Friday, July 17, 2015

பீமன் மறுப்பு! கிருஷ்ணன் தவிப்பு!

பீமனின் கோபத்தை முற்றிலும் அலட்சியம் செய்தான் கிருஷ்ணன். அதைக் கண்டு கொள்ளாமலேயே, “இதோ பார், பீமா! நீ இல்லாமல் நான் திரும்பிச் சென்றேன் ஆனால் உன் மூத்தவன் பட்டாபிஷேஹ வைபவத்தில் கலந்து கொள்ளவே மாட்டான்! அதை யோசித்துப் பார்!” என்றான்.

“ஹூம், ஒரு சக்கரவர்த்தியாய் ஆவதற்கு உள்ள அம்சங்கள் எதுவும் என் மூத்தவனிடம் இல்லை. அப்படி ஆனான் எனில் அது மிக அரிதாகவே நடக்கும்.” என்று சொல்லியவண்ணம் நடக்கத் துவங்கினான் பீமன். திடீரென நின்று திரும்பிப் பார்த்து, “ அவரால் என்ன செய்ய முடியும்? எங்கள் உடலை, ஆன்மாவை, உயிரை துரியோதனனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் விற்றுவிடுவார்.  தன்னையும் சேர்த்துத் தான் எங்கள் பரம வைரிக்கு விற்பார். அது ஒன்று தான் அவருக்குத் தெரியும். துரியோதனன் எங்கள் பரம வைரி என்பதை அவர் அறிய மாட்டாரா என்ன?”

“ஆஹா! நீ இப்படிப் பேசினாய் எனில் நான் திரௌபதியின் முகத்தை எவ்வாறு பார்ப்பேன்? என்னுடைய ஆலோசனையின் பேரிலேயே அவள் உங்கள் ஐவரையும் மணந்திருக்கிறாள் என்பதை நீ அறிவாயா? அவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? நீ அங்கே இல்லை என்றதுமே அவள் காம்பில்யம் திரும்பப் போவதாய்ச் சொன்னாள். நீ இல்லாமல் நான் சென்றேன் எனில் நிச்சயமாய்க் காம்பில்யத்துக்குப் போய்விடுவாள்.” என்றான் கிருஷ்ணன்.

“அது தான் சரி! இப்படிப் பட்ட உபயோகமற்ற மனிதர்களுக்கு மனைவியாய் இருப்பதை விட அவள் காம்பில்யம் செல்வதே சிறந்தது! அப்படியே செய்யச் சொல் அவளை! அதுதான் அவளுக்கு நல்லது!” என்று ஓங்கிய குரலில் கத்திய பீமன் மீண்டும் வேகமாய் நடக்க ஆரம்பித்தான்.  அவன் அங்கிருந்து செல்வதைக் கிருஷ்ணன் தடுத்தான். தன் கைகளால் அவன் தோள்களைப் பற்றி நிறுத்தி, “இதோ பார் பீமா! நான் சொல்வதைக் கேள்!” என ஆரம்பித்தான். “அதெல்லாம் முடியாது! நீ என்ன சொன்னாலும் நான் கேட்கப் போவதே இல்லை. என்ன நடந்தாலும் சரி.நீ ஹஸ்தினாபுரம் திரும்பிப் போ! உடனே போ!” என்றபடி அவன் கைகளைத் தட்டிவிட்டான் பீமன்.
“அதே போல் என்ன நடந்தாலும் நீ இல்லாமல் நான் திரும்பப் போவதில்லை.” என்று சிரித்த வண்ணம் கூறிய கிருஷ்ணன் மீண்டும் அவன் தோள்களைத் தன் இருகைகளாலும் பிடித்து அவனை மேலும் நடக்கவிடாமல் செய்தான். “இதோ பார் பீமா! இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. காசி தேசத்து அரசகுமாரியை மறந்து விட்டாயா? நீ இல்லாமல் நான் ஹஸ்தினாபுரம் சென்றால் அவள் தன் நாவை அறுத்துக் கொண்டு என் காலடியில் தற்கொலை செய்து கொள்வதாய் சபதம் செய்திருக்கிறாள். ஆஹா! அந்த மென்மையான மனம் கொண்ட இளவரசி இவ்விதம் என் காலடியில் விழுந்து சாவதை என்னைக் காணச் சொல்கிறாயா? அதை நான் எவ்விதம் காண்பேன்! என்னால் முடியாது அப்பனே! உன்னைப் போன்ற கல்நெஞ்சம் எனக்கு இல்லை.”

