Thursday, August 8, 2013

ஐந்து சகோதரர்களுடன் உத்தவன்!

“நீ எப்படி உணர்கிறாய்? உனக்குள் என்ன தோன்றுகிறது?”  உத்தவன் கேட்டான்.


“நான் சரியாகவே இருக்கிறேன்.  சரியாக இருப்பதாகவே உணர்கிறேன்.  நான் நன்றாய்ச் சாப்பிடுகிறேன். நல்லதொரு அரசனாக இந்த ராக்ஷசர்களை வழி நடத்துகிறேன்.  நல்லதொரு கணவனாக, விசுவாசமுள்ளவனாக என் மனைவியிடம், ஹாஹா, அழகான ராக்ஷச மனைவியிடம் நடந்து கொள்கிறேன். என்ன ஒரு கஷ்டம்னா, அவள் தலையிலே கட்டிக் கொண்டிருக்கும் பல்வேறு கயிறுகள் தான் வெறுப்படையச் செய்கின்றன. “இதை மிக ரகசியமாக பீமன் கூறினான்.

அவர்கள் இருவரும் அடர்ந்த காட்டுக்குள்ளே சென்று கொண்டிருந்தனர்.  முடிவில் அவர்கள் ஒரு பெரிய சுற்றிலும் மரங்கள் சூழ்ந்ததொரு குடியிருப்பை அடைந்தனர். மரங்கள் சூழ்ந்திருக்க உயரத்தில் மரங்களின் கிளைகளுக்கு  நடுவே அழகான குடிசை மூங்கிலாலும், புற்களாலும் கட்டப்பட்டு ஆங்காங்கே காணப்பட்டது. ஒவ்வொரு குடிசையும் மரங்களால் சூழப்பட்டிருந்தது காணக்கிடக்காத காட்சியாக இருந்தது.  உத்தவன் அதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். மரங்களின் உயரத்திலே கட்டப்பட்டிருந்த குடிசைகள் அனைத்தையும் பார்த்து வியப்புடன் பறவைகளைப் போல மரங்களின் மேலே குடிசை கட்டவேண்டிய அவசியம் என்ன எனத் தோன்றியது அவனுக்கு.  அதை உடனே பீமனிடம் கேட்கவும் கேட்டான்.  “இந்தக் கூடுகள்  ஏன் இப்படிக் கட்டப்பட்டிருக்கின்றன!” என உத்தவன் பீமனிடம் கேட்டான்.

“ஓ, உத்தவா, என் ராக்ஷசக் குடிமக்கள் வசிப்பதற்குத் தான்.  அனைத்து ராக்ஷசர்களும் மரங்களின் மேலே கட்டப்பட்டிருக்கும் இந்தக் குடிசைகளிலேயே வாழ்கின்றனர்.  ஒவ்வொரு இரவும், குடும்பம் மொத்தமும் மரத்தின் மேலேறி அவரவர் குடிசைக்குச் சென்று தூங்குவார்கள்.  தரையில், அதாவது பூமியில் குடிசை கட்டிக் கொண்டு வாழ்ந்தாலோ தூங்கினாலோ இரவில் இனம் தெரியா எதிரிகளால் கொல்லப்பட்டுவிடுவோம் என அச்சம் அவர்களுக்கு நிறைய உண்டு.  இவர்களைப் போல் நரமாமிசம் தின்னும் வேறொரு ராக்ஷசக் கும்பலுக்குப் பலியாகி அவர்கள் இவர்களைத் தின்றுவிட்டால்?” என்றான் பீமன்.  அந்தப் பரந்த மரங்கள் அடர்ந்த வெளியின் வேறோர் எல்லையில் காணப்பட்ட பெரியதொரு மரத்தோப்பையும், அதில் கட்டி இருந்த குடிசையையும் காட்டினான் பீமன்.  அவன் முகம் மிகப் பெருமையில் மலர்ந்தது.


