Tuesday, September 8, 2015

சத்ராஜித்தின் கோபம்!

தன் தந்தையைப் பார்க்கச் சென்ற பாமாவுக்கு அவரின் கோபம் அச்சமூட்டியது. கண்ணில் படுபவர்களைக் கொன்று விடும் அளவுக்குக் கோபத்துடன் காணப்பட்டார். அவள் தந்தையின் கோபம் அவளுக்குப் புதிதல்ல! என்றாலும் இன்று கூடுதலாக நொறுங்கிப் போனவர் போலக் காணப்பட்டது அவள் மனதை உறுத்தியது. அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சத்ராஜித் உயரமாகவும் நல்ல உடல் வலுவுடனும் காணப்பட்டான். இளைஞனாக இருந்தபோது நல்ல இறுக்கமான தசைப்பிடிப்புடன் இருந்திருக்க வேண்டும். இப்போது தசைகள் தளர்ந்து காணப்பட்டது. அதோடு அவன் வயிறும் செல்வம் வந்தபிறகு வாழ்ந்து வரும் செழிப்பான வாழ்க்கை முறையால் பெரிதாகவே காணப்பட்டது. பார்ப்பதற்குக் கண்ணியமாகவே தெரிந்தான். நன்கு ஒழுங்கு செய்யப்பட்ட தாடியும், வழுக்கையாகிக் கொண்டிருக்கும் தலையோடும் காணப்பட்டான். அவன் முன்பற்களில் இரண்டு இல்லை; ஆகையால் அவன் கோபத்துடன் சீறும்போது அது அவன் முக அழகைக் கெடுத்துக் கோரமாக ஆக்கிக் கொண்டிருந்தது. அவன் அணிந்திருந்த உடைகளால் அவனுடைய செல்வச் செழிப்பு அனைவருக்கும் தெரியும் வண்ணம் இருந்தது. ஏகப்பட்ட தங்க நகைகளையும் அணிந்திருந்தான். கை மணிக்கட்டில் கங்கணங்கள், தோள் வளைகள், விரல்களில் மோதிரங்கள் என அணிந்திருந்தான்.

அவனுடைய அரைக்கச்சை கூட தங்கத்தால் ஆகி இருந்ததோடு அதில் முத்துக்கள், மணிகள், பவளங்கள் என தொங்கிக் கொண்டிருந்தன.  மூன்று தங்கச் சங்கிலிகளை ஒன்று சேர்த்துக் கொண்டு ஒரு பெரிய பதக்கம் அவன் மார்பில் தொங்கியது. அதில் ஒரு கோழிமுட்டை அளவுக்குப் பெரிய வைரம் பதித்திருந்தது. பதக்கத்துடன் கூடிய அந்த மாலையைத் தான் அதிலும் அதில் பதித்திருந்த அந்த ரத்தினத்தைத் தான் ச்யமந்தக மணி என்று அழைத்தனர். இது சூரியக் கடவுளால் அவனுக்கு அளிக்கப்பட்டதாக ஊரெங்கும் பேச்சு! அவனுக்கு சூரியன் செய்த மிகப் பெரிய அநுகூலம் இது என்றும் நினைத்தனர். சூரியன் எந்த இடத்தில் வைத்து இதை அவனுக்குக் கொடுத்தாரோ அதே இடத்தில் இந்த ச்யமந்தக மணியை வைத்து முறைப்படி பூஜித்து எடுத்தால் மண்ணும் பொன்னாகும் என்று அனைவரும் பேசிக் கொண்டனர். தங்களுடைய செல்வச் செழிப்புக்கு இந்த ச்யமந்தக மணியே காரணம் என அவள் தந்தை கூறுவார்.

