Saturday, July 25, 2015

கண்ணனின் கனவில் புதிய நகரம்!

கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டிருந்த பீமனுக்கு அவன் தன்னுள் ஆழ்ந்து போய் ஏதோ கனவுலகில் இருக்கிறான் என்பதும், அவன் மனதுள் அந்தக் கனவு நகரம் தோன்றிக் கொண்டிருக்கிறது என்பதும் புரிந்தது. இந்த மாறுதலுக்கான காரணத்தையும் அவன் புரிந்து கொண்டான். கிருஷ்ணனின் இந்த உணர்வுகள் அவனுள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவனும் அதில் ஆழ்ந்தான். அவனுள்ளும் கனவு நகரம் விரிந்தது. பரந்தது. மாபெரும் சாம்ராஜ்யம் தோன்றியது. “கிருஷ்ணா! ஆம்! அப்படி ஓர் சாம்ராஜ்யம், தர்ம சாம்ராஜ்யம் உருவாக வேண்டும். அங்கே பெண்கள் இரவு நேரத்திலும் எவ்விதத் தொல்லையும், அச்சமும் இல்லாமல் தன்னந்தனியாகப் பயணிக்க வேண்டும். சுதந்திரமாக நடமாட வேண்டும். எனக்குப் பிறக்கப் போகும் மகன்கள் அதர்மத்தை எதிர்த்துப் போராடும் போருக்குத் தலைமை வகித்து நடத்துவார்கள்; அதில் வெற்றி காண்பார்கள். தங்கமும், வெள்ளியும், சர்வசாதாரணமாக இறைபட வேண்டும். தேவைப்பட்டவர்கள் தங்கள் தேவைக்கு எடுத்துச் செலவு செய்ய வசதியாக இருக்க வேண்டும். அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும். கோயில்களில் நல்ல முறையில் எல்லாக் காலங்களிலும் வழிபாடுகள் நடந்து கோயிலின் கடவுளர் மட்டுமின்றி அவற்றின் தலைமைப் பூசாரிகளும் நல்ல முறையில் நம்மை வழிநடத்த வேண்டும். என்னால் முடிந்தால் பலஹீனமாய் இருக்கும் ஆரிய இனப் பெண்கள், ஆண்கள் அனைவரையும் வலுவுடன் உள்ளவர்களாய் பலத்துடன் உள்ளவர்களாய் மாற்றிக் காட்டுவேன்.”

“நீ என்ன நினைக்கிறாய் என்பதும், உனக்கு எது வேண்டும் என்பதும் நான் நன்கறிவேன் பீமா! அதனால் தான் உன்னைத் தேடி இங்கே வந்து உன்னுடம் இருக்க விரும்புகிறேன்.”

“அப்படி எனில் வா! கிளம்பு! அப்படி ஓர் நகரைத் தேடிச் செல்வோம்!”

“இரு பீமா! இரு! சற்றுப் பொறு! அவசரப்படாதே! முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம். நம்மிடம் வெறும் நகரம் மட்டும் இருந்தால் போதுமா? அதில் வசிக்க வேதம் படித்த வேதத்தின் உட்பொருளை உணர்ந்து வாழ்க்கை நடத்தும் வேத பிராமணர்கள் தேவை! தைரியமும், மன உறுதியும் கொண்ட உண்மையாக நடக்கும் க்ஷத்திரியர்கள் தேவை! வியாபாரத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு உண்மையாக உழைத்துப் பெரும் செல்வம் ஈட்டி அதன் மூலம் பலருக்கும் பயன் கிடைக்கச் செய்யும் வைசியர்கள் தேவை! அவர்கள் மூலம் வியாபாரம் மட்டுமின்றி நிலம், குதிரைகள், கால்நடைச் செல்வங்கள் போன்றவையும் தேவை. இவற்றைப் பராமரிக்கும் ஆட்கள் தேவை. எல்லாவற்றுக்கும் மேல் மன உறுதியுடன் நம்முடன் வாழ்ந்து நம் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருக்கும் வீரப் பெண்மணிகள் தேவை! இந்தக் குழந்தைகள் மூலம் நாம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்குவோம்.”  பீமனின் தோள்களைப் பிடித்த வண்ணம் கண்ணன் கூறினான்.

