Wednesday, September 14, 2016

கோதுலி ஆசிரமத்தில் ஷார்மி!

இங்கே கோதுலியில் ஷார்மி அன்னையார் ஒரு காலத்தில் தன் கணவர் ஆசாரிய கௌதமரின் ஆசிரமமாக இருந்த இடத்தில் இப்போது காணப்பட்ட சாம்பல் குப்பைகளை அகற்றுவதில் முனைப்பாக இருந்தார். அந்த இடத்திலேயே சில நாட்கள் முன்னரே கொல்லப்பட்ட தன் குழந்தைகள், கணவன் ஆகியோரின் நினைவு வந்து அவளைக் கொன்றது. கண்ணீர் வடித்தாள். ஆனாலும் வேலைகளில் சுணங்கவில்லை. அனைவரையும் வேலை வாங்கினாள். சிலரைச் சத்தம் போட்டுக் கோவித்தும், சிலரிடம் சிரித்துக் கொஞ்சியும் வேலை வாங்கினாள். ஆனால் ஒரு போதும் தான் அந்த ஆசிரமத்தின் தலைவர் ஆன கௌதம முனிவரின் மனைவி என்ற ஹோதாவிலிருந்து தன்னைக் கீழிறக்கிக் கொள்ளவில்லை என்பதோடு இந்த ஆசிரமம் புனர் நிர்மாணம் செய்யப்படுவதே தன் வாழ்க்கையின் முக்கியக்குறிக்கோள் என்றும் நினைத்தாள்.

மோசா இந்த ஆசிரமத்தை எரித்தபோது அந்த ஆசிரமத்துக் குடிகள் சில பேர் அங்கிருந்து தப்பி ஓடி சாம்பல் பிரதேசத்துக்குச் சென்றடைந்திருந்தார்கள். அவர்கள் இப்போது அடிக்கடி இரண்டு பேரை அனுப்பி அங்கே நடக்கும் வேலைகளைக் கண்காணிக்கச் சொல்லி இருந்தார்கள். அந்த மாதிரி பார்க்க வந்தவர்களுக்கு இப்போது இங்கே அரசப் படகு வந்ததும், அதிலிருந்து ஷார்மி அன்னையும் மற்றவர்களும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அவர்க:ள் மோசாவின் ஆட்களால் தாங்கள் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று நினைத்துக் கொண்டு மெல்ல மெல்லத் தவழ்ந்த வண்ணம் ஆசிரமத்தை நோக்கி முன்னேறினார்கள். மரங்களுக்குப் பின்னர் ஒளிந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் பார்த்தது ஷார்மியை. ஆகவே ஷார்மியைப் பார்த்ததும் திகைத்துப் போனார்கள். மேலும் ஷார்மியின் கூட வந்திருந்த பிரமசாரிகளும் மற்ற மாணாக்கர்களும் ஆசிரமப் பகுதியைச் சுத்தம் செய்து கொண்டிருந்ததைக் கண்ணுற்றதும் அவர்கள் மனதில் நம்பிக்கை தோன்றியது. மோசா இங்கே இனி வரமாட்டான் என நிச்சயம் செய்து கொண்டனர்.

அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த ஷார்மியின் கண்களில் இந்த இருவரும் பட்டனர். அவர்கள் இந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் அடையாளம் கண்டு கொண்டாள். உடனே தன் கையை அசைத்து அவர்களை அழைத்த வண்ணம், “ரோஹித், கோழையா நீ? உன்னைப் போல் இன்னும் எத்தனை பேர் சாம்பல் பிரதேசத்தில் ஒளிந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். ரோஹித் என்பவனும் அவனுடன் வந்தவனும் மரங்களுக்குப் பின்னால் இருந்து முன்னே வந்தனர். ஷார்மியின் கால்களில் விழுந்து, “அம்மா, நாங்கள் பதினெட்டுப் பேர் இங்கே சாம்பல் பிரதேசத்தில் ஒளிந்திருக்கிறோம்.” என்றான். “எத்தனை பெண்கள்?” என்றாள் ஷார்மி. “ஐந்து பெண்கள்!” என்றான் ரோஹித்.

“நீங்கள் அனைவருமே கோழைகள். கோழைகள். நீங்கள் அனைவரும் ஆசிரமத்தோடு அழிந்து போக விரும்பவில்லை. எப்படியேனும் உயிர் பிழைத்தால் போதும் என்று இருந்து விட்டீர்கள். ஹூம்! ஆசாரியர் எவ்வளவு தைரியமாக மோசாவை எதிர்த்து நின்றார்! அதைப் பார்த்த பின்னரும் கூட உங்களுக்கு தைரியம் வரவில்லை. ஆசிரமம் இல்லாமல் உயிர் வாழ அவர் விரும்பவில்லை. விரும்பி மரணத்தை ஏற்றுக் கொண்டார். போகட்டும் விடு! என்ன நடக்குமோ அது தான் நடக்கும். எதையும் மாற்ற இயலாது. அது இப்போது இங்கே அவசியம் இல்லை. நான் உங்களை எல்லாம் மன்னித்து விட்டேன். நீங்கள் எல்லாம் இன்னமும் குழந்தைகள் தானே! போ! போய் மற்றவர்களையும் இங்கே அழைத்து வா!” என்றாள் ஷார்மி.

அன்று சூரிய அஸ்தமனம் ஆவதற்குள்ளாக ஆசாரிய கௌதமரின் சீடர்கள் அங்கே யாக குண்டத்தை நிறுவி புனிதமான அக்னியை வளர்த்து மந்திரங்களை ஓதவும் ஆரம்பித்தனர். அந்த இடத்திலேயே இப்போது ஓர் புனிதமான சூழ்நிலை தோன்றியது. அக்னி விண்ணைத் தொட்டுவிடும் போல் எழும்பியது. அன்றிரவு இருட்டுவதற்குள்ளாக சாம்பல் பிரதேசத்திலிருந்து பதினெட்டு பேர்களும் ஐந்து பெண்கள் உட்பட அங்கே வந்து சேர்ந்தனர். பல நாட்களாக அவர்கள் உணவு ஏதும் உண்ணவில்லை. ஆகவே அரசப் படகிலிருந்து தலைமைப் படகோட்டியால் அவர்களுக்கு உணவு வரவழைக்கப்பட்டது. ஷார்மி அவர்களிடம், “கோழைகளா! நீங்கள் எல்லாம் செத்திருக்கலாம். ஆனால் போனால் போகிறது என்று நான் உங்களை எல்லாம் மன்னித்து விட்டேன். நாட்கணக்காக உங்களில் எவரும் உணவு உண்ணவில்லை. ஆனால் நிதானமாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். ஓநாய்களைப் போல் விழுங்காதீர்கள். ஏதேனும் நோய் வந்து விடும்!” என்றாள்.

அப்போது ஆசிரமத்தைச் சேர்ந்த இரு பசுக்கள் இங்கே இருந்த ஆபத்து நீங்கி விட்டதென்பதை எப்படியே உள்ளுணர்வால் அறிந்தது போல் அங்கே வந்து சேர்ந்தன. அவை புனிதமான அக்னிக்குச் சற்று முன்னால் நின்று கொண்டன. அவை என்னதான் வந்து விட்டாலும் முழு மனதுடன் அங்கே இல்லை என்பது போல் ஒரு சமயம் இங்கே ஆசிரமத்தைப் பார்த்துக் கொண்டும் இன்னொரு சமயம் அவை வந்த காட்டுப்பாதை வழியே எந்நேரமும் தப்பி விடவேண்டும் என்று நினைக்கின்றவோ என்னும் வண்ணமும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த ஷார்மி அவற்றைப் பெயர் சொல்லி அழைத்தாள். முதலில் அவை சற்றுப் புரியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தன. ஆனால் ஷார்மி தான் அழைத்தாள் என்பதை எப்படியோ அறிந்து கொண்டன. உடனே அங்கே ஓடி வந்து அவள் அருகே நின்றன. ஷார்மி அதன் கழுத்தின் மேல் கைகளைப் போட்டு அணைத்துக் கொண்டு இரண்டு பசுக்களையும் தடவிக் கொடுத்தாள்.

ஆசிரமத்தில் அனைவரும் மீண்டும் கூடி விட்டனர். ஒரு விதத்தில் சந்தோஷமாகவே இருந்தது. ஆனாலும் ஒரு முக்கியமான சந்தேகம் அனைவர் மனதிலும் தோன்றிக் கொண்டு தான் இருந்தது. அது தான் மோசா எந்நேரம் வேண்டுமானாலும் எப்படியாயினும் ஆசாரியர் த்வைபாயனரைக் கொன்றிருப்பான் என்பது தான் அது. மேலும் அந்தக் கொலை குனிகர் அங்கே செல்வதற்கு முன்னரே நடைபெற்றிருக்கும் என்றும் நினைத்துக் கொண்டனர். ஆகவே அனைவருக்கும் இதில் குழப்பமும் வருத்தமுமாக இருந்தது. அப்போது ஓர் வயதான பழங்குடி இனத்தவன் தன் இரு இனத்து மக்களோடு காட்டிலிருந்து வெளியே வந்தான். அவர்கள் ஆசிரமத்தின் அருகே வந்தால் அவர்கள் மேல் எந்நேரம் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தத் தயாராகக் காத்திருந்தனர் அங்கிருந்த வில்லாளிகள். எல்லோருமே ஓர் மாபெரும் யுத்தத்தை எதிர்பார்த்து அங்கே கூடினார்கள். ஷார்மி அதற்குள்ளாக வில்லாளிகளுக்குக் கீழ்க்கண்டவாறு கட்டளை பிறப்பித்தாள். “அவர்களை இங்கே நெருங்க விடாதே! அதே சமயம் அவர்கள் சிறு அசைவு காட்டினாலும் உடனே அம்புகளைச் செலுத்துங்கள்!” என்றாள்.

அப்போது அந்த வயதான பழங்குடித் தலைவன் தன் கைகளை உயர்த்தி விரித்தான். பின்னர் ஷார்மியைப் பார்த்து,”ஷார்மி அன்னையே! நாங்கள் இங்கே இப்போது வந்தது நாளைக் காலை அனுஷ்டானங்கள் முடித்துக் கொண்டு ஆசாரியர் த்வைபாயனரும் இப்போது எங்கள் குலத் தலைவனுமான க்ருபாவுடனும் மந்திரி குனிகருடனும் இங்கே வருகின்றனர் என்பதை அறிவிக்கத் தான்! வேறு நோக்கம் ஏதும் எங்களுக்கு இல்லை!”
அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது. ஷார்மிக்கு ஆனந்தம் பொங்கியது. “மோசா என்ன ஆனான்?” என்று அவள் அந்தத் தலைவனை வினவினாள்.

