Wednesday, October 14, 2015

சத்ராஜித்தின் வெறுப்பும், கண்ணனின் விருப்பும்!

“இந்தப் பிரச்னை எப்படித் தீர்க்கப்பட்டது?” எனக் கேட்டார் உக்ரசேனர்.

“கிருஷ்ணன் தலையீட்டில் தான்! எல்லாப் பக்கங்களிலும் வாக்குறுதிகளை அள்ளித் தந்தான். பாண்டவர் பக்கமும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன! கௌரவர் பக்கமும் வாக்குறுதிகள் அள்ளித் தரப்பட்டன. துரியோதனனின் மனைவி இறக்கும் தருவாயில் இருந்தாள். அவளிடம் ஹஸ்தினாபுரத்தை துரியோதனன் தான் ஆட்சி செய்வான்; வேறு யாரும் ஆட்சிக்கு வரமாட்டார்கள்! என்னும் வாக்கைக் கொடுத்தான். அதோடு மட்டுமா? பாண்டவர்களின் இரண்டாமவன் ஆன பீமனுக்கு அவன் தான் அடுத்த யுவராஜா என்னும் வாக்கையும் கொடுத்தான். அது அவனுக்கு வாரிசுரிமையாகக் கிடைக்கும் என்றும் சொன்னான். கடைசியில் எல்லா வாக்குறுதிகளையும் கிருஷ்ணன் நிறைவேற்றி விட்டான். ஒரு மாபெரும் சகோதரச் சண்டை தவிர்க்கப்பட்டது. ஐந்து சகோதரர்களும் மிகவும் சந்தோஷத்துடனும், மன நிறைவுடனும் காண்டவப்ரஸ்தம் நோக்கிச் சென்றனர். “

“அதோடு விடவில்லை கிருஷ்ணனின் திறமையும், சாமர்த்தியமும். குரு வம்சத்துச் சொத்தில் சரிபாதி பாண்டவர்களுக்கு அளிக்கப்பட்டது! அதைத் தவிரவும் துருபதன் தன் மருமகன்கள் ஐவருக்கும் அளித்த பரிசுகள், அனைத்தும் அப்படியே காண்டவப்ரஸ்தம் சென்றன. நாங்களும் அவர்களுடன் சென்றோம். அவர்கள் நாடு கடத்தப்பட்டுக் காட்டுக்கு வசிக்கச் சென்றிருப்பதாக இருந்திருக்க வேண்டியதை கோவிந்தன் தலையீடு முற்றிலும் மாற்றியமைத்தது. அழகான ஓர் நகரை நிர்மாணித்து அதற்கு இந்திரப்ரஸ்தம் என்னும் பெயரையும் இட்டு அவர்களின் தோல்வியாக இருக்க வேண்டியதை மாபெரும் வெற்றியாக மாற்றியமைத்தான் கிருஷ்ணன்.”

“ஆம், ஆம்! ஆனால் அனைத்தும் யாதவர்களின் செலவில்! அவர்களால் கொடுக்கப்பட்ட பொருள், ரதங்கள், குதிரைகள், நவரத்தினங்கள், பொன், கால்நடைச்செல்வங்கள் போன்றவற்றால்!” என்று சத்ராஜித் குறுக்கிட்டுச் சீறினான். பலராமன் முகம் கோபத்தால் சிவந்தது. அவன் கோபத்தில் தன்னையுமறியாமல் வெடிக்க இருந்த அந்தச் சமயத்தில், கிருஷ்ணனின் மென்மையான குரல் குறுக்கிட்டது. யார் எப்போது கோபமாகப் பேசினாலும் அதைக் கிருஷ்ணன் மென்மையான தன் பேச்சாலேயே எதிர்கொள்வான். அதே போல் இப்போதும் பேசினான். “ஐந்து சகோதரர்களும் என் தந்தையின் சகோதரி வழிச் சகோதரர்கள் ஆவார்கள். அவர்களுக்கு நாங்கள் செய்யாமல் யார் செய்வார்கள்? அவர்களுக்கு எங்கள் சார்பில் பரிசுகள் அளித்தே ஆக வேண்டும்!” என்றான்.

