Wednesday, September 10, 2014

அர்ஜுனனின் புலம்பல்கள்!

“அர்ஜுனா, அர்ஜுனா!  அதெல்லாம் நீ அவளை இழக்கவில்லை; ஆனால் அவள் அனைத்தையும் கருத்தில் கொண்டு நன்கு யோசித்துத் தான் உங்கள் ஐவருக்கும் மனைவியாக இருக்க யோசித்திருக்கிறாள்.  “


“ம்ம்ம்ம், நான் புரிந்து கொண்டேன் கிருஷ்ணா.  அவள் ஏன் இதைத் தேர்ந்தெடுத்தாள் என்பதை நான் நன்கு புரிந்து கொண்டேன்.  அதிலும் நீ அவள் மனதில் விதைத்த விதை நன்கு வளர்ந்து செடியாகி மரமாகி விட்டது.  “பாண்டவர்கள் அனைவரையும் நீ மணந்து கொள்வதன் மூலம், தர்ம சாம்ராஜ்யத்தை நாங்கள் ஸ்தாபிக்க நீ மாபெரும் உதவி செய்வாய்.” என்று அவள் மனதில் நீ விதைத்தது மிக ஆழமாக அவள் மனதில் பதிந்து விட்டது. கிருஷ்ணா, இது நீ விதைத்த விதையன்றோ!”


“ஆஹா, அதில் உண்மை இல்லையா? நீங்கள் ஐவரும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் ஆதரவாக இல்லை எனில் தர்ம சாம்ராஜ்யத்தை உங்களால் ஸ்தாபிக்க இயலுமா?  உன்னால் தனியாக தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வலு உள்ளதா? “


“ஒரு வேளை இயலாது போகலாம். ஆனால் கிருஷ்ணா, நாங்கள் ஐவரும் எங்கள் வாழ்க்கையைத் தனித்தனியாகத் தான் வாழவேண்டும். “


“அதுவும் சரியே! ஆனால் உன்னால் உன் சகோதரர்களுடன் எதையுமே பங்கிட்டுக்கொள்ளாமல் தன்னந்தனியாக ஒரு வாழ்க்கையை வாழ முடியுமா?  அதற்கான மனோதிடம் உன்னிடம் உள்ளதா?”


“ஒருவேளை முடியாது போகலாம்.  ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையைத் தனியாகத் தான் அவரவருக்குப் பிடித்த சிறந்த முறையில் வாழ்ந்தாகவேண்டும்.” அர்ஜுனன் திரும்பவும் அதையே சொன்னான்.  வேறு ஏதும் சொல்ல வார்த்தை இல்லை என்பது போல் அவன் பேச்சு இருந்தது.


“அப்போது எல்லாவற்றிலும் சிறந்த வழி எது?” கிருஷ்ணன் கேட்ட தொனியில் அவன் மனதில் சந்தேகம் தோன்றுமோ என்னும்படி இருந்தது.  “அர்ஜுனா, திரௌபதியுடன் சேர்ந்து ஒரு பொதுவான வாழ்க்கையை நீங்கள் ஐவரும் வாழ்வது சிறந்ததா? அல்லது நீங்கள் ஐவரும் தனித்தனியாக ஒருவர் மற்றவரிலிருந்து பிரிந்து தனியானதொரு வாழ்க்கையை வாழ்வது சரியா? இதன் மூலம் நீங்கள் ஐவரும் ஒருவர் மற்றவரிலிருந்து பிரிந்து தனியானதொரு வாழ்க்கையை வாழ்வீர்கள்!  இப்போது சொல்!  எது உன்னுடைய தர்மம்?  எது சிறந்தது?”


அர்ஜுனனுக்குப் புதிராக இருந்தது.  என்ன பதில் சொல்வதென்று அவனுக்குப் புரியவில்லை. சற்று நேரம் ஆழ்ந்து யோசித்தவன், பின்னர் கொஞ்சம் தயக்கமாகப் பேச ஆரம்பித்தான்.  “இந்தப் போட்டியில் நான் வென்றதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டும்.  ம்ம்ம்ம்ம்… அதைத் தற்பெருமை என்று சொல்லலாம். அது தான் எனக்குப் புரிகிறது.  அப்படித் தான் நான் உணர்கிறேன்.”


“அர்ஜுனா, திரௌபதியை நீ உனக்கு மட்டும் மனைவியாக இருக்கவேண்டும் என நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.  அது சரியானதே!  ஆனால்……..”கிருஷ்ணன் கொஞ்சம் தயங்கி விட்டு அர்ஜுனனைப் பார்த்த பார்வையில் ஏதோ பொருள் பொதிந்திருந்தது. “அர்ஜுனா, உன் பெரிய அண்ணா யுதிஷ்டிரன் உன்னை ஒரு தந்தையைப் போல் அன்புடனும், பாசத்துடனும் கவனித்துக் கொள்கிறார் அல்லவா?”


“ஆம், கிருஷ்ணா!”


