Thursday, August 22, 2013

பீமன் தந்தையாகப் போகிறான்!

அப்போது அங்கே உணர்ச்சிகள் மிகுந்ததொரு குரலிலே ஏதோ பாடுவது போல் கேட்டது.  திடீரென கேட்ட அந்தக் குரல் அனைவரையும் தூக்கிவாரிப் போட வைத்தது.  பீமன் எழுந்து அமர்ந்து மெல்லிய புன்னகையோடும், உள்ளார்ந்த அன்போடும் அந்தக் குரலைக் கேட்டுப் பதிலுக்குத் தன் குரலாலேயே ஒரு உறுமல் உறுமித் தன் பதிலைத் தெரிவித்தான்.  பீமனுக்கு எப்படி இருந்ததோ மற்றவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது என்பது புரிந்தது.  எவருக்கும் இது பிடிக்கவில்லை.  ஹிடும்பியின் அழைப்பும், பீமனின் பதிலும் அவர்கள் மனதிலே கோபமும், வருத்தமுமே தந்தது.  குந்தியோ வெட்கத்துடனும், அவமானத்துடனும் தன்னிரு காதுகளையும் பொத்தியவண்ணம் தலையைக் குனிந்து கொண்டாள்.  அவளால் இதைக் கொஞ்சம் கூடச் சகிக்க முடியவில்லை.  யுதிஷ்டிரனோ எனில் வழக்கம் போல் கனிந்த ஒரு புன்னகை.  அவன் தம்பி பீமனும், அவனுடைய அழகிய ராக்ஷசி மனைவியும் ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்ட இந்த மறைமுகச் சைகைகள் அவன் இதழில் புன்னகையை வரவழைத்தன.  பீமனைக் கனிவோடு பார்த்துச் சிரித்தான்.  அர்ஜுனனோ எந்நேரம் சீறுவானோ என்னும்படி கோபப் பார்வை பார்த்தான்.  நகுலனால் தன் வெறுப்பை மறைக்க இயலவில்லை.  சஹாதேவனோ இவ்வுலகிலேயே இல்லையோ என்னும்படியாகத் தன் அசைக்க இயலா நிலைக்கு மீளச் சென்றுவிட்டான். அரைமனதாகத் தன் தாயையும், சகோதரர்களையும் பார்த்துப் பூடகமாகச் சிரித்த பீமன், உத்தவனைப் பார்த்தான். சிரித்துக் கொண்டே அவனிடம், “உத்தவா, என் அருமைத் தம்பி, இந்த இடத்தை விட்டுச் சென்று விடுவதைப் பேசுவது உனக்கு எளிதாக இருக்கலாம்.  ஆனால் ஆனால் தம்பி, மஹாராஜா, வ்ருகோதரனின் ஆட்சியில் முன்னோரான அரசன் விரோசனனால் ஏற்படுத்தப் பட்ட சட்டம் ஒன்று மாற்ற முடியாததாக உள்ளது.  அது என்னவெனில், இந்த ராக்ஷச வர்த்தத்துக்குள் நுழையும் எவரும் திரும்பிச் செல்ல முடியாது என்பதுவே! “ என்றான்.

“ஆஹா, அப்படி எல்லாம் அவனிடம் பேசாதே பீமா!”குந்தி கடுமையைக் காட்டினாள்.  “ஓஹோ, தாயே, நான் என்ன செய்யட்டும்! நான் இப்போது என்றோ இறந்த அந்த ராஜா விரோசனின் ஆவியைத் தட்டி எழுப்பி, அவனால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மாற்றிச் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் எனக் கேட்டாக வேண்டும்.  அதுவும் என் அருமைத் தம்பி உத்தவனின் நலத்துக்காக. “  பீமன் சிரிக்காமல் பேசினான்.  “ஆனால் அது ஒன்றும் எளிதல்ல.” இப்போது அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.  “ஆஹா, அது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை; பீமா, நீ மனது வைக்க வேண்டும்.  அவ்வளவு தான்!” என்றான் யுதிஷ்டிரன் நடுவில் குறுக்கிட்டு. “ஆமாம், என் மூத்தவனே, நீ சொல்வது சரியே.  ஆனால் ஒரு விஷயம் சொல்கிறேன்.  கிருஷ்ணன் சொன்னாலும் சரி, ஆசாரியர் சொன்னாலும் சரி, அல்லது தாத்தா பீஷ்மரோ, சித்தப்பா விதுரரோ அழைத்தாலும் சரி, இங்கிருந்து இன்னும் ஒரு வருடத்துக்குக் கிளம்புகிற எண்ணம் எனக்கில்லை.  நாம் அனைவருமே இங்கே இன்னும் ஒரு வருடம் இருந்தாக வேண்டும்.” என்று தீர்மானமாகச் சொன்னான் பீமன்.  கோபத்தில் கொதித்தான் அர்ஜுனன். “என்ன ஒரு வருஷமா?  எதற்கு, ஏன் இங்கே ஒருவருடம் இருந்தாக வேண்டும் என்கிறாய்?  என்ன ஆயிற்று பீமா உனக்கு? என்ன தான் சொல்கிறாய் நீ?” கோபத்தில் பொரிந்தான் அர்ஜுனன்.


