Tuesday, March 15, 2016

சாம்பனின் முடிவு?

அதற்குள்ளாக நெருப்பில் வாட்டப்பட்ட மாமிசம் வெந்து தயார் நிலையில் இருக்கவே ஒரு பாறையின் முனையையே நன்கு சீவிச் சீவிக் கத்தி போல் ஆக்கி இருந்ததை வைத்து மாமிசம் துண்டுகளாக வெட்டப்பட்டது. சாப்பாடு தயாராகிவிட்டது என்று தெரிந்ததும் அங்கே இருந்த அனைவரும் ஒரே நேரத்தில் பேச முற்படக் குழப்பமான சப்தங்களுக்கு நடுவே மாமிசம் அனைவருக்கும் பகிர்ந்து தரப்பட்டது. காத்திருந்த கரடிகளும் தங்கள் உறுமலால் தாங்களும் பசியோடு காத்திருப்பதை நினைவூட்டின. அப்போது “கடவுளின் பிரியமான மகன்” சாம்பன் எழுந்து நின்றான். தன் கைகளை உயர்த்திய வண்ணம் தங்கள் கடவுளைத் தங்களிடம் அழைத்தான். பின்னர் தன் தோளில் இருந்து தொங்கிய மத்தளத்தை வாசித்த வண்ணம் அவர்களுக்கே உரிய நடன முறையில் நடனம் ஆடத் துவங்கினான். ஒவ்வொருவரும் தங்கள் தலையைத் தாழ்த்திய வண்ணம் தங்கள் நெஞ்சைத் தொட்டுக் கொண்டு மரியாதையைத் தெரிவித்துக் கொண்டனர். அதன் பின்னர் அனைவரும் உணவு உண்ண ஆரம்பித்தனர். சாப்பாடு முடிந்ததும் ஆசாரியன் ஆன சாம்பன் மீண்டும் எழுந்து நின்று தங்கள் கடவுளைக் கூவி அழைத்தான். மத்தளத்தைத் தட்டிய வண்ணம் சாஸ்திரிய நடனத்தின் இரு அடிகளை முன்னும், பின்னுமாக ஆடத் துவங்கினான். பின்னர் உரத்த குரலில் “இன்றிரவு உங்கள் படுக்கைக்கு நிலாப்பெண் வரப் போகிறாள், எல்லாம் வல்லவரே! தயாராக இருங்கள். இதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுவோம். உங்களுடைய பிரியத்துக்கு உகந்த கரடி குலப் பிரதிநிதிகளான நாங்கள் இதை விழாவாக எடுக்கிறோம்.” என்றான்.

அதன் பின்னர் துள்ளும் நடையில் அவன் காட்டை நோக்கிச் சென்றான். செல்லும்போது தன்னுடைய கரடித்தோலை அங்கேயே விட்டு விட்டுச் சென்றான். அவன் முகமூடியும் மத்தளமும் கூட அங்கேயே அவன் ஆசனத்தில் இருந்தன. உடனேயே இளம்பெண்களான கரடிப் பெண்களும் மற்றும் நடுத்தர வயதான பெண்களும், தங்கள் தலைக்கேசத்தைச் சரி செய்தபடி உற்சாகக் கூச்சல் போட்டுக் கொண்டு சாம்பனின் பின்னால் ஓடினார்கள். விரைவில் அந்தப் பசுமையான காட்டுக்குள் மறைந்தும் போனார்கள். அதன் பின்னர் அங்கிருந்த அனைத்துக் கரடி மனிதர்களும், ஜாம்பவானைத் தவிர,மற்றும் ஒரு சில வயதானவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பெண்களைப் பின் தொடர்ந்து காட்டுக்குள்ளே ஓடினார்கள். ஒரு சிலர் அவர்களுக்கு இஷ்டமான பெண்களைத் துரத்த, சில பெண்கள் தங்கள் மனம் கவர்ந்த ஆண்களின் பின்னே மகிழ்ச்சியோடு ஓட அங்கிருந்த கரடிகளும் அந்த மனிதக் கூட்டத்தோடு அந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள ஓடிப் போயின. இப்படிப்பட்டப் புரட்சிகரமான நிகழ்வுகளை அதுவரை பார்த்திராத சத்யபாமாவுக்கு மயக்கம் போடும் நிலைமை வர, கிருஷ்ணன் ஆறுதல் தரும் விதத்தில் அவள் இடையைப் பிடித்துத் தன்னோடு அருகே இழுத்துக் கொண்டான். சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த சாத்யகி கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணனின் சைகைகளின் மூலம் கண் பார்வைகள் மூலமும் இருவருக்கும் இடையே இருக்கும் உறவும் நட்பும் அந்தக் கரடி மனிதர்களுக்குத் தெரிய வேண்டாம் என்பதில் அவனும் கவனத்தோடு இருந்தான்.

