Sunday, September 14, 2014

பீமனின் விருப்பம்!

பீமசேனன், தன் இதழ்களில் ஒரு போக்கிரித்தனமான சிரிப்புடன் தனக்காக துருபதன் காத்திருந்த அறைக்குள் நுழைந்தான்.  அந்த அறை கங்கையைப் பார்த்து சாளரம் அமைத்துக் கட்டப்பட்டிருந்தது.  குளிர்ந்த காற்று அந்தச் சாளரம் வழியாகவும் அறையின் வாயில் வழியாகவும் வீசியது. பீமன்   பயில்வானை விட அதிகம் பருத்திருந்த  தன்னுடைய உடலுக்குச் சற்றும் பொருந்தாததொரு சுறுசுறுப்போடு அத்தகைய பெரிய உடலைக் குனிய வைத்து துருபதனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினான்.  தன் முகம் சந்தோஷத்தில் மலர்ந்திருக்க, துருபதனுக்கு எதிரில் இருந்த ஆசனத்தில் அமர வைக்கப்பட்டான் பீமன்.  “என் ஆசிகள், பீமசேனரே! நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?” எப்போதுமே கொஞ்சம் கடுகடுப்பாகவே முகத்தை வைத்திருக்கும் துருபதனின் முகத்திலும் பீமன் முகத்து சந்தோஷத்தைப் பார்த்ததும் மெல்லிய புன்முறுவல் தோன்றியது.  ஏற்கெனவே பீமனின் நகைச்சுவை உணர்வைக் கடந்து சென்ற பதினைந்து நாட்களில் கவனித்திருந்தான்.


“உங்களைச் சந்தித்ததில் மிகவும் சந்தோஷம், பிரபுவே! நான் உங்களுக்கு ஒரு முக்கியமான அவசியமான விஷயத்தைத் தெரிவிக்கவே வந்திருக்கிறேன்.  அது நல்ல செய்தியும் கூட.  எங்கள் பெரியண்ணா, நாங்கள் காம்பில்யத்திலிருந்து ஹஸ்தினாபுரம் செல்லும் பயணம் முழுவதையும் என் பொறுப்பில் விட்டிருக்கிறார்.  இந்தத் துணிகர முயற்சிக்கு உங்கள் ஆசிகளை வேண்டி வந்திருக்கிறேன். “ தன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அவன் பேசிய வார்த்தைகள் துருபதனைக் கவர்ந்தன. “பாண்டுவின் புத்திரனே!  உங்களுக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு.  பயணத்தில்  உங்களுடன் கூடப் பயணம் செய்யப் போகும் ஒவ்வொருவரையும் நீங்கள் சிறப்பான முறையில் கவனிப்பீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு. “


பீமன் முகம் முழுதும் விரிந்த புன்னகையுடன், “நிச்சயம், அரசே, நிச்சயம்.  ஒரு சிறு விஷயம்…..ம்ம்ம்ம்ம் என் பெரியண்ணாவுக்குக் கொஞ்சம் வியப்பாக இருக்கிறதாம்……….நான் உங்களிடம் இதைத் தனிமையில்  தான் சொல்ல வேண்டும்.” பீமன் தன் குரலைத் தழைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.  அவன் பேசும் தொனியும் அவன் உடல் மொழியும் ஏதோ சதித்திட்டத்திற்கு துருபதனையும் சேர்த்துக் கொண்டிருக்கிறாற்போல் இருந்தது.  துருபதனுக்குச் சிரிப்பு வந்தது. “என் பெரிய அண்ணா, நீங்கள் எங்களுக்குப் பரிசாக அளிக்கப் போகும் யானைகள், குதிரைகள், ரதங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் குறித்துக் கவலைப்படுகிறார்.  ஆனால் நிச்சயமாக இது ஒரு நுண்ணிய விஷயம். இதைக் குறித்து உங்களிடம் கேட்பது சரியல்ல தான்.  ஆனால் பாருங்கள், நான் பயணத்துக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்தாக வேண்டும்.


பீமன் இந்த விஷயம் மிக நுண்ணியது, மென்மையானது என்று கூறிய கருத்துக்களில் துருபதனுக்குச் சிரிப்பு வந்தது.  அதை அடக்கிக் கொள்ள முயன்று தோற்றுப் போனான்.  “நான் ஒரு …ஒரு…. கூச்சமுள்ள மனிதன். “ இதைச் சொல்கையிலேயே கூச்சம் அடைந்தவனைப்போல பீமன் தன் கண்களைப் பாதி மூடிக் கொண்டான்.  அங்கிருந்த சூழ்நிலையையே இதன் மூலம் மாற்றிவிட்டான்.  இப்போது துருபதன் வாய்விட்டே சிரித்துவிட்டான்..” என் மகள் கிருஷ்ணா உங்கள் ஐவரையும் மணந்ததில் நான் மிகவும் சந்தோஷம் அடைந்திருக்கிறேன்.  எங்களோடு தங்க நீங்கள் சம்மதித்தீர்களானால் என் ராஜ்யத்தில் பாதியை உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்.” என்று மனமாரக் கூறினான்.