“ஹா! இப்போது தான் உன் அண்ணன் சொன்னான். குருவம்சத்துச் சொத்தில் சரிபாதி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்று! அது போக துருபதனால் அளிக்கப்பட்டவை வேறு இருந்திருக்கின்றன. இவ்வளவுக்கும் மேல் நாம் வேறு தனியாக அவர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டுமா என்பது தான் என் கேள்வி! அது தேவையில்லை! இவ்வளவு விலை உயர்ந்த ஆடம்பரமான பொருட்களை நாம் ஏன் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்?” என்று சத்ராஜித் விடாமல் மேலும் கூறினான்.

“அவசியம்! ஆம்! இருந்தது!” என்றான் பலராமன். அவன் சத்ராஜித் இருந்த பக்கமே திரும்பாமல் பேசினான்.”யாதவ அதிரதிகள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள், இந்த ஆர்யவர்த்தத்திலே அவர்களால் பல அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டன! குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால நாட்டினருக்கும் இடையே நட்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். அதோடு மட்டுமா? பாண்டவர்களுக்காக ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தையே உருவாக்கித் தந்திருக்கின்றனர். “ என்ற பலராமன் சற்று நிறுத்தி விட்டு மேலும் தொடர்ந்தான். “ஆர்யவர்த்தத்து அரசர்களுக்கிடையே நாம் யாதவர்கள் நடுநிலை வகித்து வந்தோம்; வருகிறோம்; இனியும் அவ்வாறே இருப்போம். இருவருமே நமக்கு வேண்டியவர்களே! அப்படி இருக்கையில் நாம் இந்தச் சின்ன விஷயத்தில் கருமிகளைப் போல் நடந்து கொள்வது சரியல்லவே! நம் பெருந்தன்மையைக் காப்பாற்ற வேண்டாமா? கோவிந்தன் நம்முடைய சொத்துக்களின் மொத்த மதிப்பில் ஐந்தில் ஒரு பாகம் பாண்டவர்களுக்குக் கொடுக்க விரும்பினான்.”

“அது சரி அப்பா! அவன் உன்னைக் கேட்டானா? உன்னைக் கலந்து ஆலோசித்தானா?” என்று மீண்டும் கேட்டான் சத்ராஜித்.

“ஆம், அவன் என்னைக் கேட்டு ஆலோசித்தான். என்னைக் கேட்காமல் செய்யவில்லை. எதுவுமே அவன் என்னைக் கேட்காமல் அவனாகச் செய்யவும் மாட்டான். ஆனால் உக்ரசேன மஹாராஜா! கோவிந்தனைக் குறித்து நானும் ஒரு குறை தெரிவிக்க வேண்டி உள்ளது! குறை கூறியே ஆகவேண்டும்.” என்றான் பலராமன். “என்ன அது?” என வினவினார் உக்ரசேனர். “கிருஷ்ணனால் எனக்கு ஏற்பட்ட ஆச்சரியங்களிலிருந்து நான் இன்னமும் விலகவில்லை. ஒவ்வொரு கணமும் அதில் மூழ்கி இருக்கிறேன்.” என்ற பலராமன் கிருஷ்ணனை அன்பு ததும்பும் கண்களோடு பார்த்தான். பின்னர் உக்ரசேனரைப் பார்த்து மேலும் பேச ஆரம்பித்தான்.

“உங்களால் சொல்ல முடியாது! அவனோடு நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்றோ அல்லது எங்கே செல்வீர்கள் என்பதோ நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. சங்கடங்கள் அவனால் உருவாவது போல் இருக்கும். ஆனால் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும். ஏராளமான வாக்குறுதிகளை அளிப்பான். ஆனால் எதையும் மறக்காமல் நிறைவேற்றி வைப்பான். எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் எல்லாவற்றிலும் என்னை முன்னிறுத்தி அவன் பின் நிற்பான். நடந்த நன்மைகள் அனைத்துக்கும் காரணம் நானே என அனைவரும் அறியும்படி கூறி அவன் ஒதுங்கி விடுவான். உண்மையில் எனக்கு அதைக் குறித்து ஏதுவுமே தெரிந்திராது. அவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கவேண்டும், மாட்சிமை பொருந்திய அரசே!” என்று முடித்த பலராமன் கிருஷ்ணன் தோள் மேல் தன் கைகளை வைத்து அழுத்திக் கொடுத்துத் தன் அன்பைத் தெரிவித்தான்.

