களையும் எடுத்துச் செல்லும்படி நீங்கள் எங்களை வற்புறுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.  அப்போது தான் துரியோதனன் பொறாமையில் வெடித்துச் செத்துப் போவான்.”


“அது சரி, ஆனால் ஏன் வற்புறுத்த வேண்டும்?  நான் சந்தோஷமாகவே முழு மனதுடன் உங்களுக்கு வேண்டிய சீர் வரிசைகளைத் தருவேனே!”


“ம்ஹூம், சரியில்லை ஐயா.  நீங்கள் எங்களை வற்புறுத்த வேண்டும்.  அப்போது தான் நான் என் பெரிய அண்ணனிடம் சத்தியம் செய்ய முடியும். நான் எதுவுமே உங்களைக் கேட்கவில்லை;  நீங்களாக எல்லாவற்றையும் கொடுக்கிறீர்கள் என்று நான் சொல்வதை அவர் நம்பவேண்டும் அல்லவா? இல்லை என்றால் எங்களைப் போன்ற துறவிகள், உங்களிடமிருந்து பொருட்களைப் பெற்றுக் கொள்வது ஏற்கக் கூடியது அல்லவே!”


“ஆஹா, மிகவும் புத்திசாலித்தனமாக யோசிக்கிறீர் பீமசேனரே!  ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதும் சரியே.  நான் த்ருஷ்டத்யும்னனிடம் சொல்லி உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கும்படி ஏற்பாடுகள் செய்யச் சொல்லுகிறேன்.  ஆனால் என் படைவீரர்கள்?  தயவு செய்து அவர்களைப் பிரித்துவிடாதீர்கள்! சின்னாபின்னமாகிவிடும்.”


“ஆஹா, பிரபுவே, நான் உங்கள் பக்கம் அன்றோ இருக்கிறேன்!  இத்தகைய சிறிய விஷயங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்தாதீர்கள். அப்படி உங்கள் படை வீரர்கள் சிதறினால், உடனே ராக்ஷச அரசன் வ்ருகோதரனை அழையுங்கள்.  அவன் வந்து படை வீரர்களை ஒன்றாக்கிக் கொடுப்பான்.”



துருபதன் நிறைந்த மன மகிழ்ச்சியுடன் மீண்டும் தன் நிலையை மறந்தவனாக பீமனின் முதுகில் ஓங்கித் தட்டி உற்சாகப்படுத்தினான்.   பீமன் முழு மனநிறைவோடு அந்த அறையிலிருந்து கிளம்பினான்.  அப்போது திரௌபதி இன்னொரு அரசகுமாரியுடன் துருபதனைப் பார்த்து தன் வணக்கங்களைத் தெரிவிக்க வந்து கொண்டிருந்தாள்.  அந்த அரசகுமாரி யாரென பீமனுக்குத் தெரியவில்லை.  ஆனாலும் தன் இரு கைகளையும் அகல விரித்து அவர்கள் மேலே நடப்பதிலிருந்து அவர்களைத் தடுத்தான்.  திரௌபதிக்குக் குழப்பமாக இருந்தது.  பாஞ்சால நாட்டில் இம்மாதிரியான விளையாட்டுத் தனமான நடத்தைகள் எல்லாம் முற்றிலும் புதியவை.  அவள் அறிந்திராதவை.


அதிலும் அரண்மனையின் முக்கியக் காரியஸ்தரும், இன்னும் அரண்மனை ஊழியர்களும் புடை சூழ வருகையில் இப்படி நடந்து கொள்வதை எவரும் எதிர்பார்க்கவில்லை.  என்றாலும் ஊழியர்கள் தங்கள் நிலையை மாற்றாமல் முக பாவத்தை மாற்றாமல் இருக்க முயன்று தோற்றனர்.


“எங்களைச் செல்ல விடுங்கள், ஐயா!” திரௌபதி கெஞ்சும் குரலில் கூறியவள், “தந்தை எங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார்.” என்றாள்.


