Thursday, March 10, 2011

கண்ணன்வருவான் கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

ப்ருஹத்பாலன் சபை கலைந்ததும் தன்னுடைய தாயாரைத் தேடிக்கொண்டு சென்றான். அவளும் சபையில் நடந்தவைகளை நடந்தபடியே தெரிந்துகொள்ள ஆவலாய்க் காத்திருந்தாள். ப்ருஹத்பாலன் அந்தப்புரத்துக்குள் நுழையும்போதே மிகவும் கோபத்துடன் நுழைந்தான். “அம்மா, நமஸ்காரங்கள். அந்த இடையன் ஒரு சூழ்ச்சி வலையை அழகாய்ப் பின்னிவிட்டான். ஒரு சிக்கலில் நம்மை மாட்டிவிட்டான்.” என்றான். “என்ன நடந்தது?” என்றாள் கம்சா. “ம்ம்ம், அவன் என்னை எப்படி ஒழித்துக்கட்டுவது என்று ஒரு வழியை யோசித்துச் சொல்லி இருக்கிறான்.” என்று துக்கம் பொங்கக் கூறிய ப்ருஹத்பாலன், சபையில் நடந்தவைகளைக் கம்சாவிடம் விவரித்தான்.


“அம்மா, அந்தக் கிருஷ்ணன் ரொம்பச் சாமர்த்தியசாலி! என்னை யுவராஜா பதவிக்குப் பரிந்துரைத்தான். அதனால் அவன் பெருந்தன்மையானவன் என நினையாதே! அதன் பின்னர் நான் ஜராசந்தனோடும், அவன் படைவீரர்களோடும் போரிட்டு என் நிலையை ஸ்தாபிதம் செய்து கொள்ளவேண்டும். என்ன ஒரு நீதிவான், நேர்மையானவன் பார்த்தாயா? தேவைப்பட்டால் அவன் என் உதவிக்கு வருவானாம். வந்து அத்தனை புகழையும், பெருமையையும் அவன் தூக்கிக்கொண்டு போவான்! சுயநலக்காரன்!” கோபம் பொங்கியது ப்ருஹத்பாலனுக்கு.

கம்சா ஒரு இளநகையோடு தன் அருமை மகன் பேசுவதைக் கேட்டுக்கொண்டாள். “என் மதிப்பிற்குரிய தந்தையார் உன்னை யுவராஜாவாக ஆக்கவேண்டும் என்ற வேண்டுகோளுக்கு என்ன பதில்கொடுத்தார்?” என்று கேட்டாள். “ஓ. கண்ணன் சொன்னதை அவர் ஒத்துக்கொண்டார். ஏனெனில் நான் விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மிணியின் சுயம்வரத்திற்கு நமக்கு அழைப்பு இல்லை. ஏனெனில் இங்கே அரசனோ வயதானவர். வேறு இளவரசர்கள் எவரும் இல்லை. ஆகையால் என்னை யுவராஜாவாகப் பட்டம் சூட்டிவிட்டுப் பின்னர் சுயம்வரத்திற்கு அழைப்பு இல்லை என்றாலும் நான் போய் மணப்பெண்ணைத் தூக்கிவரவேண்டும். அல்லது அங்கே சண்டையிட்டுப் பெண்ணை அடையவேண்டும் என்பதில் அவருக்கு முழு சம்மதமே!” என்றான் சோகத்தோடு.

சற்று நேரம் அமைதியாக யோசித்த கம்சா, “இதிலிருந்து தப்புவதற்கு வழி கண்டுபிடிப்பது கடினமாய் இருக்கும் போல் தெரிகிறது.” என்றாள். தனக்கும், தன் மக்களுக்கும் இழைக்கப்பட்டு வரும் அநீதி மேன்மேலும் வளர்ந்து தான் வருகின்றது. குறையவே இல்லை என்ற எண்ணமும் ஏற்பட்டது அவளுக்கு. “நீ யுவராஜாவாக ஆவதற்கு ஒத்துக்கொண்டாயானால் உன் இறுதி முடிவை நீயே தேடிக்கொண்டவனாவாய். ஒத்துக்கொள்ளாவிட்டாலோ, இத்தனை நாட்கள் எதற்காக நாம் பாடுபட்டுக் கொண்டிருந்தோமோ அதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.” கம்சா தன் மகனுக்குச் சொல்வதை விடத் தனக்குத் தானே பேசிக்கொண்டாளோ என்னும்படிக்கு மெதுவான குரலில் பேசினாள்.


