Monday, February 27, 2012

தன்னுள்ளே தெளிவும், சலிப்பிலா மகிழ்ச்சியும்!

“என்ன? ஹஸ்தினாபுரம் செல்லப் போகிறாயா? கண்ணா, அங்கே உனக்கு நல்வரவு இருக்காது. துரியோதனன் உன் வருகையை விரும்ப மாட்டான்.” சாந்தீபனி கூறியதைக் கேட்ட கண்ணன், “குருதேவரே, எனக்கு அங்கே கிடைக்கும் வரவேற்பை எண்ணிக்கொண்டெல்லாம் நான் அங்கே செல்லவில்லை. யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோரு நகுல, சகாதேவருடன் அங்கிருந்திருந்தால் நீதியும், நேர்மையும், தர்மமும் அங்கே பீடுநடை போட்டுப் பிரகாசிக்கும். கோடி சூரியனைப் போல் தர்மதேவதை ஒளிர்வாள். ஆனால் இப்போதோ! குருவே, தர்மதேவதை என்னும் சூரியனை அதர்மம் என்னும் கிரஹணம் பிடித்திருக்கிறது. இதை நான்போய்த் தான் சரியாக்கவேண்டும்.” கண்ணன் குரலில் தீர்மானம் தெரிந்தது. திடீரென ஒரு இறுக்கமும் பதட்டமும் நிறைந்த சூழ்நிலை தென்பட்டது. அனைவர் மனதிலும் ஒரு கலக்கம். கண்ணன் அனைவரையும் உள்ளே அழைத்தான்.

“இன்னும் இரு நாட்களில் நான் ஹஸ்தினாபுரம் செல்லப் போகிறேன். தேவையான பரிவாரங்களோடும், 60 ரத சாரதிகளோடும் சாத்யகி பிரயாண ஏற்பாடுகளைக் கவனிப்பான். அவனும் என்னோடு வருகிறான். கூடியவரையில் குறுக்கு வழியில் அது பாலைவனங்களைக் கடந்து செல்லும்படியாய் இருந்தாலும் பரவாயில்லை; குறுக்கு வழியில் விரைவில் ஹஸ்தினாபுரத்தை அடைய விரும்புகிறேன்.”

“கண்ணா, ஏன் இத்தனை அவசரம்?” சாந்தீபனி கண்ணனைக் கேட்டார்.

“குருவே, நான் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் பாண்டவர்களுக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆசாரியரே, என் உள்மனம் எப்போதும் எனக்குச் சரியான பாதையையே காட்டும். அது இப்போது பாண்டவர்களை ஆபத்து நெருங்குவதாகச் சொல்கிறது. ஏதோ ஒன்று விபரீதமாக நடக்கப் போகிறது. அது நடைபெறுவதற்கு முன்னர் நான் அங்கே போக வேண்டும்.” கண்ணன் தீர்மானம் அவன் குரலில் தெரிந்தது. அவன் கண்கள் இப்போது ஜொலித்தன. அவன் அமைதியாகக் காணப்பட்டாலும் உள்ளூரப் பரபரப்புடன் இருப்பது அவன் புருவங்களை நெரித்த விதத்திலும், ஆழ்ந்த யோசனை தென்படும் கண்களும் கூறின. தன்னையறியாமல் அரசனைப் போன்றதொரு ஒரு கம்பீரம் அவனிடம் வந்து குடிகொண்டது. “குருவே, நான் உங்களிடம் அளித்த செய்தியை துருபதனுக்கு இப்போது அனுப்ப வேண்டாம். ஷ்வேதகேது என்னோடு வரட்டும். முற்றிலும் மாறுபட்ட மற்றொரு செய்தியுடன் நான் அவனை காம்பில்யத்திற்கு அனுப்பி வைக்கிறேன்.”

“கண்ணா, அந்தச் செய்தி என்னவென நான் அறியலாமா?” சாந்தீபனி கேட்டார்.

“குருவே, இதோ!” கண்ணன் ஷ்வேதகேதுவைப் பார்த்துத் திரும்பி, “ஷ்வேதகேது, இதோ என் செய்தி! “ துருபத மன்னரே, உங்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். உங்கள் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க நீங்கள் நினைப்பது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. நீங்கள் அனுமதித்தால் நான் நேரே காம்பில்யம் வந்து உங்களுடன் இது குறித்துத் தனிமையில் சில ஆலோசனைகளைச் செய்ய விரும்புகிறேன். அதன் பின்னரே, என் தகப்பனார் வசுதேவரிடமோ, பாட்டனார் உக்ரசேனரிடமோ இது குறித்து நான் எதுவும் கூற இயலும்.”