“ஓஹோ, அதெல்லாம் கவலைப்படாதே!  இப்போது தான் அவர் இந்த அருமை மருமகன் குறித்து அறிந்தார்.  அவர் முழுக்க முழுக்க என்னைப் பாராட்டிக் கொண்டிருந்தார்.  இப்போதும் அதே மனநிலையிலேயே இருப்பார்.”  இதைக் கேட்ட திரௌபதி கூட வந்த ராஜகுமாரிக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் போகவே அவள் கலகலவெனச் சிரித்தாள். பீமன் அவளையே பார்த்தான். அவன் கண்கள் வியப்பில் விரிந்தன.  சிவந்த நிறமுடைய பதினெட்டு வயது மதிக்கத் தக்கதொரு இளமங்கையை அவன் கண்டான்.  உடல் சிறு கூடாக இருந்தாலும் வடிவமாக இருந்தாள். அவள் கண்களும், உதடுகளும் தனியான நிறம் பெற்றுக் காட்சி அளித்தன.  திரௌபதியின் குழப்பத்தை ரசித்தவளாக, பீமனைப் பாராட்டும் நோக்கோடு பார்த்த வண்ணம் நின்றிருந்தாள். பீமன், தன் மனைவியைப் பார்த்து, “பாஞ்சால இளவரசியே, இந்தப் பெண்மணி யார்? “ என்று கேட்டான்.



திரௌபதி, “இவள் பெயர் ஜாலந்தரி.  காசி தேசத்து இளவரசி.  தந்தையைச் சந்தித்துத் தன் நமஸ்காரங்களைத் தெரிவிக்க விரும்புகிறாள்.” என்றாள்.


பீமன் அவளைப் பார்த்து, “நான் உங்களை இங்கே கண்டதில்லை.  எப்போது வந்தீர்கள்?” என்று புன்னகையோடு கேட்டான்.  காசி ராஜகுமாரி அதற்கு, “ நான் என் சகோதரன் சுஷர்மாவுடன் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்தேன்.”  என்றாள்.  “இவர்களும் நம்முடன் ஹஸ்தினாபுரம் வருகின்றனர்.  அவர்கள் ஓர் புண்ணிய யாத்திரைக்குக் குருக்ஷ்க்ஷேத்திரம் செல்லும் வழியில் அங்கேயும் வருகின்றனர்.” என்றாள் திரௌபதி.


“ஓ, அப்படியா?  அப்போது நம்முடன் தான் இவர்களும் வருகின்றனரா?” என்று பீமன் தனக்குள்ளே ரசிக்கும் தோரணையில் கூறினான்.  “இல்லை, இல்லை, நாங்கள் படகில் பயணம் செய்யப் போகிறோம்.”  படகுப் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் தொனியில் காசி ராஜகுமாரி கூறினாள். அதை அவள் கூறிய தொனியில் சிலிர்ப்போடு கூடிய மகிழ்ச்சியும் தெரிந்தது.  “ஹஸ்தினாபுரத்தில் தங்கப் போகின்றீர்களா?” என்று பீமன் அவளிடம் கேட்டான்.  “ம்ம்ம் சில நாட்கள் தங்குவார்கள் என நினைக்கிறேன்.  உங்களுக்குத் தெரியுமா?  இவள் துரியோதனன் மனைவி பானுமதியின் சகோதரி. “ என்றாள்  திரௌபதி.


பீமனுக்கு இந்த விஷயம் புதிதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது.  “திரௌபதி, இவர்களை நம்முடன் வரும்படி சொல்லேன்!” என்று அவளிடம் கேட்டான்.  திரௌபதி பீமனைக் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்தாள்.  ஆனால் காசி ராஜகுமாரியோ, “இல்லை, இல்லை, என் சகோதரன் படகுப் பயணத்தையே விரும்புகிறான்.” என்றாள்.  “ஓஹோ, உங்கள் தமையனார் படகுப் பயணத்தையே விரும்புகிறாரா? மாறாக எங்களுடன் பயணம் செய்தால் அது துரியோதனனை அவமதிக்கிறாப்போல் ஆகிவிடும் இல்லையா? “பீமன் வாய்விட்டுச் சிரித்தான். “ம்ம்ம்ம் கங்கா மாதா அனைவரையும் தன்னைக் கடந்து செல்ல இடம் அளிப்பாள், பார்க்கலாம்.” என்ற பீமன் மூளையில் ஏதோ புதியதோர் எண்ணம் தோன்றியது.  அவன் கண்கள் பளிச்சிட, “பார்க்கலாம்!” என்று மீண்டும் உள்ளூரச் சிரித்த வண்ணம் கூறினான்.


