Thursday, March 24, 2016

திருமணம் இல்லையேல் மரணம்!

அவளுடைய அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டிய கிருஷ்ணன் அவளிடம், “எனக்குத் தெரியும் சத்யா, நான் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்தேன் எனில் நாம் மூவரும் மிருகங்களுக்கு உணவாகி விடுவோம். இதை நான் புரிந்து தான் வைத்திருக்கிறேன்.” என்று அன்பொழுகக் கூறினான். அதற்கு சத்யபாமா, “அது மட்டுமா? பிரபுவே, நீங்கள் ரோகிணியைத் திருமணம் செய்ய மறுத்தால் அவளை நெருப்பில் தூக்கிப் போட்டுவிடுவார்களே!” என்ற சத்யா வேதனை மிகுந்த தன் மன எழுச்சியை வெளிக்காட்டாதிருக்கத் தலையைக் குனிந்து கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டாள். மேலும் அவள் நடுங்கும் குரலில், “பிரபுவே, நீங்கள் ஜாம்பவானின் மகளை மணந்து கொண்டால் இருவருமே தப்பி விடுவீர்கள்!” என்றாள். கண்ணன் அப்போது சாத்யகியின் பக்கம் திரும்பி, “இங்கே பார், சாத்யகி! நீங்கள் இருவரும் மட்டுமில்லாமல் நானும் ச்யமந்தகமணி மாலையைத் திரும்பக் கொண்டு வருவதாக துவாரகையில் நம் குலத்தவர் அனைவரிடமும் சபதம் செய்திருக்கிறோம். ஆகவே நாம் ச்யமந்தகமணி மாலையைத் திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும் அல்லது அந்த முயற்சியைக் கை விட வேண்டும். கருநிறக் கடவுள் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நம் முயற்சியை விடக் கூடாது!” என்றான் கிருஷ்ணன்.  அதற்கு சாத்யகி, “இதை நாம் எப்படிச் செய்யப் போகிறோம்? கோவிந்தா? வழியை நீயே சொல்!” என்றான்.

“ம்ஹூம், இல்லை, சாத்யகி, இதுவரை எனக்கு வழி ஏதும் புலப்படவில்லை. மனதில் ஒரு உணர்வு தோன்ற வேண்டும், அது தோன்றவில்லை. ஒரு வேளை நாளைக்குள் நெருக்கடி முற்றினால் நாளை தோன்றுமோ என்னமோ!” என்றான் கிருஷ்ணன். மூவரும் வெகு நேரம் ஏதும் பேசாமல் அவரவர் சிந்தனையில் ஆழ்ந்தனர். பின்னர் கிருஷ்ணன் ஏதோ முடிவுக்கு வந்தவன் போலப் பேச ஆரம்பித்தான்:”எனக்கு என் மனதில் ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது. நாம் ஒருவெளை இங்கிருந்து தப்பினால் அது நாம் மூவர் மட்டுமின்றி ச்யமந்தகமணியும் சேர்த்துத் தான் செல்ல வேண்டும். அது மட்டும் உறுதி!” என்றான்.அப்போது கரடி மனிதர்களில் மூத்தவர் ஒருவர் அங்கு வந்து அவர்களை அரசனின் குகைக்குள் அழைத்தார். தன் மற்றத் தோழர்களைப் பார்த்த கிருஷ்ணன், இருவரிடமும், “முகத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். இருவரும் வருத்தங்களைக் காட்டிக் கொள்ள வேண்டாம். முக்கியமாக சத்யபாமா, நீ கவனமாக இருக்க வேண்டும். கண்ணீர் விட்டு விடாதே! அல்லது வெறி கொண்ட கூச்சல் போட்டு விடாதே! எல்லாவற்றிற்கும் மேல் மயக்கம் போட்டு விழுந்துவிடாதே! என்ன நடந்தாலும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். நாம் மூவரும் இப்போது ஒன்றே! இதோ பார் பாமா! நீ மட்டுமல்ல, உன் அருமையான பொல்லாத ஊரியும் அதன் அழகிய குட்டியும் சேர்த்துத் தான் சொல்கிறேன். ஹூம், என்னை விட்டு ஒரு நிமிடம் கூட இந்தக் குட்டி பிரிய மறுக்கிறதே!” என்ற வண்ணம் அந்தக் குட்டியை சத்யபாமாவிடம் கொடுத்தான் கிருஷ்ணன்.