“ம்ம்ம், நமக்கு அனைத்தும் கிடைக்கும்! ஆனால் அதற்குக் கடும் முயற்சிகள் செய்யவேண்டும். காலம் நிறைய ஆகிவிடும்.” பெருமூச்சுடன் கூறிய பீமன் இவை எல்லாம் திடீர் என ஒரே நாளிலோ, ஒரே இரவிலே நடக்கக் கூடிய ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொண்டான்.

“பீமா! நாம் என்ன செய்தாலும் அதை நன்றாக, நிதானமாகப் பல முறை யோசித்துச் செய்ய வேண்டும். அதைச் சரியாகவும் செய்ய வேண்டும். நாம் காண்டவப்ரஸ்தத்தை ஒரு வருஷத்தில் கட்டி முடிப்போம். அதன் பின்னரே நான் துவாரகை செல்வேன்.”

“ஆனால், அது எவ்வாறு முடியும் கண்ணா? ஒரு வருஷத்தில் எல்லாம் திடீரென்று முளைத்து விடுமா?”

“நம்மால் முடியும்!உங்கள் ஐவரிடமும் துருபதன் கொடுத்த செல்வம் இருக்கிறது. அவன் உங்களுக்குப் பணிபுரியக் கொடுத்த வீரர் படை இருக்கிறது.  சீதனமாகக் கொடுத்த ரதங்கள், குதிரைகள், மாட்டு வண்டிகள், அவற்றுடன் உள்ள பொருட்கள், கால்நடைச் செல்வங்கள் அனைத்தும் உள்ளன. என் தரப்பில் நீ கவலையே அடைய வேண்டாம். யாதவர்கள் அனைவரும் தங்கள் அனைத்து வளங்களையும் உங்களுக்காக அர்ப்பணிப்பார்கள். மணிமான் அவனுடைய நாகர்களை உங்கள் நகர நிர்மாணத்திற்காக வேலைகள் செய்யவும், உதவிகள் செய்யவும் அழைத்து வருவான்.”

“ஆனால் அது மட்டும் எப்படிப் போதும்?”

“போதாது தான்! அதையும் நான் அறிவேன்! பீமா! நாம் நம்முடைய குலகுருவான வியாசரைச் சந்தித்து இதைக் குறித்துப் பேசி அவருடைய ஆசிகளைப் பெற்றாக வேண்டும். அது முக்கியம். அவருடைய ஆசிகள் இல்லாமல் எந்த ஒரு வேலையும் முற்றுப் பெறாது. நகரை நிர்மாணிக்கும் வரை அவரை நம்முடன் இருக்கச் செய்ய வேண்டும்.”

“ஆஹா! அது வேறா? அவர் எனக்கு ஆசிகள் அளிக்க மாட்டார். எனக்கு உதவவும் மாட்டார். எனக்கு மட்டும் தனியாக உதவுவாரா? மாட்டார்! எனக்குத் தெரியும்! அவர் நாங்கள் ஐவரும் சேர்ந்து தான் இதை ஒருமனதாகச் செய்ய வேண்டும் என்பார். என் மூத்தவன் ஆன யுதிஷ்டிரனை விட்டு விட்டு இதைச் செய்தால் நான் தர்மத்திலிருந்து பிறழ்ந்தவன் என்பார். அவன் இல்லை எனில் இந்த மாபெரும் வேலையில் அதர்மமே இருப்பதாகக் கூறுவார்.”