“ஓ, நீங்கள் தான் ராக்ஷச அரசர் வ்ருகோதரனா?  நிஜமாகவே ராக்ஷசர்களின் உலகை நீங்கள் ஆண்டீர்களா?” காசி ராஜகுமாரி அவனை நேருக்கு நேர் பார்த்து தைரியமாகக் கேட்டாள்.  “ஓ, நான் தான் அது!” பணிவோடு சொன்னான் பீமன்.  “நீங்களும் மனிதர்களை வெட்டிச் சாப்பிடுவீர்களா?” பயம் கலந்த ஆச்சரியத்தோடு காசி ராஜகுமாரி கேட்டாள்.  பீமன் ஒரு ராக்ஷசன் போல் தன் கண்களை உருட்டி விழித்த வண்ணம் நாக்கையும் நீட்டிக் கொண்டு, “நான் எப்போதும் அழகிய பெண்களை, குறிப்பாக இளவரசிகளை என் இரவு உணவாக உண்பேன்.” என்றான்.  காசி ராஜகுமாரி சந்தோஷத்தில் “க்ரீச்சி”ட்டுக் கொண்டு குதித்தாள்.  அரண்மனைக் காரியஸ்தருக்கும் மற்ற ஊழியர்களுக்கும் கூடச் சிரிப்பை அடக்க முடியவில்லை.  திரௌபதி அங்கிருப்பதையும் மறந்து அவர்களும் சிரித்துவிட்டனர்.


திரௌபதி தன் கைகளை உயர்த்தி அதை அடக்கினாள்.  பீமனைப் பார்த்து, “பிரபுவே, பிரபுவே, தந்தையின் காதுகளில் விழுந்துவிடப் போகிறது. “ என்று இறைஞ்சினாள்.  தந்தையின் அறைப்பக்கம் தன் திருஷ்டியைத் திருப்பினாள். தன் தந்தை அறையின் உள்ளே சிம்மாதனத்தில் அமர்ந்திருப்பார் என அவள் நினைத்திருந்தாள்.  ஆனால் குழப்பத்தில் துருபதன் அறை வாசலிலேயே நின்ற வண்ணம் பீமனின் பேச்சுக்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்ததை அவளால் உடனே கவனிக்க முடியவில்லை.  பின்னர் கூர்ந்து பார்த்துக் கண்டுபிடித்தவள், “ஆஹா, அதோ தந்தையே நிற்கிறாரே!” என்று கலவரத்துடன் கூற திரும்பிப் பார்த்த பீமன் துருபதனைப் பார்த்துச் சிரித்த வண்ணம் இரு அரசகுமாரிகளையும் அங்கிருந்து செல்ல வழி விட்டு நின்றான்.

Thursday, September 18, 2014

பீமனின் ஆராய்ச்சி!

“ஓஹோ, அப்படியா விஷயம்?  அவை உமக்குக் கிடைக்கவில்லை எனில்?”


“சாத்தியமே இல்லை.  மக்கள் கொடுக்கும் அனைத்தையும்  நான் ஏற்கவேண்டும் என்றே அவர்கள் வற்புறுத்துகின்றனர்.  நீங்களும் அவ்வாறே வற்புறுத்துவீர்கள்;  அதிலும் இந்த ஹஸ்தினாபுரப் பயணத்தில் என்ன பணயம் காத்திருக்கிறது உங்களுக்கு எனத் தெரிய வந்தால் விட மாட்டீர்கள்!”


“என்னிடம் பணயமா?” சுற்றி வளைத்து பீமன் கேட்க விரும்புவதைப் புரிந்து கொண்ட துருபதனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.  நீங்கள் ஒரு பெரிய மஹாராஜா என்னும் உங்களைக் குறித்த நன்மதிப்பே இப்போது பணயம் வைக்கப்பட்டிருக்கிறதாக்கும்.  நான் தான் அதைக் கவனித்துச் சரி செய்ய வேண்டும்.”  இதைச் சொன்ன பீமன் இப்போது ஒரு வயதானவன் கூறும் தீர்ப்பைப் போலத் தன் கருத்தை மாறுபட்ட தொனியில் சொல்ல ஆரம்பித்தான். “பிரபுவே, உங்களைக் குறித்து என்ன சொல்வார்கள், தெரியுமா? ஒரு பெரிய மஹாராஜா, செல்வத்தில் செழித்தவன், மிகப் பெருந்தன்மையுள்ளவன், ஒரு நல்ல தந்தை, துரோணருக்கு எதிரியாகச் சிறப்புப் பெற்றவன். இப்போது இந்த அரசன், பாண்டவர்கள் ஐவரின் மாமனார். அதிலும் ஹஸ்தினாபுர  சாம்ராஜ்யத்தின் வருங்காலச் சக்கரவர்த்திக்கு மாமனார்.  இப்படிப் பெருமைகள் நிறைந்தவன் தன் மருமகன்கள் தங்களோடு யானைகள், குதிரைகள், ரதங்கள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் எடுத்துச் செல்லும்படி அவர்களை வற்புறுத்தவில்லையாமே! ஹூம், இப்படியும் ஒரு கஞ்சமாஹாப் பிரபு!”


