Monday, January 11, 2016

பாமாவின் பாடல்! ருக்மிணியின் ஊடல்!

“உனக்குத் தான் அவளை மிகப் பிடிக்குமே? இன்று ஏன் பிடிக்கவில்லை?” என்று மீண்டும் கேட்டான் கிருஷ்ணன்.

“ஓ,ஓ, அவள் என்ன செய்தாள் என்பது உனக்கு எப்படித் தெரியும் அண்ணா?”

“ஏன், என்ன செய்தாள்? எனக்கு எப்படித் தெரியும்?”

அத்துடன் சுபத்ரா உள்ளே சென்றுவிட கிருஷ்ணன் உத்தவனுடன் தனித்து விடப்பட்டான். உத்தவனும் அவனும் அன்றைய விஷயங்களைப்பேசி ஒருவருக்கொருவர் தெளிவு கண்டனர். பின்னர் அனைவரும் இரவு உணவுக்காகச் சென்றனர். கிருஷ்ணன் படுக்கச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கையில் மீண்டும் சுபத்ரா அவனைத் தேடி வந்தாள். அவள் மிகப்பரபரப்பாக இருந்தாள். “அண்ணா, அண்ணா!” என்று கத்திக் கொண்டே வந்தாள். கிருஷ்ணன் ஆச்சரியமாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, “இதோ, அந்தப் பெரிய பூனை மீண்டும் வந்துவிட்டது!”

“எங்கே? இங்கேயா?” கிருஷ்ணன் ஆச்சரியத்துடன் கேட்க, “இல்லை, அண்ணா! அவளே நேரில் வந்துவிடவில்லை! அவள் ஒரு செய்தியை எனக்கு அனுப்பி இருக்கிறாள். அந்தச் செய்தியை உன்னிடம் சொல்லும்படி என்னைப் பணித்திருக்கிறாள். அதுவும் ஒரு பாடலின் சில வரிகளை!” என்றாள் சுபத்ரா.

“எந்தப் பாடல் சுபத்ரா?”

“பிரியாவிடைப்பாடல் தான் அண்ணா! ஒரு வீரனின் மனைவி அவன் போர்க்களத்துக்குச் செல்கையில் பாடும் பிரியாவிடைப் பாடல்!” என்றாள் சுபத்ரா.

“ஓஹோ, ஆனால் அந்தப் பாடல் எனக்கு மனப்பாடமாகத் தெரியுமே!  நீயும், மற்றப் பெண்களும் தினசரி பாடும் இந்தப்பாடல் எனக்கு நினைவில் இல்லை எனில் என்னைப் போன்ற முட்டாள் யாரும் இருக்க முடியாது!”

“அண்ணா, அந்தப் பொல்லாத பெரிய பூனைக்குத் துணிச்சல் மிக அதிகம். அவள் என்ன சொல்லி இருக்கிறாள் தெரியுமா? அந்தப் பாடலில் உனக்கும் தெரியாத சில வரிகள் உள்ளனவாம். முழுப்பாடலையும் நீ அறிய மாட்டாயாம்! ஆகவே என்னை விட்டு அந்த விட்டுப் போன வரிகளைச் சொல்லச் சொல்லி இருக்கிறாள்.”

“விட்டுப் போன வரிகளா? அவை எவை?”

அப்படி ஒரு வேளை, என் பிரபுவே, அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால்,
உங்கள் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வண்ணம் தீண்டினால், ஆஹா, நீங்கள் எனக்கு மிகவும் அருமையானவர் பிரபுவே! அப்படிப்பட்ட உங்களை அக்னி தீண்டினால், உங்கள் நற்பெயர் களங்கம் அடைந்தால்! உங்கள் உயிரைவிட உங்களுக்கு உங்கள் நற்பெயரன்றோ மிகவும் அரிதானது! அதற்குக் களங்கம் விளைந்தால்!

அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால், என் பிரபுவே, நான் உங்களுக்கு முன்னரே அங்கே சென்றுவிடுவேன். என் உடலை அக்னி தீண்டும் வண்ணம் அதை வரவேற்பேன். உங்களுக்கு முன்னால் என்னை அக்னி தீண்டட்டும் என் பிரபுவே!