“வேண்டாம், வேண்டாம், அதெல்லாம் வேண்டாம்.” விளையாட்டுத்தனமான எதிர்ப்பைக் காட்டிய வண்ணம் பீமன் மேலும் கூறினான். “ஏற்கெனவே நாங்கள் ஐவருமாகச் சேர்ந்து உங்கள் பெண்ணை உங்களிடமிருந்து கவர்ந்து விட்டோம்.  இப்போது உங்கள் ராஜ்யத்தையும் கவர்ந்து கொள்ள விரும்பவில்லை.  ஆனால் ஒன்று நிச்சயமாய்த் தெரியும்.  மாட்சிமை பொருந்திய பாஞ்சால அரசர், எங்களைப் பிச்சைக்காரர்களைப் போல் ஹஸ்தினாபுரம் செல்ல அனுமதிக்க மாட்டார் என நம்புகிறேன்.”


“நிச்சயமாய் இல்லை.  வெளிப்படையாகக் கூறுங்கள்.  உங்களுக்கு என்ன வேண்டும்?”


சிறு பிள்ளையைப் போல் சிரித்த பீமனைப் பார்த்த துருபதன் மனம் குளிர்ந்து போனது.  ஆள் தான் வளர்ந்திருக்கிறான்;  உண்மையில் சிறு பிள்ளை தான் எனத் தனக்குள் நினைத்தான்.  “எங்கள் அண்ணா என்ன வேண்டுமென ஆசைப்படுகிறார் தெரியுமா?  பிரபுவே, அதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.  நான் என்ன விரும்புகிறேன் என்பது வேண்டாம்.” குறும்புச் சிரிப்போடு பீமன் கூற துருபதனுக்கு வியப்பு அதிகரித்தது.  “என்ன?  நீர் விரும்புவதற்கும், உங்கள் அண்ணா விரும்புவதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றனவா?” ஆச்சரியத்துடன் கேட்டான்.


“ஆம், ஐயா, ஆம்.  எங்கள் அண்ணா ஒரு துறவி. ஆனால், நான் ராக்ஷசவர்த்தத்து அரசன் வ்ருகோதரன், அவரிலிருந்து வேறுபட்டவன்.  அரசன் வ்ருகோதரன் துறவிகளைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றவர்.  இதை நீங்கள் ரகசியமாக வைத்திருங்கள். “போலியான பணிவோடு இதை ஒரு ரகசியம் போலக் கூறினான் பீமன்.  “ஓஓ, சரி, நான் புரிந்து கொண்டேன்.  உங்கள் அண்ணனின் தேவை என்ன?  அவருக்கு என்ன வேண்டும்? என்ன கொடுத்தால் அவருக்குத் திருப்தியாக இருக்கும்?  முதலில் அதைத் தெரிந்து கொள்வோம்.”


“ஹா, அவர் உங்களை எதுவும் கேட்கக் கூடாது என்று எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார்.  அவர் வரையிலும் நீங்கள் ஐந்து தேங்காய்களைக் கொடுத்தாலே போதும்;  திருப்தி அடைந்துவிடுவார்.  அவரிடம் எதுவும் இல்லை என்றாலே அவர் மிக சந்தோஷமாக இருப்பார். “வஞ்சப் புகழ்ச்சியாகவே இதைச் சொன்னான் பீமன்.  “இது போற்றத்தக்கதொரு உயர்வான குணம்.” என்றான் துருபதன்.  “ஹூம், இதை எல்லாம் அவர் எனக்காக விட்டு வைத்திருக்கலாம்.  மாட்சிமை பொருந்திய பிரபுவே, நீங்கள் ஏகமாகப் பரிசுகளை அள்ளிக் கொடுத்து விடப்போகிறீர்களே என்பது தான் அவருக்கு பயமே!” சொல்லிக்கொண்டே வேண்டுமென்றே பெருமூச்சு விட்டான் பீமன்.


“உங்களுக்கு இப்போது கவலை எல்லாம், என்ன கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பது தானே? க்ஷத்திரியர்களுக்கு இதுவும் ஒரு நல்ல வழக்கமே!  அரசே, வ்ருகோதரரே, உங்களுக்கு என்ன வேண்டும்?”துருபதன் கேட்டான். “அரசே, எனக்கு என்னவேண்டுமோ அதைக் குறித்து நான் கவலைப்படுவது இல்லை.  அவற்றை நானே எடுத்துக் கொள்வேன். “அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் பீமன்

1 comment:

ஸ்ரீராம். said...

சற்றே... இல்லை இல்லை நிறையவே விளையாட்டுத் தனமாகவே பேசும் பீமன். 'துரு'வுக்கு பொறுமை போய்விடாதோ!