“சரி, பீமன் உன்னை எத்தனை நிகழ்வுகளிலிருந்து, ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி உள்ளான்? அவன் இல்லை எனில் வாரணாவதத்திலிருந்து நீ உயிருடன் தப்பி வந்திருக்கவே முடியாது. ராக்ஷஸவர்த்தத்திலும் பீமன் இல்லை எனில் நீங்கள் அனைவருமே பக்ஷணமாக ஆகி இருப்பீர்கள்.” கிருஷ்ணனின் இந்தப் பேச்சுக்கு அர்ஜுனன் பதிலே பேசவில்லை.  கண்ணன் தொடர்ந்தான்.  “உன் தாயைப் பற்றி என்ன நினைக்கிறாய்? உங்கள் அனைவருக்குமாக அவள் தன் உயிரை வைத்திருக்கிறாள்.  உங்களில் அவள் தன்னையும் கலந்து விட்டாள்.  இனி நீங்கள்  அவளிடமிருந்தோ, அவள் உங்களிடமிருந்தோ பிரிய முடியாது.  அதோடு உங்களில் எவரையும் தனியாகப் பார்க்கவும் அவள் விரும்ப மாட்டாள்.  மேலும் உங்கள் தாத்தா பீஷ்மரும் சரி, ராணிமாதா சத்யவதியும் சரி, சரியான சமயம் வருகையில் நீங்கள் ஐவரும் அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள் என்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.  நீ உன் சகோதரர்களை இப்போது பிரிந்தாயானால் உங்களை எல்லாம் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்?”


“கிருஷ்ணா, என் ஒருவனைத் தவிர மற்றவர்களுடைய நலன்கள் மட்டுமே உன் கண்களுக்குத் தெரிகிறது.  அனைவரின் நலன்களையும் குறித்துக் கவலைப்படும் நீ என்னைக் குறித்து எந்தக் கவலையும் படவில்லையே!” அர்ஜுனன் குரலில் துயரம் மிகுந்தது.


“நீ அன்புடன் நேசிப்பவர்களின் மன மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு உன் மகிழ்ச்சிக்கு அஸ்திவாரம் அதில் போடப் போகிறாயா?  நீ எழுப்பும் இந்த வாழ்க்கைக் கட்டிடம் உறுதியாக இருக்குமா? அனைவரின் வருத்தத்திலும், துக்கத்திலுமா உன் வாழ்க்கையை எழுப்பப் போகிறாய்? அனைவரும் வருந்திக் கொண்டிருக்கையில் நீ மட்டும் சந்தோஷமாக இருப்பாயா?” சவால் விடும் தொனியில் கிருஷ்ணன் கேட்டான்.


“நான் எவரையும் மனவருத்தத்தில் ஆழ்த்த விரும்பவில்லை.  அதே சமயம் எனக்கு நானே வருத்தத்தை விளைவித்துக்கொள்ளவும் விரும்பவில்லை.   என் வாழ்க்கை முழுதும் மனம் உடைந்த ஒரு மனிதனாக இருக்க நான் விரும்பவில்லை.”


“சரி, திரௌபதியைப் பற்றி என்ன சொல்கிறாய்? அவளுக்கு உன்னைத் தனியாகப் பிரித்துக் கூட்டிச் சென்று வாழ்க்கை நடத்துவதிலோ அல்லது உன்னை விட்டு விட்டு மற்ற நால்வருடன் வாழ்க்கை நடத்துவதிலோ சந்தோஷமாக இருக்குமா?  அவள் என்ன நினைப்பாள்?”


“ஆஹா, எப்படி ஒரு குழப்பமான சூழ்நிலையில் எங்களைக் கொண்டு தள்ளி இருக்கிறது பொல்லாத விதி!  எல்லாமே குழப்பம்.  ஆரம்பத்திலிருந்து குழப்பம். “அர்ஜுனன் தன் தலையை உலுக்கிக் கொண்டான்.


“அர்ஜுனா, இது கடுமையான சோதனைக் காலம்!  அக்னிப்ரவேசத்துக்கு நிகரானது. உனக்கு எதிரே இருப்பவை இரண்டே இரண்டு தேர்வுகள் தான். ஒன்று நீ மட்டும் தனியாக திரௌபதியை அழைத்துச் சென்று சந்தோஷமாகக் குடும்பம் நடத்துவது; உன்னிடம் அன்பான, பாசமான மற்றவரைப் பிரிய வேண்டும். இன்னொன்று உனக்குப் பிரியமானவர்களையும், உன்னிடம் பிரியமாக இருப்பவர்களிடமும் அவர்கள் மனமும் திருப்தி அடையும் வண்ணம் நடந்து கொள்வது.  இரண்டில் நீ எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்?”


“கடவுளே, கடவுளே, கல்யாணம் என்பது எதற்காக?  என்னத்திற்காக?  ஒரு மனிதனை அது சந்தோஷப்படுத்தவில்லை எனில் அந்தக் கல்யாணம் தான் ஏன்?  இதன் பொருள் தான் என்ன?” அர்ஜுனனின் இந்தப் புலம்பலைக் கேட்ட கிருஷ்ணன் மறுப்பாகத் தன் தலையை மட்டுமில்லாமல் விரலையும் அசைத்து மறுப்புத் தெரிவித்தான்.


“கல்யாணத்தின் முக்கியத்துவம் குறித்து நம் குல முன்னோர்கள் ஏற்கெனவே நிறையச் சொல்லி இருக்கிறார்கள், அர்ஜுனா!  ரிஷிகளும், முனிவர்களும் நம் பழைமையான நியதிகள் குறித்து நிறையச் சொல்லி இருக்கின்றனர்.”


அர்ஜுனன் தன் நெற்றியில் கையை வைத்துக் கொண்டே, “கிருஷ்ணா, புதிர்களுக்குப் பதில் சொல்வதில் உன்னைப் போல் நான் திறமையானவன் அல்ல!”

1 comment: