Monday, February 13, 2012

கண்ணனோடு ஒரு ஆலோசனை!

அதோடு யுதிஷ்டிரன் யுவராஜாவாக ஆனது தனக்குச் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை என்பதை துரியோதனன் வெளிக்காட்டிக்கொண்டான். யுதிஷ்டிரன் மட்டுமில்லாமல் பாண்டுவின் புத்திரர்கள் ஐவரின் மேலும் அவனுக்குப் பொறாமை அதிகம் என்பதையும் வெளிப்படையாகவே சொன்னான். அதோடு தான் துவாரகைக்கு வந்ததன் நோக்கமே யாதவர்கள் திருதராஷ்டிரன் மகன்களான நூற்றுவர் பக்கமா? பாண்டுவின் மகன்களான் ஐவர் பக்கமா என்பதைத் தெளிவாக அறியவேண்டியே என்பதையும் ஒத்துக்கொண்டான். கிருஷ்ணனுக்கு இவை எதுவும் பிடிக்கவில்லை; என்றாலும் துரியோதனன் தன் பயிற்சியை முடித்துக்கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்ப ஒரு வருஷம் ஆகும் என்ற செய்தி அவனுக்கு உவப்பையே தந்தது; இந்த ஒரு வருஷத்தில் பாண்டவர்கள் தங்கள் நிலையை ஹஸ்தினாபுரத்தில் ஸ்திரப் படுத்திக்கொள்ளலாம். வலிமையைப் பெருக்கிக்கொள்ளலாம். கிருஷ்ணனுக்கு மனசுக்குள் உவகையும் கூட.

யுதிஷ்டிரன் தர்மத்தின் பாதையில் செல்லவே விரும்புவான்; அரச தர்மத்திலிருந்து சிறிதும் பிறழமாட்டான். அதோடு தன் தம்பிகள் நால்வரையும் தன் உயிரினும் மேலாகக் கருதுகிறான். அதே போல் அவன் தம்பிகளும் யுதிஷ்டிரன் சொன்ன சொல்லை மீறுவதில்லை. அவனுக்கு மிகவும் மரியாதை கொடுத்து நடந்து கொள்வார்கள். பாண்டவர்கள் ஐவரின் ஒற்றுமையும் வியக்கத்தக்க விதத்தில் இருந்தது. கடைசி இருவரான நகுலனும், சகாதேவனும் குந்தியின் புத்திரர்கள் இல்லை; மாத்ரியின் புத்திரர்கள் என்பதை எவரேனும் சொன்னால் தவிர யாரும் நம்பவே மாட்டார்கள். உடன் பிறந்த சகோதரர்களைப் போல அவ்வளவு ஒற்றுமையுடன் இருந்தனர். பீஷ்மபிதாமகரும் சரி, வேதவியாசரும் சரி பாண்டவர்களை மிகவும் உயர்வாகப் பேசியதோடு மனதளவிலும் அவர்களிடம் வைத்திருந்த நம்பிக்கையை வெளிக்காட்டினார்கள்.

யுதிஷ்டிரன் தலைமையில் அர்ஜுனன் துணையோடு பாண்டவர்கள் ஆர்யவர்த்தத்தில் தர்மராஜ்யம் ஸ்தாபிக்கப் போகின்றனர் என்பதில் கண்ணன் மாறாத நம்பிக்கை கொண்டிருந்தான். ஆனால் துரியோதனன் தன் பயிற்சியை முடித்துக்கொண்டு ஹஸ்தினாபுரம் போனதிலிருந்து கண்ணனுக்குக் கிடைத்த செய்திகள் மனதில் கவலையை ஏற்படுத்தியது. பாண்டவர்கள் அரசாளுவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல என்பதும் புரிய வந்தது கிருஷ்ணனுக்கு. ஆகவே அவன் தானும் வடக்கே சென்று ஹஸ்தினாபுரத்தின் தன் அத்தை வழி சகோதரர்கள் ஆன பாண்டவர்களுக்குத் துணையும்,உதவியும் செய்ய விரும்பினான். ஆர்யவர்த்தத்தின் பெரிய அரசர்களில் எவருடைய உதவியும், கூட்டும் பாண்டவர்களுக்குக் கிடைக்கலாம் எனவும் நம்பினான். சில மாதங்கள் முன்னர் யுதிஷ்டிரன் கிருஷ்ணனுக்கு ஹஸ்தினாபுரம் வருவதற்கு அழைப்பு அனுப்பினான். கிருஷ்ணன் தன் வழக்கப்படி உத்தவனை முதலில் அனுப்பி வைத்தான். அதன்படி உத்தவன் ஹஸ்தினாபுரம் சென்றிருந்தான்.

சாந்தீபனியின் அழைப்பின் பேரில் கிருஷ்ணன் கர்காசாரியாரின் ஆசிரமத்திற்கு மதிய உணவு முடிந்ததும் சென்றான். சாந்தீபனி அங்கே தான் தங்கி இருந்தார். ஒரு ஆலமரத்தடியில் சீடர்கள் புடைசூழ மான் தோலை விரித்துக்கொண்டு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கண்ணனைக் கண்ட அந்தச் சீடர்கள் வாய் திறந்து யாரும் எதுவும் சொல்லாமலேயே இருவரையும் தனியே விட்டு நகர்ந்தனர். அந்த நேரத்தின், அந்தக் குறிப்பிட்ட சம்பாஷணையின் முக்கியத்துவத்தை அவர்களும் அறிந்திருந்தனர் போலும். சாந்தீபனி நேரடியாக விஷயத்துக்கு வந்துவிட நினைத்தார். கண்ணனைக் கண்ட அவர் கண்களில் தெரிந்த பாசமும், அன்பும், அவர் குரலிலும் தெரிய, யாதவர்கள் அனைவரும் இப்போது சந்தோஷமாக இருக்கிறார்களா என விசாரித்தார். கண்ணன் அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்ததில் அவனுக்குத் திருப்தி தானே எனவும் கேட்டுக் கொண்டார். இறைவன் அருளால் தான் மேற்கொண்ட அந்தக் காரியம் நன்மையாகவும், திருப்தியாகவும் முடிந்தது எனச் சொன்ன கண்ணன் குருநாதர் ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கூறப் போகிறார் என்பதையும் உணர்ந்து கொண்டான்.

1 comment:

priya.r said...

படித்தாகி விட்டது

பதிவுக்கு நன்றி கீதாமா