“ஓ, ஒப்பற்ற எங்கள் தலைவனை புனிதமான எருமைக்கடவுளின் உலகுக்கு அழைத்துக் கொண்டார் கடவுள்!” என்றான். இன்னும் சற்று நேரத்தின் மேலும் சில பழங்குடியினர் அங்கே உணவு போன்ற பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர். அனைவரும் நிம்மதியாக ஓய்வாகத் தூங்கச் சென்றனர். ஆனால் ஷார்மிக்குத் தூக்கமே வரவில்லை. அவளைச் சுற்றிலும் ஆசிரமத்துப் பெண்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர். ஆனாலும் அவளால் கண்களை மூட முடியவில்லை. கண்களை மூடினால் அவள் கணவர் கௌதம முனிவரும் அவள் குழந்தைகளுமே தோன்றினார்கள். அவளையும் மற்றப் பெண்களையும் பழங்குடியினரின் தலைமை அகத்திற்கு இட்டுச் செல்கையில் அவளைத் துரத்தும் இத்தகைய நினைவுகளை மறக்கத் தன்னைத் தானே கடுமையாகச் சாட்டையால் அடித்துக் கொண்டாள்.

ஒவ்வொரு சமயமும் அவள் தன் கணவனையும் குழந்தைகளையும் நினைக்கையில் எல்லாம் அவளுக்குத் தான் எத்தகையதொரு வீழ்ச்சியின் விளிம்பில் விழுந்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வாள். ஆனாலும் அவள் மனோ தைரியம் மிக்கவள். மோசாவின் கோபத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் மற்றப் பெண்களைக் காப்பாற்றுவதே அவள் முக்கியக் கடமையாகும். இப்போது அவள் தன் கணவரின் ஆசிரமத்தை அவர் இருந்தால் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புவாரோ அவ்வண்ணமே நிர்மாணிக்க வேண்டும்.

Tuesday, September 13, 2016

மோசாவின் முடிவு!

அப்போது த்வைபாயனர் தன் கை அசைப்பால் குனிகரைப் பேசாமல் மௌனமாக இருக்கும்படி அறிவுறுத்தினார். பின்னர் மோசாவைப் பார்த்து, “வல்லமை மிக்க மோசா! உன் கோபத்தால் மற்றவரை எதிர்த்து உன்னால் எதையும் செய்ய முடியாது. உனக்கெனவும் எதையும் சாதிக்க முடியாது!” என்றார். பின்னர் கீழே குனிந்து கைப்பிடிப் பசும்புற்களைக் கைகளில் அள்ளினார். அங்கே நின்றிருந்த எருமைக்கு அவற்றைத் தன் கைகளால் தின்னக் கொடுத்தார். அந்த எருமை அவர்கள் அனைவரையும் பார்த்த பார்வையானது அங்கே மற்றோர் எருமை நின்றிருந்தால் அதற்கு இந்த எருமை அதைப் பார்த்துச் சிரிப்பதாகத் தோன்றி இருக்கும். இந்த நுண்ணிய மாற்றத்தை மோசாவால் உடனே உணர முடிந்தது. அவன் உடனே தரையிலிருந்து எழுந்து அமர்ந்தான்.அந்த எருமையைப் பார்த்துக் கத்தினான். “இந்த பூமியிலேயே வாழும் கடவுளான எருமையே! புனிதமான எருமைக்கடவுளே! இதோ இந்தப் பொல்லாத என் எதிரிகளைக் கொன்று அழித்துவிடு. உன் மனிதர்களான எங்கள் எதிரிகள் இவர்கள். உன்னுடைய புனிதமான கோயிலுக்கு உன் சந்நிதிக்கு அனுமதி இன்று இவர்கள் நுழைந்து விட்டார்கள். உன்னுடைய மகனான என்னையும் மிரட்டுகின்றனர். இவர்களுக்குச் சாவு ஒன்றே சரியான தண்டனை!” என்று கூறினான்.

அவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு த்வைபாயனர் அமைதியாக நின்றார். பின்னர் ஓர் புன்னகையுடன் அவர் சொன்னது, “மோசா ஏற்கெனவே கடவுளரால் உனக்குப் போதுமான அளவு தண்டனை கொடுத்தாயிற்று. உன்னுடைய முதல் மனைவி, உன் பட்டத்து அரசி, உன் தலைவன் பதவிக்கே ஓர் அடையாளமாக விளங்கியவள், உன்னை விட்டு அகன்று விட்டாள். நீ வேண்டாம் எனத் தூக்கி எறிந்து விட்டுச் சென்று விட்டாள். நீ பழையனவற்றை எல்லாம் மறந்துவிட வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். கோதுலி ஆசிரமத்தை எப்படி நீ எரித்துச் சாம்பலாக்கினாய் என்பதை நாங்களும் மறந்து விடுகிறோம். ஆசிரமங்களையும் அக்னியையும் மதிக்காமல் அவமதிப்பாக நீ செய்த அவச்செயல்களை எல்லாம் மன்னிக்கும்படி அந்த அக்னிக் கடவுளிடமே நான் வேண்டுகிறேன். உன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.”

சற்றும் பொறுமையின்றி அசட்டையாகவும் கோபம் குறையாமலும் மோசா அவர் சொன்னவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். தன் கண்களை அங்குமிங்கும் பயங்கரமாக உருட்டி அவர்களைப் பயமுறுத்த முயன்றான். அவனுடைய வெறித்தனம் முழுவதும் அவன் கண்களில் தெரிந்தது. அப்படியே த்வைபாயனரைப் பார்த்து உறுமினான் அவன். “ஏ, சூழ்ச்சிக்கார, நயவஞ்சக மந்திரவாதியே!” என்று கத்தினான். அவனுக்கு வந்த அடக்க முடியாத பெருமூச்சுக்களை அடக்கும் விதத்தில் தன் கைகளை வீசித் தன்னைத் தானே அடக்கிக் கொள்ள முயற்சி செய்தான். அவனைக் கருணை சிறிதும் குறையாமல் பார்த்துக் கொண்டே இருந்தார் த்வைபாயனர்.. பின்னர், “வல்லமை பொருந்திய மோசா, நான் மோசக்காரனோ, சூழ்ச்சிக்காரனோ அல்ல, மந்திரவாதியும் அல்ல! அதை நீ நன்கறிவாய்! நான் த்வைபாயனர். கிருஷ்ண த்வைபாயனர். இங்கே இதே கோதுலியில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்த பராசர முனிவரின் மகன். பராசர முனிவர் தன் முன்னோர்களிடம் சென்று சேர்ந்து விட்டார். அந்தஆசிரமம் இப்போது புனிதமிக்கதாக விளங்குகிறது. ஒரு தீர்த்த ஸ்தானமாக விளங்கி என் தந்தையின் நினைவுகளை மக்கள் அங்கே வந்து வழிபட்டுப் போற்றும் இடமாக இருக்கிறது.”

பின்னர் மீண்டும் கீழே குனிந்து பசும்புற்களைக் கை நிறைய எடுத்து அந்த எருமைக்குத் தின்னக் கொடுத்தார். அவர் கைகளிலிருந்து அந்தப் புற்களை வாங்கி உண்ணுவதன் மூலம் அந்த எருமை அவரை அங்கீகாரம் செய்து விட்டதைக் கண்ட மோசாவுக்குத் திகைப்பு ஏற்பட்டது. ஏனெனில் இன்று வரை அத்தகைய ஒரு காரியத்தைத் தலைவனான அவன் மட்டுமே செய்ய முடியும்! வேறெவரும் செய்ததில்லை. அவன் கைகள் அடக்க முடியாத க்ரோதத்தால் நடுங்க ஆரம்பித்து விட்டன. “ஏ, புனிதமான எருமையே! நீயுமா என்னை ஏமாற்றுகிறாய்? எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்கிறாய்! இவன் என் எதிரி! இவன் கைகளால் புற்களை வாங்கித் தின்கிறாயே!” என்று கத்தினான். அவனுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும் கோபத்தால் நடுங்கியது. தன் குறுவாளை எடுத்துக் கொண்டு குதித்து எழுந்து அந்த எருமையின் கழுத்தைச் சீவத் தயாராகத் தன் கையை ஓங்கினான்.

சிறிது நேரம் அப்படியே நின்றவன் தொண்டையிலிருந்து ஓர் விசித்திரமான க்ரீச் என்னும் சப்தம் எழுந்தது. பின்னர் சில அடிகள் தள்ளிப் போனவன் மீண்டும் தன் சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டு முன்னே வந்து அந்தக் குறுவாளை எருமையின் கழுத்தில் பாய்ச்சினான். ஒருமுறை, இருமுறை, மூன்று முறைகள். எருமை வலி தாங்க முடியாமல் கத்தியது. அலறியது. அதன் காயங்களிலிருந்து ரத்தம் பெருக ஆரம்பித்தது. வாயிலிருந்தும் ரத்தம் வழிந்தது. தன்னைக் கட்டியிருந்த கயிறுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் பெரிதும் முயன்றது. கடைசியாக ஓர் முயற்சி செய்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்ற அது பின்னர் பரிதாபமாகக் கீழே விழுந்தது. ஈனமான குரலில் கத்திக் கொண்டே இருந்தது. பின்னர் மெல்ல மெல்ல அதன் குரல் அடங்கியது.

மோசா உடல் முழுவதும் எருமையின் ரத்தத்தால் குளித்திருக்க அவன் கைக்குறுவாளும் ரத்தம் கொட்டத் தன் பார்வையை அந்த மந்திரவாதியின் பக்கம் திருப்பினான். பழங்குடியினரின் அந்த மந்திரவாதிக்கு உடல் நடுங்கியது. அவனைப் பார்த்த மோசா, “ஏ, மந்திரவாதி, நீயும் என்னை ஏமாற்றி இருக்கிறாய்! இவன் பக்கம் சேர்ந்து விட்டாய்! பொல்லாத்வனே! நீ என்னிடம் என்ன சொன்னாய்? என்னைப் புனிதமான எருமைக்கடவுள் காப்பாற்றும் என்றல்லவோ சொன்னாய்! அதற்குச் சத்தியம் கூடச் செய்து கொடுத்தாயே! ஆனால் இதோ இந்தப் பொல்லாத மந்திரவாதியிடமிருந்து கூட உன்னால் என்னைக் காப்பாற்ற முடியவில்லை. உனக்கும் இது தான் கதி!” என்ற வண்ணம் தன் வாளைப் பழங்குடியினரின் அங்கீகரிக்கப்பட்ட அந்த மந்திரவாதியின் மார்பில் பாய்ச்சினான். அதன் பின்னர் மோசா ஓர் பைத்தியக்காரனைப் போல் சிரித்தான். வாளைத் தூக்கிக் கொண்டு அப்படியே த்வைபாயனரை நோக்கி ஓடி வந்தான்.