ஊர் மக்களும் அதையே பேசிக் கொண்டனர். அவன் சூரியனுக்கு நெருக்கமாக இருப்பது குறித்து அவனைக் கண்டு பிரமித்தனர். தங்கத் தகடுகளால் வேயப்பட்டதொரு சிங்காதனத்தில் அமர்ந்திருந்தான் சத்ராஜித். தரையெங்கும் கரடித் தோலால் விரிப்புகள் நெய்யப்பட்டு போடப்பட்டிருந்தன. அவனுடைய அந்த வயதுக்கும் உடல்நிலைக்கும் மாறாக முதுகுத் தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து இருந்தது. நேராக அமர்ந்திருந்தான் சத்ராஜித். சத்யபாமா அங்கே வருவதைப் பார்த்ததுமே அவ்வளவு நேரமாக அங்கிருந்த தன் மூத்த மகன் பாங்ககராவையும் குடும்பத்து ஆசானையும் அங்கிருந்து செல்லச் சொல்லி சைகை காட்ட்டினான். சத்யபாமாவுக்கு யாரும் எதுவும் சொல்லாமலேயே என்ன பிரச்னை என்பது புரிந்து விட்டது. இந்த யாகத்தை நடத்திக் கொடுத்துக் கொண்டிருந்த பிராமணர்கள் அனைவரும் யாதவர்களின் குலகுருவான கர்காசாரியாருடன் சேர்ந்து கிருஷ்ணனை வரவேற்கச் சென்று விட்டனர்.  ஆகவே அன்றைய யாகம் தாமதமாகி விட்டது. அவர்கள் அனைவரும் திரும்பி வரும் வரை மதிய உணவும் தாமதம் ஆகிவிட்டது. இது தான் அவள் தந்தையை மிக மோசமாகப் பாதித்திருக்கிறது. ஆகவே கண்ணெதிரே அகப்பட்ட தன் மூத்த மகனையும், குடும்பத்து ஆசானையும் கண்டித்துக் கொண்டு இருந்திருக்கிறான் சத்ராஜித்!

அவர்கள் அங்கிருந்து சென்றதும் சத்யபாமாவைப் பார்த்தான் சத்ராஜித். அவளை மேலும் கீழுமாகப் பார்த்தான். யாரையேனும் தன் கோபாக்னியில் மூழ்க அடிக்கும் முன்னர் அப்படிப் பார்ப்பது சத்ராஜித்தின் வழக்கம். சத்யபாமா அவனை நமஸ்கரித்தாள். பின்னர் தன் கீழ்க்கண்களால் மிகுந்த எச்சரிக்கையுடன் அவனையே பார்த்த வண்ணம் நின்றாள். கைகளை மிக்க மரியாதையுடன் கூப்பிக் கொண்டாள். “என்னிடம் வா!” என்றான் சத்ராஜித் ஆணையிடும் தோரணையில். மிகப் பொறுமையானவள் போல சத்யபாமா அதற்கு உடனே கீழ்ப்படிந்தாள்.

“உட்கார் என் அருகே!”

“தங்கள் உத்தரவுப்படியே!”

“எங்கே போயிருந்தாய்?” தன் கோபக்கண்களை உருட்டிய வண்ணம் கேட்டான். ஆனால் பாமாவிடமிருந்து பதிலே இல்லை. தரையில் பதித்திருந்த தன் கண்களை அங்கிருந்து அவள் மீட்கவும் இல்லை. “உண்மையைச் சொல்!” என்று சொல்லிய வண்ணம் தன் தொடையில் ஓங்கி அடித்துக் கொண்டான் சத்ராஜித். இது அவனுடைய மிதமிஞ்சிய ஆத்திரத்தைக் காட்டியது. அதோடு அவன் எந்த முட்டாள் தனத்தையும் பொறுக்க மாட்டான் என்பதையும் இதன் மூலம் தெரிவித்தான்.

“தந்தையே! மாட்சிமை பொருந்திய யாதவத் தலைவர் வசுதேவரின் மகள் சுபத்ரா என்னுடைய அருமைச் சிநேகிதி, நானும் அவளுடன் வரவேண்டும் என விரும்பினாள். “ அவள் சொன்ன விதம் இது தான் உண்மை என்பது போல் தொனித்தாலும் உண்மையில் பாமாதான் தானாக அந்த வரவேற்பில் கலந்து கொள்ளச் சென்றால் என்பது அவள் மட்டுமே அறிந்தது.

“எங்கே?”

“வரவேற்பு நிகழ்ச்சிக்கு!” மென்று விழுங்கினாள் சுபத்ரா!
அளவிலடங்காக் கோபத்துடன் சத்ராஜித் சிறிது நேரம் அவளையே பார்த்தான்.பின்னர் கேட்டான். இல்லை இல்லை ஆச்சரியத்தைத் தெரிவித்தான்! “என்ன, நீ அந்த வரவேற்புக்குப் போயிருந்தாயா?” நிமிர்ந்தே பார்க்காமல் ஆமென்று தலையை மட்டும் அசைத்தாள் பாமா. “ஏன்? எதற்கு? அந்தப் பிச்சைக்கார்ன் சாத்யகியைப் பார்க்கவா?” சத்ராஜித் கோபம் அதிகம் ஆனது.  உள்ளூர வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் பாமா.

1 comment:

ஸ்ரீராம். said...

சாத்யகியைப் பார்க்கப் போனதாக சத்ராஜித் நினைத்துக் கொள்வது ஆதாயம்தான் பாமா பார்வையில்!