Tuesday, December 20, 2016

பீடிழந்த ஷகுனி அங்கு பின்னுஞ்சொல்லுகின்றான்!

சபை முழுவதும் அமைதி நிலவியது. ஆனாலும் அங்கே குழுமியிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமலேயே தங்களையும் அறியாமல் இப்போது நடக்கப் போவது விளையாட்டு அல்ல; ஓர் மறைமுகப் போர் என்பதை உணர்ந்திருந்தனர். இன்னும் சொல்லப் போனால் தேவாசுர யுத்தம் போல இதுவும் ஓர் போர், அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையில் நடைபெறப் போகும் போர் என்று உணர்ந்தார்கள். ஆட்டம் ஆரம்பித்தது. யுதிஷ்டிரன் முதலில் தங்கள் குடும்பத்து நகைகளையும் அதிசயமாகக் கிடைத்த ரத்தினங்களையும் பணயம் வைத்தான். உடனே துரியோதனனும் தன்னுடைய நகைகளை எல்லாம் பணயமாக வைத்தான். முதலில் யுதிஷ்டிரன் பாய்ச்சிக்காய்களைக் கையில் எடுத்தான். தன் உள்ளங்கைகளுக்குள் வைத்து உருட்டினான். கீழே விரித்திருந்த பலகையில் அந்தக் காய்களை உருட்டி விட்டான. பின்னர் அவற்றை ஷகுனி கைகளில் எடுத்துத் தன் கைகளில் உருட்டிப் பலகையில் உருட்டி விட்டான். அப்போது பீஷ்மர் ஷகுனியையே கவனித்துக் கொண்டிருந்ததால் அவன் காய்களை உள்ளங்கையில் வைத்து உருட்டுகையிலேயே தனக்கு வேண்டிய எண் விழுவதற்குத் தோதாகத் தன் சுண்டுவிரலைப் பயன்படுத்திக் காய்களை மாற்றி அமைப்பதைக் கவனித்து விட்டார்.  ஆனால் மற்றவர்களோ ஷகுனிக்கு என்ன எண் விழுந்தது என்பதை அறியும் ஆவலில் எம்பி எம்பிப் பார்த்தனர்.  திருதராஷ்டிரனுக்குப் பொறுமை இல்லை. அவன் சஞ்சயனிடம், “சஞ்சயா, என்ன நடக்கிறது?” என்று வினவினான்.

ஷகுனி பகடைக்காய்களை உற்றுப் பார்த்துவிட்டு, யுதிஷ்டிரனிடம், “மூத்தவரே, நாங்கள் தான் வென்றோம்!” என்றான் மகிழ்ச்சியுடன். துரியோதனனின் ஆதரவாளர்களான அரசர்களும், குரு வம்சத் தலைவர்களும் இதைக் கேட்டு நகைத்தனர். ஒரு சிலர் அமைதியை வேண்டி, ‘சாது, சாது’ என்று கோஷித்தனர். அனைவரும் பீஷ்மர் இருந்த பக்கம் பார்த்தனர். அவர் முகத்தைப் பார்த்ததும் துரியோதனன் ஆதரவாளர்களின் உற்சாகம் வடிய ஆரம்பித்தது. பீஷ்மர் முகம் உணர்ச்சிகள் அற்ற சலவைக்கல் சிற்பம் போல் காணப்பட்டது. ஷகுனியின் பேச்சைக் கேட்ட, யுதிஷ்டிரன் உடனே, “சரி, இப்போது எனக்குப் பரிசாக வந்த விலை உயர்ந்த நகைகள், தங்கக் கட்டிகள், பாளங்கள் ஆகியவற்றைப் பணயம் வைக்கிறேன்.” என்றான். அவனுடைய சொத்துக்களை இம்முறையில் பிரிய நேர்வது குறித்து அவன் மனம் வருந்தியது. எப்படியேனும் விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்துப் பொறுமை இழந்தான்.

தன் ஆட்டத்தை ஆடிய யுதிஷ்டிரனிடம் இருந்து மீண்டும் காய்களை வாங்கிய ஷகுனி தன் உள்ளங்கைகளில் வைத்து அவற்றை உருட்டி முன்னர் ஆடியது மாதிரியே தனக்குச் சாதகமான எண்களைக் கொண்டு வந்து, “மீண்டும் நாங்களே வென்றோம்!” என்று கூறிக் கொண்டு கிண்டலாகச் சிரித்தான்.  ஆட்டம் தொடர்ந்து ஆடப்பட்டது. அவை முழுவதும் ஓர் இறுக்கமான சூழ்நிலையில் தவித்தது. சற்றும் எதிர்பாராவண்ணம் ஆட்டத்தில் சூடு பிடித்தது. ஒவ்வொரு விளையாட்டின் போதும் யுதிஷ்டிரன் தன் சொத்துக்களை ஒவ்வொன்றாகப் பணயம் வைத்தான். துரியோதனனும் அதே போல் யுதிஷ்டிரனின் சொத்துக்களுக்கு ஈடான பணயத்தைத் தானும் வைப்பான். யுதிஷ்டிரன் விளையாடியதும் ஷகுனி விளையாடுவான். தன் உள்ளங்கைகளில் வைத்து உருட்டிய வண்ணம் பகடைக்காய்களைத் தன் சுண்டு விரலால் தேவைக்கேற்றபடி மாற்றிக் கொண்டு தந்திரமாக விளையாடினான் ஷகுனி. ஒவ்வொரு ஆட்டத்திலும் தான் ஜெயித்ததை ஓர் மந்திரம் போல மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டு சந்தோஷம் அடைந்தான். துரியோதனனின் ஆதரவாளர்கள் தங்கள் தொடைகளைத் தட்டிக் கொண்டும் மகிழ்ச்சிக் கூக்குரல் இட்டுக் கொண்டும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

