Thursday, July 9, 2015

இவளைப் போல் ஒரு பைத்தியமும் உண்டோ?

தொடர்ந்து அழுத ஜாலந்திராவைப் பார்த்துக் கிருஷ்ணனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. “ஜாலந்திரா! இதோ அத்தை குந்தி தவிக்கும் தவிப்பைப் பார்த்தாயா? அவரும் தான் மகனைக் காணாமல் அடித்துவிட்டுத் தவிக்கிறார். அவரும் மனவருத்தத்திலேயே இருக்கிறார். அவரை விடவா உன் துக்கம் பெரிது? உன்னுடைய இந்தக் குழந்தைதனமான நடவடிக்கைகள் மூலம் நீ அவரை மேலும் வருந்த வைக்கிறாய்!” என்று கண்டிப்பாகச் சொன்னான். ஜாலந்திரா அதற்கு பதில் சொல்லும் முன்னர் அங்கே யுதிஷ்டிரனும், சகாதேவனும் வந்தனர். அவர்களைப் பார்த்த குந்தி, “பீமன் எங்கே?” என ஆவலுடன் கேட்டாள்.  அதற்கு யுதிஷ்டிரன் தன் தாயைப் பார்த்து, “எங்களால் அறிய முடிந்த செய்தி மிகக் குறைவே! நாங்கள் அறிந்ததெல்லாம் கோபு மூலம் மாளிகையிலிருந்து தன் ஆயுதங்களை எல்லாம் சேகரித்துக் கொண்ட பீமன் நகரை விட்டு வெளியேறிவிட்டான். செல்கையில் தாய் குந்தி தேவிக்கும், திரௌபதிக்கும், காஷ்யாவுக்கும் செய்திகளை அனுப்பி இருக்கிறான். நகருக்கு வெளியே இருக்கும் நம்முடைய முகாமில் அவன் இருக்கலாம் என்கின்றனர். திடீரென அவனுக்கு என்ன ஆயிற்றென்றே புரியவில்லை!” என்று நிறுத்தினான் யுதிஷ்டிரன்.

“அண்ணா! உறுதிமொழி எடுக்கையில் உங்கள் பேச்சைக் கேட்டுத் தான் இளையவர் அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அதுவும் நீங்கள் அனைத்தையும் நம் பெரியப்பாவின் விருப்பத்துக்கு விட்டதில் அவர் மனம் நொந்து போயிருக்கிறார்.” என்றான் நகுலன்.  மேலும் தொடர்ந்து, “இளையவர் மிகக் கோபத்தில் இருந்தார். அவர் முகமே கோபத்தில் சிவந்து விட்டது. மூத்தவரே! உங்கள் இந்த உறுதிமொழியால் தாத்தா அவர்களின் முயற்சியால் செய்த ஏற்பாடுகளையும், பீமன் செய்திருந்த யத்தனங்களையும் பயனற்றதாக்கி விட்டீர்கள். அனைத்தும் வீணாகி விட்டன. நீங்கள் அனைவரும் இந்த ராஜ சபையிலிருந்து வெளியேற ஆயத்தமானீர்கள். அப்போது தான் இளையவர் விருட்டென எழுந்தார். துரியோதனனுக்குச் சவால் கொடுக்கும் ஒரு பார்வையை அவனிடம் காட்டினார். அவன் சகோதரர்களையும் சவால் விடும் தோரணையில் பார்த்தார்.  மூத்தவரே! அப்போது இளையவர் கண்களில் யுத்தத்தின் சாயை தெரிந்தது. பின்னர் அவர் கோபுவை இழுத்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியையும் பிரித்திருந்த கயிற்று வளையத்தைத் தாண்டிக்கொண்டு பக்கவாட்டு வாயில் வழியாக வெளியேறிவிட்டார்.” தன் நீண்ட பிரசங்கத்தை முடித்தான் நகுலன்.

“என்ன செய்தியைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறான்?” யுதிஷ்டிரன் கேட்க, குந்தி,”ரேகாவைக் கேள்! சொல்வாள்!” என்றாள். ரேகா தன் கைகளைக் கூப்பி யுதிஷ்டிரனை நமஸ்கரித்தாள். பின்னர் கூப்பிய கரங்களுடனேயே, “பிரபு, காஷ்யாவுக்குச் சொன்ன செய்தி என்னவெனில்:”நான் உன் சுயம்வரத்தில் கலந்து கொள்ளமாட்டேன்.” என்பதே. அன்னை குந்தி தேவிக்கு:” தாயே, இனி உனக்கு நான்கு மகன்கள் மட்டுமே! ஐவர் இல்லை!” என்பதே. பாஞ்சால நாட்டு இளவரசிக்கு: “இனி உனக்கு நான்கு கணவர்கள் மட்டுமே! நால்வரை மட்டும் நீ கவனித்தால் போதுமானது!” என்பதே. பின்னர் கோபுவை மாளிகைக்கு அனுப்பித் தன் ஆயுதங்களை எடுத்து வரச் செய்தார். பின்னர் வெளியே காத்திருந்த முகாமுக்குச் சென்று தன் ரதத்தைப் பயணத்துக்குத் தயார்ப் படுத்த முனைந்து விட்டார்.”