அதற்குள்ளாக மந்திரி குனிகரும் வில்லாளிகளும் மற்ற வீரர்களும் அவனைச் சூழ்ந்து கொண்டு விட்டனர். தன்னை அவன் விடுவித்துக்கொள்ள முயன்றதெல்லாம் பலிக்கவில்லை. கண்மூடித் தனமான கோபத்தில் இருந்த மோசா தன் சிவந்த கண்களால் கீழே விழுந்து கிடந்த அந்த மந்திரவாதியின் உடலைப் பார்த்தான். அவன் உடல் முழுவதும் ரத்தத்தால் குளித்திருக்க உயிர் தொண்டைக்குழியில் துடித்துக் கொண்டிருந்தது. மோசாவின் முகம் ஓர் அசிங்கமான விதத்தில் பழிப்புக் காட்டுவது போல் மாறியது. அவன் முகம் பார்க்கவே விகாரமாகக் காட்சி அளித்தது. அவன் தன்னை விடுவித்துக் கொள்ள மீண்டும் மீண்டும் முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை. சற்றுத் தள்ளி அவனை அவ்வீரர்கள் இழுத்துச் சென்றனர்.

“ஏமாற்றுக்காரர்கள், சூழ்ச்சிக்காரர்கள், நயவஞ்சகர்கள்!” என்று கத்தினான் மோசா. “இதோ இந்த எருமையும் தான் என்னை ஏமாற்றியது. ஏ, எருமையே, நான் உன்னை எப்படி எல்லாம் வணங்கி வந்தேன். என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே! ஏ, மாமா, க்ருபா, நீ நல்லவன் என நம்பினேன், நீயும் என்னை ஏமாற்றி விட்டாய்! இதோ இந்த மந்திரவாதியும் என்னை ஏமாற்றி விட்டான். என் குலத்தின் மூத்தோர்களான நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை ஏமாற்றிப் பழி வாங்கி விட்டீர்கள்.” சற்றே நிறுத்தி விட்டு மூச்சு வாங்கிக் கொண்டவன், “என் மனைவி, அனைவருக்கும் தலைவி அவளும் என்னை ஏமாற்றி விட்டாள்.” என்ற வண்ணம் த்வைபாயனர் மேல் பாய்ந்து, “ஏ, மிருகமே, முனிவனே! நீ தான் எல்லோரையும் விடப் பெரிய நயவஞ்சகன்! நான் உன் மேல் புனிதமான எருமைக்கடவுளின் சாபத்தை எல்லாம் ஏவி விடுகிறேன். இங்குள்ள அனைவர் மேலும் ஏவுகிறேன். யாரும் தப்பிக்க முடியாது!”

இவ்விதம் கூறிய மோசா மிகுந்த பிரயத்தனம் செய்து அந்த வில்லாளிகளின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். வாளைப் பிடித்திருந்த அவன் கைகளை அவர்கள் இறுகப் பற்றி இருந்தார்கள். அந்தக்கையையும் முயன்று விடுவித்துக் கொண்ட மோசா அவர்கள் அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை ஊகித்து அறியும் முன்னர் அந்த வாளைத் தன் நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டு விட்டான். ரத்தம் கொப்பளித்து வந்தது. மோசா பிணமாகக் கீழே விழுந்தான்.



Monday, September 12, 2016

கோயிலுக்குள்ளே மோசா!

க்ருபாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனுக்கு பாலமுனியைச் சிறு வயதிலிருந்தே தெரியும். அவரை மிகவும் நேசித்தான். அதோடு அவர் வளர வளர அவரின் நேர்மையான செயல்களால் அடைந்து வந்த நற்பெயரும் அவனைக் கவர்ந்திருந்தது. மேலும் இப்போது கோதுலி ஆசிரமத்திற்கு வந்த அவரால் தங்கள் பழங்குடியினரிடையே ஏற்பட்ட அதிசயிக்கத் தக்க மாற்றங்களால் த்வைபாயனரின் செல்வாக்கை அவனால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. யமுனைக்கரை முழுவதிலும் த்வைபாயனரால் ஏற்பட்டு வந்த மாற்றங்களையும் நன்கு அறிந்திருந்தான். இப்போது மோசாவின் தாக்குதல்களிலிருந்து தங்களை விடுவித்ததோடு அல்லாமல் வாழ்நாள் முழுவதும் கெடுதலையே செய்து கொண்டிருந்த மோசாவின் கடவுளின் சந்நிதிக்கு அழைத்து அவரால் தண்டனை பெறச் செய்ததும் அவனுக்கு வியப்பைத் தந்தது. ஆகவே இப்போது மோசா என்ன சொன்னாலும், சரி, அல்லது தங்கள் குலதெய்வமான மஹிஷாசுரனின் கோபத்துக்கே தான் ஆளானாலும் சரி, பாலமுனியை மஹிஷன் கோயிலுக்குள்ளே அழைத்துச் என்றே ஆகவேண்டும். வேறு வழியில்லை.

க்ருபா அங்கேயே சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த தன் குலத்து முதியோர்களிடம் சென்றான், அவர்களுக்கும் பாலமுனியைப் பார்த்து வியப்புத் தான். கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்கே சென்றவர் அதை மாற்றி அப்படியே மோசாவின் மேல் திருப்பியதோடு அல்லாமல் கடவுளரின் கோபத்துக்கும் அவனை ஆளாக்கி விட்டாரே! ஆகவே அவர்கள் இப்போது க்ருபா பாலமுனியை அழைத்துச் செல்வது குறித்துக் கேட்டதும் உடனே ஒத்துக் கொண்டனர். க்ருபாவும் பாலமுனியைத் திரும்பிப் பார்த்து அவருடைய குறுக்கீடுகளைத் தாங்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான். அங்கே புதர்களைச் சேர்த்துக் கயிறுகளால் கட்டி மூடப்பட்டிருந்த வழியை க்ருபாவும் மற்றவர்களும் வில்லாளிகள் மற்றும் வீரர்கள் துணை கொண்டு அறுத்து எறிந்தனர். மூங்கில் கம்புகளால் ஆன சுவற்றை அடைந்தனர். கோயிலின் கதவுகள் உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது.

த்வைபாயனர் மோசாவைக் குரல் கொடுத்து அழைத்துக் கோயில் கதவைத் திறக்கச் சொன்னார். உள்ளே இருந்து எவ்விதமான பதிலோ அல்லது யாரும் வந்து கதவைத் திறக்கவோ இல்லை! ஆகவே பாலமுனி வில்லாளிகளை அழைத்துக் கதவை உடைத்துத் திறக்கச் சொன்னார். குனிகரும் அதையே சொல்ல வீரர்கள் கதவுகளை உடைத்துத் திறந்தனர். உள்ளே திறந்தால் அவர்கள் கண்களுக்கு ஓர் விசித்திரமான காட்சி தென்பட்டது. ஓர் இளம் வயது எருமைக்கடா அங்கே முகத்தில் சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தது. அதன் தேகம் கருநிறமாக பளபளவென்று காணப்பட்டது. அங்கிருந்த ஓர் கம்பத்தில் அது கட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே தரையில் அடிக்கப்பட்டிருந்த ஆப்புக்களில் அதன் கால்கள் நான்கும் நன்கு கட்டப்பட்டிருந்தன. அந்த எருமைக்கடாவுக்கு அந்தக் கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை என்பது அடிக்கடி அது தன் உடலை உதறிக்கொண்டு விடுவித்துக்கொள்ள முயன்றதில் இருந்து தெரிந்தது.

அந்தப் பழங்குடியினரின் வழக்கப்படி மோசா பட்டம் ஏறும் முன்னர் வணங்கப்பட்டு வந்து கொண்டிருந்த வயதான எருமை மாட்டை பலி கொடுத்து விட்டு இந்த இளம் எருமைக்கடாவைப் புதிதாக கோயிலுக்கென்று விட்டிருந்தார்கள். இதை வணங்கி வந்தார்கள். இப்போது மோசா அந்தக் கோயிலின் சந்நிதிக்கு முன்னர் முழந்தாளிட்டு அமர்ந்த வண்ணம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான். அவன் தலை பூமியில் கிடந்தது. அவனருகே ஓர் செம்பினால் ஆன குறுவாளும் மூன்று ஈட்டிகளும் காணப்பட்டன. ஈட்டிகளின் நுனிகள் பளபளவென்று கூர்மையாகக் காட்சி அளித்தது. மோசாவின் அருகே அந்தப் பழங்குடியினரின் மந்திரவாதி அமர்ந்திருந்தான். அவன் முகத்திலும் சிவப்பு வண்ணத்தைப் பூசி இருந்தான். தன் கண்களை மூடிக் கொண்டு ஏதேதோ மந்திரங்களை உச்சாடனம் செய்து கொண்டிருந்தான்.

அந்தக் காட்சியைக் கண்டதுமே மந்திரி குனிகர் தன் இடுப்பிலிருந்த அரைக்கச்சையிலிருந்து உடைவாளை எடுத்தார். அவர் கைகள் தன்னிச்சையாக இயங்கின. இதைப் புரிந்து கொண்ட த்வைபாயனர் மந்திரியைப் பார்த்து, “மந்திரி, தயவு செய்து இப்போது இவனைக் கொல்ல முயலவேண்டாம். இது கோயில், புனிதமான இடம்! இதைப் பலி கொடுக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். இது கொலைக்களம் அல்ல!” என்றார் கண்டிப்பான தொனியில்.  அதன் பின்னர் மோசாவைப் பார்த்துத் திரும்பினார். பின்னர் தன் வசீகரக் குரலில் அவனைப் பார்த்து, “வலிமையுள்ள தலைவா! எழுந்திரு! இப்படி எல்லாம் செய்து உன் மனைவியைத் திரும்பக் கொண்டு வர உன்னால் முடியாது. அவள் இப்போது கோதுலி ஆசிரமத்தில் ஷார்மி அன்னையுடன் சேர்ந்து ஆசிரமத்தைத் திரும்ப நிர்மாணிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறாள்.” என்றார். மோசா தன் தலையை வெடுக்கென்று திருப்பினான். த்வைபாயனரை எரிக்கும் கண்களுடன் பார்த்தான். “மோசக்காரா! சூழ்ச்சிக்காரா, வஞ்சகா! நீ தான் ஷார்மிக்கும் மற்றப் பெண்களுக்கும் தப்பிச் செல்ல வழி தேடிக் கொடுத்திருக்கிறாய்! ஷார்மி என் மனைவியைத் தன்னுடன் அழைத்துச் சென்றதன் மூலம் பரிகாரம் தேடிக்கொண்டு செய்ய முடியாத அளவுக்கு மாபெரும் பாவத்தைச் செய்திருக்கிறாள். ஹூம், இப்போது அவள், அந்த என் மனைவி, ஷார்மியுடன் சேர்ந்து கொண்டு நான் அழித்த அதே ஆசிரமத்தைத் திரும்பக் கட்டுகிறாளாமா?” கொஞ்சம் நிறுத்திக் கொண்ட மோசா தன் ஆத்திரத்தை ஓர் கட்டுக்குள் கொண்டு வந்தான். “ஏ, க்ருபா, நீ எனக்குக் கீழ்ப்படிந்தவன். என் குடிமக்களில் ஒருவன் நீ! இப்போது நீ உன்னை மாற்றிக் கொண்டிருக்கிறாய். எனக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாக நீ செய்த வாக்குறுதியை அடியோடு மறந்து விட்டாய்! நீ இங்குள்ள புனிதமான தெய்விக எருமைக் கடவுளை அவமதித்து விட்டாய்! அவருடைய கடுமையான தண்டனையும் கோபமும் உன் வாழ்நாள் முடியும் வரை உன்னைத் தொடரும்!” என்றான்.