“ஓஹோ, ரொம்பவே உணர்ச்சி வசப்படாதே என் அருமைத் தம்பி.  நான் சொல்வதைக் கேள்.  எல்லாம் சரியாகத் தான் நடக்கும்.  சரியாகவே இருக்கும்.  இன்னும் ஐந்தாறு மாதங்களில் நான் தந்தையாகப் போகிறேன்.  அதன் பின்னர் குழந்தைக்கு ஆறு மாதமாவது ஆகிற வரையில் ஹிடும்பியை என்னால் பிரிந்து வர முடியாது.  என் உதவி அவளுக்குத் தேவை.  ஆகவே நாம் அனைவருமே அது வரை பொறுத்துத் தான் ஆகவேண்டும்.”


“ஆஹா, பீமா, உனக்குக் குழந்தை பிறக்கப் போகிறதா?  இதை ஏன் முன்னரே சொல்லவில்லை?? “ குந்திக்குத் தன் மருமகள் ஒரு ராக்ஷசி என்பதும், அவளுக்கும் தன் மகனுக்கும் பிறக்கப் போகும் குழந்தையும் ஒரு ராக்ஷசனாகவே இருந்தால் என்ன செய்வது என்பதும் சுத்தமாக மறந்து போய்விட்டது.  முதல் முதலாகப் பேரக்குழந்தையைப் பார்க்கப் போகும் ஆனந்தம் ஒன்றே அவளிடம் வெளிப்பட்டது.  ஒரு தாயாகத் தன் அன்பைக் காட்டியவள், இப்போது ஒரு பாட்டியாகத் தன் பேரக் குழந்தையையும் சீராட்ட எண்ணினாளோ? “ஆஹா, அந்தக் குழந்தை மட்டும் ஆண் மகவாகப் பிறந்தால்??? குரு வம்சத்தினரின் மூத்த பேரக் குழந்தை, அடுத்த யுவராஜா, சக்கரவர்த்தி பரதனால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ராஜ்யத்தின் முதல் வாரிசாக ஆவான்.  அவன் தான் அடுத்த ராஜாவாகவும் இருப்பான்.  குரு வம்சத்தினரின் அரியணைக்கு ஒரு வாரிசு பிறக்கப் போகிறது.”  குந்தி மேன்மேலும் சொல்லிக் கொண்டே போனாள்.  “நிச்சயமாய் தாயே, அப்படியே நடக்கும்.  ஆனால், பார்;  உன் அருமை மருமகள் ஏதேனும் தந்திரங்கள் செய்து அந்தக் குழந்தையைப் பெண்ணாகப் பெற்றெடுக்காமல் இருக்க வேண்டுமே!  அப்போது நீ என்ன செய்வாய்?” பீமன் தனக்குள் ஊறிய சிரிப்போடு தாயைப் பார்த்துக் கேட்டான்.  “ பீமா, பீமா, இப்படியான பிரதிகூலமான வார்த்தைகளை ஒருபோதும் பேசாதே!  திக் தேவதைகள் “ததாஸ்து” சொல்லிவிட்டால்? எப்போதும் நற் சூசகங்களைக் கொடுக்கும் வார்த்தைகளையே பேசு!” என்று குந்தி மகனை அடக்கினாள்.


இப்போது உத்தவனுக்கு முன்னர் நாம் நாககூடம் அவசரமாகச் செல்ல வேண்டும்.  