 “ இதோ!  இங்கே தான் இந்த இடங்களிலே தான் எங்கள் தாய் குந்தியும், மற்ற ஐந்து சகோதரர்களும் வசிக்கின்றனர்.  அவர்கள் எப்போதாவது தான் கீழே இறங்குவார்கள்.  நானும் அவர்களைக் கீழே இறங்குவதில் இருந்து தடை செய்திருக்கிறேன்.  அதுவும் நான் இல்லாத சமயம் எனில் அவர்கள் மேலேயே இருக்க வேண்டும் என்றும் கண்டிப்பாகக் கூறி இருக்கிறேன்.  ஏனெனில் இந்த ராக்ஷசர்களை நம்ப முடியாதப்பா!  திடீரென அவர்களுக்கு என் தாய், சகோதரர்களின் நரமாமிசத்தை ருசிக்கும் ஆவல் தோன்றிவிட்டால் என்ன செய்வது!  அதுவும் சில சமயங்களில் அவர்கள் என் தாய் குந்தியைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே!  அவர்கள் மனதுக்குள்ளாகவே அவளின் மிருதுவான தசையையும் அதன் ருசியையும் அனுபவிக்கிறார்களோ என எனக்குத் தோன்றும்! “ என்ற பீமன் சற்றுத் தொலைவில் இருக்கும் ஒரு பெரிய மரத்தைச் சுட்டிக் காட்டினான்.  அதன் அடர்ந்த கிளைகள் கொஞ்சம் ஆங்காங்கே வெட்டப்பட்டு இடம் உண்டாக்கப்பட்டுச் சற்றுப் பெரியதொரு குடிசை அங்கே காணப்பட்டது.  “ஆஹா, அதோ பார் உத்தவா!  அது தான் என் அரச மாளிகை! அரண்மனை!” என்று பெருமை பொங்கச் சொல்லிவிட்டுக் கடகடவெனச் சிரித்தான்.


அந்தக் குடிசைகளின் எதிரே அவர்கள் இருவரும் வந்து நின்றனர்.  அப்போது பீமன் உத்தவன் அதிசயிக்கத் தக்கதொரு காரியத்தைச் செய்தான்.  காட்டில் சற்று முன்னால் பீமன் புரிந்த கர்ஜனையைக் கேட்டு நடு நடுங்கிய உத்தவன் இப்போது பீமன் அப்படியானதொரு கர்ஜனையைச் செய்யக் கண்டான்.  ஆனால் இரண்டுக்கும் இருந்த வித்தியாசம் தெள்ளத் தெளிவாக இருந்தது.  காட்டில் பீமன் கோப கர்ஜனை செய்தான் எனில் இங்கேயோ விளையாட்டாக, உல்லாசமாக, களிப்பாக, அழைக்கும் விதமாகக் கர்ஜித்தான்.  மேலிருந்த குடிசைகளின் வாயில் திறந்து உத்தவனுக்கு அறிமுகம் ஆன அத்தை குந்தியின் முகம் முதலில் தெரிந்தது.  சற்று நேரத்திலேயே மற்ற நான்கு சகோதரர்களின் முகமும் அருகே தெரிந்தன.


“தாயே, இதோ உத்தவன் வந்திருக்கிறான்!”பீமன் அவர்களின் தாய்மொழியில் குந்தியிடம் சொன்னான்.  “உத்தவன் நம்முடன் தங்கி இருந்து நம்முடன் இந்தக் காட்டு வாசத்தை அனுபவிக்கவேண்டி வந்திருக்கிறான்.  நமக்கெல்லாம் துணையாக இருக்கப் போகிறானாம்.  நீங்கள் அனைவரும் கவலை இன்றிக் கீழே இறங்கி வாருங்கள்!” என்றான் பீமன்.  பீமனின் அழைப்பு கர்ஜனையைக் கேட்ட ஹிடும்பி, உடனேயே அங்கிருந்து தன் உணர்வுகள் அனைத்தும் தெரியும்படியான மெல்லியதொரு இசையை இசைத்தாள்.  அதில் எந்த மொழி வார்த்தைகளும் இல்லை எனினும் அவளின் வரவேற்பையும் கணவனைக் காணும் ஆவலும், ஆசையும், அன்பும் எதிரொலித்தன.  பீமன் கீழே இருந்தே அவளைப் பார்த்த வண்ணம் தன் பெரிய கரங்களை உயரத்தூக்கி ஆட்டினான்.  சப்தமாகச் சிரித்த வண்ணம், “ஹிடும்பி, கீழே இறங்கி வா!’ என தனக்குத் தெரிந்த கொச்சையான  ராக்ஷச மொழியில் கூறினான்.  “இது வரையிலும் நாங்கள் ஐந்து சகோதரர்கள் தான் இருந்தோம்.  இனி நாங்கள் அறுவர்!” என்றும் அதே மொழியில் அவளிடம் கூறினான்.


