Wednesday, March 2, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!


“நாம் அனைவருமே மூவுலகங்களிலும் பாதுகாத்துக் கடைப்பிடிக்கப் படும் தர்மத்தைப் பின்பற்றி வாழ்கிறோம் அல்லவா?நம் ஆர்ய வர்த்தத்தினருக்கு சநாதன தர்மமே முக்கியம் அலல்வா? ” என்றான் கண்ணன்.

“ நீ நினைப்பதை, நீ செய்ய விரும்புவதை அரசன் உக்ரசேனன் செய்யவேண்டுமென்று நீ விரும்புகிறாய் கண்ணா!” குற்றம் சாட்டும் குரலில் கூறினான் சாத்யகி. மற்றவர்களுக்குக் கண்ணனின் தெளிவான பேச்சைக் கேட்டதும் அவனை வேறு எவ்வகையில் எதிர்ப்பது என்று புரியவில்லை.
“ஆஹா, நானா? நான் அப்படி எதுவும் செய்வதில்லை, சத்ராஜித், என்னிடம் கேட்டாலொழிய நான் வாயே திறப்பதில்லை. என் ஆலோசனைகளைக் கேட்பதும், கேட்காததும், மன்னனின் விருப்பம், யாதவ குலத்தின் மற்றப் பெரியவர்களின் விருப்பம். என்னைக் கேட்கும்போது நான் எனக்குத் தெரிந்த உண்மைகளை மட்டுமே கூறுகிறேன்.”

“ஆனால் நீ ஒரு யுத்தத்திற்கு அனைவரையும் தயார் செய்து கொண்டிருக்கிறாய். பார்க்கையிலேயே தெரிகிறதே!” என்றான் சாத்யகி. அதற்குள்ளாக பத்ரகன் ஏளனமாய், “உன் நோக்கம் என்னவோ அதை எங்களுக்குத்தெரியாமல் ரகசியமாய் வைத்திருக்கிறாய் அல்லவா? எங்களை என்ன சின்னக் குழந்தைகள் என எண்ணிவிட்டாயோ?” என்று சீறினான். பத்ரகனின் குற்றம் சாட்டும் தொனியை அலக்ஷியம் செய்த கண்ணன், “என்னிடம் எந்த ரகசியமும் இல்லை/” என்றான். மேலும், “ஜராசந்தனின் அதர்மத்தின் மொத்த வடிவம். அவன் தன்னுடைய வலிமையால் இந்த ஆர்யவர்த்தத்தின் அனைத்து அரசர்களையும் தன் சொற்படி கேட்டு நடந்து கொள்ள வற்புறுத்தினான். மீறினவர்கள் ராஜ்யம் பறிக்கப்பட்டது. மேலும் அவன் மதுராவை அழித்துவிடுவதாய் சபதம் எடுத்திருக்கிறான். நாம் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்தால் அவனை முறியடிக்கலாம். அவனை எதிர்கொள்ள எப்போது வேண்டுமானாலும் நாம் தயாராய் இருந்தாகவேண்டும்.” என்று எதிர்பார்ப்புடன் கூறினான் கண்ணன்.

“ஆஹா, உன் அண்ணன் பலராமன் அவனைக் கொல்ல இருந்தானாமே? அதான் சொல்கின்றனரே கதை கதையாய்! நீ தான் ஜராசந்தனைத் தப்பிச் செல்லவிட்டாயாமே? ஏன் அப்படிச் செய்தாய்? அன்றே அவனை அழித்திருக்கலாமே?” உத்யோதன் என்பவன் கேட்ட குரலில் அவநம்பிக்கையும் கேலியும் தொனித்தது.

“ஓ, அது ஒன்றுமில்லை, தாய்மண்ணின் மீதிருந்த பாசமே காரணம். வேறு எதுவுமில்லை. நானோ, பலராமனோ அந்தச் சமயம் கோமந்தக மலையின் யுத்தத்தின் போது ஜராசந்தனைக் கொன்றிருந்தால் அவனுடைய ஆட்கள் அனைவரும் பாதுகாப்பும், சரியான தலைமையும், எந்தவித முன்னேற்பாடும் இன்றி இருந்த மதுராவுக்குள் புகுந்து தாக்கி, மக்களை அடிமைப்படுத்தி மதுராவையும் தங்கள் வசம் கொண்டு வந்திருப்பார்கள். மதுராவைப் பலப்படுத்தாமல் ஜராசந்தனைத் தாக்குவதில் அர்த்தமில்லை.” என்றான் கண்ணன்.