உங்கள் கண்ணெதிரே நான் ஓர் எரியும் தூணைப்போல் எரிந்து அரணாக உங்களைக் காப்பேன்! என்னை அக்னி முற்றிலும் எரித்துச் சாம்பலாக்கும்வரை அங்கேயே நிற்பேன்! அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால் என் பிரபுவே!

என் உடல் எரிந்த நான் சாம்பல் ஆன பின்னராவது நீங்கள் அந்தச் சாம்பலை எடுத்து உங்கள் மார்போடு அணைப்பீர்களா? என் காதல் கனவுகளில் நீங்கள் என்னை அணைத்திருந்தீர்கள் என் பிரபுவே! இப்போது என் சாம்பலையாவது நீங்கள் அணைத்துக் கொள்வீர்களா!

என் பிரபுவே, என் சாம்பல் கூட உங்களை விடாமல் அழுந்தப் பற்றி அணைத்திருக்கும். இப்போது நான் அதைத் தான் செய்ய நினைத்திருந்தாலும், என் பிரபுவே, கொடிய விதி என்னை உங்களிடமிருந்து பிரித்திருக்கிறது! அக்னியின் கொடிய நாக்குகள் உங்களைத் தீண்டினால், என் பிரபுவே!

உங்களுக்கு முன்னால் நான் அங்கே நின்றிருப்பேன்!

கண்ணன் இதைக் கேட்டுவிட்டு, ”இந்த வரிகள் எதைச் சொல்கின்றன என உனக்கு ஏதேனும் புரிகிறதா?” என்று சுபத்ராவைப் பார்த்துக் கேட்டான். அப்போது அங்கிருந்த ருக்மிணி, “வெட்கம் கெட்ட பெண்! எனக்கும் ஷாயிப்யாவுக்கும் பாடம் கற்றுக் கொடுக்க முயல்கிறாள்; அல்லது கற்றுக் கொடுத்திருக்கிறாள்!” என்றாள்.

கிருஷ்ணன் ருக்மிணியைப் பார்த்துச் சிரித்தான். “உன்னுடைய விளக்கம் சரியானதாகத் தோன்றவில்லை ருக்மிணி! போகட்டும்! எது எப்படியோ இதை எல்லாம் மறந்துவிட்டு நாம் படுத்துத் தூங்குவோம்!”: என்றான். அடுத்த நாள் காலை கிருஷ்ணன் வழக்கம் போல் அதிகாலையிலேயே எழுந்துவிட்டான். தினம் பிரம்ம முஹூர்த்த நேரத்திலே எழுவது அவன் வழக்கம். விடியும் முன்னர் அந்த நேரத்தின் புனிதத்தை அப்படியே அனுபவிக்க அவனுக்கு மிக விருப்பம். எழுந்ததும் வழக்கம் போல் கடலுக்குச் சென்றான். குளித்து சூரிய பகவானுக்கு அர்க்கியங்கள் கொடுத்து வழிபட்டான். பின்னர் உத்தவனோடு மல்யுத்தப் பயிற்சி செய்தான். வழக்கமாகச் செய்வது தான் என்றாலும் தினமும் சாத்யகியோடு தான் மல்யுத்தப் பயிற்சி நடக்கும். இன்று ஏனோ சாத்யகி வரவில்லை. ஆகவே கிருஷ்ணன் பயிற்சி முடிந்ததும் உத்தவனை அனுப்பி சாத்யகிக்கு என்ன ஆயிற்று என்று பார்த்து வரச் சொன்னான். ஒருவேளை அவனுக்கு உடல்நலம் சரியில்லையோ என எண்ணினான்.

மல்யுத்தப் பயிற்சி முடிந்து மீண்டும் கடலில் குளித்த கிருஷ்ணன் தன் மாளிகையை அடைந்தான். அங்கே உத்தவனின் இரு மனைவியரான கபிலாவும் பிங்களாவும் கிருஷ்ணனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். அவர்கள் முகத்தில் பதட்டமும், கவலையும் தெரிந்தது. மிகவும் பரபரப்புடனும் காணப்பட்டனர். கண்களில் கண்ணீரும் காணப்பட்டது. அவர்களோடு ஒரு வயதான நாககுலப் பெண்மணியும் கவலை தோய்ந்த முகத்துடன் அவ்வப்போது அழுத வண்ணம் நின்று கொண்டிருந்தாள்.