“இந்தப் புனிதமான எருமைக் கடவுளால் நீ நின்று கொண்டிருக்கும் இந்த இடம் அப்படியே எரிந்து போய்விடும். இதோ, நம் மந்திரவாதி! என்ன செய்யப் போகிறார் என்று பார்! அவர் நம் எருமைக்கடவுளின் சாபத்தை வாங்கி இங்குள்ளவர்கள் மேல் செலுத்தப் போகிறார்.’ மோசா மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் குரலே புரியாத தன்மையில் குழறிக் குழறி வெளிவந்தது. நீண்ட பெருமுச்சுகள் வந்தன. அவன் கைகள் தானாகவே கீழே கிடந்த வாளைப் பற்றின. இங்கே க்ருபாவுக்கும் அவனுடன் வந்த மற்றப் பழங்குடியினருக்கும் எருமைக்கடவுளின் கோபமும், சாபமும் தங்களை வாழ்நாள் முழுவதும் தொடரும் என்று கேட்டதும் உடலே ஆட்டம் கண்டது. அவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கினார்கள். அப்போது மோசா தன் கைகளை உயரே உயர்த்திய வண்ணம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான்.

“ஏ, புனிதமான எருமைக்கடவுளே! நான் உன்னுடைய அருமை மகன். உன்னுடைய கோபத்தையும்,சாபத்தையும் இங்குள்ளவர்களிடம் திருப்பிவிடு! இவர்களை அடியோடு அழித்துவிடு!” என்றவண்ணம் குறிப்பாக த்வைபாயன்ரைச் சுட்டிக் காட்டினான். “இதோ இவனை, இந்த முனிவனை இங்கே பூமியிலிருக்கும் உன்னை விட்டு விட்டு எங்கோ விண்ணில் இருப்பதாகச் சொல்லப்படும் கடவுளரைக் குறித்து எப்போதும் பேசுபவனை விடாதே! இவனும் ஓர் மந்திரவாதியே, சூழ்ச்சிக்காரனே!” என்று கத்திப் பிரார்த்தித்தான்.

அவர்கள் அனைவரும் காத்திருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை. அந்த இளம் எருமைக்கடா மட்டும் தொண்டையைக் கனைத்துக் கொண்டு குரல் கொடுத்தது. அதன் பின்னர் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டு அங்குள்ள பசும்புற்களைச் சாப்பிடத் தொடங்கியது. அதற்குத் தான் வணங்கப்படுவது தெரிந்திருக்குமோ அதை அது நன்றாக அனுபவிக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது அதன் நடவடிக்கைகள்.

“மோசா, முட்டாள் தனமாக நடந்து கொள்ளாதே!” அன்பான குரலிலேயே ஆரம்பித்தார் த்வைபாயனர். “நீ ஓர் கொடூரமான காரியத்தைச் செய்திருக்கிறாய்! எவராலும் மன்னிக்க முடியாதது அது! நீ ஓர் அழகான ஆசிரமத்தையே முற்றிலும் எரித்ததோடு அல்லாமல் அங்கு பாடம் கற்பித்துக் கொடுத்த ஸ்ரோத்திரியர்கள் அனைவரையும் ஆசாரியர், அவர் குழந்தைகள் உள்பட கொன்றிருக்கிறாய். அவர்கள் யாரேனும் உனக்குத்தீங்கு ஏதும் செய்தார்களா! அனைவரும் குற்றமற்றவர்கள். இதோ பார்! நான் உன்னை என் நண்பனாக்கிக் கொள்ளவே விரும்புகிறேன். என்னால் முடிந்த உதவியையும் உனக்குச் செய்வேன். உனக்கோ உன் குலத்து மக்களுக்கோ எங்களாலோ மற்றவர்களாலோ எவ்விதத் தீங்கும் ஏற்படக் கூடாது என்பதே என் எண்ணம்!” என்றார் த்வைபாயனர்.

மந்திரி குனிகருக்குத் தன் கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும் அவசரம் அதிகமாகக் காணப்பட்டது. ஆகவே அவர் த்வைபாயனரின் பேச்சில் குறுக்கிட்டார்;” பரத வம்சத்துச் சிறந்த இளவரசர்களின் ஒருவரும் குரு வம்சத்தின் பயங்கரமான சபதங்களைப்போட்ட பீஷ்மர் என்னும் காங்கேயன் மோசாவை எப்படி வேண்டுமானாலும் தண்டிக்கலாம் என்னும் அதிகாரத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார்!” என்றார் அவசரம் அவசரமாக.  மோசாவின் முகம் கோபத்தில் கொதித்தது. மந்திரியைப் பார்த்துத் திரும்பினான். “நீ என்னைத் தண்டிக்க முடியாது, மந்திரி! என்னைத் தண்டிக்க நினைத்தாயானால் எங்கள் எருமைக்கடவுள் உன்னைச் சும்மா விடமாட்டார்! இங்கிருந்து அகன்று செல்!” என்று கூச்சலிட்டான்.

Sunday, September 11, 2016

மோசாவைத் தேடி!

“என்ன? தன்னைத் தானே அந்தக் கோயிலுக்குள்ளே மறைத்துக் கொண்டு இருக்கிறானா? அவன் கோதுலி ஆசிரமத்தை அடியோடு எரித்ததும் இல்லாமல், அங்கிருந்த ஸ்ரோத்திரியர்கள் அனைவரையும் ஆசாரிய கௌதமர் அவர் குழந்தைகள் உட்படக் கொன்றிருக்கிறான்.  உங்களையும் இங்கே கடத்தி வந்திருக்கிறான். மோசாவையும் அவன் ஆட்களையும் எப்படி வேண்டுமானாலும் தண்டிக்கலாம் என்பதற்கு எனக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இத்தகைய கொடுமைகளைச் செய்த மோசாவுக்குத் தக்க தண்டனை அளித்தே தீருவேன்.” என்றார் குனிகர். “மந்திரி, குனிகரே! அவனுக்கு இறைவன் போதிய தண்டனையைக் கொடுத்து விட்டான். அதோடு இல்லை. அவன் மக்களும் அவனைத் தண்டித்து விட்டனர். நானும் அவனைக் கைவிட்டு விட்டேன்.” என்றார் த்வைபாயனர்.

த்வைபாயனர் சொன்னதை அங்கு நின்று கொண்டிருந்த வயது முதிர்ந்த சில பழங்குடியினர் ஆமோதித்துத் தலையை ஆட்டினார்கள். “அது எப்படி? அவனுக்கு எப்படி, என்னவிதமாக தண்டனை கிடத்தது?” குனிகர் கேட்டார். அதற்கு த்வைபாயனர், “அவனுடைய முதல் மனைவி ஷார்மியுடன் ஓடி விட்டாள். இந்தப் பழங்குடியினரின் சம்பிரதாயப்படி பழங்குடியினரின் தலைவன் தான் அங்குள்ள பெண்களுக்கு எல்லாம் பொறுப்பானவன். பெண்களில் சுக, துக்கங்களுக்குப் பொறுப்பேற்பவன். அவன் எத்தனை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அவனுக்கு முதல் திருமணமும் அதன் மூலம் வாய்க்கப் பெறும் முதல் மனைவியுமே இங்கே எல்லாவற்றிலும் அதிகாரம் படைத்தவர்கள். முதல் மனைவியே அவனுடைய எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்பதோடு தலைவன் என்பதற்கான அடையாளத்தின் அதிகார சக்தியாகவும் விளங்குவாள். அவளே அவனை விட்டு விலகி விட்டால்? பிரளயமே ஏற்படும் அல்லவா?” இதைக் கேட்ட குனிகர் சத்தமாகச் சிரித்தார். பின்னர், “அவள் அதாவது அவனுடைய பட்ட மஹிஷியைப் போன்றவள் அவனை விட்டு விலகிச் சென்று விட்டால், அதனால் அவனுக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது! அல்லவா? அவனால் அதை எதிர்கொள்ள முடியவில்லை, அல்லவா?” என்று கேட்டவண்ணம் மீண்டும் சிரித்தார் குனிகர்.

“ம்ம்ம், அப்படியும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவன் அதன் பின்னர் அடைக்கலம் தேடியும் இந்த அவமானத்தைச் சகித்துக் கொள்ள முடியாமலும் தான் அவன் குல தெய்வமான எருமைக்கடவுளின் சந்நிதியில் தஞ்சம் புகுந்துவிட்ட்டான். பிரார்த்தனைகள் அவனுக்கு எவ்விதத் தீங்கையும் செய்யாது. பிரார்த்தனைகளைச் செய்யட்டும். அவை அவனுக்கு அடக்கத்தைப் போதிக்கும். இப்போது அவனுக்குத் தேவையானது அடக்கமும், விநயமும், பணிவுமே!” என்ற வண்ணம் புன்னகை புரிந்தார் த்வைபாயனர். “நான் அவனைப் பார்த்தே ஆகவேண்டும், ஆசாரியரே! பரத வம்சத்து இளவல் ஆன காங்கேயர் மோசாவைக் கொன்று விடும்படி கட்டளை பிறப்பித்திருக்கிறார்.” என்றார் குனிகர்.

“குனிகா, மோசாவைப் பற்றிய கவலையை விட்டு விடுவீர்! இப்போது இந்தப் பழங்குடியினரின் தலைவனாக க்ருபா தான் இருக்கிறார். ஷார்மியின் தந்தை இவர். கோதுலி ஆசிரமத்தோடு நெருங்கிய உறவுள்ளவர். நீங்கள் எல்லாம் வருவதற்கு முன்னர் அனைத்துப் பழங்குடியினரும் ஒன்று கூடி மீண்டும் கோதுலி ஆசிரமத்தைப் புனர் நிர்மாணம் செய்வதைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். இல்லையா க்ருபா?” என்று கேட்டார் த்வைபாயனர்.  க்ருபா அதை ஆமோதித்துத் தன் தலையை ஆட்டினான்.