“என்னால் இன்னமும் ஏன் இத்தனை விலை உயர்ந்த பொருட்கள் நம்மால் பாண்டவர்களுக்குப் பரிசளிக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதிலும் யாதவர்களின் சொத்தை அழித்து அவர்களை நாம் ஏன் வாழ வைக்க வேண்டும்?” சத்ராஜித் கோபத்தில் கத்தினான்.

கிருஷ்ணன் குறிப்பாக பலராமன் கைகளை அழுத்தினான். அதைப் புரிந்து கொண்டான் பலராமனும். பின்னர் கிருஷ்ணனையே அதற்கு பதில் கூற அனுமதித்தான். “ஆர்யவர்த்தத்தில் தர்ம சாம்ராஜ்யத்தை நிலை நாட்ட நாம் கொடுத்த மாபெரும் விலை அது!” என்றான் கிருஷ்ணன். “அதனால் பரவாயில்லை, கிருஷ்ணா!” என்றான் சாத்யகன். “ஆனால் யாதவர்களிடமிருந்தும், யாதவப் பெண்களிடமிருந்தும் நாம் பரிசுகளைப் பெற்று அளித்திருக்கக் கூடாது. இதன் மூலம் துரதிர்ஷ்டவசமாகப் பல யாதவர்கள் ஏழையாகி விட்டனர்.யாரெல்லாம் அப்போது இந்தப் பரிசளிப்பைச் செய்யவில்லையோ அவர்கள் அனைவரும் நல்ல வசதியோடும் செல்வத்தோடும் இருக்கின்றனர். “ என்றான் சாத்யகன்.

“அதெல்லாம் போகட்டும்! இப்போது நமக்கு என்ன நடக்கப் போகிறது?” என்று தன் கொடூரமான குரலில் சத்ராஜித் கேட்டான். “நாம் எதற்குத் தகுதியானவர்களோ அது நமக்குக் கிடைக்கும்.” என்றான் கிருஷ்ணன் உறுதியான குரலில்.

“நம்முடைய வளங்கள் அனைத்தையும் நீ முடக்கிவிட்டாய்! ஒருவேளை ஷால்வன் படையெடுத்து வந்தானானால் நம்மை எல்லாம் நொறுக்கித் தள்ளிவிடுவான். நம்மை நாம் எங்கே ஒளித்துக் கொள்வது? இந்தப் பரந்த பூமியில் நமக்கு இடமே இல்லை! எங்கேயும் நாம் சரண் அடைய முடியாது. எங்கே போய் ஒளிந்து கொள்வோம்?” என்றான் சத்ராஜித் வெறுப்பான குரலில்!

“நாம் தர்மத்திற்காகப் போரிட்டு தர்ம சாம்ராஜ்யத்திற்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தோமெனில் நம்மை எதிர்ப்பவர் யார்?” என்றான் கிருஷ்ணன்.  “அதெல்லாம் சரி அப்பா! ஆனால் நாம் எதை வைத்துப் போரிடுவோம்? நம்மிடம் என்ன இருக்கிறது? நம்மிடம் இருக்கும் வசதிகளை வைத்து என்ன செய்ய முடியும்? பாண்டவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியவற்றில் எதுவும் செய்ய இயலாது!” என்று சத்ராஜித் பக்கம் அமர்ந்திருந்த ஒரு வயதான யாதவத் தலைவர் கூறினார்.

2 comments:

ஸ்ரீராம். said...

வாக்கு வாதங்கள்! ம்ம்...

மோகன்ஜி said...

அருமை! அருமை!!