அதைக் கேட்ட மற்றொருவன், “ கண்ணா, நீதான் கடவுளாயிற்றே? ஏனப்பா நீ இந்திரனின் வஜ்ராயுத்த்தைப் பெற்று அதன் மூலம் ஜராசந்தனை நிர்மூலம் செய்திருக்கலாமே? அப்படி ஏன் செய்யவில்லை?” கேட்டதோடு அல்லாமல் பெருங்குரலில் சிரிக்க மற்றவர்களும் உடன் சிரித்தனர். “ நிறுத்துங்கள் உங்கள் பரிகாசப் பேச்சுக்களை.” சாத்யகி கூறினான். அவனுக்குப் பேச்சு திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறது சிறிதும் பிடிக்கவில்லை. கண்ணனின் உள் நோக்கம் குறித்த புதியதொரு பரிமாணம் அவனுக்குள் பிடிபட்டது போலும். “கண்ணா, வாசுதேவா, நீ உண்மையாகவே எங்களை ஒரு மாபெரும் யுத்தத்திற்குத் தயாராக இருக்கவேண்டுமென்று விரும்புகிறாயா?”

“ஆம், சத்ராஜித், ஒரு போர், ஆனால் நம் மேல் வலியத் திணிக்கப்பட்டால் மட்டுமே போர் செய்வோம்.” என்றான் கண்ணன். “அது தேவையென நீ நினைக்கிறாயா வாசுதேவ கிருஷ்ணா?” சாத்யகி கேட்க, கிருஷ்ணன், “ஜராசந்தனைப் பற்றி நீ நன்கு அறிந்திருந்தாயெனில் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கமாட்டாய் சாத்யகி. அவனுக்கு நாம் அடிமைகளாக மாறினால் ஒழிய இது தவிர்க்க முடியாததொரு யுத்தம். வேறு வழியே இல்லை!” என்றான் கண்ணன்.

“சரி, கிருஷ்ணா, நாங்கள் உன்னுடனேயே இருப்போம். ஜராசந்தன் யுத்தம் செய்ய விரும்பினானெனில் அவ்வாறே அவனுடன் யுத்தம் செய்யலாம். ஆனால் நீ மட்டும் உண்மையாக நடக்கவேண்டும். வெளிப்படையாகப் பேசவேண்டும். “ கண்ணனின் மனம் திறந்த பேச்சுக்களால் கவரப்பட்டான் சாத்யகி.

“ மேன்மை பொருந்திய சாத்யகனின் மகனே, நான் வேறு எவ்விதம் உன்னிடம் இருப்பேன்? வெளிப்படையாகத் தான் இருப்பேன்.” என்றான் கண்ணன்.

“எனில் நீ ஏன் உக்ரசேன மஹாராஜாவை ப்ருஹத்பாலன் யுவராஜாவாக ஆக்குவதில் இருந்து தடுத்துக்கொண்டிருக்கிறாய்?” கடைசியில் தான் எண்ணியதைக் கேட்டே விட்டான் சாத்யகி.

“நான் எப்போதும், எவ்வகையிலும், இது குறித்து உக்ரசேனமஹாராஜாவிடம் விவாதித்ததே இல்லை சாத்யகி. என்னை நீ நம்பவேண்டும். இது உக்ரசேனரின் சொந்த முடிவு. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர் மனதுக்கு எது உகந்ததோ, இந்த மதுராவிற்கு எது நன்மையோ அதை அவர் செய்ய முழு சுதந்திரம் உடையவர். என் மூத்த சகோதரர் ஆன ப்ருஹத்பாலன் யுவராஜா ஆவதில் எனக்கும் முழு சம்மதமே! நான் அதில் சந்தோஷமும் அடைவேன். ஆனால்………”

“ஆனால்?? ஆனால் என்ன?” இடை மறித்தான் ப்ருஹத்பாலன். இந்தக் கண்ணன் உள்ளூர ஏதோ சூது செய்தே வருகிறான். ஆனால் கண்ணனோ, அவனைப் பார்த்துத் தெள்ளத் தெளிவாய், “ஆனால் …… நீ தர்மத்திலிருந்து பிறழக் கூடாது. நீ தர்மத்தின் பாதையிலே மட்டுமே செல்லவேண்டும்.” என்று முடித்தான்.

“எனில் அவன் பொறுப்புக்களை எடுத்துக்கொள்ளாமல் பெயருக்கு மட்டுமா யுவராஜாவாய் இருக்கவேண்டும்?” விராடன் சீறினான்.