“இருந்தாலும் நம் குரு வம்சத்து இளவல் எனக்கு இட்டிருக்கும் கட்டளையை நான் கட்டாயம் பின்பற்றியே ஆகவேண்டும். அதற்கு நான் கீழ்ப்படிய வேண்டும். இப்போது நான் பழங்குடியினரின் தலைவருடன் சில வார்த்தைகள் பேச வேண்டும்.” என்றார் குனிகர். “என்ன செய்யப் போகிறீர்? குனிகரே?” என்று த்வைபாயனர் கேட்டார். “ஐயா, நான் சொல்வது இந்தத் தலைவரை அல்ல! பழைய தலைவன் மோசாவை! அவனை நான் சந்தித்தே ஆகவேண்டும் அவனுக்கு ஓர் பாடம் கற்பித்தாக வேண்டும்.” என்றார் குனிகர். த்வைபாயனர் க்ருபாவிடம், திரும்பி, “எங்களை மோசா இருக்குமிடம் அழைத்துச் செல் க்ருபா!” என்றார்.

ஆனால் க்ருபா மறுத்தான். “ஆசாரியரே, அவன் உங்களைப் பார்க்க விரும்ப மாட்டான். தன்னைத் தானே அங்கே அடைத்துக் கொண்டிருக்கிறான். அதிலும் புனிதமான எருமைக் கடவுளின் சந்நிதியில், அவரை நாங்கள் அனைவரும் வணங்கும் சந்நிதியில்! அதோடு இல்லாமல் அவன் ஓர் மந்திரவாதியையும் தன்  கூட அழைத்துச் சென்றிருக்கிறான். அவன் துணையுடன் என்ன என்ன செய்வானோ! !” என்றான் க்ருபா கலக்கத்துடன். “ஓ, நீ மந்திரவாதியைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே, க்ருபா! அவனைக் கண்டு பிடித்ததும் எப்படி அவனைக் கையாளலாம் என்பதைக் குறித்து யோசிப்போம். அவனுடைய மந்திர, தந்திரங்கள் நம்மை ஒன்றும் செய்யாது!” என்றார் த்வைபாயனர்.

ஒரு பழங்குடியினரும் வில்லாளிகளில் தேர்ந்தவர்கள் நான்கு பேரும் பின் தொடர க்ருபா, த்வைபாயனரையும் மந்திரி குனிகரையும் மோசா இருக்கும் எருமைக்கடவுளின் கோயிலுக்கு அழைத்துச் சென்றான். அந்தக் குடியிருப்பை ஒட்டி இருந்த ஓர் குன்றின் உச்சியில் இருந்தது அந்தக் கோயில். அது கிட்டத்தட்ட ஓர் பெரிய குடிலாகக் காணப்பட்டது. மூங்கில் கம்புகளை நெருக்கமாக அடுக்கிச் சுவரைப் போல் அமைத்திருந்தார்கள். அடர்ந்த புதர்களால் அதன் மூன்று பக்கங்கள் மூடப்பட்டிருந்தது. அங்கு தெய்வீக எருமையைக் கடவுளாகக் கும்பிட்டு வருவதால் ஓர் எருமையும் இருந்தது. அவர்கள் அந்தக் குடிலின் வெளி வாயிலுக்கருகே வந்து சேர்ந்தனர். அங்கே ஓர் மந்திரக் கோடு வரையப்பட்டிருந்ததைக் கண்டார்கள். அது அந்தப் புதர்களைச் சுற்றி வரையப்பட்டிருந்தது. க்ருபா அதைப் பார்த்ததுமே ஆசாரியரைப் பார்த்தான்.

“ஆசாரியரே, எங்கள் பழங்குடியினரைச் சேர்ந்த கை தேர்ந்த மந்திரவாதி ஒருவன் இந்த மந்திரக் கோட்டை வரைந்திருக்கிறான். இந்தக் கோயிலைச் சுற்றிக் கொண்டு அது செல்கிறது. அதை நம்மால் தாண்டவே முடியாது. அப்படி மீறித் தாண்டினோம் எனில் நாம் மஹிஷாசுரனின் கோபத்துக்கு ஆளாகி விடுவோம்!” என்று பயத்துடன் கூறினான். த்வைபாயனர் புன்னகைத்தார். “ சரி, க்ருபா, உனக்கு பயமாக இருந்தால் நீ வர வேண்டாம். நானும் குனிகரும் இந்தக் கோட்டைத் தாண்டப் போகிறோம்.  நாங்கள் மேலே உள்ள இறைவனின் பாதுகாப்பின் கீழ் பத்திரமாக இருக்கிறோம்!” என்றார்.  அப்போது குனிகர் குறுக்கிட்டார்.

“ஆசாரியரே! நீங்கள் இந்தக் கோட்டைத் தாண்டி வரும் சிரமங்களை எல்லாம் மேற்கொள்ள வேண்டாம். இங்கேயே இருங்கள். நான் மட்டும் இந்தக் கோயிலுக்குள்ளே போய் மோசாவை இழுத்து வருகிறேன். அவனுடைய கொடுமையான காரியங்களுக்கான தண்டனையைக் கட்டாயமாய் அவனுக்குக் கொடுத்தே ஆகவேண்டும்.” என்றவர் க்ருபாவிடம் திரும்பி, “உள்ளே அவன் என்ன செய்து கொண்டிருப்பான் என்பது குறித்து நீ ஏதேனும் அறிவாயா?” என்றும் வினவினார்.

“அவன் ஒரு வேளை எருமைக்கடவுளை வழிபட்டுக் கொண்டிருக்கலாம். அவன் முதல் மனைவியைத் திரும்பக் கொண்டு வருவதற்குப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கலாம். அவள் வந்துவிட்டாளெனில் அவளைப் பலி கொடுத்துவிடுவான்.” என்றான் க்ருபா. “முதலில் நாம் உள்ளே சென்று மோசாவைப் பார்ப்போம்!” என்றார் த்வைபாயனர். “ஒரு வேளை இந்தக் கோயிலும் அதைச் சார்ந்த சூழ்நிலைகளும் மோசாவின் மனதை மாற்றி அவனை நல்வழியில் திருப்பலாம். சரியான பாதைக்கு அவன் வந்து விடலாம். அதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன அல்லவா?” என்றார்.



Saturday, September 10, 2016

த்வைபாயனருக்கு விடுதலை!

அரண்மனைப் படகு கோதுலி ஆசிரமத்தின் எஞ்சி இருந்த மைதானத்தின் பக்கம் வந்து நின்று நங்கூரமிட்டது. அதிலிருந்து வில்லாளிகளும், மற்ற வீரர்களும் கைகளில் ஈட்டி, வேல்கம்பு போன்றவற்றை ஏந்திய படகோட்டிகளும் இறங்கினார்கள். அங்கிருந்த பழங்குடியினரின் இரு காவல்காரர்களும் கூட்டமாக வந்து இறங்கிய வீரர்களைக் கண்டு திகைத்துப் பின்னர் காட்டுக்குள்ளே ஓட்டம் பிடித்தனர். படகிலிருந்த மற்றப் பெண்கள், பிரமசாரிகளைக் குனிகர் இறங்க அனுமதி கொடுத்ததும் அவர்களும் படகிலிருந்து கீழே குதித்து இறங்கினார்கள். அங்கிருந்த வீரர்களில் மூன்று அல்லது நான்கு படகோட்டிகளைத் தேர்ந்தெடுத்துக் குனிகர் அங்கே இருந்து ஆசிரமப் பகுதியைக் காவல் காக்கச் சொன்னார். பெண்களையும் பிரமசாரிகளையும் அங்கேயே தங்கி இருக்கவும் கூறினார்.

ஷார்மியும் அதற்கு உடனே ஒத்துக் கொண்டாள். “ஆம், மந்திரி, நாங்கள் இங்கே தான் தங்கி இருக்கவேண்டும். நாங்கள் பெண்கள் அனைவரும் சேர்ந்து இந்த இடத்தை நன்கு சுத்தம் செய்து புனிதமான அக்னி வளர்க்கத் தக்க இடமாக மாற்றுகிறோம். ஆனால் நீங்கள் பாலமுனி இல்லாமல் இங்கே திரும்பக் கூடாது!” என்று கண்டிப்புடன் கூறினாள். அதன் பின்னர் குனிகர் க்ரிவியிடம் திரும்பி பழங்குடியினரின் தலைமையகம் செல்லும் வழியைக் காட்டும்படி கூறினார். விரைவில் போய்ச் சேரும்படியான சுருக்கு வழியையும் கூறும்படி கேட்டார். க்ரிவியோ ஓவென்று வாய் விட்டு அழுதான். மோசா தன்னைக் கொன்று விடுவான் என்று கூறிக்கொண்டே வாய் விட்டுக் குழந்தையைப் போல் அழுதான். கோபமாக க்ரிவியை அச்சுறுத்தும் வண்ணம் பார்த்த குனிகர் அவனுக்கு ஓர் அடியைக் கொடுத்தார். பின்னர், “மோசா நாளைக்குத் தான் உன்னைக் கொல்வான். ஆனால் நீ வழி சொல்லவில்லை எனில் நான் இன்றே கொன்றுவிடுவேன். எழுந்திரு, வழியைக்காட்டு!” என்று அதட்டினார்.

“சரி, சரி, இதோ காட்டுகிறேன்.” என்ற வண்ணம் எழுந்தான் மோசா. “நான் அங்கே உங்களை எல்லாம் அழைத்துச் சென்றால் மோசா கொன்று விடுவான். அழைத்துச் செல்லவில்லை எனில் நீங்கள் கொல்வீர்கள். இப்படியே எல்லோரும் என்னைக் கொல்லுவதிலேயே மும்முரமாக இருங்கள். என் பையன்கள் எனக்குப் பின்னர் என்ன ஆவார்கள்? அவர்கள் கதி என்ன?” என்று கேட்டான். “அவர்களுக்கோ அல்லது உனக்கோ எதுவும் நடக்காது. நீ மட்டும் நான் சொன்ன பேச்சைக் கேட்க வேண்டும். அப்படிக் கேட்டுவிட்டால் எதுவும் நடக்காது. இப்போது வந்து வழியைக் காட்டிக் கொண்டு முன்னே செல்!” என்றார் குனிகர். க்ரிவி தன் மனதிற்குள்ளாக எந்த நேரத்திலும் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டு, வேறு வழியில்லாமல் தங்கள் குடியிருப்பின் பக்கம் குரு வம்சத்து மந்திரியையும் மற்றவர்களையும் அழைத்துச் சென்றான்.