அரசனின் குகைக்குள் மூவரும் வந்தபோது அவருக்கென உரிய கல்லால் ஆன சிங்காதனத்தில் வீற்றிருந்தார் ஜாம்பவான். அவர் பார்வை கடுமையாகவும், யாரையும், எதற்காகவும் மன்னிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாகவும் இருப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தார். முதல் நாளன்று கிருஷ்ணனைச் சந்தித்தபோது இருந்த நட்பான தொனியும், நட்பான முகபாவனையும் இன்று அறவே இல்லை. அவருடன் மற்ற ஆறு பெரியோர்களும் கூட இருந்தனர். சற்றுத் தள்ளி மற்றக் கரடி மனிதர்கள் அரை வட்ட வடிவில் அமர்ந்து கொண்டு இங்கே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜாம்பவான் அவர்களை அமரச் சொல்ல மூவரும் ஜாம்பவானை வணங்கி விட்டு அமர்ந்து கொண்டனர். சிறிது நேரம் ஜாம்பவான் தன் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அனைவரும் மௌனமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் அவர் தன் மேல் தங்கள் கருநிறக் கடவுள் ஆவிர்ப்பவித்திருப்பதைப் போல தலையை உலுக்கத் தொடங்கினார். ஒரு மோசமான முடிவை எடுக்கப் போவதால் அதற்கெனத் தன்னைப் பல விதங்களிலும் அவர் தயார் செய்து கொண்டிருந்தார் என்பது புரிந்தது. பின்னர் தன் சிவந்த கண்களைக் கிருஷ்ணன் மேல் நாட்டி அவனையே உற்றுக் கவனித்தார்.

பின்னர் அவர் பேச ஆரம்பித்தபோது தன் நினைவை இழந்ததொரு மயக்க நிலையில் பேசுவது போல் இருந்தது. “ஏ, அந்நியனே! எல்லாம் வல்ல இறைவனின் மாற்றவே முடியாத கட்டளைகளைக் குறித்து நீ அறிவாயா? அவற்றை நீ புரிந்து கொண்டாயா?” ஜாம்பவான் கிருஷ்ணனிடம் கேட்டார். கிருஷ்ணன் அந்தச்  சூழ்நிலையின் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்தவனாக அதைச் சிறிதும் மாற்றாமல் அப்படியே ஆனால் அதே சமயம் இனிமையாகவும், பணிவாகவும், ஜாம்பவானிடம், “ஆம், அரசே!” என்று பதிலளித்தான். அங்கிருந்த மற்றவர்கள் புரிந்து கொள்வதற்காகக் கரடி அரசன் அதைத் தங்கள் மொழியில் மொழி பெயர்த்து அங்கிருந்த மற்றப் பெரியோருக்கும் மற்றக் கரடி மனிதர்களுக்கும் விளக்கினார். மேலும் தொடர்ந்து கிருஷ்ணனிடம்,
“நீ எங்கள் ஆசாரியனும் எங்கள் கடவுளுக்கு மிகவும் பிடித்தவனும் ஆன, சாம்பனைக் கொன்று விட்டாய்! ஆகவே, நீ அடுத்த ஆசாரியனாக அறிவிக்கப்பட்டிருக்கிறாய்!” என்ற வண்ணம் கரடிகள் உலகின் சட்டத்தைக் கிருஷ்ணனுக்குப் புரியும்படி சொன்னார் ஜாம்பவான். “இப்போது இதன் பின்னர், மூன்று நாட்கள் கழித்து, நாங்கள் உன்னைக் கரடி உலகின் கடவுள் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்வோம். எங்கள் கருநிறக்கடவுள், எவராலும் வெல்ல முடியாதவரிடம் நீ உன் ஆராதனைகளைத் தெரிவிக்க வேண்டும். அவரை நீ வணங்க வேண்டும். அவர் உன்னை ஆசாரியனாக ஏற்கச் சம்மதித்தால், நீ தான் அவரின் பிரியத்துக்கு உகந்த மகனாகவும் அறிவிக்கப்படுவாய்! புரிகிறதா உனக்கு?” என்று கேட்டார். “ஆம், ஐயா, நன்கு புரிகிறது. நான் புரிந்து கொண்டேன்.” என்று கிருஷ்ணனும் தீர்க்கமான உறுதியான குரலில் கூறினான்.

“அப்போது நீ எங்கள் கடவுளின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறாயா?”

“ஆம், ஐயா!”

“இன்னமும் கேள்! சாம்பனைக் கொன்று  விட்டதால் அவனுக்கென நிச்சயிக்கப்பட்டிருக்கும் ரோகிணியை நீ மணந்தே ஆகவேண்டும். அது தான் எங்கள் கடவுளின் மறுக்கவே முடியாத சட்டமும் கூட!” என்று ஜாம்பவான் தனது கம்பீரமான குரலில் அதே சமயம் பயபக்தி நிரம்பிய உணர்வுடன் மெதுவாக அதே சமயம் திட்டவட்டமாகக் கூறினார். “ஆனால் அவளுக்கு இதில் விருப்பமா? அதைக் கேட்டீர்களா? அவள் மனம் இதைக் குறித்து, இந்த மாற்றத்தைக் குறித்து என்ன நினைக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு இருக்கிறீர்களா?” கிருஷ்ணன் கேட்டான்.

