Thursday, June 19, 2014

கண்ணனின் சிரிப்பும், ஜராசந்தன் கொதிப்பும்!

ஜராசந்தன் தைரியசாலி தான். வீரம் செறிந்தவனும் கூட.  அதோடு வாசுதேவ கிருஷ்ணன் வந்திருப்பதைக் கேட்டதும், அவனுள் ஏற்பட்ட ரௌத்திரம் தாங்க முடியாமல் இருந்ததால் அதை அப்படியே அவனிடம் நேரிலும் காட்ட விரும்பினான்.  ஆனால் அவன் என்னதான் தான் கோபமாய் இருப்பதாய்க் காட்டிக் கொண்டாலும் உள்ளூற ஒரு உறுத்தல் இருக்கத் தான் செய்தது. என்னதென்று அறியாத ஓர் உள்ளுணர்வு அவனை மிகவும் தொந்திரவு செய்தது.  காம்பில்யத்திற்கு சுயம்வரத்தில் பங்கெடுத்துக்கொள்ளக் கிருஷ்ண வாசுதேவன் வந்திருக்கிறான் என்னும் செய்தி கிட்டியதுமே அவன் முன் ஜாக்கிரதையுடன் தான் இருந்தான்.  அவன் எச்சரிக்கை நரம்புகள் தூண்டப்பட்டு எப்போதுமே எச்சரிக்கை உணர்வோடு இருந்தான்.  ஆனால் அதன் மூலம் குறிப்பிடத் தக்க நன்மை ஏதும் அவனுக்கு ஏற்படவே இல்லை.


ஒவ்வொரு சமயமும் இந்த மாட்டிடையன் அவனுடைய திட்டங்களை எல்லாம் மூழ்கடித்து வலுவற்றுப் போகச் செய்து விடுகிறான் என்பதே அவன் கடந்த காலங்களில் அனுபவித்த ஒன்று.  ஆனால் இப்போது இங்கே இந்நேரத்தில் தன்னந்தனியாக அன்றோ வந்திருக்கிறான்?  இப்போது தன் ஜன்ம வைரியின் எதிரே அமர்ந்திருக்கும் இந்த நேரத்தில் அவன் பேரிடர் ஒன்று வரவிருக்கிறது என்பதை அனுமானித்தான்.   மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்த விளக்கொளியில் அவனெதிரே அமர்ந்திருந்த கிருஷ்ணன் உருவமற்ற ஒரு ஆவியைப் போல/ ஒரு பேயைப் போல் ஜராசந்தனுக்குத் தோன்றினான்.

அதற்கு மேல் ஜராசந்தனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.  “இங்கே ஏன் வந்தாய்?” என்று மிகக் கடுமையாகக் கண்ணனிடம் கேட்டான்.  

“சொல்கிறேன், கேள்!  வீணாக என்னை கோமந்தகம் முழுதும் தேடி அலைந்தாய்!  மத்ராவிலும் அப்படித் தான் தேடினாய்.  இதோ இங்கே உன் கண்ணெதிரே இந்த நள்ளிரவு நேரத்தில் உன் கூடாரத்தினுள்  நான் நிராயுதபாணியாக தன்னந்தனியாக  வீற்றிருக்கிறேன். “

“நீ என் ஜன்ம வைரி!” கத்தினான் ஜராசந்தன் ஆக்ரோஷம் பொங்க.  “ஆம், எனக்குத் தெரியும்.  இருந்தும் நான் என்னை உன்னிடம் ஒப்புக் கொடுக்க வந்துள்ளேன்.” என்று புன்னகையுடன் கூறினான் கிருஷ்ணன்.  தன் தாடியைப் பிடித்து நீவிக் கொண்டே ஜராசந்தன் யோசித்தான்.  எதுவும் பேசாமல் கிருஷ்ணனையே பார்த்தான்.  தன் மனதினுள் தன்னுடைய பலம் அனைத்தையும் சேகரிக்க முயன்றான்.    தான் உள்ளூர  அடைந்திருக்கும் அச்சம் வெளிப்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.  கண்ணனைப் பார்த்து, “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டான்.

“இங்கே இதோ இருக்கும் யுவராஜா சஹாதேவன், இளவரசன் விதந்தா ஆகியோர் முன்னால் நான் அந்தக் காரணத்தைச் சொல்லியே ஆகவேண்டுமா?  ஒருவேளை நாம் பேசிக்கொள்வது நம் இருவருக்குள் மட்டுமே இருக்கட்டும் என நீ விரும்பலாம்.  நாம் மிகப் பழைய எதிரிகள் அல்லவா? இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் நம் சண்டையிலிருந்து விலகி இருக்கட்டும். “ சொன்ன கிருஷ்ணன் முகத்தில் குறும்புப் புன்னகை தவழ்ந்தது.  முதலில் கொஞ்சம் தயங்கிய ஜராசந்தன் பின்னர் தன் தலை அசைவின் மூலம் சஹாதேவனையும், விதந்தாவையும் வெளியேற்றினான். இருவருமே மிகத் தயக்கத்துடனேயே வெளியேறினார்கள்.  என்னதான் ஜராசந்தன் வலிமை மிக்கவனாக இருந்தாலும், தன் பரம வைரியின் தயவிலேயே இருக்கிறான் என்பதை மறவாமல் அந்தக் கூடாரத்தின் வெளியே அழைத்தாலோ, அல்லது விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழ்வது தெரிந்தாலோ உடனே செல்லும்படியாகத் தயார் நிலையில் நின்று  கொண்டனர்.