அவர்கள் பழங்குடியினரின் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே வந்து சேர்ந்தது தான் தாமதம். க்ரிவி எந்த வார்த்தையும் பேசாமல் எதையும் சுட்டிக் காட்டாமல் குனிகரைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் அங்கிருந்து ஓட்டம் எடுத்தான். உயிர் அவனுக்கு மிக மதிப்பு வாய்ந்த ஒன்று. அதை எக்காரணம் கொண்டும் இழக்க அவன் விரும்பவில்லை. இப்போதிருக்கும் நிலையில் மோசாவையோ குனிகரையோ பார்த்தால் ஏதேனும் ஓர் தரப்பில் இருந்து நிச்சயம் மரணம். ஆகவே அவர்களைப் பார்க்கவே கூடாது! அவர்கள் வந்து சேர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் சில பழங்குடியினர் நின்ற வண்ணம் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த குனிகர், தன் வில்லாளிகளைப் பார்த்து அந்தப் பழங்குடியினரின் யாரேனும் ஒருவர் மேல் குறி பார்த்து அம்பை எய்யச் சொல்லி ஆணையிட்டார். அவனும் அப்படியே செய்தான். அது ஓர் பழங்குடியின் மேல் போய்ப் பாயந்தது. அவன் அலறிக்கொண்டே கீழே விழுந்தான். பரிதாபமான அவன் குரலைக் கேட்ட அங்கிருந்த மற்றவர்கள் ஓட்டமாக ஓடிவிட்டனர்.

அந்தக் குடியிருப்பின் வீடுகளின் மேல் கூரையில் கலசம் போல் எழுப்பப்பட்டிருந்தவற்றின் மீது அம்புகளைக் குனிகர் எய்யச் சொல்ல அவையும் குறிபார்த்துப் பாய்ந்துக் கலசங்களை உடைத்தன. அந்தக் குடியிருப்பில் எங்கும் பதட்டம் சூழ்ந்தது. அனைவர் மனதில் பயமும், அச்சமும், குழப்பமும் மிகுந்தது. பேரிகைகளை முழக்கினார்கள். சங்குகள், எக்காளங்கள் ஊதப்பட்டன. ஆபத்து என்று அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள் தங்களை ஒளித்துக் கொண்டனர். குடிசைகளிலிருந்து பழங்குடியினர் ஓடோடி வந்து அங்கிருந்த திறந்த வெளி மைத்தானத்தில் அனைவரையும் எதிர்க்க ஓடினார்கள். அவர்கள் அந்த மைதானத்தை அடையும் முன்னரே குனிகர் அந்த இடத்தைத் தன் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். அந்தப் பழங்குடியினர் அன்று வரை இத்தனை தேர்ந்த வில்லாளிகளையும் ஈட்டியையும் வேல்கம்பையும் குறிபார்த்து எய்பவர்களையும் கண்டதே இல்லை. பயத்திலும் கலக்கத்திலும் பாதுகாப்பாகக் கொஞ்சம் தள்ளியே நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள். செய்வதறியாது திகைத்தனர்.

மீண்டும் குனிகரும் அவருடைய ஆட்களும் வேறு சில குடிசைகளின் கலசங்களையும் உடைத்தெறிந்தனர். அந்த சப்தமானது அந்தக் காட்டிலே எதிரொலித்து எங்கும் கலக்கத்தை உண்டாக்கியது. அந்த வீரர்களில் ஒருவனுக்கு அந்தப் பழங்குடியினரின் மொழி தெரிந்திருந்தது. அவன் முன்னே வந்து அவர்களிடம் தாங்கள் குரு வம்சத்து இளவரசனும், அனைவரும் நடுங்கும்படியான யுத்த தந்திரத்தைக் கையாளுபவருமான பயங்கரமான சபதங்கள் போட்டவருமான பீஷ்மர் என்னும் காங்கேயரின் சார்பாக வந்திருப்பதாகக் கூறினான். அவர் பெயரால் தான் ஆணையிடுவதாகவும் கூறினான். இப்போது உடனே அவர்கள் தலைவன் ஆன மோசாவை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாலமுனி த்வைபாயனருக்கு ஒரு சின்னக் காயம் கூட இல்லாமல் அப்படியே அவரையும் ஒப்படைக்கவேண்டும் எனவும் கூறினான்.  பாலமுனியைக் கடத்தி வைத்திருப்பது மாபெரும் குற்றம் எனவும் தங்கள் கட்டளைகள் உடனுக்குடன்  ஏற்றுக்கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அப்படி இல்லை எனில் அவர்கள் குடியிருப்பையே மொத்தமாக அழிப்பதோடு எல்லோரையும் கூண்டோடு கொன்றுவிடப் போவதாகவும் அச்சுறுத்தினான்.

மோசாவின் ஆட்களான ஒரு சில பழங்குடியினர் காட்டுக்குள்ளே தூரமாகச் சென்று மறைந்து கொள்ளப் போய்விட்டனர். மோசா இல்லாத சமயம் அவன் சார்பில் தலைவனாகச் செயல்படும் க்ருபா இப்போது முன்னே வந்தார். குனிகரிடம் வந்த அவர், அவரைப் பார்த்துத் தன் கைகளைக் கூப்பி வணங்கினார். க்ருபாவுக்கு ஆரியர்களின் மொழி தெரிந்திருந்தது. ஏனெனில் அவருக்கு கோதுலி ஆசிரமத்தோடு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. ஆகையால் இப்போதும் ஆரியர்களின் மொழியிலேயே பேச ஆரம்பித்தார். “வீரமும், துணிவும் மிக்க தலைவரே! நான் ஷார்மி அன்னையின் தந்தை ஆவேன். சற்றே பொறுத்திருங்கள். நான் இப்போது உடனே சென்று உங்கள் ஆசாரியரான பாலமுனியை அழைத்து வருகிறேன்.” என்றார். குனிகருக்கு இப்போது தான் மூச்சு வந்தது. ஆஹா, ஆசாரியருக்கு நல்லவேளையாகக் கெடுதல் ஒன்றும் நிகழவில்லை. பத்திரமாக இருக்கிறார். எனினும் அவர் சந்தேகம் விலகவில்லை. “இதோ பார், கிழவா! நீ மட்டும் என்னை ஏமாற்றினாய் எனில், இந்தக் குடியிருப்பு மொத்தமும் அழிந்து விடும்! ஜாக்கிரதை!” என்று எச்சரித்தார். குனிகரும் அவருடைய வீரர்களும் அங்கேயே த்வைபாயனருக்காகக் காத்திருக்க அங்கே கூடி இருந்த பழங்குடியினரும் சற்றுத் தூரத்தில் நின்றவண்ணம் க்ருபா திரும்பி வரக் காத்திருந்தார்கள்.

சற்று நேரத்தில் த்வைபாயனர் முன்னே வர க்ருபா பின் தொடர்ந்து வந்தார். த்வைபாயனர் முகத்தில் எப்போதும் போல் அதே சிறுபிள்ளைத் தனமான புன்முறுவல். விஷமம் செய்யும்போது அகப்பட்டுக் கொண்ட சிறுவனைப் போல் நாணம் கலந்த சிரிப்புக் காணப்பட்டது. அவர் கண்கள் விசித்திரமான ஒளியில் ஒளிர்ந்தன. “மந்திரி, குனிகரே, இங்கே வரும் சிரமத்தை மேற்கொண்டது ஏன்? எனக்கு எவருடைய உதவியும் தேவையாய் இருக்கவில்லை. அதோ அந்தக் கடவுளரின் உதவியை மட்டுமே நான் கேட்டிருந்தேன். அது தவிர வேறெதுவும் தேவைப்படவில்லை. என்னிடமுள்ள பிரம்ம தேஜஸ் அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டது. இப்போது தயவு செய்து உன்னுடைய அம்புகளை எல்லாம் எடுத்துத் திரும்ப அம்புறாத் தூணியிலேயே போட்டுவிடு!” என்றார்.

குனிகர் ஆசாரியரைக் கீழே விழுந்து வணங்கினார். அதைப் பார்த்த மற்ற வில்லாளிகளும் வீரர்களும் கீழே விழுந்து வணங்கினார்கள். ஆசாரியர் அவர்களை ஆசீர்வதித்த வண்ணம் கூறினார்:” நீங்கள் அனைவரும் நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும். இங்குள்ள மஹிஷனின் பிள்ளையாக மதிக்கப்படுபவன் மனதில் அமைதி நிலவ வேண்டும்.உங்கள் ஆயுதங்களை எல்லாம் கீழே போடுங்கள். விற்கள், அம்புகள், ஈட்டிகள், வேல்கம்புகள் அனைத்தும் அதனதன் இடத்திற்குச் செல்லட்டும். க்ருபா, உன் மக்களிடமும் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்!” என்றார்.

அங்கிருந்த வீரர்கள் அனைவரும் த்வைபாயனர் சொன்னதும் குனிகரின் கண் ஜாடைப்படி தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டனர். க்ருபாவும் பழங்குடி மக்களிடம் அவ்வாறே கூற அவர்களும் போட்டனர். க்ருபாவைப் பார்த்த த்வைபாயனர், “மதிப்புக்குரிய க்ருபா, நாம் இப்போது பழங்குடியினரின் சிறப்பு உணவை உண்ணலாம். எங்கே குழந்தைகள். அவர்களை எல்லாம் கூப்பிடு! அவர்களுக்குப் பசிக்குமே!” என்று கவலையுடன் கூறினார். “அதெல்லாம் சரி ஆசாரியரே, மோசா எங்கே போனான்?” என்று ஆச்சரியத்துடன் வினவினார் குனிகர். “அவன் தன்னைத் தானே அவர்களுடைய மஹிஷாசுரனின் கோயிலில் சந்நிதிக்கு முன்னர் சிறை வைத்துக் கொண்டிருக்கிறான்.” என்ற த்வைபாயனர் கலகலவென நகைத்தார்.

Friday, September 9, 2016

படகு நகர்ந்தது!

“நான் வர மாட்டேன். மோசா என்னைக் கொன்று விட்டுத் தான் மறுவேலை பார்ப்பான்!” அலறிய க்ரிவி தன் நெற்றியில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டு அழத் தொடங்கினான். “ஓஹோ, க்ரிவி, ரொம்பவும் பயப்படாதே! நீ மிக வயதானவன். உன்னைக் கொல்வதால் அவனுக்கு எவ்விதப் பலனும் ஏற்படப் போவதில்லை. நீ வழி காட்டுவதற்குத் தான் எங்களுடன் வரப் போகிறாய்! ஆனால் நீ மறந்து கூட எங்களுக்கு துரோகம் நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் அடுத்த கணமே நீ கொல்லப்படுவாய்!” என்றார் குனிகர்.

“யஜமானரின் உத்தரவுப்படியே!” என்று தலை தாழ்த்திக் குனிகரை வணங்கினான் க்ரிவி. பின்னர் தொடர்ந்து, “நான் ஏற்கெனவே பாலமுனிவரின் உத்தரவுப்படியே நடந்து வந்திருக்கிறேன். இப்போது ஷார்மி அன்னையும் அப்படியே கூறினார். மோசாவை நான் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறேன். அவமதித்திருக்கிறேன். ஆகையால் இப்போது என்னால் அவனிடம் திரும்பிச் செல்ல முடியாது! உங்கள் சொல்படி தான் கேட்டாக வேண்டும். உங்களுக்கு உதவி செய்கிறேன்.” என்று ஒத்துக் கொண்டான்.

