Saturday, May 26, 2012

திருதராஷ்டிரனின் தந்திரம்!


ஆர்யவர்த்தத்தின் மிகப் பெரிய சாம்ராஜ்யமான குரு வம்சத்தினரின் ராஜ்யம் பெருகி இருப்பதும், எவராலும் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பதும் தாத்தா பீஷ்மரின் இடைவிடாத பணியால் தான்.   அவர் எண்ணம், செயல் அனைத்திலும் ஹஸ்தினாபுரத்தின் நலனே முன் நிற்கும்.  ஆனால் இப்போதோ! நடக்கவிருக்கும் பேராபத்திலிருந்து நாட்டை மட்டுமின்றிப் பாண்டவர்களையும் காக்க வேண்டுமே.  கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார் பீஷ்மர்.  யுதிஷ்டிரன் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்ற வரையில் புரிந்து கொண்டான்.  திருதராஷ்டிரனைப்பார்த்து, “ஆம், சக்கரவர்த்தி, நான் யுதிஷ்டிரன் தான் வந்துள்ளேன்.” என்று பணிவோடும் விநயத்தோடும் கூறி இருவரையும் பாதம் பணிந்து வணங்கினான்.  “தங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறேன்.” என்றும் கூறினான். 

“உன்னுடன் யார் வந்திருக்கிறார்கள்?” என்று திருதராஷ்டிரன் வினவிக்கொண்டே, “விதுரனா?  இன்னும் எவரோ வந்திருக்கிறார்களே?  சஹாதேவனா?” எனக் கேட்டவண்ணம் தன் கைகளைத் தூக்கி ஆசி கூறும் பாவனையில் உயர்த்தினான்.  

“என் அருமைக் குழந்தைகளே, நூறாண்டு வாழ்வீர்களாக!” என வாழ்த்திய பீஷ்மரின் கண்களில் கண்ணீர் தோன்றியது.  குரலும் தழுதழுத்தது.  யுதிஷ்டிரனைப் பாசத்தோடும், அன்போடும் பார்த்துக் கண்ணீர் சிந்தினார். 

“நான் உன்னை அழைக்கையில் நீ உன்மாளிகைக்குத் திரும்பிக்கொண்டு இருந்திருப்பாய்.  உனக்குக் காலை உணவு அருந்தும் நேரம் வேறு.  நான் அழைக்கும்படி ஆயிற்று.”  திருதராஷ்டிரன் மன்னிப்புக் கேட்கும் குரலில் கூறினான்.  “ஆனால், குழந்தாய், விஷயம் மிகவும் முக்கியமானதென்பதாலேயே உன்னை உடனடியாக வரச் சொன்னேன்.  இதில் தாமதம் செய்ய இயலாது.”

“நான் எப்போதும் உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இருப்பேன், சக்கரவர்த்தி.” யுதிஷ்டிரன் உறுதி தொனிக்கும் குரலில் கூறினான். 

“அனைவரும் அமருங்கள்.  விதுரா, நீயும் அமர்ந்து கொள்.” திருதராஷ்டிரன் தொடர்ந்தான்.  “என் குமாரன்” ஆரம்பித்த திருதராஷ்டிரன் என்ன நினைத்தானோ, “யுதிஷ்டிரா, நீ எனக்கு துரியோதனையும், அவன் தம்பிமார்களையும் விட அருமையானவன் என்பதில் உனக்குச் சிறிதேனும் சந்தேகம் வரக் கூடாது.  ஆனால் மகனே, இப்போது ஒரு மாபெரும் ஆபத்து நம்மை எல்லாம் சூழ்ந்திருக்கிறது.  என் மகன் துரியோதனனும், அவன் தம்பியரும் பொறாமையிலும், பேராசையிலும் மூழ்கி விட்டனர்.  வெறுப்பும், ஏற்பட்டிருக்கிறது அவர்களுக்கு.  யுதிஷ்டிரா, யாரிடம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.”

“ஏன், என்ன காரணம்? நாங்கள் அவர்களுக்கு என்ன தீங்கு செய்தோம்?  ஏன் அவர்கள் எங்களைக்கண்டாலே துக்கம் அனுஷ்டிக்க வேண்டும்.  சக்கரவர்த்தி, எனக்கு இந்தக் காரணத்தைத் தெளிவாக்குங்கள்.”

“நீ எப்போதும் நேர்மையாக நடந்து கொள்வாய் என்பதை அறிவேன் யுதிஷ்டிரா, அர்ஜுனனும் எந்த வம்பிற்கும் போவதில்லை. நகுலனையும், சஹாதேவனையும் போலப் பணிவுள்ள தம்பிகள் கிடைப்பது துர்லபம்.” திருதராஷ்டிரன்  எப்படியேனும் யுதிஷ்டிரன் மனதில் தான் நடுநிலையாளனாகப் பேசுகிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் முனைந்தான்.  யுதிஷ்டிரனும் அதைப் புரிந்து கொண்டே இருந்தான்.  திருதராஷ்டிரன் தன் மகன்களிடம் வைத்திருக்கும் அதீதமான  பாசத்தைப்புரிந்து கொண்ட  யுதிஷ்டிரன் திருதராஷ்டிரனால் நடுநிலையாகப் பேச முடியவில்லை என்பதையும் கண்டு அவன் உதவிக்கு வந்தான்.  “மரியாதைக்குரிய மன்னரே, ஒருவேளை பீமனால் அவர்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்கலாம்.  பீமன் கொஞ்சம் குறும்புக் காரன்.  ஆனால் அவன் வெளிப்படையாகப் பேசுபவன்.  மனதில் எந்தவிதமான வஞ்சக நோக்கையும் வைத்துக்கொள்ள மாட்டான்.  அவனாலோ, அல்லது மற்றவராலோ எவரானும் மனம் புண்பட்டிருப்பது தெரிந்தால் உடனே மன்னிப்புக்கேட்டுக் கொள்வான்.”

பீஷ்மர் தன் நீண்ட தாடியைத் தடவிய வண்ணம் அனைத்தையும் கேட்டுக்கொண்டும், கிரகித்துக்கொண்டும் வாய் பேசாமல் மெளன சாட்சியாக அமர்ந்திருந்தார்.

2 comments:

by the will of Rama said...

அன்புள்ள கீதாம்மா,
நீங்க ஒரு நாளைக்கு 5 பதிவு போட்டா கூட பத்தாது..
கண்ணன் எப்போ வருவான் எப்போ வருவான் னு ஏங்கி காத்துட்டு இருக்கோம்.. உங்களோட மற்ற வலை பதிவுகளை கொஞ்சம் குறைத்துக்கொண்டு (!!!) கண்ணனுக்காக கொஞ்சம் extra time ஒதுக்குங்க னு கேட்டுக்குறோம்.. இதுக்கு கடவுளர்களுக்கு கடவுளான அந்த மகாதேவன் (கண்ணன் ஸ்டைல் ல) அல்லது அந்த ஆணை முகத்தான் (உங்க ஸ்டைல் ல) உங்களுக்கு அருள் மழையை பொழியட்டும்!!
கண்ணன் வந்தா சரி.. கண்ணன் எப்போ வருவான்?

இராஜராஜேஸ்வரி said...

திருதராஷ்டிரன் தன் மகன்களிடம் வைத்திருக்கும் அதீதமான பாசத்தைப்புரிந்து கொண்ட யுதிஷ்டிரன் திருதராஷ்டிரனால் நடுநிலையாகப் பேச முடியவில்லை என்பதையும் கண்டு அவன் உதவிக்கு வந்தான்.

குருட்டு தந்திரம்..!