“ஏன் வந்தாய் நீ?” ஜராசந்தன் குரல் மீண்டும் பொறுமையற்றுக் கேட்டது கிருஷ்ணனை.

“உன்னைப்பேரழிவிலிருந்து காக்கவே!” என்றான் கிருஷ்ணன்.  “எனக்கு உன் உதவி தேவை இல்லை.  இப்போது மட்டுமல்ல.  எப்போதுமே! உன் நேரத்தை வீணாக்காமல் இங்கிருந்து செல்!” என்று கடுமையாகக் கூறினான் ஜராசந்தன்.

“நான் என் நேரத்தை வீணடிக்கவென்று வரவில்லை.  உனக்கு ஒரு ஆலோசனை கொடுக்கவே வந்தேன்.” என்றான் கிருஷ்ணன்.

“நீ எனக்கு ஆலோசனை கொடுக்கப் போகிறாயா? ஹூம்!” என்று இறுமாப்புடன் கூறினான் ஜராசந்தன்.

“ஆம்!” என்று பொறுமையுடன் கூறிய கிருஷ்ணன் தொடர்ந்து, “திரௌபதியைக் கடத்தும் எண்ணத்தை விட்டு விடு!” என்றான்.  “இதுவே என் ஆலோசனை!” என்றும் கூறினான்.

ஜராசந்தனின் பொறுமை எல்லாம் பறந்தே போய்விட்டது.  தன் இரை மீது பாயத்துடிக்கும் சிங்கத்தைப் போலப் பாய்ந்தான்.  தன் கைகளைப் பிசைந்து கொண்டான்.  செய்வதறியாமல் தவித்தான். “என்ன பேசுகிறாய் நீ! திரௌபதியைக் கடத்துவதா?  சற்றும் மரியாதையில்லாமல் துடுக்குத்தனமாக என்னவோ உளறுகிறாய்!  நாங்கள் இங்கே சுயம்வரத்தில் திரௌபதியை வென்று மருமகள் ஆக்கிக்கொள்ளவே வந்துள்ளோம்.” என்றான்.

“அப்படியா?  எனில் எனக்கு நீ வாக்குறுதி கொடு!  உன்னுடன் வந்திருக்கும் மகதர்களில் எவருமோ, உன் மகனோ, உன் பேரனோ எவருமே திரௌபதியைக் கடத்த முயற்சிக்க மாட்டார்கள் என வாக்குறுதி கொடு!” கிருஷ்ணன் கேட்டான்.  கோபத்தை அடக்கிக்கொள்ள முயன்ற ஜராசந்தன் தன் படுக்கையில் இருந்த மெத்தையையும் , தலையணைகளையும் கசக்கினான். தூக்கி எறிந்தான்!”எவ்வளவு தைரியம் உனக்கு!  என்னிடமா வாக்குறுதி கேட்கிறாய்? மகதச் சக்கரவர்த்தியிடமா? “ என்று பொங்கினான்.

“நான் ஒன்றும் ஒரு சாமானியன் அல்ல;  நானும் தகுதி படைத்தவனே.  நீ என்னை கோமந்தகத்தில் கொன்றுவிட மிகப் பாடுபட்டாய் ஆனால் இயலவில்லை;  உன்னை நான் கோமந்தகத்திலேயே கொன்றிருக்க முடியும். என் சகோதரனின் தண்டாயுதத் தாக்குதலில் இருந்து உன்னை நான் காப்பாற்றி அனுப்பினேன்.  இல்லை எனில் நீ இன்று உயிருடன் இருந்திருக்கவே முடியாது. “


“நீ விதர்ப நாட்டு   இளவரசியை  உன் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் நடத்திச் செல்லவும் நினைத்தாய். உன்னுடைய அரசியல் கொள்கைகளை நிறைவேற்றக் கருவியாகப் பயன்படுத்த எண்ணினாய்.  அவளை நான் தூக்கிச் சென்றேன்.  அதுவும் உன் கண்ணெதிரே தூக்கிச் சென்றேன்.  யாதவர்களை அடியோடு ஒழித்துக்கட்ட எண்ணினாய்.  உன்னுடைய கொடுங்கோன்மையிலிருந்து தப்பிய அவர்கள் இன்று செல்வாக்குடனும், அதிகாரத்துடனும், செல்வத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.   நான் இங்கே உன்னை எச்சரிக்க வந்தேன் எனில் அது தகுதியான ஒன்று என்பதை ஒப்புக் கொள்! புரிந்து கொள்!  நான் சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரிந்து கொள்! ” கிருஷ்ணன் பேசப் பேச ஜராசந்தன் பற்களைக் கடித்தான்.  கோபத்தில் கொந்தளித்தான்.