உத்தவனுக்கு இன்னமும் தான் காண்பது கனவா, நனவா என்ற சந்தேகம் தீரவே இல்லை.  அவர்களின் மதிய உணவு நேரம் முடிந்து விட்டிருந்தது.  ராக்ஷசர்கள் சாதாரணமாக சூரிய அஸ்தமனத்துக்கு முன்னரே உணவு உண்டு விட்டு மரங்களின் மேல் ஏறி அவரவர் குடிசையை அடைந்துவிடுவார்கள்.  ஏனெனில் இருட்டி விட்டால் மரங்களின் மேல் ஏறுவதில் சிரமம் இருக்கும்.   ஆகவே அத்தை குந்தி அனைவரையும் உடனடியாகப் படுக்கப்போகச் சொன்னாள்.  எல்லாப் பேச்சுக்களையும் மறுநாள் வைத்துக் கொள்வோம்.  இப்போது இந்தக் கடுமையான பயணத்தினாலும், மரத்தின் மேலேயே இரண்டு நாட்களுக்கும் மேல் தங்கி இருந்ததிலும் மிகக் களைப்படைந்திருந்த உத்தவனுக்கு நீண்ட தூக்கம் அவசியம் எனவும் கூறினாள்.  ஆஹா, அத்தை குந்தி உண்மையிலேயே மிகவும் தாயன்பு கொண்டவளே.  அவளுக்கு நிகர் அவளே!  உத்தவனுக்கு மனதில் பெருமிதம் பொங்கியது.  அவன் வந்ததுமே மிகப் பலவீனனாகவும், தூக்கம் நிறைந்தவனாகவும் காணப்பட்டதை உணர்ந்து விட்டாளே!  ஆகவே ஐந்து சகோதரர்களையும் மிகக் கண்டிப்பாக உத்தவனுக்குத் தூக்கமும், ஓய்வும் தேவை என வற்புறுத்தி விட்டாள்.


யுதிஷ்டிரன் அந்த மரத்தின் மேலே, மிக மேலே இருந்த ஒரு குடிசையில் தன் தாய் குந்தியுடன் வசித்து வந்தான்.  நகுலனும், சஹாதேவனும் இன்னொரு குடிசையைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.  ஆகவே அர்ஜுனன் தனியாக வசித்ததால் உத்தவனுக்கு அவனுடன் தங்கிக் கொள்ள இடம் கிடைத்தது.  மேலே குடிசையில் வசிப்பவர்கள் மேலே ஏறவும், கீழே இறங்கவும் வசதியாகக் கயிறுகளால் உறுதியாகப் பிணைக்கப்பட்டுக் கட்டப்பட்டதொரு நூலேணி பயன்பட்டது. ஒவ்வொரு குடிசையிலிருந்தும் அத்தகையதொரு நூலேணி தொங்கியது. குந்தியால் அந்த ஏணியில் ஏற முடியாது என பிள்ளைகளில் எவரானும் ஒருவர் மாற்றி ஒருவர் அவளைத் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு மேலே ஏறுவதையோ அல்லது கீழே இறங்குவதையோ செய்தனர்.  உத்தவனுக்கு விரைவிலேயே ஐந்து சகோதரர்களும் இயற்கைக்குப் புறம்பானதொரு உலகிலே, இயற்கைக்கு மாறானதொரு வாழ்க்கையை வாழ்வது தெரிந்தது.  பீமனைத் தவிர மற்ற சகோதரர்கள் நால்வரும், குந்தியும், அந்த ராக்ஷசர்களிடம் எந்தவிதமானதொரு தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டு அவர்களுக்குள்ளேயே பழகிக் கொண்டு வாழ்ந்தனர்.