துருபதன் வாய்விட்டு மனம் விட்டுச் சிரித்தான். “நீங்கள் மிகவும் கெட்டிக்காரர், பீமசேனரே! அதோடு தைரியமும் நிரம்பியவர்.”


“அதெல்லாம் தைரியம் இல்லை பிரபுவே!  நான் ரொம்பவே அடக்கமானவனாக்கும்.  உங்களிடம் மட்டும் தான் இப்படிப் பேசுகிறேன்.  ஏனெனில் உங்கள் நன்மதிப்பை நன்கு அறிந்திருக்கிறேன்.  இத்தகைய பெருமை மிகவும் அபூர்வமாகவே இருக்கும் என்பதால். “


“வ்ருகோதரா, புதிர் போட்டுப் பேசாதீர்!  உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படையாக என்னிடம் சொல்லுங்கள்.” பீமன் பேசும் முறையை துருபதன் மிகவும் ரசித்தான்.  “ஆஹா, பிரபுவே, எங்கள் அண்ணா உங்களை எதுவுமே கேட்கக் கூடாது எனச் சொல்லி இருப்பதாக ஏற்கெனவே கூறினேன் அல்லவா? நீங்களே உங்கள் மருமகன்களுக்கு என்ன கொடுக்க வேண்டும்; எதைக் கொடுக்கலாம்;  எவை சிறப்பானவை என்பதை முடிவு செய்யுங்கள்.  உங்கள் மருமகன்கள் போட்டியில் வென்று சிறப்பான பரிசுகளைப் பெற்று ஒரு வெற்றியாளராகப் போனால் நல்லதா?  அல்லது திருதராஷ்டிரனின் கைச் சோற்றை எதிர்பார்த்துக் கொண்டு அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் அடிமையாகச் செல்வதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் மன்னா!”


துருபதன் மீண்டும் வாய்விட்டுச் சிரித்தான். “யார் உங்களுக்கு இவ்வளவு அழகாகப் பேசச் சொல்லிக் கொடுத்தது?” என்றும் கேட்டான்.  “கற்றுக் கொடுத்தார்களா?  மஹாதேவா!  யாருமே எனக்கு எதுவுமே கற்றுக் கொடுக்கவில்லை.  அதிலும் பேசக் கற்றுக் கொடுக்கவில்லை.  இது என்னோடு உடன் பிறந்த கலை மன்னா!  இறைவன் அளித்த பரிசு.  உங்களுடைய மருமகனாக, இந்த ஹஸ்தினாபுரப் பயணத்தை நான் தலைமை தாங்கிச் செல்கையில் அங்கே ஹஸ்தினாபுரத்தில் துரியோதனனின் கண்கள் பொறாமையால் சிவக்க வேண்டும்.  மனம் கொதிப்பில் வெந்து போக வேண்டும்.”


மீண்டும் சிரித்த துருபதன், “ சரி, சரி, அப்படியே ஆகட்டும்,  உம் வழிக்கே நான் வருகிறேன்.  நீர் என் நிலையில் இருந்தீரானால், அதாவது நீர் மாமனாராக இருந்தாயெனில் உம்  மருமகன்களுக்கு என்ன பரிசுகளை அளிப்பீர்?”


“நான்  அதை  என் மனதில் யோசித்து அறிந்து கொள்ள வேண்டும்.  பிரபுவே, உங்களுக்கு மூன்று மகன்களும், ஐந்து மருமகன்களும் உள்ளனர்.  உங்கள் இடத்தில் நான் இருந்தால்  ஒருவேளை இந்த சாம்ராஜ்யத்தை அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துவிடுவேன்.  ஆனால் இந்த வழி உங்களுக்குப் பொருந்தாது என்பதையும் அறிவேன்.   ஏனெனில் உங்கள் மகன்கள் மூவரும் உங்களைப் “புத்” என்னும் நரகத்திலிருந்து மீட்பவர்கள்; அதே சமயம் உங்கள் மருமகன்களான நாங்கள் உங்களை நரகத்தில் தள்ளினாலும் தள்ளுவோம். “ ஏதோ ஞானம் பெற்றவனைப் போல, “சும்மாவா சொன்னார்கள்; ஒரு மருமகன் பத்தாவது கிரஹத்திற்குச் சமம் என!  கபடும், வஞ்சனையும் நிறைந்தவர்களும் கூட!”


