Wednesday, February 29, 2012

கங்கை சாட்சியாக என் நாட்டைப் பகிர்ந்து கொள்கிறேன்

தந்தை என்னமோ எளிமையைக் கடைப்பிடித்தார். ஆனால் மகனுக்கு அதில் இஷ்டமில்லை. வெறுப்பே ஏற்பட்டது. சின்ன வயது முதல் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டுக்கும் தேவையான எளிமையான பொருட்களே பரத்வாஜரின் ஆசிரமத்தில் இருக்கும். தேவைக்கு மேல் எந்தப் பொருளும் இராது. தகப்பனின் இந்தப் போக்கு மிகக் கடுமையாகத் தோற்றமளித்தது துரோணருக்கு. உரிய காலம் வந்ததும் உபநயனம் முடிந்து குருகுலம் அடைந்தார் துரோணர். அந்தோ! அங்கேயும் அவர் தினசரி உணவுக்காக பிக்ஷை எடுக்க வேண்டி இருந்தது. பிரமசரிய ஆசிரமத்தின் முக்கியமான விதியாம். அதுவும் அன்றைய தேவைக்கு மேல் இருக்கக் கூடாது, மேலும் தூங்குவதும் மான் தோலிலே தான் தூங்கியாக வேண்டும். துரோணருடன் படித்த மற்ற அந்தணச் சிறுவர்கள் உள்ளூர இந்த பிரமசரிய ஆசிரமத்தின் விதிமுறைகளில் பெருமை கொண்டிருப்பதை துரோணர் புரிந்துகொண்டார். ஆனாலும் அவருக்கு என்னமோ இது பிடிக்கவில்லை. வறுமை; வறுமை; வறுமை.

எப்போதும் வறுமை; உடுத்தும் துணியும் அரை முழம் தான். உடலின் ஒரு பாதியைத் தான் மறைக்கிறது. இம்மாதிரிக் கட்டாயப்படுத்தப்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள வறுமையை நான் வெறுக்கிறேன். துரோணர் தனக்குள்ளாக சொல்லிக் கொள்வார். இதிலே எந்தப்பெருமையும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அதே அந்த க்ஷத்ரிய இளைஞர்கள் எப்படி வசதியாக வாழ்ந்திருக்கின்றனர். இங்கேயும் அவர்களுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. கேட்டால் அரசகுமாரர்களாம். எப்படி இருந்தால் என்ன? என்னுடைய திறமையிலோ, வேதங்களை ஓதும் விதமோ, அஸ்திரப் பயிற்சிகளோ அவர்களுக்கு வருமா? அவற்றில் நான் அன்றோ அவர்களை விடவும் முன்னணியில் இருக்கிறேன். இதில் துரோணருக்கு உள்ளூரப் பெருமை தான். கர்வமும் கூட. ஆனால் இந்த வறுமை! சே! ஏன் அந்தணனாகப் பிறந்தோம்! க்ஷத்ரியனாக இருந்தேனெனில் குறைந்த பக்ஷமாக ஒரு தளபதியாகவோ சேனாபதியாகவோ இருந்திருப்பேன். ஏன், என் திறமையால் ஒரு நாட்டின் அரசனாகக் கூட ஆகி இருப்பேன். என் அதிகாரம் விரிந்து பரந்து பட்டிருக்கும். என் காலடியில் எத்தனை எத்தனை மக்கள் அரசன் என்ற பணிவோடு வந்து விழுவார்கள். ஆஹா! நினைக்கவே சுகம்! இந்த பிராமணனாக இருந்து பிரம்மத்தை அறிந்து கொண்டு, வித்யையும், தபஸும் புரிந்து அனைவருக்கும் என்ன கிடைத்தது? உலகத்தின் சுகதுக்கங்களை அனுபவிக்காமல் ஏழ்மையிலும், வறுமையிலும் தங்கள் தபஸை நினைத்து மட்டும் பெருமைப் பட்டுக்கொண்டு. சீச்சீ, அதுவும் ஒரு வாழ்க்கையா?

குருகுலத்தில் இருக்கையிலேயே துரோணர் தன்னுடைய எதிர்காலத்திற்காகத் திட்டம் போட்டார். நன்கு ஆலோசித்து அங்கிருந்தவர்களிலேயே மிகவும் வலிமை வாய்ந்த பாஞ்சால தேசத்தின் இளவரசன் ஆன துருபதனை சிநேகிதன் ஆக்கிக்கொண்டார். அவனுடன் நெருங்கிப் பழகினார். அவனும் துரோணரோடு நெருங்கிப் பழகியதோடு அல்லாமல், தனக்குக் கிடைத்த சில செளகரியங்களையும் துரோணரோடு பகிர்ந்து கொண்டான். துரோணருக்கு உள்ளூர சந்தோஷம். ஆனாலும் அவனுடன் வெறும் நட்பு மட்டும் போதாது; அவனையும் தனக்குக் கீழ் தனக்குக் கட்டுப்பட்டவனாகக் கொண்டு வர வேண்டும். முதலில் அவன் நம்பிக்கையைப் பெறுவதோடு அவன் விரும்பும் வண்ணமும் நடந்து கொள்வோம். அவ்வாறே துரோணர் பாஞ்சால இளவரசனின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்றார். இருவரும் எங்கு போனாலும் சேர்ந்து போனார்கள். அனைத்துக்கலைகளையும் ஒன்றாகக் கற்றார்கள். இளவரசனுக்குத் தெரியாதவற்றை துரோணர் தனிப்பட அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவன் தவறுகளைத் திருத்தினார். இவ்வாறு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்த துரோணர் அவனுடன் நட்பையும் தாண்டியதொரு அர்ப்பணிப்பு நிலைக்கு அவனைக் கொண்டு வந்தார். துரோணருக்காக எதையும் தருவேன் என்னும்படியான நிலைமைக்கு துருபதன் வந்துவிட்டான். அவர் மீது ஒரு பக்தியே வைத்திருந்தான். ஒரு நாள் மாலை வேளை. இருவருமே மாலை நேரத்து அநுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்த சமயம், துரோணர் விளையாட்டாக, “துருபதா, என்ன இருந்தாலும் நீ அரசகுமாரன்; அதுவும் பட்டத்து இளவரசன். ஆகவே நீ பட்டமேறினால் என்னை எங்கே நினைவில் வைத்திருப்பாய்!” என்றார். அதைக் கேட்ட துருபதன் திடீரெனத் தோன்றிய ஓர் மெய்ம்மறந்த உணர்வில், துரோணரின் கைகளில் கங்கை நீரை வார்த்து, தான் பாஞ்சால நாட்டு மன்னனாக ஆகும்போது, தன்னுடைய ராஜ்யத்தை, சாம்ராஜ்யத்தை துரோணருடன் சரிசமமாகப் பகிர்ந்து கொள்வதாக கங்கையை சாட்சிக்கு வைத்து வாக்களித்தான். அவ்வாறே தத்தமும் செய்தான்.

3 comments:

priya.r said...

ஒவ்வொரு பதிவின் தலைப்பிலும் அந்த பதிவு பற்றிய குறிப்புகள்

அடங்கி இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ..

பாராட்டுகள் கீதாமா

priya.r said...

ஒவ்வொரு பதிவின் தலைப்பிலும் அந்த பதிவு பற்றிய குறிப்புகள்

அடங்கி இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ..

பாராட்டுகள் கீதாமா

priya.r said...

ஒவ்வொரு பதிவின் தலைப்பிலும் அந்த பதிவு பற்றிய குறிப்புகள்

அடங்கி இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ..

பாராட்டுகள் கீதாமா