அப்போது கிருஷ்ணன் ஏதோ புதிதாக நினைவில் வந்தவன் போலத் தன் உதடுகளின் மீது விரலை வைத்து யோசித்தான். பின்னர், “திருதராஷ்டிரனை வசப்படுத்தி அவன் மூலம் ஹஸ்தினாபுரத்துச் செல்வங்களில் ஒரு பகுதி, குதிரைகள், கால்நடைச் செல்வங்கள், ஆட்கள் எனக் கேட்டு வாங்கினால் என்ன?” என்று கேட்டவனுக்கு அது சரியான யோசனையாகத் தோன்றவே பீமன் முதுகில் ஓங்கித் தட்டினான்! “ஆம் அது தான் சரி!  திருதராஷ்டிரனிடம் பேசி இதைச் செய்ய வைப்போம். உன்னுடைய கனவுகள் நனவாவதற்கு இதுவே சரியான சுலபமான வழி.”

ஆனால் பீமன் தலையை ஆட்டினான். “ம்ஹூம், பெரியப்பா எங்களுக்கு எதுவும் தர மாட்டார். தர அவருக்கு விருப்பம் இராது!” என்றான் சோகமாக.

கிருஷ்ணன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். பின்னர் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ஓர் வழி கண்டு பிடித்தவன் போல் பேச ஆரம்பித்தான். “பீமா! நானே நேரில் போய் திருதராஷ்டிரனிடம் பேசி அவரை இவை அனைத்தையும் கொடுக்க வைக்கிறேன். நாம் கேட்பதெல்லாம் அவர் கொடுத்தாக வேண்டும்.” என்றான்.

“முட்டாள்தனமாகப் பேசாதே, கிருஷ்ணா! அவர் தன் நூறு மகன்களுக்காகவும், தன் பேரப்பிள்ளைகளுக்காகவும், மற்றும் ஹஸ்தினாபுரத்துக்காகவும் அந்தச் செல்வங்களை எல்லாம் காப்பாற்றிக் கொள்ளவே முனைவார்.”

“அப்படியா! சரி பார்க்கலாம்.” என்றான் கிருஷ்ணன். பின்னர் வேறு வழி கண்டு பிடிக்க முனைபவனைப் போல் யோசனையில் ஆழ்ந்தான். “இதோ பார் பீமா! நான் உனக்கு ஒரு வழியைக் காட்டுகிறேன். அது தான் நல்ல வழி. அந்த அரசன் திருதராஷ்டிரன் தாத்தா பீஷ்மரை மனம் நோகச் செய்யும்படி விட மாட்டார். அவர் மனம் சந்துஷ்டி அடைய வேண்டும் என்றே நினைப்பார்.. ஆகவே உன் சகோதரனை அரசனாக வேண்டாம் என்று சொல்ல யோசிப்பார். அதன் மூலம் பீஷ்மரின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரும் என்பதை அவர் அறிவார். ஆனால் அவருக்கு அதே சமயம் தன் மக்கள் அனைவரும் ஹஸ்தினாபுரத்தை ஆள வேண்டும் என்பதையே விரும்புகிறார். அதைச் செயலாக்கவே விரும்புகிறார். அவர் எண்ணத்துக்குத் தடையாக இருப்பது நீ ஒருவன் தான். உன்னைக் கண்டே அவர் அஞ்சுகிறார்.”

“ஆம், அது சரியே!”

“சரி, இப்போது நாம் போய் அவரிடம் சொல்வோம்: “துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆளட்டும்! ஏனெனில் அவன் தற்கொலை செய்து கொள்வதை நாங்கள் விரும்பவில்லை! ஆகவே, நாங்கள் புதியதாக ஓர் சாம்ராஜ்யத்தைத் தேடிச் சென்று கண்டு கொண்டு புதியதொரு நகரை நிர்மாணிப்பதிலேயே ஆவல் கொண்டிருக்கிறோம். நாங்கள் செல்கிறோம். யமுனைக்கரையில் காடுகளை அழித்துக் காண்டவப்ரஸ்தத்தை நிர்மாணிக்கிறோம்.” என்று சொல்லலாம்.” என்றான் கிருஷ்ணன்,

1 comment:

ஸ்ரீராம். said...

நினைத்ததை நடத்தி முடிக்கும் கண்ணன்!