“மஹாதேவா! நீர் ஓர் அற்புதமான மருமகன். உங்கள் செல்வாக்கில் எவ்வளவு கபடம், சூது உள்ளது என்பதை  எனக்குச் சொல்லுங்கள்!” துருபதனும் இப்போது இந்த வேடிக்கைப் பேச்சில் முழு மனதாகக் கலந்து கொண்டான்.  “நான் நன்மைகளை மட்டுமே கொடுக்கும் ஒரு கிரஹம், பிரபுவே.  அதனால் தான் உங்கள் மகள் ஹஸ்தினாபுரத்தில் நுழையும்போது, இந்த சாம்ராஜ்யத்தின் வருங்காலப் பட்டமஹிஷி வந்து விட்டாள் என்பதை துரியோதனன் புரிந்து கொள்ளவேண்டும் . அது தான் என் நோக்கம்.” என்று எவரையும் சுட்டாமல் பொதுவாகச் சொன்னான் பீமன்.


“ஆஹா, நீர் எப்போதும் துரியோதனன் என்ன நினைப்பான் என்னும் எண்ணத்திலேயே இருக்கிறீர் போலும்!”


“ஆம், ஐயா, உங்களுக்கு என் அருமையான, அன்பான சகோதரனைக் குறித்து எதுவும் தெரியாது.  நாம் அனைவருமே எப்படிக் காற்றைச் சுவாசிக்கிறோமோ அப்படியே அவர் எங்களிடம் உள்ள பொறாமையைச் சுவாசித்துக் கொண்டு அதிலேயே வாழ்ந்து வருகிறார்.  ஒரு சமயம் நான் கூட நினைத்தேன். என் ராக்ஷசி மனைவி ஹிடும்பியை ஹஸ்தினாபுரம் அழைத்து வந்துவிடலாமோ எனத் தோன்றியது. அவளைப் பார்த்தாலே துரியோதனன் பொறாமையில் வெந்து சாம்பலாகிவிடுவான்.  ஏனெனில் அவன் என்னுடன் எத்தனையோ போட்டிகளில் போட்டி போட்டிருக்கிறான்.  எத்தனையோ விஷயங்களில் போட்டி போடுவான்.  ஆனால் ஒரு ராக்ஷசியைக் கல்யாணம் செய்து கொள்வது குறித்து அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  அவளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என அவன் யோசித்து முடிப்பதற்குள்ளாக அவள் அவனைக் கொன்று தின்று விடுவாள்.” சர்வ அலட்சியமாகச் சொன்னான் பீமன்,


“ஆஹா, அப்படி என்றால் ஹிடும்பியை ஒரு போதும் ஹஸ்தினாபுரம் அழைத்து வந்துவிடாதீர் !  என் அருமை மகள் கிருஷ்ணா அந்த அதிர்ச்சியிலேயே உயிரை விட்டுவிடப் போகிறாள்.” அடக்க முடியாமல் சிரித்த வண்ணம் துருபதன் இதைக் கூறினான்.



“மன்னா, உங்களுக்குப் பெண்களைக் குறித்து நன்கு தெரியும் அல்லவா? ஆ, அவர்கள் எப்போதும் நம்மை மதிக்கவேண்டும்;  நம்மிடம் ஒரு மதிப்பு இருக்க வேண்டும்.  ஆகவே இப்படி ஏதானும் ஒன்றை நாம் நம் கையில் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.  அப்போது தான் இந்தப் பெண்கள் நம்மை மதிப்பார்கள். லக்ஷியம் செய்வார்கள். உங்கள் மகள் மட்டும் என்னிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை எனில் நான் ஹிடும்பியைக் கொண்டு வந்துவிடுவேன்.”


தன்னுடைய கம்பீரத்தையும் வழக்கமான கடுகடுப்பான போக்கையை விட்டுத் தன்னை மறந்த நிலையில் துருபதன் பீமன் முதுகில் விளையாட்டாக ஓங்கித் தட்டினான்.  “பொல்லாத மனிதன்!  பெண்களைக் குறித்து அலசி ஆராய்ந்து அறிந்து கொண்டிருக்கிறீர் போல் தெரிகிறதே!”  என்றான்