கண்ணனின் இந்தச் செய்தியைக் கேட்ட சாந்தீபனிக்குத் தூக்கி வாரிப் போட்டது. எந்நேரமும் தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்வித்துக் கொண்டு வாழ்க்கையை ஆனந்தமாய்க் கழித்துக் கொண்டிருந்த இந்த இளைஞனை இப்போது பார்த்தால் என் மாணாக்கன் என என்னாலேயே நம்பமுடியவில்லையே! இவன் முகத்தின் கம்பீரமும், கண்களின் கருணையும், தீர்க்காலோசனையும், தர்மத்தைக் காப்பதில் உள்ள உறுதியும், நம்பிக்கையும், தீர்மானமாக முடிவெடுக்கும் தன்மையும், சாதாரண மனிதனாக நினைக்கத் தோன்றவில்லை. அந்த சாக்ஷாத் பரவாசுதேவனே இங்கே நேரில் வந்துவிட்டானோ எனத் தோன்றுகிறது. கை எடுத்து வணங்கித் தொழும் எண்ணம் வருகிறது.


“கண்ணா, குழந்தாய், சூழ்நிலைகளை நன்கு கவனித்து ஆலோசித்து அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதில் நீ வல்லவன்; உன் முடிவில் எப்போதும் பிழை இருக்காது. இந்த மாதிரியானதொரு முடிவை நீ ஏன் எடுத்தாய் என்பதை நான் உன்னிடம் கேட்கப் போவதில்லை. விளைவுகளை நீ அறியாமல் இருக்கமாட்டாய். குழந்தாய்! உன் வாழ்க்கையில் வெளிச்சம் காட்டிக் கூட வரும் தர்மம் இப்படியும் வந்தால்! அதன் மூலம் தர்மம் நிலை நாட்டப்பட்டால். குழந்தாய்! நீ தர்மத்தின் பாதையில் தான் செல்கிறாய். உனக்கு அது புரிகிறது. நான் குறுக்கிட மாட்டேன். உனக்கு மங்களம். என்னுடைய பரிபூரண ஆசிகள் உனக்கு உண்டு. நீ எடுக்கும் எல்லாக் காரியங்களுமே நன்மையிலேயே முடியும். என் ஆசிகள் உன்னைத் தொடர்ந்து வரும். சென்று வா!”


ஹஸ்தினாபுரத்தில் துரோணரின் குருகுலம்; அங்கே யுத்தப்பயிற்சிகள் அளிக்கும் யுத்தசாலை! பாரத தேசமெங்கிலும் உள்ள க்ஷத்திரிய இளைஞர்கள் போர்ப்பயிற்சி மேற்கொள்ள துரோணரைத் தேடி வந்து கொண்டிருந்தார்கள். துரோணருக்கும் ஓய்வு ஒழிச்சல் இல்லை; குரு வம்சத்தினரின் முக்கியமான ஆசாரியராக இருந்தார். குரு வம்சத்தினர் அவரை மிகவும் போற்றினார்கள். வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தனர். துரோணரின் மனம் பெருமிதத்தில் விம்மியது. அதே கணம் ஒரு மின்னல் போல் தோன்றியது துருபதன் குறித்த எண்ணமும். துரோணர் மனம் சுருங்கியது. அவர்.....................

1 comment:

priya.r said...

இவன் முகத்தின் கம்பீரமும், கண்களின் கருணையும், தீர்க்காலோசனையும், தர்மத்தைக் காப்பதில் உள்ள உறுதியும், நம்பிக்கையும், தீர்மானமாக முடிவெடுக்கும் தன்மையும், சாதாரண மனிதனாக நினைக்கத் தோன்றவில்லை. அந்த சாக்ஷாத் பரவாசுதேவனே இங்கே நேரில் வந்துவிட்டானோ எனத் தோன்றுகிறது. கை எடுத்து வணங்கித் தொழும் எண்ணம் வருகிறது. //

படிக்கும்

எங்களுக்கும்

வணங்கித் தொழும் எண்ணம் வருகிறது!