Saturday, May 19, 2012

நாடு கடத்தப்பட்ட சகோதரர்கள்!

ஹஸ்தினாபுரத்தின் நம்பிக்கைக்கு உகந்த விதுரர் அளவான தாடியுடனும், பெரிய கண்களில் பிரகாசித்த ஒளியோடும், புன்முறுவலை எந்நேரமும் தாங்கி நிற்கும் முகத்துடனும், பார்த்தாலே வணங்கத் தக்கவராய், மரியாதைக்கு உரியவராய்க் காணப்பட்டார். அவர் திருதராஷ்டிரனின் தந்தைக்கும், அவரின் சேடிப் பெண்ணிற்கும் வியாசர் மூலம் பிறந்த பிள்ளை. என்றாலும் அவரை ஒரு தாசியின் மகன் என்று அந்த அரச குலத்தவர் எவரும் எண்ணவில்லை. அம்பிகையும், அம்பாலிகையும் வியாசரால் எவ்வாறு குழந்தைப் பேற்றைப் பெற்றார்களோ அவ்வாறே இந்தச் சேடிப் பெண்ணும் வியாசரால் குழந்தைபேறு அடைய நேரிட்டது.


அம்பிகாவுக்குக் கண் தெரியாத பிறவிக் குருடான திருதராஷ்டிரன் பிறக்கவும், மீண்டும் வியாசர் மூலம் இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்ட அவள், வியாசரிடம் போய்க் கேட்க இஷ்டமில்லாமல் தன் அந்தரங்கச் சேடியை அனுப்பி வைக்க விதுரர் பிறந்தார். சிறு வயதில் இருந்தே தன்னை அர்த்த சாஸ்திரத்திலும், மற்றப் பயிற்சிகளிலும் ஈடுபடுத்திக் கொண்ட விதுரர் ஹஸ்தினாபுரத்தின் முன்னேற்றமும், அதன் செல்வாக்கை அதிகப்படுத்துவதுமே தன் வாழ்நாள் லக்ஷியமாய்க் கொண்டார். அவருடைய பரந்த மனதையும், எவரையும் புண்படுத்தமல் பேசும் பேச்சையும், எவ்விதமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் உறுதியான மனத்தையும் பார்த்து வியந்த பீஷ்மர் அவரை ஹஸ்தினாபுரத்தின் முதல் அமைச்சராக ஆக்கி மகிழ்ந்தார்.

ஒரு யோகியைப் போல் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார் விதுரர். எவருக்கும் எந்த விதமான சலுகையையும் காட்டாமல், தன் அதிகாரத்தின் மூலமே அனைத்தையும் எந்தவிதமான பிரச்னைகளும் இன்றி நிர்வகித்து வந்தார். அநாதைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் தன் ஆதரவைப் பூரணமாய்க் காட்டினார். அதிலும் பாண்டுவின் ஐந்து குமாரர்கள் மேலும் விதுரருக்கு அபாரமான அன்பு. அதே போல் பாண்டவர்களும் அவரைத் தங்கள் தந்தையின் மாற்றாந்தாயின் மகன் எனக் கருதாமல் சொந்த சிறிய தந்தையாகவே கருதி வந்தனர். அவர் சொல்லைத் தட்டாமல் நிறைவேற்றினார்கள். இப்போது விதுரரின் முகம் மேகங்களால் மூடப்பட்ட சூரியனைப் போல் இருண்டு காணப்பட்டது.