ஜாலந்திராவின் பெயரைக் கேட்டதுமே பீமன் அங்குமிங்கும் நடப்பதை நிறுத்திவிட்டு கிருஷ்ணன் தன்னை நதிக்கரையோரம் போக  அனுமதிப்பதை ஏற்றுக் கொண்டான். கொஞ்சம் யோசனையுடன் அப்படியும் இப்படியுமாக நடந்தான். “அது சரி, கிருஷ்ணா! அந்தப் பெண் உயிருடன் இருந்தாக வேண்டுமா? இந்த பூவுலகில் வாழும் அனைத்துப் பெண்களின் சூழ்ச்சித் திறனும் அவள் ஒருத்தியின் மூளையில் புகுந்திருக்கிறது.” என்று கோபத்துடன் சீறினான்.

“ம்ஹூம், நீ அவளைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவளைத் தப்பாகவே எண்ணுகிறாய். நியாயமாக அவளைப் புரிந்து கொள்ளும் விதத்தில் புரிந்து கொள்.”

இதைச் சொல்லும்போது கிருஷ்ணன் காட்டிய நிதானமும், சாந்தமும் பீமனுக்கு எரிச்சலூட்டியது. கிருஷ்ணன் பக்கம் ஆவேசமாகத் திரும்பினான். “ஹூம், அவள் தானே உன்னிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டாள்? துரியோதனன் தான் ஹஸ்தினாபுரத்தை ஆளவேண்டும் என வாக்குறுதி வாங்கிக் கொண்டாள் அல்லவா?” கோபம் பொங்கியது பீமனுக்கு. “இதோ பார் பீமா! நான் அவளைச் சந்திக்க வேண்டும் என என்னைக் கட்டாயப்படுத்தியது நீ தான்! அதை மறவாதே! அதோடு அவள் விருப்பங்களுக்கு மதிப்புக் கொடுத்து நிறைவேற்றும்படியும் நீ தான் கேட்டுக் கொண்டாய்!” என்றான் கிருஷ்ணன் புன்னகையோடு.

“ஹூம், சரி, சரி, நீ ஏன் என்னுடன் பேசி நேரத்தை வீணாக்குகிறாய்? என் நேரமும் வீணாகிறது. திரும்பி ஹஸ்தினாபுரத்துக்கே போ! போ!” என்றான் பீமன் கண்டிப்புடன். அதே சமயம் தன் கைகளால் திரும்பிச் செல்லும் சாலையையும் சுட்டிக் காட்டினான். “சரி, அப்பா! நீ திரும்பி வராவிட்டால் போகிறது! என்னை உன்னுடன் வரவிடு! நானும் உன்னுடன் வருகிறேனே!” என்றான் கிருஷ்ணன். அவன் குரலில் பரிதாபம் தெரிந்தது இனி என்ன செய்யப் போகிறேனோ என அவன் கவலைப்படுவது போல் காட்டிக் கொண்டான். “நீ திரும்பவில்லை எனில் நான் துவாரகைக்கே திரும்பிச் சென்று விடுகிறேன். என்னை விடு அப்பா!” என்றான் கிருஷ்ணன் செய்வதறியாதவன் போல.

“முதலில் அதைச் செய்! நீ மட்டும் துவாரகைக்குச் சென்றுவிட்டால் அனைவருக்கும் நல்லது! போ! உடனே கிளம்பு! என் சகோதரர்களை விட நீ மிகவும் மோசமானவன். இனிமையாகப் பேசியே கழுத்தை அறுப்பாய்! அதிலும் சூழ்ச்சிகள் செய்வதில், தந்திரமாகப் பேசி ஏமாற்றுவதில் நீ மன்னன்! சக்கரவர்த்தி! உனக்கு ஈடு, இணை எவருமில்லை!” என்று கிருஷ்ணனைப் பார்த்து வெறுப்புடன் கூறினான் பீமன்.

“பீமா, என் சகோதரா! நீ எப்போதுமே நேர்மையும், நியாயமும் உள்ள ஒரு மனிதனாக இருந்து வருகிறாய்! உன்னிடமிருந்து இப்படி ஒரு பாராட்டுப் பெற நான் என்ன தவம் செய்துவிட்டேன்!  என்ன செய்தேன் பீமா? என்னை நீ ஏசும்படி என்ன செய்துவிட்டேன்?” என்று கிருஷ்ணன் பீமனிடம் நட்புத் தோரணையில் அதே சமயம் சற்றும் குறையாத பணிவுடன் கேட்டான்.