இளவரசிகளான இரட்டையர் இருவரும் உத்தவன் தங்களைப் பிரிந்து சென்றதிலிருந்தே தங்கள் வசமிழந்து, மனம் உடைந்து மிக மிக மோசமாக ஆகிவிட்டனர்.  அவர்கள் இருவருமே தாங்கள் இருவரும் உத்தவன் மனைவியர் ஆகப் போவதாகக் கனவுகள் கண்டு கொண்டிருந்தனர்.  அதற்கு எவ்வகையிலும் எதிர்ப்பு வராது என்ற நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.  இப்போதோ அவன் அவர்களை விட்டுவிட்டு சாத்தான்கள் வாழுமிடமான ராக்ஷசவர்த்தம் சென்றுவிட்டான்.  இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு அப்படியும் அடக்கமுடியாமல் சோகத்தில் ஆழ்ந்தனர்.  இனி உத்தவன் திரும்பி வருவது எங்கே?  அவன் ராக்ஷசர்களால் பக்ஷணம் பண்ணப் பட்டிருப்பான். என்றாலும் அவர்கள் உள் மனதின் ஓரத்தில் ஒரு சிறு நம்பிக்கை.  இரண்டு பெளர்ணமிகள் கடக்கும் வரை உத்தவனுக்குக் காத்திருப்பது. அப்படி அவன் வரவில்லை எனில் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வது.  இதுவே அவர்கள் எடுத்த முடிவு.


அவர்கள் இருவராலும் புரிந்துகொள்ள இயலாத விஷயம் என்னவெனில், கிருஷ்ணன் ஏன் அவர்களின் மனம் கவர்ந்த உத்தவனைக் காட்டுக்குள்ளே ராக்ஷசர்களின் நடுவே போய்த் தேடச் சொன்னான்? அங்கே ராக்ஷசர்களால் உத்தவன் உணவாக்கப்படுவான் என்பதை அந்தக் கிருஷ்ணன் அறிய மாட்டானா என்ன?  அவனைப் போய் இவர்களெல்லாம் கடவுள் எனக் கொண்டாடுகின்றனரே!  அப்படி அவன் கடவுளாக இருந்தானெனில் உத்தவனை ஏன் ராக்ஷசர்கள் மத்தியில் அனுப்பினான்? அது உத்தவனின் உயிருக்கு உத்தரவாதமில்லா ஒன்று என்று அவன் அறிய மாட்டானா?  இப்படிப்பட்டவனையா கடவுள் என்கின்றனர்? ஹூம், இந்த உத்தவன் என்ன வேண்டுமானும் தன் அருமைச் சகோதரன், நண்பன் ஆன கிருஷ்ணனைக் குறித்துப் பெருமையாகச் சொல்லட்டும்.  ஆனால் நம் வரையிலும் இந்தக் கிருஷ்ணன் ஒரு மோசமான பொல்லாத மனிதன்.  நம் இருவருக்கும் கணவனாக வேண்டிய உத்தவனைத் துணிந்து கொலைக்களமாகிய ராக்ஷச வர்த்தத்துக்கு அனுப்பியவன்.  அவன் திரும்பியே வரமுடியா இடத்துக்கு அவனை அனுப்பி வைக்கப் பார்க்கிறவன்!  இவன் நல்லவனாக எப்படி இருக்க முடியும்!  வாய்ப்பே இல்லை!


இந்தப் பெண்களின் நடவடிக்கையும், அவர்கள் இருந்த  இருப்பையும் பார்த்தால் அவள் பெற்றோருக்கும், சகோதரனுக்கும் மனம் வருந்தியது.  இது சரியில்லை என்பது அவர்களுக்குப் புரிந்தது.  இருவருமே ஒரு மூலையில் போய் முடங்கிக் கொள்கின்றனர்.  ஒருவர் தோள் மேல் இன்னொருவர் கைபோட்டு அணைத்துக் கொள்கின்றனர்.  பெருமூச்சு விட்டபடியோ அல்லது கண்ணீர் வடித்தபடியோ அமர்ந்திருக்கின்றனர்.  அவர்களைச் சமாதானம் செய்ய முடியவில்லை.  சாப்பிட வைக்க முடியவில்லை.  வற்புறுத்திச் சாப்பிட உட்கார்த்தினால் இரண்டொரு கைப்பிடி சாப்பாடைச் சாப்பிடுகையிலேயே அவர்களால் தாங்க முடியவில்லை.  பெரிதாக வெடித்து அழ ஆரம்பிக்கின்றனர்.  அவ்வளவு ஏன்?  பசுபதிநாதரைத் தொழுது வணங்கவோ, சடங்குகளில் கலந்து கொள்வதோ, சடங்குகளோடு கூடிய நடனங்களில் பங்கேற்பதோ முற்றிலும் தவிர்க்கின்றனர்.  அவர்களின் தாயான ரவிகா சில சமயம் அவர்களைக் கடுமையாகக் கடிந்தாலும் சில சமயம் ஆறுதலும் கூறுகிறாள்.  அரண்மனையின் மற்ற நபர்களும் அவர்களை ஆறுதல் படுத்துவதில் முனைந்திருக்கின்றனர். 