யுதிஷ்டிரர் பீமனைப் பார்த்து மாளிகையைச் சுற்றிலும் வில்லாளிகள் வில்லும், அம்பும் தாங்கிக் காவல் காப்பது ஏன் எனக் கேட்டார். நம்மை எல்லாம் கெளரவர்களிடமிருந்து காக்கவே அவர்களைத் தாம் நியமித்ததாய் பீமன் கூறினான். யுதிஷ்டிரர் அமைதியாக, “பீமா, அவர்கள் அனைவரையும் திரும்ப அவர்கள் இடத்துக்கு அனுப்பி வை. நமக்கு இப்போது அவர்கள் தேவையில்லை.” என்றார். பீமன் ஏன் எனக் கேட்க, அர்ஜுனனும் யுதிஷ்டிரர் குரலில் இருந்த ஒரு விசித்திரமான தொனியைக் கேட்டு ஆச்சரியமடைந்து என்ன விஷயம் எனக் கேட்டான். யுதிஷ்டிரர், “ஏனெனில் நாம் அனைவரும் நாளை மறுநாள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்கிறோம். இங்கிருந்து வெளியேறுகிறோம்.” என்றார். அவர் குரலில் அசாதாரணமான அமைதி காணப்பட்டது.

 “ஏன்?” எனக் கொதித்தான் பீமன். மற்றவர்கள் பேச வாயின்றி யுதிஷ்டிரரையும், பீமனையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் சிலையாக நின்றனர்.

 “ஏனெனில் அது தான் நம் அரசரான திருதராஷ்டிர மஹாராஜாவின் கட்டளை. அதற்கு நாம் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும்.”

“எங்கே செல்வோம்? காட்டுக்குள்ளா?” “இல்லை, வாரணாவதம் செல்கிறோம்.”

“இல்லை, அண்ணா, இல்லை. நான் திருதராஷ்டிரப் பெரியப்பா, மன்னிக்கவும் திருதராஷ்டிர அரசரின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறேன். என்னை எவராலும் நாடு கடத்த முடியாது.”

யுதிஷ்டிரர் முகத்தில் வருத்தம் தோன்ற, “நான் ஒத்துக்கொண்டு வந்திருக்கிறேன் பீமா!” என்றார்.


இது எப்படி நடந்தது? அனைவருக்கும் இதே கேள்விதான். அன்றைய தினம் தன் வழக்கப்படி யுவராஜாவுக்கான கடமைகளைத் தனக்கென நியமிக்கப் பட்ட இடத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த யுதிஷ்டிரரை, விதுரர் வந்து அழைத்தார். அரசன் திருதராஷ்டிரன் அவனை அழைப்பதாய்க் கூற மன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து யுதிஷ்டிரனும் உடனே விதுரரோடு அங்கு சென்றார். செல்லும் போதே விதுரர், யுதிஷ்டிரனின் செவிகளில்,”குழந்தாய், ஏதோ விபரீதமாய் நடக்கப் போகிறது என்பதை அறிந்தேன். எதானாலும் நீ உன்னுடைய தைரியத்தையும், உறுதியையும் இழந்துவிடாதே!” என்றார். யுதிஷ்டிரனோ, பதிலுக்கு, “சித்தப்பா, என்னிடம் தைரியம் இருக்கிறதோ இல்லையோ தெரியாது. அதே போல் உறுதி படைத்தவனா என்பதும் அறியேன். ஆனால் நான் அந்தப் பரமாத்மாவிடம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். அவன் என்ன நினைக்கிறானோ, என் மூலம் எதை நடத்திக்கொள்ள விழைகிறானோ, அவை எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன். நடப்பவை எல்லாம் நல்லதுக்கே!” என்று மிகவும் நம்பிக்கை தொனிக்கும் குரலில் கூறினான்.

3 comments:

அப்பாதுரை said...

வாரணாவதம் என்பது ஊர்ப்பெயரா அல்லது சம்பிரதாயமா? para பிரிச்சு எழுதியிருக்கலாமோ?

sambasivam6geetha said...

பத்துத் தரம் பாராவைப் பிரிச்சுப் பிரிச்சு அலுத்துப் போச்சு அப்பாதுரை. கம்போஸ் பண்ணறச்சே பாராக்களோடு தான் தெரியுது. பப்ளிஷ் கொடுக்கிறச்சே எப்படியோ சேர்ந்துக்கறது. :)))))))

sambasivam6geetha said...

சரி பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். பாரா பிரிஞ்சிருக்கிறாப்போல் இருக்கு! :))))