“என்ன செய்யவில்லை நீ?” கிருஷ்ணனை நோக்கித் திரும்பிய பீமன் தன் கரங்களை இடுப்பில் வைத்துக் கொண்டு அவனை முறைத்தான். என்னையும், என் வீரத்தையும், என் தோற்றத்தையும் வைத்து நீ விளையாடினாய்! இதன் மூலம் நான் பட்டத்து இளவரசனாக யுவராஜாவாக ஆகலாம் என்றும் அதன் பின்னர் காசி தேசத்து இளவரசியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டு அவளை மணக்கலாம் என்றும் நம்பிக்கை ஊட்டினாய்!”

“உண்மை! இதையே தான் நான் ஜாலந்திராவுக்கும் சொல்லி இருக்கிறேன்.” என்று ஒப்புக் கொண்டான் கிருஷ்ணன். பற்களைக் கடித்த வண்ணம் அவனைக் கோபமாகப்பார்த்தான் பீமன். “உன் இரட்டை வேஷம் அம்பலமாகி விட்டது. இரட்டை வேஷம் போடுவதில் நீ நிபுணன்! நீ எனக்கும் என் சகோதரர்களுக்கும் நன்மை செய்யத் தான் வேலை செய்கிறாய் என நான் நினைத்தேன். மூடன்! ஆனால் நீ என்ன செய்தாய்! துரியோதனனுக்கு எங்கள் உரிமையைத் தாரை வார்த்து விட்டாய்! உன் வாக்குறுதியின் மூலம்.”

“ஆமாம், ஆமாம், நான் பானுமதிக்கும் வாக்குக் கொடுத்திருந்தேன். துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆள்வான் என உறுதி மொழி கொடுத்திருந்தேன்.” எதற்கும் கவலைப்படாமல் கிருஷ்ணன் சந்தோஷமாகச் சிரித்தான். “சீ! வெட்கங்கெட்டவனே!” பீமன் சீறினான் அவனைப் பார்த்து. கிருஷ்ணன் அசரவில்லை. “நான் உண்மையாக நடப்பதை வெட்கம் கெட்ட செயலாக நினைக்கவில்லை!” என்றான் சாவதானமாக.

“நீயா உண்மையானவன்? உண்மையாக நடப்பவன்? தர்மவான் நீயா? நீ?”

“ஆமாம்.” என்றான் கிருஷ்ணன் மீண்டும் அதே நிதானத்துடன். பின்னர் அவனைப் பார்த்து ஊக்கம் கொடுக்கும் சொற்களைப் பேசலானான். “இதோ பார் பீமா! உண்மையைச் சொல்லட்டுமா? உண்மையை உணர்ந்ததும் என்ன செய்யப் போகிறாய்? ஹஸ்தினாபுரத்தை துரியோதனன் ஆண்டால் தான் நீங்கள் ஐவரும் உங்களுக்கான உரிமையை உண்மையாக அடைய முடியும்!”

ஆனால் பீமனோ இதைக் கேட்டதும் கோபம் கொண்ட காளையைப் போல் சீறினான். தன் தலையை ஆட்டினான். “உன்னுடன் பேசவே எனக்குப் பிடிக்கவில்லை.  நான் உன்னுடன் பேசப்  போவதில்லை. உடனே இங்கிருந்து போ! சென்றுவிடு! இல்லை எனில்………..” கிருஷ்ணனை அடிப்பவன் போல் அவன் மீது பாய்ந்து கொண்டு வந்தான் பீமன். அதைக் கண்ட சாத்யகி இருவருக்கும் நடுவே வந்து நின்று  கொள்ள கிருஷ்ணன் சாத்யகியை அங்கிருந்து அகற்றினான். “சாத்யகி, பீமனின் வழியில் குறுக்கிடாதே! அவன் போக்கில் அவனை விடு! என்ன இருந்தாலும் அவன் என் அத்தை வழி சகோதரன். என்னை அடிக்கவோ, கொல்லவோ அவனுக்கு எல்லா உரிமைகளும் உண்டு.” என்ற வண்ணம் பீமன் பக்கம் திரும்பி, “சகோதரா! நீ என்ன சொல்கிறாயோ அதைச் செய்வது என முடிவெடுத்துவிட்டேன்.” என்றான்.

“சூழ்ச்சிக்காரா!, சூழ்ச்சிக்காரா! வஞ்சகா! வஞ்சகா!” என்று கத்தினான் பீமன். பின்னர் அதே சொற்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தான். “உனக்குச் சேவை செய்ய எனக்கு அனுமதி கொடு, பீமா!” எனக் கிருஷ்ணன் அவனை தயவாகக் கேட்டுக் கொண்டான்.