ஒருநாள் அந்தப் பெண்கள் கொஞ்சம் மனம் சமாதானம் அடைந்தது போல் காணப்படவே அன்று ரவிகா அவர்களைப் பிடித்துக் கொண்டாள். இருவரிடமும் தன் கோபத்தைக் கடுமையாகக் காட்டினாள்.  “முட்டாள் பெண்களே, உங்களுக்கு அறிவில்லையா?  இப்படியா நாள் தோறும் அழுது கொண்டும், உணவு உண்ணாமலும் இருப்பது? பசுபதி நாதரின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இழந்து விட்டீர்களா?  அவரை விடப் பெரியவர் எவரேனும் உண்டோ?  அவர் அருளினால் உத்தவன் நலமாகவே திரும்புவான்.  அவனுக்கு ஒன்றும் நேராது!” அப்போது அங்கே வந்த அவர்கள் சகோதரன் மணிமானும் அதை ஆமோதித்தான்.  ஆனால் பிங்களாவோ, தாயைப் பார்த்து, “சும்மா எங்களுக்கு சமாதானம் ஏற்பட வேண்டும் எனப் பொய் சொல்லாதீர்கள் தாயே!  உத்தவன் ஒரு நாளும் திரும்பி வரப்போவதில்லை.  ராக்ஷசர்கள் இத்தனை நாட்களில் அவனை நன்கு பக்ஷணம் செய்து  சாப்பிட்டிருப்பார்கள்.  நாங்கள் என்ன சின்னக் குழந்தைகளா?  ஒன்றும் தெரியாதவர்களா?  எங்களை ஏமாற்ற முயல வேண்டாம்.” என்று கடுமையாக எதிர்த்தாள்.


அதைக் கேட்ட கபிலாவோ, ஆமோதிப்பாகத் தலையை ஆட்டியதோடு அல்லாமல், தன் தாயைப் பார்த்து, “அப்படி உத்தவன் திரும்பி வருவான் என நிச்சயமாக உனக்குத் தெரியும் என்றால் ஏன் அவனோடு துணைக்கு உன் அருமை மகனை அனுப்பி வைக்கவில்லை!  அவனையும் அனுப்பி இருக்கலாமே!” என்றவள் திரும்பித் தன் சகோதரனைப் பார்த்து, “ ஆஹா, என் வீரம் நிறைந்த சகோதரரே!  நீர் உங்களைக் குறித்து மட்டும் எண்ணிக் கொள்கிறீர்கள்;  உங்கள் நலத்தை மட்டும்.  ஆனால் நீங்கள் ஒரு கோழை!  பயந்தாங்குளி. நீர் பயந்து நடுங்கி விட்டீர்! உத்தவனோடு துணைக்கு நீங்கள் ஏன் போயிருக்கக் கூடாது?  ஏன் போகவில்லை?” என்றாள்.


4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ச்பாஷ் ! HEARTIEST CONGRATULATIONS TO ஹிடும்பி + பீமசேனன்.

இராஜராஜேஸ்வரி said...

“ஆஹா, அந்தக் குழந்தை மட்டும் ஆண் மகவாகப் பிறந்தால்??? குரு வம்சத்தினரின் மூத்த பேரக் குழந்தை, அடுத்த யுவராஜா, சக்கரவர்த்தி பரதனால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ராஜ்யத்தின் முதல் வாரிசாக ஆவான். அவன் தான் அடுத்த ராஜாவாகவும் இருப்பான். குரு வம்சத்தினரின் அரியணைக்கு ஒரு வாரிசு பிறக்கப் போகிறது.” குந்தி மேன்மேலும் சொல்லிக் கொண்டே போனாள். “நிச்சயமாய் தாயே, அப்படியே நடக்கும்.

வனவாசத்தில் முதல்
சந்தோஷவாசம்

திண்டுக்கல் தனபாலன் said...

முந்தைய பகிர்வுகளையும் நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன்... நன்றி... தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

பீமனுக்குப் பிறக்கப்போகும் இந்தக் குழந்தைதான் மூத்த குழந்தையா? அட!

யார் என்ன சமாதானம் சொன்னாலும் சமாதானமாகாமல் துக்கமடையும் சகோதரிகள் பாடு பாவம்தான். உத்தவனும் அப்புறம் பாவம்தானோ!