“அப்படி அல்ல விராடனே! அவன் தர்மத்தின் பாதையிலிருந்து சற்றும் பிறழாமல் தன் பொறுப்புக்களைச் சரிவர நிறைவேற்றுவதை நாம் கவனிக்கவேண்டும். அவனுக்கு உறுதுணையாக இருந்து அவனுக்குத் தேவைப்படும் சமயம் அவன் கடமைகளை நிறைவேற்ற நம் உயிரைக்கொடுக்கவேண்டும் என்றாலும் அதற்கும் நாம் தயாராக இருத்தல் வேண்டும்.” கண்ணன் குரலே மணி ஓசை போல் லயத்தோடு கேட்டது. அதற்குள் சாத்யகி, கர்வம் பொங்க, “நீ ப்ருஹத்பாலன் யுவராஜா ஆனால் அவனுக்கு உறுதுணையாக இருப்பாயா என்பதை மட்டும் சொல்!” என அதிகாரமாய்க் கேட்டான்.

சற்று நேரம் அமைதியோடும், இளநகை பொங்க சாத்யகியையே பார்த்தான் கண்ணன். அனைவரும் மூச்சுவிடக் கூட மறந்து, கண்ணனைச் சொற்களால் தாங்கள் தாக்க நினைத்திருந்ததையும், தேவைப்பட்டால் ஆயுதப் பிரயோகம் செய்யவேண்டும் என்று இருந்ததையும் மறந்து அவன் சொல்லப் போகும் வார்த்தைகளுக்குக் காத்திருந்தனர்.

கண்ணன் ப்ருஹத்பாலனை நேருக்கு நேர் பார்த்து , “சகோதரரே, நான் உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன். நீர் தர்மத்தின் பக்கமே நின்றீரானால், நானும் உமக்கு உறுதுணையாக எப்போதும் உடன் இருப்பேன். அதுபோல் இங்கிருக்கும் மற்ற சகோதரர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். ப்ருஹத்பாலன் தர்மத்திலிருந்து பிறழாமல் இருந்தானெனில் அவனுக்கு உறுதுணையாகத் தோளோடு தோள் கொடுப்போம் நாம் அனைவருமே. இது சத்தியம்!” அனைவருமே தன் மேல் பாயத் தயாராக வைத்திருந்த ஆயுதங்களைக் கண்டு கண்ணன் சிரித்துக்கொண்டு, “உங்கள் கத்திகளையும், வாட்களையும், வில், அம்புகளையும் கூர்தீட்டித் தயாராக வைத்திருங்கள். நாம் அனைவருமே ஒன்றாக ஜராசந்தனை எதிர்க்கப் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை!” என்றான்.

நிராயுதபாணியான கண்ணன் தன் கைகளை உயர்த்திய வண்ணம், “வெற்றி நமதே!” என்று கோஷமிட்டான். அனைவருக்கும் கண்ணனின் உணர்வுப் பிரவாகம் உடலில் பாய, அனைவரும் கண்ணன் மேல் பாய இருந்த தங்கள் ஆயுதங்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, “வெற்றி நமதே!” என்று ஒரே குரலில் கோஷமிட்டனர்.
சாத்யகி கண்ணனைத் தன் நெஞ்சார அணைத்துக்கொண்டு, “சாது, சாது” என்று கோஷமிடச் சுற்றி இருந்த அனைவரும் அதை ஆமோதித்தனர். ப்ருஹத்பாலனைத் தவிர அனைவருக்கும் கண்ணன் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. ப்ருஹத்பாலன் இப்படியான ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை. என்ன செய்வதென்று அவன் தீர்மானிப்பதற்குள்ளாக, கண்ணன் குனிந்து அவனை நமஸ்கரித்து அவன் பாத்தூளியைத் தன் நெற்றியிலே வைத்துக்கொண்டு, அங்கிருந்த மற்றவர்கள் அனைவரையும் பார்த்துத் தன் கைகளைக் கூப்பி வணங்கிவிட்டு மின்னலைப் போல் மறைந்தான்.


டிஸ்கி: மீண்டும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். திரு கே.எம்.முன்ஷி அவர்கள் எழுதிய கிருஷ்ணாவதாரைப் படித்துவிட்டு அதில் இருந்தே இவை எல்லாம் எனக்குத் தெரிந்தவரையிலும் எழுதி வருகிறேன்.

2 comments:

priya.r said...

48 வது அத்தியாயத்தையும் படித்து முடித்து விட்டேன்.

கண்ணன் தனது எதிரியாய் நினைப்பவர்களையும் தனது கருணையால் எப்படி அரவணைத்து
கொள்கிறான் என்பதை சொல்லியதற்கு நன்றி கீதாம்மா

sambasivam6geetha said...

நன்றி ப்ரியா, இது நமக்கும் ஒரு பாடம் இல்லையா?