Sunday, May 31, 2015

யுதிஷ்டிரனுக்குக் குழப்பம்!

யாகத்துக்கு வேண்டிய அக்னியையும், இரவு உணவு தயாரிக்கவேண்டிய நெருப்பையும் மூட்டி அவரவர் வேலைகளைக் கவனிக்குமாறு தன் சீடர்களை வியாசர் அனுப்பி வைத்தார். அவர்களுக்கு உதவி செய்ய தன் மல்லர்களை பலியா அனுப்பி வைத்திருந்தான். இதற்கான அரசாணையும் பெறப் பட்டிருந்தது.  இதன் பின்னர் வியாசர் தன் தாய் சத்தியவதியை அவள் அரண்மனையில் சென்று சந்திக்கவேண்டி கிளம்பிச் சென்றார். நொண்டி, குருடு, செவிடு, ஊமை, உடலளவிலும், மனதளவிலும் காயமடைந்தோர் என ஒரு பெரிய மக்கள் கூட்டம் வியாசரின் அன்பையும், ஆசிகளையும் வேண்டிக் காத்துக் கொண்டிருந்தது. அவர் தங்களைத் தொட்டாலே போதும், எல்லாவித நற்பலன்களும் கிடைக்கப்பெறுவோம் என உறுதியாக நம்பினார்கள் அந்த மக்கள். அக்னியை வணங்கி அன்றைய தினத்துக்கான தானங்களை அக்னிக்குக் கொடுத்து முடித்த பின்னர் தன் வழக்கப்படி துன்புறும் மக்களைத் தரிசித்து ஆறுதல் கூறுவது வியாசரின் அன்றாட வழக்கம். அது போல் அன்றும் செய்தார். அங்கு கூடி இருந்த மக்கள் அனைவருக்கும் ஒரு மண் குடுவையில் மூலிகைகள் கலந்த பால் விநியோகிக்கப்பட்டது. அனைவரின் மண் குடுவையையும் தொட்டு ஆசீர்வதித்தார் வியாசர்.

உடலளவில் காயம் பட்டவர்களின் காயங்கள் நன்கு மூலிகை கலந்த வெதுவெதுப்பான சுடுநீரால் கழுவப்பட்டு மூலிகைகளால் பத்துப் போடப்பட்டுக் கட்டி விடப்பட்டது. இவற்றை வியாசரின் சீடர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு செய்தார்கள். பாலைத் தவிர மக்களுக்குப் பிரசாதமாக அப்பங்களும், கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. வியாசரே நேரில் இருந்து இவற்றைக் கவனித்தார். பின்னர் வேத மந்திரங்களால் அனைவரையும் ஆசீர்வதித்தும், அனைவரின் உடல்நலன், மனோபலம் பெருகவும் வியாசர் பிரார்த்திக்க அந்தப் பிரார்த்தனையில் அவரின் சீடர்களும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டிருக்கிறதா என்று கவனித்த பின்னரே வியாசரும் அவரின் சீடர்களும் உணவு உண்ண அமர்ந்தனர். பின்னர் வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் வியாசரின் அருகே வந்து நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றுச் சென்றனர்.

அதன் பின்னர் அங்கிருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் வியாசர் ஓய்வு எடுத்துக் கொண்டார். கூட்டம் மெல்ல மெல்லக் கரைந்தது. அனைவரும் மனதில் நம்பிக்கையுடனும் திருப்தியுடனும் சென்றனர். மறுநாள் வியாசர் எழுந்ததும் தன் காலடியில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரனையும் அவன் தம்பிகள் நால்வரையும் கண்டார். யுதிஷ்டிரனும், மற்றப் பாண்டவர்கள் நால்வரும் வியாசரை நமஸ்கரிக்க, அவர்களை ஆசீர்வதித்த அவர், “யுதிஷ்டிரா, பட்டாபிஷேஹ வைபவத்துக்குத் தயாராகி விட்டாயா?” என்று வினவினார். “என்னால் என்ன செய்ய முடியும்? குருதேவா! நீங்கள் வந்திருக்கிறீர்கள்! என் தாத்தாவும் சித்தப்பாவும் வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்கின்றனர். உங்களை விட நான் என்ன பெரிய ஏற்பாடுகளைச் செய்து விடப் போகிறேன்!” என்றான் யுதிஷ்டிரன்.

“இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் யுதிஷ்டிரா! உன் கருத்து என்ன?” என்றார் வியாசர். “குருதேவரே! நான் அரசன் ஆனதும் என்ன என்ன பிரச்னைகளை எதிர்கொள்ளப் போகிறேன், என் முன்னால் எவை எல்லாம் காத்திருக்கின்றன என்னும் புதிருக்கு விடை காண முடியாமல் தவிக்கிறேன்.” என்றான் யுதிஷ்டிரன். தன்னையே பார்த்த வியாசரிடம் அப்போது ஹஸ்தினாபுரத்தில் உள்ள நிலைமையை உள்ளபடியே விவரித்தான் யுதிஷ்டிரன். துரியோதனன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியது, அவன் சகோதரர்கள் அனைவரும் காந்தாரம் செல்ல முடிவெடுத்தது, கர்ணனும், அஸ்வத்தாமாவும் கூட ஹஸ்தினாபுரத்தை விட்டு விலகிச் செல்ல நினைத்தது, துரோணாசாரியாரும் என்ன செய்வது எனப் புரியாமல், தன் மகனுடன் அஹிசத்ரா செல்வதா அல்லது ஹஸ்தினாபுரத்தில் தங்குவதா எனப் புரியாமல் குழம்புவது என அனைத்தையும் விபரமாக யுதிஷ்டிரன் வியாசரிடம் எடுத்துச் சொன்னான். பாண்டவர்களை துரோணாசாரியார் தன் மக்கள் போல் அன்பும், பாசமும் கொண்டு நேசித்தாலும் தன் மகன் இல்லாத ஹஸ்தினாபுரத்தில் தானும் இருக்கவேண்டுமா என்றே யோசிக்கிறார் என்றும் சொன்னான்.  தாத்தா பீஷ்மர் எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும் சொன்ன யுதிஷ்டிரன் திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரியின் வருத்தத்தையும் எடுத்துச் சொன்னான்.

பீமன் தன் பங்குக்குத் தான் எது வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினான். அர்ஜுனன் குரு வம்சத்து அரசப் படை வீரர்கள், தளபதிகள் அனைவரும் பாண்டவர் பக்கமே இருப்பதாகவும், பிரச்னை ஏதேனும் எழுந்தால் பாண்டவருக்கே தாங்கள் ஆதரவு தருவோம் என்றும் கூறுவதாகச் சொன்னான். மேலும் தாத்தா பீஷ்மர் முடிவெடுத்தால் சரியாகவே இருக்கும் என்றும் அவர் முடிவைத் தாங்கள் ஆதரிப்பதாகவும் அவர்கள் சொன்னதாக அர்ஜுனன் கூறினான். நகுலன் குதிரைப்படைகள், ரதப் படை வீரர்கள், அதிரதர்கள், மஹாரதர்கள் ஆகியோரிடம் பேசியதாகவும் அனைவரும் தங்கள் பக்கம் என்றும், செலவுக்கு வேண்டிய தங்கம் அனைத்தும் தங்கள் மாமனார் ஆன துருபதன் கொடுத்திருப்பதாகவும் கூறினான். இவர்களைத் தவிர யாதவர்கள் அனைவரும், மற்றும் ஆர்ய வர்த்தத்து அரசர்களும் யுதிஷ்டிரனையே ஆதரிப்பார்கள் என்றும் கூறினான்.

அமைதியாக அமர்ந்திருந்த சஹாதேவனைப் பார்த்து, “நீ என்னப்பா சொல்கிறாய்?” என்று வியாசர் கேட்டார். சஹாதேவன் ஹஸ்தினாபுரத்து மக்களுக்கு யுதிஷ்டிரன் அரசன் ஆவதே பிடிக்கும் என்று சொன்னான். அவன் குரலில் எவ்விதப் பற்றும் இல்லாமல் ஒரு யோகியைப் போல் பற்றற்றுக் கூறினான். “நீ என்ன செய்யப் போகிறாய் மகனே!” என்று யுதிஷ்டிரனைப் பார்த்துக் கேட்டார் வியாசர். அப்போது பீமன் குறுக்கிட்டான். “நான் குறுக்கிடுவதற்கு மன்னியுங்கள், குருதேவா! எங்கள் அண்ணன் என்ன செய்ய வேண்டும் என்பது என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஹஸ்தினாபுரத்தின் சிங்காதனத்தில் என் அண்ணன் அமர்ந்து மக்களுக்கு நல்லாட்சியைத் தர வேண்டும். அதர்மத்தை ஒழித்து தர்மத்தின் பாதையில் ஆட்சி செலுத்த வேண்டும்.” என்றான் பீமன்.

அவனைப் பார்த்துக் கருணையுடன் சிரித்த வியாசர், தன் தலை ஆமோதிப்பாக ஆட்டி விட்டு யுதிஷ்டிரன் பக்கம் திரும்பினார். அவன் முகத்தையே பார்த்தார். “நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கே தெரியவில்லை, குருதேவா!  நான் எனக்கு வழிகாட்டும்படிக் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.  உங்கள் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை குருதேவா! நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? எது என்னுடைய தர்மம்? இம்மாதிரியான ஒரு குழப்பமான சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?  இப்படி ஒரு பிரச்னையை இதற்கு முன்னர் நான் சந்தித்ததே இல்லை.” என்றான் யுதிஷ்டிரன்.

“யுதிஷ்டிரா! சிறு குழந்தையாக இருக்கையில் இருந்தே நீ குற்றமற்றவனாகவும் எல்லாவிதத்திலும் நேர்மையைக் கடைப்பிடிப்பவனாகவும், சொன்னதைச் செய்பவனாகவுமே இருந்து வருகிறாய்! ஆகவே இப்போதும் நீ கவலைப்படாதே! நிலைமை எப்படி இருந்தாலும் நீ தர்மத்தின் பாதையிலேயே செல்வாய் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. “ என்றார். “திக்குத் தெரியாத காட்டில் கண்களைக் கட்டி விட்டாற்போல் தவிக்கிறேன், குருதேவா! நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கொஞ்சம் சொல்லுங்கள்!” என்றான் யுதிஷ்டிரன். அன்புடன் அவனைப் பார்த்துச் சிரித்த குருதேவர், “ குழந்தாய்! ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு சமயங்களில் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்ள வேண்டி இருக்கும். பல சமயங்களிலும் அவன் என்ன விரும்புகிறானோ அப்படியே செய்தாலும் ஒரு சில சமயங்களில் அவன் விருப்பத்தை விட்டு விட்டு அவன் என்ன செய்ய வேண்டும், எது செய்தால் சரியாக இருக்கும் என்று யோசிக்க வேண்டி இருக்கும். இது அப்படிப்பட்ட ஒரு சமயம் உன் வாழ்க்கையில் வந்திருக்கிறது.” என்றார் வியாசர்.

“குருதேவா! நானும் என்னால் ஆன மட்டும் யோசித்துப் பார்த்துவிட்டேன். எனக்கு வழி ஒன்றும் புலப்படவில்லை!” எனத் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான் யுதிஷ்டிரன்.  “உன் வாழ்க்கையின் உச்சக்கட்டத் தேர்வு இப்போது நடக்கிறது, யுதிஷ்டிரா! மகனே! உன் செங்கோல் நியாயமாக இருக்க வேண்டும். செங்கோல் வளையக் கூடாது. உன் வாழ்க்கை இப்போது குரு வம்சத்துச் செங்கோலுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. நீ தர்மத்தைக் காக்க வந்தவன். விண்ணுலகில் கடவுளரும் உன்னிடம் தர்மத்தையே எதிர்பார்க்கிறார்கள். முடி சூடிய பின்னர் நீ முடிவு செய்யலாம் என்பது சரியானால், ஏன் இப்போது உன்னால் முடிவு செய்ய முடியாது? ஒரு முடிவுக்கு உன்னால் வர முடியாதா?”

“புதிராக இருக்கிறது குருதேவா! என்னால் என்ன முடிவெடுக்க இயலும்?” யுதிஷ்டிரன் குழம்பினான்.

“ஏனப்பா குழம்புகிறாய்? ஏன் புதிராக நினைக்கிறாய்? எல்லாம் அல்ல அந்த மஹாதேவனை நாடு! அவன் காலடிகளைத் தஞ்சம் அடைந்து விடு! இம்மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வேறு எவராலும் உனக்கு ஆறுதலோ, வழி காட்டுவதோ இயலாத ஒன்று. நீயே சுயமாகச் சிந்தித்து முடிவெடு! நீ எப்படி முடிவெடுத்தாலும், அது சரியானதாகவே இருக்கும். யுதிஷ்டிரா, உன் முடிவில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உன் சகோதரர்களும் நீ எடுக்கப் போகும் முடிவை ஏற்பார்கள். கலங்காதே!” என்றார் வியாசர்.

3 comments:

Thenammai Lakshmanan said...

அருமை கீதா மேம். முதன் முறையாக இந்தத் தளத்தைப் படிக்கிறேன்.

sambasivam6geetha said...

அட?? தேனம்மை??? எப்படி வந்தீங்க இங்கே? !!!!!!!!!!!!!!!

ஸ்ரீராம். said...

//அவர்களுக்கு உதவி செய்ய தன் மல்லர்களை பலியா அனுப்பி வைத்திருந்தான். இதற்கான அரசாணையும் பெறப் பட்டிருந்தது.//

அட!

யுதிஷ்டியன் எப்போதுமே துணிவில்லாதவனாகவும், மனத்திண்மை இல்லாதவனாகவுமே அறியப்படுகிறான். அவன் தர்மத்தோடு சேர்த்து எல்லாவற்றையும் குழப்பிக் கொள்வதும் தர்மமாகவே பார்க்கப்படுகிறது!