“அனைவர் கண்களுக்கும் நான் ஒரு கோழையாகத் தெரிவேன். அந்த சாத்யகி, முட்டாள் அம்மா அவன், ஏதோ வீரமாகச் செய்கிறோம் என்ற நினைப்பு அவனுக்கு. கண்ணனின் இந்த யோசனையைக் கேட்டதும் கிடந்து குதிக்கிறான். தானே இதற்கெல்லாம் ஒரு கதாநாயகனாக இருக்கமாட்டோமா என்ற நினைப்பும் கூட அவனுக்கு. அவனுக்கென்ன?? வீரம் என்ற பெயரில் எதையோ செய்யவேண்டும்! அதனால் பின் விளைவுகள் நம் உயிராய் இருந்தாலும் கவலைப்பட மாட்டான் போல் தெரிகிறது. “


“ஓ, நீ கவலைப்படாதே, குழந்தாய்! நான் யோசிக்கிறேன். இதற்கு ஒரு வழி கண்டே ஆகவேண்டும். என்னை யோசிக்க விடு.” என்றாள் கம்சா. ப்ருஹத்பாலன் அடுத்துத் தன் மனைவியும் ப்ரத்யோதாவின் மகளுமான விஷாகாவிடம் சென்று தன் துரதிர்ஷ்டமான நிலையைக் குறித்துக் கூறினான். உடனடியாக விஷாகா கண்ணீர் பெருக்கெடுக்கத் துன்பம் அடைவாள் என்றும் எதிர்பார்த்தான். கண்ணன் எவ்வளவு தந்திரமாய்த் தன்னை ஒரு மாபெரும் சிக்கலில் மாட்டிவிட்டுவிட்டான் என்பதை நயம்பட அவளுக்கு எடுத்து உரைத்தான். ஆனால் அவளோ, ப்ருஹத்பாலன் தன் வீரத்தைக் காட்ட நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்த்தாகவே எண்ணினாள். யாதவத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற இது ஒரு நல்ல சந்தர்ப்பம் எனவும், இதன் மூலம் அரசகுமாரிகள் அவர்கள் விருப்பமில்லாமல் சுயம்வரம் என்ற பெயரில் பிடிக்காத மணமகனுக்கு மாலையிடுவதை நிரந்தரமாய் ஒடுக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்தாள். மேலும் முன்னைப் பரம்பொருளுக்கும் மூத்த பரம்பொருளான அந்த ஸ்ரீமஹாதேவரே இத்தகையதொரு அருமையான சந்தர்ப்பத்தை ப்ருஹத்பாலனுக்கு அளித்திருப்பதாயும், இதன் மூலம் தான் எத்தகையதொரு அஞ்சாநெஞ்சன், வீரன் என்றெல்லாம் ப்ருஹத்பாலன் அனைவருக்கும் தெரிவிக்க முடியும் எனத் தான் நம்புவதாயும் கூறினாள். நூற்றிலொருவருக்கே இத்தகைய சந்தர்ப்பம் அளிக்கப் படும் என்றும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் ப்ருஹத்பாலனுக்குச் சொன்னாள். மேலும், “கண்ணன், பலராமன், உத்தவன் மூவரும் உதவிக்கு வருகின்றார் என்றீர்களே! அப்போது நிச்சயம் வெற்றி உமக்குத் தான் இளவரசே!” என்று மகிழ்வோடு கூறினாள்.


“ம்ம்ம், கணவன் இறந்து போகட்டும் என்று சொல்கிறாய் நீ!” என்றான் ப்ருஹத்பாலன். “என் உயிரைப் பற்றிய கவலை இல்லையா உனக்கு?” கோபமாய்க் கேட்டான்.


“ஓஹோ, இளவரசே, அவர்கள் மூவரும் உமதருகே இருக்கின்றனர் அல்லவா? பின் உம் உயிரைப் பற்றிய வீணான கவலை எதற்கு? அவர்கள் இருக்கும்வரையில் உமக்கு ஒன்றும் நேராது. மேலும் என் தந்தையார் சொல்வார்: “ஒரு கோழையின் மனைவியாக இருப்பதை விட ஒரு வீரனின் விதவையாக இருக்கலாம்.” என்று” இதைக் கூறியவண்ணமே ப்ருஹத்பாலனிடமிருந்து அகன்று சென்ற விஷாகாவின் கண்களில் கங்கை பெருக்கெடுத்த்து. மீண்டும் தன் தாயிடம் உதவி நாடிச் சென்ற ப்ருஹத்பாலன் கண்ணீர் பெருக்கெடுக்க அமர்ந்திருக்கும் தாயைக் கண்டான். மனச்சோர்வோடு இருந்த அவள் தன் பிறந்த நேரத்தின் கிரஹங்களின் சூழ்ச்சியால் தான் எப்போதுமே சந்தோஷமாய் இருக்க முடியவில்லை என்றும் மேன்மேலும் துன்பங்கள் தொடர்கதை ஆகின்றன என்றும் வருந்தினாள். வேறு வழியில்லாமல் தன் நண்பர்களையே சந்திக்கச் சென்றான் ப்ருஹத்பாலன்.

2 comments:

priya.r said...

51 வது அத்தியாயத்தையும் படித்து முடித்து விட்டேன்

பதிவுக்கு நன்றி கீதாம்மா

ஆஹா ! கதைக்கு திருப்பு முனையாக இந்த பகுதியும் ஒன்றாக இருக்கும் போல இருக்கிறதே
அம்மாவையும் இந்த பயந்தான்கொள்ளி பையனையும் நினைக்க சிரிப்பு தான் வருகிறது
ஒரு வகையில் இதுவும் நல்லது தான்
அப்போது தான் கண்ணன் யுவ ராஜாவாக வர முடியும் ! அப்படிதானே கீதாம்மா !

sambasivam6geetha said...

கண்ணன் யுவராஜாவாக ஆகமாட்டான். அது நிச்சயம். மெல்ல மெல்லப் பார்ப்போம், என்ன நடக்கப் போகிறதென! :))))))