கிருஷ்ணனைப் பார்த்ததுமே இருவரில் ஒருவர், “பிரபுவே, சத்ராஜித்தின் மகளைக் காணவில்லை!” என்றாள். “யார்? சத்யபாமாவா?” என்று கிருஷ்ணன் கேட்க இருவரும் தலை அசைத்து ஆமோதித்தனர். “உங்களுக்கு எப்படித் தெரியும் அவள் காணாமல் போய்விட்டாள் என்பது?” எனக் கிருஷ்ணன் மேலும் கேட்டான். அப்போது தங்கள் அருகே நின்றிருந்த வயதான பெண்மணியைக் காட்டி, “இவள் முகி! எங்கள் நாகநாட்டுப் பெண். இவள் தான் சத்யாவின் செவிலித் தாய்! நாங்களும் நாக இளவரசிகள் என்பதால் எங்களை அடிக்கடி வந்து சந்திப்பாள். இப்போதும் எங்களைக் காண வந்தவள் காலையிலிருந்து அழுது கொண்டிருக்கிறாள். அவள் யஜமானியைக் காணவில்லை என்கிறாள். காலையில் தான் பார்த்தாளாம், அவள் காணாமல் போனதை!”

கிருஷ்ணனுக்குப் புதிராக இருந்தது. ம்ம்ம்ம்? அந்த விட்டுப் போன வரிகள் சொல்லு செய்தி தான் என்ன? யோசித்தான் கிருஷ்ணன். தனக்குள் தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டான். பின்னர் முகியிடம் திரும்பி அவளுக்குத் தன் யஜமானியைக் காணோம் என்பது எப்படித் தெரியும் என்று கேட்டான்.

அதற்கு முகி, “ஐயா, அவள் நேற்று முழுவதும் அழுது கொண்டிருந்தாள்.” என்று சொன்னவள் அதற்கு மேல் பேச முடியாமல் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். தன்னிரு கரங்களாலும் முகத்தை மூடிக் கொண்டு பெரிதாக அழுதாள். “அழுகையை நிறுத்து! பெண்ணே! சுபத்ராவிடன் அவள் எப்போது உன்னை அனுப்பினாள்? அதாவது பிரியாவிடைப்பாடலின் விடுபட்ட வரிகளைச் சொல்லி அனுப்பியது எப்போது?” என்று கேட்டான் கண்ணன்.

“மாலை மங்கி இரவானதும் அனுப்பினாள். அதற்கு முன்னர் அவள் கிருதவர்மாவின் வீட்டுக்குச் சென்றிருந்தாள். அங்கிருந்து திரும்பியதும் உடனே அவள் உங்கள் தங்கையைக் காண என்னை அனுப்பி வைத்தாள். அப்போது தான் அந்தப் பாடலின் விடுபட்ட வரிகளைச் சொல்லி அனுப்பினாள்.” என்ற முகி சிறிது யோசனைக்குப் பின்னர், “ நான் திரும்பி வந்ததும் என்னிடம் ஒன்றும் கேட்கவில்லை. என்னைப் படுக்கப் போகச் சொன்னாள். தானும் படுத்துத் தூங்கப் போவதாய் என்னிடம் சொன்னாள்.” என்றாள்.

“அவளைக் காணவில்லை என்பதை நீ எப்போது கண்டு பிடித்தாய்?”

“காலையில் தான் பிரபுவே! நான் எப்போதும் போல் காலையில் அவளுக்குப் பணிவிடை செய்ய வந்தேன். ஆனால் அவள் படுக்கையில் இல்லை!”

“ம்ம்ம்ம்? ஊரி என்ன ஆனாள்?”

“ஊரியும் அவளுடன் சென்றிருக்கிறாள். அதோடு இல்லை பிரபுவே! சத்யா தன்னுடன் எந்தவிதமான பொருட்களையும் கொண்டு செல்லவில்லை! அவளுடைய விலை உயர்ந்த துணிகள், ஆபரணங்கள் எல்லாம் அப்படியே இருக்கின்றன. அவள் முதல் நாள் கட்டி இருந்த விலை உயர்ந்த ஆடையும் கட்டிலில் காணப்பட்டது. இதிலிருந்து அவள் சேடிப் பெண்களின் உடையை அணிந்து கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள் முகி.

1 comment:

ஸ்ரீராம். said...

ஆஹா..... ஆரம்பித்து விட்டது ஒரு சுவாரஸ்ய அத்தியாயம்!