ஜாம்பவானோ, “அவளுக்கு வேறு வழியே இல்லை! இதை அவள் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். எங்கள் கருநிறக் கடவுளாக் நிர்ணயிக்கப்பட்ட இந்தச் சடங்கு பற்றிய இந்தச் சட்டம் வெளிப்படையானது! அவள் அறிந்ததும் கூட!” ஜாம்பவானின் குரலில் அவர் இந்த விஷயத்தில் தனக்கு ஏதும் சம்பந்தம் இல்லை என்பது போலவும் பற்றற்றுப் பேசுவது போலவும் ஓர் உணர்வு தோற்றுவிக்கப்பட்டிருந்தது என்பதைக் கிருஷ்ணன் கவனித்தான். மேலும் ஜாம்பவான் தொடர்ந்து, “அப்படி ஒருவேளை நீ அவளை மணக்க மறுத்தாயானால் இங்கே எரியும் பெரு நெருப்பில் அவள் பலியிடப்படுவாள்.” என்ற வண்ணம் அங்கே தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த அவர்கள் குலத்து அடையாளமான நெருப்பைக் காட்டினார். சத்யபாமாவுக்குக் கண்களில் கண்ணீர் வந்ததோடு ஒரு பெரும் விம்மலும் எழுந்தது. அதைக் கஷ்டப்பட்டு அவள் அடக்கிக் கொண்டாள். “அது சரி ஐயா! ச்யமந்தகமணியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அல்லது என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று கிருஷ்ணன் கேட்டான்.

“அந்த மந்திர சக்தி வாய்ந்த விலை உயர்ந்த மணிமாலைக்கு நாங்களே பாதுகாவலர்கள். எங்களுடைய புனிதமான குகைக்கு அது சொந்தமானது. சத்ராஜித் அதை இங்கே வந்தபோது எடுத்துச் சென்றுவிட்டான். ஏனெனில் இதை அவனுடைய கடவுள் சூரியன் கொடுத்ததாகச் சொல்கிறான். அவன் இதை எடுத்துச் செல்லும்போது ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கே எங்கள் கடவுளைச் சந்திக்க நிலாப் பெண் வரும்போது அந்த மணிமாலைக்குத் தக்கபடி ஆராதனைகள், வழிபாடுகள் நடத்துவதாக வாக்குக் கொடுத்திருந்தான். இப்போது அது இங்கே மீண்டும் வந்துவிட்டபடியால், நாங்கள் எங்கள் கடவுளிடம் கேட்க வேண்டும். அதை என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவர் வழிகாட்டுதலின் பேரில் செய்வோம்.”

சிறிது நேரம் இந்த விஷயத்தைக் குறித்துக் கரடி அரசனும் அவன் மனிதர்களும் தங்கள் மொழியில் விவாதித்துக் கொண்டனர். “இப்போது நீங்கள் மூவரும் உங்கள் குகைக்குச் செல்லலாம்.:” என்று உத்தரவு கொடுத்தான் ஜாம்பவான். பின்னர் மேலும் தொடர்ந்து, “நாம் மீண்டும் மத்தியானம் இந்த நெருப்புக்கு அருகே சந்திப்போம். எங்கள் கடவுளால் அளிக்கப்பட்ட சடங்குகளும், சட்டங்களும் நிறைவேற்றுவது குறித்து விவாதித்து மாலையில் அவற்றை முடித்து வைப்போம்.” என்றார் ஜாம்பவான். கிருஷ்ணனும் மற்ற இருவரும் தங்கள் குகைக்குச் சென்றனர். அனைவர் மனதிலும் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்னும் எதிர்பார்ப்புக் கலந்த பரபரப்பு இருந்தது.  விரைவில் சூரியன் நடு உச்சிக்கு வந்தான். ஜாம்பவானும் அவன் மனிதர்களும் நெருப்பருகே கூடியவர்கள் கிருஷ்ணனுக்கும் அவன் நண்பர்களுக்கும் அங்கே வந்து சேரும்படி அழைப்பு அனுப்பினார்கள்.

1 comment:

ஸ்ரீராம். said...

சாம்பனை கிருஷ்ணன் அவசரப்பட்டுக் கொன்று விட்டான் போலும்!