“என் மூத்தவனே! நீ முன்னரே பீமனிடம் சொல்லி இருக்கலாம் அல்லவா? அனைத்தையும் பெரியப்பாவின் விருப்பத்திற்கிணங்க விடப் போகிறேன் என்று முன் கூட்டியே அவனிடம் தெரிவித்திருந்தால் துரியோதனனை எதிர்க்கும் ஏற்பாடுகளை அவன் செய்யாதிருந்திருப்பான் அல்லவா? அவன் ஏற்பாடுகள் செய்வதை அறிந்தும் நீ சும்மா இருந்தது ஏன்?” என்றால் குந்தி.

“எப்படி? தாயே! எப்படி?” என்று பெருமூச்சு விட்ட யுதிஷ்டிரன், “எனக்கு ராஜ்யசபையில் தான் நான் உறுதி மொழி எடுக்க வேண்டி எழுந்தபோது தான் என் சுயதர்மம் என்ன என்பதும், நான் செய்ய வேண்டியது என்ன என்பதும் தோன்றியது. அதுவரை குழப்பத்தில் தான் இருந்தேன்.  தாத்தா அவர்களின் கட்டளையினால் நான் அரசன் என்பதை ஏற்றுக் கொண்டேன். அது அவருடைய தர்மம். என் பெரியப்பாவும் அவருடைய சுய தர்மத்தை நிறைவேற்றி விட்டார். அவர் மகன்களை சிங்காதனப் போட்டியில் கலந்து கொள்ள விடாமல் நம் பக்கம் ஆதரவாக நின்றதன் மூலம் அவர் தன் தர்மத்தை நிறைவேற்றி விட்டார். “

“இத்தனைக்கும் பிறகு நான் என்னையே கேட்டுக் கொண்டேன்.” எது என்னுடைய தர்மம்?” என. அப்போது தான் எனக்குள் மின்னலைப் போல் பளிச்சிட்டது என் தர்மம் எதுவென. அது தான் அரசாட்சியை மீண்டும் பெரியவரான பெரியப்பாவின் கரங்களுக்குள்ளேயே கொடுப்பது. அது தான் என் தர்மம் என எனக்குப் புரிந்தது. தாயே! என்னைப் போல் கௌரவர்களும் இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் தானே! நான் மட்டும் இதற்கு பாத்தியதை கொண்டாட முடியுமா? நூற்றுவரின் தந்தை பிறவிக் குருடு என்பதால் அவர்களுக்குப் பிறப்பினால் கிடைத்த உரிமையை நான் இல்லை என மறுக்க முடியுமா? தாயே! நாம் பீமனை இழந்து விட்டோம் என்பது எனக்குப் புரிகிறது. அவன் இல்லாமல் நாம் நிச்சயமாய்க் கஷ்டப்படப் போகிறோம். அவன் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.” என்ற யுதிஷ்டிரன் மீண்டும் பெருமூச்சு விட்டான்.

“ஆனால் தர்மத்தின் வழி செல்வதில் உள்ள இடைஞ்சல்களையும் நாம் ஏற்றுக்கொண்டு முன் செல்லவில்லை எனில் தர்மத்தின் வழியிலேயே அர்த்தம் இல்லாமல் போய்விடும். நமக்கு மனிதராக வாழும் யோக்கியதையே இல்லாமல் போகும். இப்போது என் தர்மம் என்னவென எனக்கு நன்றாகவே புரிகிறது தாயே! நான் இந்த ஆட்சியை ஏற்கச் சம்மதித்ததே நம் அனைவருக்கும், முக்கியமாக சகோதரர்கள் அனைவருக்கும் இது நன்மை தரும் என்பதாலேயே. ஆனால் இப்போதோ பீமன் நம்முடன் இல்லை என்பதால் நான் இந்த ஆட்சியை ஏற்பதில் அர்த்தமே இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம்.” என்றான் யுதிஷ்டிரன் வருத்தம் பொங்க.

“ஆஹா, மூத்தவரே, மூத்தவரே, இம்மாதிரியான அர்த்தமில்லாப் பேச்சுக்களைக் கைவிடுங்கள். போதும், போதும்!” என்ற கிருஷ்ணன் சகாதேவன் பக்கம் திரும்பினான். “சகாதேவா! உனக்கு மற்றொரு பார்வை உள்ளதே! தயவு செய்து அதைப் பயன்படுத்தி இப்போது பீமன் எங்கே இருக்கிறான் என்பதைச் சொல்வாய்! நாம் அனைவரும் பெரும் பீதியிலும், அச்சத்திலும் ஆழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும். நான் சென்று அவனைத் திரும்ப அழைத்து வந்துவிடுகிறேன். அதற்கிடையில் இந்த விஷயம் எல்லாம் நம்முடன் இருக்கட்டும். நம் கஷ்டங்கள், சிரமங்கள் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாம்.” என்றான் கிருஷ்ணன்.

சஹாதேவன் தன் மூச்சை ஒரு தரம் உள்ளிழுத்து வெளிவிட்டுப் பின் தன் கண்களை மூடிக் கொண்டான். உள்ளார்ந்த பார்வையில் அவன் இருப்பது தெரியவர அவன் இப்போது வாய் திறந்து, “இளையவர் கிழக்குத் திசையில் சென்றிருக்கிறார் எனத் தெரிகிறது. அதாவது நாம் காம்பில்யத்திலிருந்து வந்தோமே, அதே திசை… “என இழுத்தான்.  “சரி, இப்போது நாம் அனைவரும் பீமனை மறந்து விடலாம். நான் உடனே சென்று அவனைக் கண்டு பிடித்து இழுத்து வருகிறேன்,” என்ற கிருஷ்ணன், “கருடா!” எனத் தன் துணைக்கு கருடனைக் கூப்பிட்டான். கருடர்களில் ஒருவர் வந்து கூப்பிய கரங்களோடு நின்றான். “ என்னுடைய ஆயுதங்களைத் தயார் செய்துவிட்டு அப்படியே ரத சாரதியிடம் ரதத்தையும் தயார் செய்யச் சொல்!” எனக் கட்டளை இட்டான் கண்ணன்.

“கோவிந்தா,  என் சகோதரா, ஆர்யபுத்திரர் மட்டும் திரும்பி வரவில்லை எனில் நானும் காம்பில்யத்துக்கே திரும்பி விடுவேன் என்பதை அவரிடம் சொல்.” என்றாள் திரௌபதி.  “ஆஹா, பீமன் வரவில்லை எனில் செய்வதற்கு உங்கள் ஒவ்வொரிடமும் ஒவ்வொரு வேலை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஜாலந்திரா ஒன்று சொன்னால், அத்தை குந்தி ஒன்று சொல்கிறார். இப்போது நீயுமா? இதோ பார் பாஞ்சாலி, பீமனிடம் நானும் இப்படிச் சொல்லப் போகிறேன். பீமன் திரும்பி வரவில்லை எனில் நானும் என்னுடைய கோபிகள் வசிக்கும் வ்ருந்தாவனத்துக்கே சென்று விடுவேன்.” என்று சொல்லப் போகிறேன்.” என்று சொன்ன கிருஷ்ணன் அங்குள்ள சூழ்நிலையின் இறுக்கத்தைச் சற்றே குறைத்தான்.

அப்போது ஜாலந்திரா திடீரெனக் கோபம் பொங்கக் கிருஷ்ணன் பக்கம் திரும்பினாள். “கோவிந்தா! இவை அனைத்துக்கும் காரணம் நீயே!  ஆம், நீ ஒருவன் தான் காரணம். நீ என் சகோதரி பானுமதிக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தாய் அல்லவா? அதை இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாய்!” என்று கத்தினாள். அவ்வளவு பேர் இருக்க ஜாலந்திரா இப்படிக் கத்தியதைக் கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.  கிருஷ்ணன் தயவாகச் சிரித்த வண்ணம், “யார் அந்த சத்தியத்தை என்னிடம் கேட்டது?” என்றான். இப்போது கோபம் அதிகமான ஜாலந்திராவுக்குக் கண்ணீரும் பொங்கியது. “உன் தந்திர, மந்திர வேலையை என்னிடமும் காட்டுகிறாயா  கண்ணா? உன்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு காட்டு!” என்று விம்மும் குரலில் கூறினாள்.

திரௌபதி அவள் கைகளைப் பிடித்து ஆறுதல் கூற முயன்றபோது ஜாலந்திரா மேலும் கோபத்தோடு அவளைத் தள்ளிவிட்டாள்.  பின்னர் மேலும் கோபத்தோடு அவளைப் பார்த்து, “நான் மற்றவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. இதோ பார், பாஞ்சாலி, யார் என்ன சொன்னாலும், செய்தாலும் எனக்கு அக்கறை இல்லை.” என்று ஆரம்பித்தாள். “நீ சொல்வது ஒவ்வொன்றையும் நான் கேட்டே ஆகவேண்டும். கேட்கிறேன்.” என்றான் கிருஷ்ணன் மீண்டும் தயை பொங்கும் குரலில். கிருஷ்ணனை ஆங்காரத்துடன் பார்த்தாள் ஜாலந்திரா. அவள் உடலின் ஒவ்வொரு பாகமும் தனித்தனியாக நடுங்கியது. “கோவிந்தா, நீ மட்டும் அவர் இல்லாமல் திரும்பி வந்தாயெனில், நான் என் நாவைத் துண்டித்துக் கொண்டு உன் காலடியில் விழுந்து தற்கொலை செய்து கொள்வேன்.” என்று மீண்டும் கத்தினாள்.

கிருஷ்ணன் பதிலே பேசாமல் சிரித்தான். சிரித்த வண்ணம் திரௌபதியைப் பார்த்து, “இவளைப் போல் ஒரு பைத்தியமும் உண்டோ?” என்று கேட்டான். திரௌபதி திகைத்து நின்றாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

ஜாலந்திரா..... என்னது!! சின்னப் புள்ளத் தனமா இருக்கு!