பீஷ்மர் யுதிஷ்டிரனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். யுதிஷ்டிரன் நடந்தவை எதுவும் தன்னைப் பாதிக்காதது போல் காட்டிக் கொண்டு சிரித்த முகத்துடன் தொடர்ந்து ஆடினான். சற்றும் தயக்கமின்றிப் பாய்ச்சிக்காய்களை உருட்டி வீசினான். ஒவ்வொரு விளையாட்டிலும் தன் சொத்துக்களைப் பணயம் வைத்த யுதிஷ்டிரன் பின்னர் தன் ஈடு இணையற்ற ரதப்படைகளின் ரதங்கள், குதிரைகள், யானைகள், தன் படை வீரர்கள், மற்றும் யுதிஷ்டிரனுக்கே சொந்தமான அடிமைகள், அவன் அரண்மனைக் கஜானா மற்றும் தானியக் களஞ்சியம் என ஒவ்வொன்றாய்ப் பணயம் வைத்து வரிசையாக எல்லாவற்றையும் இழந்தான். ஒவ்வொரு முறையும் ஷகுனி தன் அறிவிப்பை ஓர் மந்திரம் போல் கூறி வந்தான். “மூத்தவனே, நாங்கள் வென்றோம்!”

அங்கிருந்த மற்ற நடுநிலை வகிக்கும் அரசர்களில் பலருக்கும் இதைக் காணப் பொறுக்கவில்லை. ஏனெனில் ஷகுனி தந்திரத்தின் மூலமே ஒவ்வொரு ஆட்டத்திலும் ஜெயித்து வருகிறான் என்பதை அவர்களும் கண்டு கொண்டனர். ஆனாலும் இத்தனை இழந்தும் யுதிஷ்டிரனின் மலர்ந்த முகமும் உற்சாகமான போக்கும் விளையாட்டில் காட்டிய ஈடுபாடும் அவர்களை வியக்க வைத்தது.  ஒரு தேர்ந்த சூதாட்டக்காரனைப் போல் அவன் தொடர்ந்து அடுத்து, அடுத்து என விளையாடி வந்தான்.  ஆயிற்று. இனி ஏதும் இல்லை. தொடர்ந்து ஆடிய யுதிஷ்டிரன் அனைத்து சொத்துக்களையும் இழந்ததோடு அல்லாமல் தன் தம்பிகளின் சொத்துக்களையும் பணயம் வைத்து இழந்தான். அப்போது ஷகுனி அவனிடம் இகழ்ச்சியாக, “ நல்லது, மூத்தவனே, உன்னிடம் இனி பணயம் வைக்க ஏதும் இல்லை. எல்லாவற்றையும் இழந்து விட்டாய். ஆகவே இனி நீ இழந்தவற்றை மீட்க வேண்டுமானல் உனக்கே உனக்கு எனச் சொந்தமான ஒன்றைத் தான் பணயம் வைக்க வேண்டும். அப்படி உனக்கெனச் சொந்தமாக என்ன இருக்கிறது?” என்று கேட்டான். இதைக் கேட்ட விதுரர் மனம் கொதித்தார். மெல்ல மெல்ல ஷகுனி யுதிஷ்டிரனை அவன் சகோதரர்களை ஒவ்வொருவராகப் பணயம் வைக்கும்படி தூண்டி வருவதை விதுரர் புரிந்து கொண்டார்.

1 comment:

ஸ்ரீராம். said...

//அவன் காய்களை உள்ளங்கையில் வைத்து உருட்டுகையிலேயே தனக்கு வேண்டிய எண் விழுவதற்குத் தோதாகத் தன் சுண்டுவிரலைப் பயன்படுத்திக் காய்களை மாற்றி அமைப்பதைக் கவனித்து விட்டார்.//

இது புதுசு.

பொருள்கள் அனைத்தையும் இழந்த நிலையிலேயே ஆட்டத்தை நிறுத்தி இருக்கலாம். நான் சொல்லியா கேட்கப்போகிறார்கள்!!