“அது! நீ இப்போது தான் சுய உணர்வுடன் பேசுகிறாய்!” என்ற குனிகர் ஷார்மியிடம் திரும்பினார்.”ஷார்மி அன்னையாரே, மற்றப் பெண்களும் இந்த பிரமசாரிகளும் இப்போது வந்திருக்கும் இந்தப் படகுகளில் படகோட்டிகளின் பாதுகாப்பின் கீழ் இருக்கட்டும். இரண்டு வில்லாளிகளையும் அவர்கள் பாதுகாப்புக்கென இங்கே விட்டுச் செல்கிறேன். இங்கே உள்ளவர்களுக்கு இந்தப் பாதுகாப்புப் போதும். மற்றவர்கள் அனைவரும் என்னுடன் வரவேண்டும்.” என்றார்.

“அப்படி ஏதும் நடக்கப் போவதில்லை!” என்றாள் ஷார்மி தீர்மானமாக. “குனிகரே, நீ ஆசிரமத்தை மீட்டெடுக்கிறாயோ அல்லது பாலமுனியைக் காப்பாற்றப் போகிறாயோ தெரியாது. எதுவாக இருந்தாலும் நானும் அங்கே இருந்தாக வேண்டும். நான் பாலமுனியைச் சிறு வயதிலிருந்து வளர்த்து வந்திருக்கிறேன். நான் அவனுடைய தாய்க்குச் சமமானவள்!” என்றாள். குரு பத்தினியாக அவளுடைய முதல் கடமையே அவள் வழியில் வருபவர்களை ஒழுங்கு செய்து ஒரு கட்டுப்பாடுடன் வைப்பது தான். இல்லை எனில் அவர்கள் கட்டுக்கடங்காமல் போய்விடுவார்கள். ஆகவே ஷார்மி இங்கேயும் தன் நிலைப்பாட்டைத் தொடர்ந்தாள். ஆனால் குனிகர் விடவில்லை. “அங்கே என்ன யுத்தமா நடக்கப்போகிறது? நீங்களும் வருவதற்கு? தேவை இல்லை!” என்று மறுத்தார். ஆனால் ஷார்மியோ அதிகாரத்தைத் தன் கைகளிலே எடுத்துக் கொண்டு விட்டாள்.

“ஹூம், இதோ பார் மந்திரி! நான் என் பிரபு ஆசாரிய கௌதமருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். அதோடு இல்லை. என் அருமைக் குழந்தைகளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களில் ஒருவனுக்கு நாங்கள் உபநயனம் கூடச் செய்வித்திருக்கிறோம். ஆகவே என்ன நடந்தாலும் சரி, குனிகரே! யுத்தமே ஏற்பட்டாலும் சரி! நானும் அங்கே வந்து தான் தீர்வேன். நாம் எல்லோரும் சேர்ந்து சென்று பாலமுனியை விடுவிப்போம் அல்லது அவரைக் கொன்றவர்களைத் தண்டிப்போம். என் வளர்ப்பில் இருந்த குழந்தைகளில் இப்போது மீதம் இருப்பவர்கள் பாலமுனியும் சுகரும் தான்! மற்றவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர்!” என்று சொன்ன ஷார்மியின் நெஞ்சைத் துக்கம் அடைத்தது. அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பின. அதைப் பார்த்த சுகர் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார். மீண்டும் சுகரைக் கட்டி அணைத்துக் கொண்ட ஷார்மி அந்த அணைப்பின் மூலம் கொஞ்சம் ஆறுதல் பெற முயற்சித்தாள்.

“தாயே, என்னுள் ஓர் எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது. நாம் வணங்கும் அனைத்துக் கடவுளரும் தந்தையைக் கொல்ல விடமாட்டார்கள். அவர் காப்பாற்றப்படுவார். அவர் ஓர் வசீகரமான அழகான வாழ்க்கையைத் தான் வாழ்ந்திருக்கிறார். அதோடு இல்லை. தர்மமே அவரால் காப்பாற்றப்பட்டிருக்கிறது. மேலும் அவர் உயிருடன் இருப்பதில் தான் தர்மம் மேலும் தழைத்தோங்கும். மந்திரி குனிகரே, நாங்கள் ஐந்து பிரமசாரிகளும் உங்களுடனேயே வருகிறோம்!” என்று முடித்தார் சுகர். அப்போது ஆசாரியர் வேத வியாசரின் சீடர்களில் ஒருவர் முன்னுக்கு வந்து ஏதோ பேசத் தொடங்கினார்.

“மந்திரி குனிகரே, நாங்களும் உங்களுடன் வருகிறோம். எங்கள் குருவை எங்களால் எப்படி ஒதுக்கித் தள்ள முடியும்? அவருக்கு என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்வதில் எங்களுக்கும் சிரத்தை உண்டு!” என்றார் அவர். வேறு வழியில்லாத குனிகர், “சரி, சரி, எல்லோருமே வாருங்கள். நீங்கள் அனைவரும் இப்போது வந்த படகுகளின் மூலம் கயிறு கட்டி இழுக்கப்பட்டு வந்து சேருங்கள். நான் அதற்குள்ளாக ஆசிரமப் பகுதியில் இந்தக் காட்டுவாசிகளின் தடயங்களே இல்லாமல் செய்து விடுகிறேன். மேலும் போரில் விருப்பமுள்ளவர்கள், போர்ப் பயிற்சி உள்ளவர்கள் மட்டும் என்னுடன் வாருங்கள்! மற்றவர்கள் மற்றப் படகுகளில் வரட்டும்!” என்று முடிவு செய்தார் குனிகர்.

“மந்திரி, நீங்கள் சிலபேர் தான் சண்டை செய்யக் கூடியவர்கள். ஆனால் அங்கே உள்ள பழங்குடியினர் உங்களை விட அதிகம்!” என்றாள் ஷார்மி. அதற்கு குனிகர், “கவலைப்படாதீர்கள் ஷார்மி அன்னையாரே! என்னுடன் வந்திருக்கும் வில்லாளிகளும் சரி மற்ற வீரர்களும் சரி, ஹஸ்தினாபுரப் படையிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சிறந்த வீரர்கள். அவர்கள் நமக்குப் பாதுகாப்புக் கொடுப்பதோடு அல்லாமல் தங்களையும் பாதுகாத்துக் கொள்வார்கள். இங்குள்ள படகோட்டிகள் அனைவரும் என்னுடன் வரவேண்டும்., இருவர் மட்டும் இங்கே தங்கிப் படகுகளைப் பார்த்துக் கொள்ளுங்கள். படகோட்டிகள் தங்கள் கைகளில் ஆயுதங்களை ஏந்திக்கொள்ளட்டும். குறைந்த பட்சமாக தண்டாயுதமாகவேனும் இருக்கட்டும். அல்லது ஈட்டிகளை ஏந்தட்டும். சரி, நாம் இப்போது கோதுலி ஆசிரமப் பகுதிக்குச் செல்வோம்.” என்று புன்னகை மாறாமல் சொன்னார் குனிகர். அனைவரும் படகுகளில் ஏறிக் கொள்ள அனைத்துக்கும் தலைமை வகித்து அரசப் படகு முன்னால் நகர்ந்தது.

Thursday, September 8, 2016

குனிகர் மறுக்கிறார்!

குனிகருக்கு ஷார்மியின் பேச்சில் இன்னமும் நம்பிக்கை வரவில்லை! ஆகவே அவர் செய்வதறியாது சற்றே யோசித்தார். பின்னர் ஷார்மியிடம், “தாயே, தாங்களும் தங்களுடன் வந்திருக்கும் பெண்களும் சற்று நேரம் இதோ இந்த யமுனைக்கரையில் அமர்ந்து இளைப்பாறுங்கள்! நாம் செல்லலாம்.” என்றவர் திடீரென நினைத்துக் கொண்டவர் போல, “தாயே, தாங்களே நேரில் பார்த்தீர்களா பாலமுனியை? உங்களுடன் பேசினாரா?” என்றும் கேட்டார். குனிகரின் முகத்தில் அவநம்பிக்கை பிரதிபலிப்பதைக் கண்ட சுகர் உடனே குறுக்கிட்டார். “மந்திரி குனிகரே! தந்தை மோசாவின் சிறைச்சாலையில் தான் இருக்கிறார். அவர் தான் எங்களை உடனே தப்பி உங்களுடன் போய்ச் சேர்ந்து கொள்ளச் சொல்லி அறிவுறுத்தினார். அவரால் வர முடியவில்லை. தன் முடிவைக் கடவுளரின் கைகளில் ஒப்படைத்து விட்டார்.” என்று சொல்லி நிறுத்தினார். அதற்குள்ளாக முனிஅவரின் சீடர்களும் தங்கள் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தனர்.

“அது சரி, முனிவரே! நீங்கள் ஏன் ஆசாரியரையும் உங்களுடன் அழைத்து வரவில்லை?” குனிகருக்கு அங்கே நிலவும் சூழ்நிலையைக் குறித்துச் சரியான புரிதல் இல்லை என்பது அவர் கேள்வியிலேயே தெரிந்தது. அப்போது ஷார்மி குறுக்கிட்டு, “குனிகரே, நீர் பாலமுனியின் நடவடிக்கையைக் குறித்து ஏதும் அறியவில்லையோ? அல்லது மறந்துவிட்டீரோ? அவர் ஒரு முறைஒரு முடிவு எடுத்தாரெனில் ஹஸ்தினாபுரத்தின் மொத்த யானைப் படைகளால் கூட அவரை ஒரு அங்குலம் நகர்த்த முடியாது! அது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டாள். “ஆனால் தாயே, இதற்குள்ளாக அவரைக் கொன்றிருப்பார்களே!” என்று வருத்தத்துடன் கூறினார் குனிகர். “ஆம், எங்களுக்கும் அது தெரியும்! மோசாவிடமிருந்து அவரைத் தப்புவிக்க எவ்விதமான வாய்ப்புகளும் இல்லை!” என்ற ஷார்மிக்கு குனிகரின் அவநம்பிக்கை குறித்து அவர் மேல் வெறுப்பு ஏற்பட்டது. ஆகவே தொடர்ந்து அவள், “இப்போது நீயும் இந்த ஷார்மி அன்னையிடமிருந்து தப்பப் போவதில்லை. நான் சொல்லுகிறமாதிரி கேட்டால் தான் பிழைப்பாய்!” என்றவளுக்கு வாஜ்பேய யக்ஞம் நடந்தபோது விருந்துபசாரம் செய்யும் தலைமையிடத்தில் தான் இருந்ததும், அப்போது இதே குனிகர் தன்னிடம் நடந்து கொண்ட விதமும் நினைவுக்கு வந்தது.