யுதிஷ்டிரன் கடுமையானதொரு முகபாவத்துடன் அதிகம் பேசாமல், பெரும்பாலும் மெளனத்தையே கடைப்பிடித்தான்.  அர்ஜுனனுக்கோ அவனுடைய வில்லும், கற்களால் கூர்மையாக்கப்பட்ட நுனியுடன் கூடிய அம்புகளையும் தவிர வேறே எந்த நோக்கமும் இருப்பதாய்த் தெரியவில்லை.  அதோடு அவனுடைய ஒரே கவலை தான் மட்டுமின்றித் தன் மற்ற நான்கு சகோதரர்களும், தாய் குந்தியும் பாதுகாப்புடனும், பத்திரத்துடனும் இருக்கவேண்டும் என்பதுவே.  நகுலனோ தன் தாய்க்குச் சேவை செய்வதிலேயே இன்பம் கண்டு கொண்டிருந்தான்.  ஒரு நொடிக்கு ஒரு முறை குந்திக்கு என்ன தேவை என்பதைக் கவனித்துப் பார்த்துச் செய்து கொடுத்தான்.  சஹாதேவன் தன் சகோதரர்களுக்குப் பணிவிடை புரிந்ததோடல்லாமல், ஒழிந்த நேரங்களில் அர்த்தமுள்ள மெளனத்தோடு கூடிய நீண்ட யோசனையுடனும், இரவுகளில் கண் விழித்து நக்ஷத்திரக் கூட்டங்களையும் அதன் மாறுபடும் போக்குகளையும் கவனித்துக் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பான்.  இந்த நான்கு சகோதரர்களும், அவர்கள் தாயும் அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர்.  ராக்ஷசர்களின் மொழியைக் கற்க எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை.  அதில் அவர்களுக்கு சிரத்தையுமில்லை.  அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்பவும் இல்லை.  தங்களுடைய அன்றாடப் பழக்கவழக்கங்களை இந்த மாறுபாடான சூழ்நிலையால் குலைந்து போகாமல் தங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்ளாமல் இருக்கவே பிரயத்தனப்பட்டனர்.  பீமன் மட்டுமே அவர்களில்  தனித்து மாறுபட்டுக் காணப்பட்டான்.

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஆஹா, அத்தை குந்தி உண்மையிலேயே மிகவும் தாயன்பு கொண்டவளே. அவளுக்கு நிகர் அவளே! உத்தவனுக்கு மனதில் பெருமிதம் பொங்கியது.

சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை மிகவும் சுவாரஸ்யமாகப் போகிறது. உத்தவன் சேர வேண்டிய இடமான குந்தி + பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்தாச்சு.

மேலும் என்னென்ன நடக்குமோ ஆவலுடன்.

ஸ்ரீராம். said...

அழகான ராட்சஸ (ராக்ஷஸ) மனைவி! :)))

உத்தவன் களைப்பை உணரும் குந்தியின் பாசம்!

வித்தியாசமான சூழ்நிலையில் வாழ நேர்ந்த அவலம்.

பீமன் மட்டும் அவர்களோடு ஓரளவு ஒன்றுவது.

இவை மனதில் நின்ற இடங்கள்.

sambasivam6geetha said...

வாங்க ராஜராஜேஸ்வரி, குந்தியின் தாய்மை தான் ஐந்து சகோதரர்களின் ஒற்றுமைக்கு அடி நாதம். :)

sambasivam6geetha said...

மேலும் போகப் போக சுவாரசியம் தான், பொறுமையாப் படித்து வாங்க. :))

sambasivam6geetha said...

அழகான ராக்ஷஸியே, இல்லையா ஶ்ரீராம்! :))) சிலரால் எல்லோரும் ஒன்ற முடியும், பலரால் முடியாது. :))))