“என்ன! நீ எனக்குச் சேவை செய்யப்போகிறாயா? ஆஹா! இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? எப்போதும் அனைவரும் உனக்கல்லவோ சேவை செய்கின்றனர்? உன் புகழை அல்லவோ பாடுகின்றனர்! நீயல்லவோ அனைவரும் உனக்கு மட்டுமே சேவை செய்ய வேண்டும் என விரும்புகிறாய்? அனைவரும் உனக்குச் சேவை செய்வதோடு அல்லாமல் உன்னைக் கீழே விழுந்து வணங்கவும் வேண்டும். அது தானே உனக்குப் பிடித்தமானது? அதோடு “கிருஷ்ணனுக்கே மங்களம், ஜெயம் கிருஷ்ணனுக்கே!” என்றெல்லாம் முழங்கவும் வேண்டும் அல்லவா? அது தானே உனக்குப் பிடித்தமானது? நீ எனக்குச் சேவை செய்யப்போகிறாயா? ஆஹா! இதை விடப் பெரிய நகைச்சுவையான விஷயத்தை யாரேனும் கேட்டிருக்கின்றனரா? ஹாஹாஹா!” என்று கோபமாகச் சிரித்தான் பீமன்.

“நீ சொல்வது முற்றிலும் சரி, சகோதரா! சில சமயம் என்னை அனைவரும் விரும்புகிறார்கள் என்பதையே நானும் விரும்புகிறேன். அனைவராலும் விரும்பப்படுவதை நான் ஏற்கிறேன். ஆனால் என் பலவீனம் என்னவென்றும் நீ என்னிடம் சொல்ல வேண்டுமே! அதைத் தான் நானும் விரும்புகிறேன். இப்படிப் பட்ட வெளிப்படையான கருத்துக்களால் தான் நான் எப்போதும் சரியான பாதைக்குத் திருப்பி விடப் படுகிறேன். ஆகவே உன் கருத்து எனக்கு மிக முக்கியமானது. இதன் மூலம் நீ என்னை விரும்புவதை நிறுத்திவிடாதே! அப்புறமாய் நான் மிகவும் துயருற்று பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படுவேன்.”


“ஹூம், சாத்யகியைப் போன்ற முகஸ்துதிக்காரர்களால் நீ மிகக் கெட்டுப் போய்விட்டாய்! முகஸ்துதியைத் தான் நீ விரும்புகிறாய்! இவனைப் போல் முகஸ்துதி செய்பவர்களை உன் நண்பர்கள் ஆக்கிக் கொள்கிறாய்!”

சாத்யகியால் இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. “என்ன முகஸ்துதி செய்பவன் என்று சொல்லாதே!” என்று கூவினான். “கிருஷ்ணனைக் கெடுத்தது நாங்கள் யாரும் இல்லை. நீ! நீ தான்! ஆம் நீ தான் அவனைக் கெடுத்துவிட்டாய்! மற்ற எவரையும் விட அதிகமாய் நீ தான் அவனைக் கெடுத்துக் கொண்டிருக்கிறாய்!” என்றும் கூறினான்.
கிருஷ்ணனோ சாத்யகியைக் குறிப்பாகப் பார்த்த வண்ணம், அவன் கூறியதை மறுக்கும் வகையில், “சாத்யகி, பீமன் சொல்வதே சரியானது!” என்ற வண்ணம் பீமன் பக்கம் திரும்பினான். “சகோதரா, நீ சொல்வது சரியே! நான் உன்னுடன் ஒத்துப் போகிறேன். ஹஸ்தினாபுரத்தைப் போன்ற மோசமான இடத்தில் வசிப்பது ஆபத்து ஆனதே! நல்லவேளையாக நீ அங்கிருந்து வெளியேறினாய்!” என்றான். ஆனால் பீமனோ அவனைச் சந்தேகத்துடன் பார்த்துத் தலையை ஆட்டினான்.

“அப்படிப் பார்க்காதே என்னை, சகோதரா! ஹஸ்தினாபுரத்து சூழ்ச்சிகளால் நீ கலங்கிப் போயிருப்பதை நான் அறிவேன். அதிலும் துரியோதனன் எங்கே வசிக்கிறானோ அங்கே இருப்பதை நீ விரும்ப மாட்டாய் என்றும் நான் அறிவேன். ஏனெனில் நீ அரச தர்மங்களைக் கடைப்பிடிக்கக் கூடியதொரு தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க நினைக்கிறாய்!”

“என்ன சொன்னாலும் சரி, என்ன நடந்தாலும் சரி, நான் ஹஸ்தினாபுரம் திரும்பப் போவதில்லை.” அத்துடன் பேச்சை நிறுத்தியவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

1 comment:

ஸ்ரீராம். said...

மனித உணர்வுகளுடன், இயல்பாக இருக்கும் பகுதி.