கிருஷ்ணனின் சொல் வன்மை ஜராசந்தனைப் பிரமிக்க வைத்தாலும், அவனைப் பார்த்து, “நீ அகந்தை பிடித்த இளைஞன்!  கர்வக்காரன்!” என்றான் ஜராசந்தன்.  “ஆம், அதனால் என்ன? நான் உன் சிநேகிதனும் இல்லை தான்.  ஆனாலும் இங்கே உனக்கு தயவு செய்ய உனக்காக ஒரு சேவை செய்யவே வந்திருக்கிறேன்.”  இதைச் சொன்ன கிருஷ்ணன் குரலில் எவ்விதமான தடுமாற்றமும் இல்லை.

“நான் உன் சிநேகிதனாக இருக்க விரும்பவில்லை;  நீயும் என் சிநேகிதத்தை விரும்பாதே! இப்போது மட்டுமல்ல; எப்போதுமே! “ என்றான் ஜராசந்தன்.

“எனக்கு அது நன்றாகவே தெரியும்.  நானும் உன்னை என் சிநேகிதனாக அங்கீகரிக்கவே மாட்டேன்.” என்றான் கிருஷ்ணனும்.  “ என் மருமகன் கம்சனை நீ கொன்றதை என்னால் ஒரு போதும் மறக்க இயலாது;  அதற்காக உன்னை நான் மன்னிக்கவும் மாட்டேன்.  தெரிந்து கொள்!” என்றான் ஜராசந்தன்.

“நான் உன் மன்னிப்பை எதிர்பார்த்தெல்லாம் இங்கே வரவில்லை.  எனக்கு உன் மன்னிப்பும் தேவை இல்லை. உன்னை நீயே காப்பாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கிறேன்.  திரௌபதியைக் கடத்தும் எண்ணத்தை விட்டுவிடு!” என்றான் கிருஷ்ணன்.

கண்ணனின் துணிவு ஜராசந்தனை பிரமிக்க வைத்தது.  “யார் சொன்னார்கள் நான் திரௌபதியைக் கடத்தப் போவதாய்?  நீ யார் என்னை இதைச் செய்யாதே என்பதற்கும், செய் எனக் கட்டளை இடுவதற்கும் யார் நீ?  உனக்கு என்ன உரிமை?  இடைப்பயலே, என்னை மிரட்டவா செய்கிறாய்?  உன்னால் முடியுமா?  இதே ரீதியில் நீ பேசிக் கொண்டு போனாயானால் உன் தலையைச் சுக்கு நூறாக்கி விடுவேன். “

அவனைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் பார்வையுடன் பார்த்த கிருஷ்ணன் சிரித்தான். “இதோ பார், என் தலையை உடைக்கும் துணிச்சல் உனக்கிருந்தால் அதை இப்போதே செய்!  ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்;  அப்படி நீ செய்தால் இங்கே வந்திருக்கும் அரச குலத்தினர் அனைவரும் ஒன்று கூடி காம்பில்யப் படைகளுடன் சேர்ந்து உன்னுடன் போர் தொடுப்பார்கள்.  உன் உயிரை எடுக்க நினைப்பார்கள்.  சுயம்வரத்திற்கென ஏற்படுத்தப்பட்டப் புனிதமான நெறிமுறைகளை நீ மீறிவிட்டாய் என நினைப்பார்கள்.  சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஒரு விருந்தாளி கொல்லப்பட்டாலும் அதற்குப் பழி வாங்குவார்கள்.  எவன் கொன்றானோ அவன் உயிருடன் இருக்க மாட்டான்.”

“என்ன புனிதமான ஒழுங்கு நெறிமுறைகளா?  அப்படி எனில்? “ ஜராசந்தன் வியப்புடன் கேட்டான்.

“ஆம், தர்மத்திற்கு உட்பட்டப் புனிதமான ஒழுங்கு நெறிமுறைகள்;  அதற்கு உட்பட்டே சுயம்வரங்கள் நடக்கின்றான.  அநாதியான காலம் தொட்டு இவை கடைப்பிடிக்கப்படுகின்றன.  சுயம்வரம் என்பதே ஒரு புனிதமான கோலாகலமான விழா! “

“நீங்களும் உங்கள் ஆர்ய ஒழுங்கு நெறிகளும்!  இவற்றைக் கண்டாலே எனக்குக் குமட்டுகின்றது.”

“பின் ஏன் இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்தாய்? “

“போய்விடு, ஒழிந்து போ!  போய்விடு!” கத்தினான் ஜராசந்தன்.  கிருஷ்ணன் சொல்வதன் உண்மையான பொருள் புரிந்ததால் அவன் பொறுமை பறி போனது.  “என்னுடைய வேலைகளில் தலையை நுழைக்காதே!  இங்கிருந்து சென்றுவிடு!” என்றான் ஜராசந்தன்.


2 comments:

பித்தனின் வாக்கு said...

nalla irukunga. seekiram pandavarkal velavthai padikka aasaiya irukinrathu

ஸ்ரீராம். said...

ஜராசந்தனுக்கு உண்மை சுடுகிறது!