அந்தப் பறவைப் பெண்ணும் காட்டை நோக்கி ஓடினாள்; எனினும் சிறிது நேரத்திலேயே திரும்பி வந்தவள் கிருஷ்ணன் எதிரே மண்டியிட்டு அமர்ந்த வண்ணம் தான் கொண்டு வந்திருந்த ஒரு பூவை அவன் காதுகளின் பின்னே அலங்காரமாக வைத்தாள். தன் முகத்தை உயர்த்தி அவனைப் பார்த்தாள். கிருஷ்ணன் அவளைப் பார்த்து நட்புடன் சிரித்தான். தன் காதுகளில் வைக்கப்பட்டிருந்த பூக்களை எடுத்து அவளிடம் திரும்பக் கொடுத்தான். அப்போது அந்தப் பறவைப் பெண் சிறிதும் நாணமற்ற ஓர் செயலைச் செய்தாள். கிருஷ்ணன் கைகளைப் பிடித்துக் காட்டின் பக்கம் செல்லலாம் என்று சைகை காட்டியபடி இழுத்தாள் அவனை. அவளைப் பொறுத்தவரை இது ஒவ்வொரு முழு நிலவு நாளிலும் நடைபெறும் உற்சாகத் திருவிழா. ஆனால் கிருஷ்ணனுக்கு அது வெறுப்பையும், அருவருப்பையும் உண்டாக்கிற்று. ஆனால் அவளிடம் அதை வெளிக்காட்டமல் மெல்லப் புன்னகைத்த கிருஷ்ணன் அவள் கையைப் பிடித்துத் தள்ளிவிட்டான். அவளும் சிரித்தபடி தன் கண்ணிமைகள் படபடக்க அவனைப் பார்த்தவள் பின் மெல்லக் காட்டின் பக்கம் திரும்பிப் போனாள். விரைவில் முழு நிலவு உதயம் ஆயிற்று. அப்போது சாம்பன் திரும்ப வந்தான். வந்தவன் நேரே சத்யபாமாவின் கைகளைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தான். அவளைக் காட்டின் பக்கம் அழைத்தான். சத்யபாமா பயத்தின் உச்சிக்குப் போனாள். அவன் தொட்டதுமே கத்த ஆரம்பித்தவள் தன் கத்தலை நிறுத்தவில்லை. அவன் தன்னை எதற்காக அழைக்கிறான் என்பதை சத்யபாமா புரிந்து கொண்டாள். ஆகவே அவள் உடல் நடுங்கியது.

கிருஷ்ணன் சாம்பனின் கைகளை வேகமாகத் தட்டி விட்டான். தள்ளியும் விட்டான். அவன் தள்ளிவிட்டதின் வேகம் தாங்க முடியாமல் சாம்பன் நிலை தடுமாறினான். அவனுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. அவன் அங்கே அந்த ராஜ்ஜியத்தில் ஒரு மதகுருவாக இருந்து வருகிறான். அதிலும் அவன் அவர்களின் கடவுளுக்கு மிகவும் பிடித்தமான மகனும் ஆவான். இன்று வரை அவர்களின் கரடிக்குலம் அவனை மிகவும் மரியாதையாகவே நடத்தி வந்திருக்கிறது. தன்னையும் இப்படி ஒருவன் ஒதுக்கித் தள்ள முடியும் என்பதை அவன் இன்று வரை நினைத்தும் பார்க்கவில்லை. அதிலும் இவ்வளவு கடுமையாக அவனை இன்று வரை யாரும் நடத்தியது இல்லை. அங்கிருந்த மற்றக் கரடி மனிதர்களும், மற்றும் காட்டிலிருந்து திரும்பி வருகின்றவர்களும் தங்களுடைய மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மதகுரு எங்கிருந்தோ வந்த ஒருவனால் அவன் ஆசைகள நிறைவேற்றிக்கொள்ள விடாமல் தடுக்கப்படுவதைக் கண்டு ஆச்சரியமும் திகைப்பும் கொண்டனர். இன்றுவரை அவர்கள் மதகுருவின் ஆசைகள் எதுவானாலும் அது அவர்களுக்கு மீற முடியாத ஓர் சட்டமாக இருந்தது. அதைத் தலைமேல்கொண்டு நடந்து வந்தார்கள். அதைப் பார்த்த சாத்யகி கிருஷ்ணனுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் என நினைத்து அவன் அருகே எழுந்து வந்தான்.

கிருஷ்ணன் அவனை சாம்பனுக்கும், சத்யபாமாவுக்கும் இடையில் அமர்த்தினான். சாம்பன் இதற்குள்ளாகத் தன்னைச் சமாளீத்துக் கொண்டிருந்தான். அதன் பின்னர் கிருஷ்ணன் தனக்குத் தெரிந்த விதத்தில் சாம்பனை எதிர்கொள்ள ஆரம்பித்தான். அவன் நிபுணனாக இருந்த மல்யுத்த முறையைப் பிரயோகிக்க ஆரம்பித்தான். அவன் விலா எலும்பில் சாம்பன் கொடுத்த  அழுத்தத்தைக் கிருஷ்ணன் வேறு விதத்தில் எதிர்கொண்டான். அவன் தலை மயிரைப் பிடித்து இழுத்து அவன் தலையை மேலும் கீழும் ஆட்டினான். வேகமாக உலுக்கினான். தன் வலது உள்ளங்கையால் சாம்பனின் கழுத்தில் பேயறை அறைந்தான் கிருஷ்ணன். தன் விரல்களை நீட்டி விறைத்த வண்ணம் கத்தியைப் பயன்படுத்துவது போல் தன் உள்ளங்கையைப் பயன்படுத்தி அவன் கழுத்தில் கிருஷ்ணன் அறைந்த அறையில் சாம்பன் கழுத்தில் கோடரி வெட்டுப் போல் பட்டது. கிருஷ்ணனின் விலாவில் அவன் கொடுத்த அழுத்தம் மெல்ல மெல்லக் குறைந்தது. அவன் தன்னைச் சுதாரித்துக் கொள்வதற்குள்ளாகக் கிருஷ்ணன் விரைந்து செயல்பட்டான். சாம்பன் தலையை அவன் மயிராலேயே மேலே இழுத்து மீண்டும் அவன் தொண்டையில் ஓங்கிக் குத்தினான். அவ்வளவில் கழுத்து உடைந்து போன சாம்பன் கீழே விழுந்தான்.

No comments: