Friday, March 21, 2014

தர்மத்தைத் தாங்கும் தூண் யார்?

துரோணருக்குக் கிருஷ்ணன் தன்னைப் பற்றிப் புகழ்ந்து சொன்னது மனதில் மகிழ்ச்சியையே தந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் எச்சரிக்கையுடனேயே இருந்தார்.  ஒரு புன்னகையை மட்டும் பதிலாகச் சிந்திய துரோணர், “ஆஹா, இப்படி ஒரு நம்பிக்கை என்னிடம் இருப்பதால் தான் நீ ஷிகண்டினையும் என்னிடம் அனுப்பி வைத்தாயா, வாசுதேவா?” என்று கேட்டார்.  “நான் அப்படிச் செய்யவில்லை எனில், இது வேறுவிதமாக மாறி இருக்கும் ஆசாரியரே! ஷிகண்டின் எப்படி இருக்கிறான்?” எனக் கிருஷ்ணன் கேட்டான்.

“ஸ்தூனகர்ணன் என்னும் யக்ஷனின் பாதுகாப்பில், அவனுடைய மருத்துவக் கவனிப்பில் ஷிகண்டின் இருக்கிறான்.  ஓ, விரைவில் அவன் முழு மனிதனாக, ஆண்மகனாக ஆகி வெளிப்படுவான் கிருஷ்ணா!” என்றார் துரோணர்.  இதைக் கொஞ்சம் கர்வத்துடனேயே சொன்ன துரோணருக்கு மீண்டும் அவருடைய இயல்பான சந்தேகம் தலையெடுக்கக் கிருஷ்ணனிடம், “ நீ ஏன் துருபதனின் பிள்ளையை என்னிடம் அனுப்பினாய் வாசுதேவா?  நான் அவனை ஏற்றுக்கொள்வேன் என எப்படி நினைத்தாய்?  துருபதன் என்னுடைய முதன்மையான எதிரி என்பதை நீ நன்கறிவாய்!” என்று கேட்டார்.

“ஆசாரியரே, நீர் சாதாரண பிராமணன் அல்ல.  அந்த சாக்ஷாத் பரசுராமரின் சீடப் பரம்பரையின் முக்கியச் சீடர் ஆவீர்.  பரசுராமரின் சீடன் என்பது சாமானியத் தகுதி வாய்ந்ததா?  அது மட்டுமல்ல ஆசாரியரே, விரோதியோ, நண்பனோ, உமக்கு அது முக்கியமல்ல.  ஒரு சீடனுக்குள்ள பணிவோடும், விநயத்தோடும் உம்மிடம் யார் அணுகினாலும் நீர் அவர்களைத் தள்ள மாட்டீர்கள் என்பதை நான் புரிந்து கொண்டிருந்தேன். “துரோணரை உள்ளூர முகத்துதியே செய்தான் கிருஷ்ணன். “ஆஹா, மனித மனத்தின் பலங்களையும், பலவீனங்களையும் நீ நன்கு அறிந்திருக்கிறாய் கிருஷ்ணா!  ஒரு பலவீனமான மனதுடையவனின் மனதோடு எப்படி ப் பழக வேண்டும் என்பதை உன்னிடமிருந்தே அறிந்து கொள்ள வேண்டும். “ இதைச் சொல்கையில் துரோணர் தன் சந்தேகங்களை அறவே விட்டு விட்டு முழுமனதோடு ஆனந்தம் அடைந்தார்.  அவர் குரு பரசுராமர் சாமானியரா?  இந்த பூமியிலேயே சிறந்த குரு ஆவாரே!  அவரோடு என்னை ஒப்பிட்டு அல்லவோ இவன் பேசுகிறான்!  இவனுக்குத் தான் நம் குருவை வைத்து நம்மிடமும் எவ்வளவு மரியாதை! ம்ஹூம், இன்னமும் இவனிடம் சந்தேகம் கொள்ளலாகாது.  அப்படி ஒரு சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

“இல்லை, ஆசாரியரே, நான் மனிதனின் நல்ல குணங்களையும், அவர்களின் நேர்மையான உள்ளுணர்வுகளையும் மதிக்கிறேன், அவற்றையே நம்புகிறேன்.  அப்படி நம்பியதில் இன்று வரை எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டதே இல்லை.  ஷிகண்டினைக் குறித்து, அவனை உம்மிடம் நான் தான் அனுப்பினேன்;  ஆனால் இப்போது அவன் எனக்குத் திரும்ப வேண்டும்.”

“அவனுடைய மருத்துவம் இன்னமும் முழுமையாக முடியவில்லையே வாசுதேவா!  இந்நிலையில் அவன் மிகவும் பலஹீனனாக அல்லவோ இருப்பான்!  இப்போது அவனை அழைத்துச் செல்வது சரியில்லை!” என்றார் துரோணர்.

“ஓ, அதனால் பரவாயில்லை ஆசாரியரே,  அவன் சுயம்வரத்துக்குள்ளாகக் காம்பில்யம் வந்தடைந்தால் போதுமானது.  உத்தவன் இங்கே தங்கி அவனை அழைத்துக் கொண்டு காம்பில்யம் வருவான்.  அவனுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உத்தவன் செய்து கொடுப்பான்.”

“உனக்கு திரெளபதியின் சுயம்வரத்தில் ஏன் இவ்வளவு ஆர்வம் வாசுதேவா? துருபதனுக்கு உதவி செய்வதிலும் ஏன் இவ்வளவு ஆர்வம்?” ஆசாரியருக்கு மீண்டும் சந்தேகம் தோன்றிவிட்டதோ என்னும்படி இருந்தது அவர் குரல். கிருஷ்ணன் அவரிடம்  “துருபதன், உண்மையிலேயே நல்ல மனிதன்; நல்ல அரசன்.  அவர் மனதில் உள்ள அந்த கசப்பு உணர்ச்சி மட்டும் மறைந்து விட்டால்!!  தர்மத்தின் தூணாக நின்று இந்த ஆர்யவர்த்தத்தைக் காத்து நிற்பார்!” என்றான்.

கிருஷ்ணன் சொன்னதைக் கேட்டுச் சிரித்த துரோணர், “என்னுடைய வெறுப்பையும், விரோதத்தையும் கைவிட்டுவிட்டால் நானும் அப்படி இன்னொரு தர்மத்தின் தூணாக ஆகிவிடுவேன் அல்லவா?” என்று கேட்டார். “ஆசாரியரே,   ஒற்றைத் தூணில் தர்மத்தால் எங்கனம் நிற்க இயலும்?” இதைச் சொல்கையில் கிருஷ்ணனும் தன் மனம் விட்டுச் சிரித்தான்.  “வாசுதேவ கிருஷ்ணா!  நீ தர்மத்தைக் குறித்து அடிக்கடி, அதிகமாகவும் பேசுகிறாய்!  உனக்கு அதைக் குறித்து என்ன தெரியும்?  தர்மம் என்றால் என்ன வாசுதேவா?”  துரோணர் கேட்டார்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கேள்வி...! - கண்ணனுக்கே...!

ஸ்ரீராம். said...

இது கூடப் படித்த நினைவு இருக்கிறது. படித்திருந்தால் பின்னூட்டமும் இட்டிருப்பேன். அபுரி!