குனிகருக்கு நிலைமை மிகவும் மோசமாக இருப்பது புரிந்தது. அவர் க்ரிவியைப் பார்த்து, “க்ரிவி, உட்கார், உன் மகன்களையும் அமரச் சொல். உங்களுக்கெல்லாம் உணவளிக்கும்படி உத்திரவிடுகிறேன்.” என்றார். “அப்படியே இங்கே வந்திருக்கும் விருந்தினர்களுக்கும் தக்க உபசாரங்களைச் செய்கிறேன்.” என்றார். சுகர் குறுக்கிட்டு, “நாங்கள் எங்கள் வாக்குறுதிகளைக் கைவிட முடியாது. நாங்கள் ஐவரும் பிரமசாரிகள். சூரியனை முதலில் வணங்க வேண்டும். சந்தியாவந்தனங்கள் செய்ய வேண்டும். அக்னிஹோத்திரம் செய்ய வேண்டும். அதன் பின்னரே நீர் என்ன கொடுத்தாலும் எங்களால் சாப்பிட முடியும்!” என்றார். படகோட்டிகள் வந்து தப்பி வந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்தனர். ஷார்மியால் ஒரு கவளம் கூடச்சாப்பிட முடியவில்லை. அவள் மனம் தன் கணவன் கௌதம முனிவரையும் தாங்கள் இருவரும் பெற்றெடுத்த குழந்தைகளையும் நினைத்து நினைத்து கலங்கிக் கொண்டிருந்தது. குழப்பமானதொரு மனநிலையில் இருந்தாள் அவள். அதோடு த்வைபாயனரைக் குறித்த கவலையும் இப்போது சேர்ந்து விட்டது. இத்தனை நேரம் மோசாவின் கொடுங்கரங்களில் மாட்டிய த்வைபாயனர் இறந்தே போயிருப்பாரே! கலங்கினாள் அவள்.

அவளருகில் சுகர் நின்று கொண்டிருந்தார். மாறிக் கொண்டிருந்த அவளது முகபாவத்திலிருந்து அவள் மனதில் ஓடும் எண்ணங்களைப் புரிந்து கொண்டவர் போலப் பேசினார். “தாயே, பழைய நிகழ்வுகளை முற்றிலும் உங்கள் மனதிலிருந்து அழியுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து புதியதொரு உலகைப் படைப்போம்.” என்றார் ஆறுதலாக. ஷார்மி பரிதாபமாக அவரைப் பார்த்தாள். பின்னர் பொங்கி வரும் விம்மல்களினூடே சொன்னாள்:” நான் என் அருமைக் கடவுளான ஆசாரியரை இழந்தேன்; என் குழந்தைகளை இழந்தேன்; இதோ இப்போது என்னால் வளர்க்கப்பட்ட, “என் கிருஷ்ணன்” அவனையும் இழந்து விட்டேன். இனி இழக்க என்னிடம் ஏதுமில்லை. இந்த முதிர்ந்த வயதில் நான் உன் ஒருத்தனையே நம்புகிறேன். என்னைக் காப்பாற்ற உன்னை விட்டால் இப்போது வேறு யாரும் இல்லை!” என்றாள்.

அதைக் கேட்ட சுகர் தான் பெண்களைத் தொடுவதில்லை என்று செய்திருக்கும் சபதத்தைக் கூட மீறி அவளைக் கட்டி அணைத்து ஆசுவாசப் படுத்தினார். “தாயே, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? நான் தான் இருக்கிறேனே! அதை மறவாதீர்கள்!” என்றார். “ஆம், குழந்தாய்! நீ ஒருவன் தான் எனக்கு மீதி இருக்கிறாய்!” என்ற வண்ணம் அவளும் அவரைக் கட்டிக் கொண்டாள். அவள் கைகளைத் தூக்கித் தன் தோள்களில் போட்டுக் கொண்டு சுகர் மிகவும் அன்புடன் கூறினார்: “அம்மா, நீங்கள் விரக்தியில் மூழ்க வேண்டாம். கடவுளர் அனைவரும் நம்முடன் இருக்கின்றனர். அதோடு இல்லாமல் புனிதமான அக்னி கோதுலி ஆசிரமத்தில் எரியும் நாள் தொலைவில் இல்லை. விரைவில் வரும். உங்கள் சந்தோஷமான வாழ்க்கைக்குக் கடவுளிடமிருந்து எவ்விதமான மறுப்பும் வரப் போவதில்லை! நம்பிக்கையை இழக்காதீர்கள்!” என்று வேண்டினார். சிறிது நேரம் ஷார்மி வாய் விட்டு அழுதாள். பின்னர் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன்னைச்சரிப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தாள்.

தன்னுடைய இயல்பான நிலைக்கு வந்ததும் அவள் மீண்டும் குனிகரிடம் திரும்பினாள். “குனிகரே! விரைவில் ஹஸ்தினாபுரத்துக்கான நம் பயணத்தைத் தொடங்க வேண்டும்!” என்றாள். அதற்கு குனிகர் மறுப்பாகத் தலை அசைத்தார். “அம்மா, தயவு செய்து என்னை மன்னியுங்கள். நாம் இப்போது பயணத்தைத் தொடர முடியாது! நான் பரத குல இளவரசரான பீஷ்மரின் கட்டளைக்கு அடிபணிய வேண்டும். அதைத் தான் என் முதல் கடமையாகக் கொள்ள வேண்டும். அவருடைய கண்டிப்பான கட்டளை பாலமுனிக்கு எவ்விதமான ஊறும் நேராமல் பாதுகாக்கவேண்டும் என்பதே! தயவு செய்து மோசா என்னவெல்லாம் செய்தான் என்பதை விரிவாக எடுத்துச் சொல்லுங்கள்!” என்றார்.

ஷார்மிக்கு அலுப்பு மேலிட சுகரை அழைத்து அவரிடம் குனிகருக்கு விளக்கிச் சொல்லும்படி கேட்டுக் கொண்டாள்.  சுகரும் ஆசிரமத்தில் நடந்தவற்றையும் ஆசிரமவாசிகளுக்கு நடந்தவற்றையும் விவரித்துச் சொன்னார். ஆசாரிய கௌதமரும் அவர் குழந்தைகளும் கொல்லப்பட்ட விதத்தை விவரித்தார். ஆடுமாடுகளை அடிப்பது போல் அடித்துத் துன்புறுத்தி ஆசிரமப் பெண்களைப் பழங்குடியினரின் தலைமையகத்துக்கு இட்டுச் சென்றதையும் கூறினார். “இப்போது எங்கள் அனைவரின் நலனுக்காகவும்,பாதுகாப்புக்காகவும் தான் தந்தை தன்னைத் தானே தியாகம் செய்திருக்கிறார்.” என்றும் கூறினார்.  “அப்படியா? அப்போது நான் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். யோசித்துத் தான் ஹஸ்தினாபுரம் செல்ல வேண்டும்.” என்ற குனிகர் தொடர்ந்து, “எனக்கிடப் பட்ட கட்டளையே தொடர்ந்து பாலமுனியைக் கண்காணித்து அவருக்கு ஊறு நேராமல் காப்பாற்ற வேண்டும். அவருக்கு ஏதேனும் தாக்குதல் நடந்தாலோ அல்லது அவரை எவரேனும் கொன்றுவிட்டாலோ உடனுக்குடன் கொன்றவர்களைத் தேடி நான் அவர்களுக்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும்.” என்றார்.

“ஆனால் எங்களுக்கு பாலமுனிவரின் யோசனைகள் இவை தான் மந்திரியாரே! “நீங்கள் ஆசாரியர் என்று அவரைச் சொன்னாலும் சரி! அவருடைய கட்டளை இது தான்.நாங்கள் அனைவரும் விரைவில் ஹஸ்தினாபுரம் போய்ச் சேர வேண்டும் என்பதே!” என்றாள் ஷார்மி மீண்டும். “அதெல்லாம் சரிதான் தாயே! ஆனால் நான் காங்கேயரின் கட்டளையை அன்றோ மதிக்க வேண்டும்? அது என்ன ஆவது? ஹஸ்தினாபுரத்தின் மந்திரிகளில் ஒருவனான நான் முக்கியமாக இந்த வேலைக்கு நியமிக்கப்பட்டதே எப்பாடுபட்டவது ஆசாரியரைக் காப்பாற்றி ஆகவேண்டும் என்பதற்காகவே!” என்றார் குனிகர். “எப்படிச் செய்வாய் அதை? இத்தனை நேரம் அவனைக் கொன்றிருப்பார்கள் அந்த ராக்ஷசர்கள்!” என்றாள் ஷார்மி.

அப்போது குனிகர், “நான் இப்போது அரசப் படகை கோதுலியில் போய்க் கரையிறங்குமாறு ஓட்டிச் செல்லப் பணிக்கப்போகிறேன், ஆசிரமங்களை எரிப்பதும் ஆசாரியர்களை உயிருடன் எரித்துக் கொல்வதும், குழந்தைகளை அழிப்பதும் ஸ்ரோத்திரியர்களுக்குத் தீங்குகள் செய்வதும் ஹஸ்தினாபுரத்துக்கும், குரு வம்சத்துக்கும் அதன் இளவரசரான காங்கேயருக்கும் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தி! காங்கேயர் தர்மத்துக்காகப் பாடுபடுவதாக உறுதிமொழி எடுத்துள்ளார். தர்மத்தை மீறுபவர்கள் தக்க தண்டனை பெறுவார்கள் என்றும் கூறி இருக்கிறார். ஆகவே இத்தகைய அடாத செயல்களைச் செய்தவன் தண்டனை பெற்றே ஆகவேண்டும். அதை முடிக்காமல் என்னால் ஹஸ்தினாபுரம் வர முடியாது!” என்று தீர்மானமாகச் சொன்னார் குனிகர்.

அப்போது ஷார்மி, “நாங்கள் எப்படி ஹஸ்தினாபுரம் போய்ச் சேருவோம்?” என்று வினவினாள்.

“இப்போதைக்கு இல்லை! அது ஒரு புறம் இருக்கட்டும் தாயே! நேற்றுத் தான் நான் மூன்று படகோட்டிகளைச் சந்தித்தேன். அவர்களுடைய படகுடன் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி சொல்லி இருக்கிறேன். அந்தப் படகுகள் வந்ததும், ஷார்மி அன்னையாரும், அவருடன் வந்திருக்கும் பெண்களும், மற்ற பிரமசாரி இளைஞர்களும் அந்தப் படகுகளில் தங்கி இருக்கட்டும். க்ரிவியும் என்னுடன் வரவேண்டும்.”