Saturday, November 5, 2011

இதனுள்ளே பகை மாய்த்திட வல்லன் காண்!

அவ்வளவில் கண்ணன் சாத்யகியிடம் விடைபெற்றுக்கொண்டு தனக்காகக் காத்திருந்த குதிரையில் தாவி ஏறிக்கொண்டு வழிகாட்டியும் உடன்வர கிளம்பிப்போனான். சாத்யகியின் மனம் சுக்குநூறாக உடைந்துவிட்டது. நதிக்கரையோடு சென்ற கண்ணன் காலயவனன் தங்கி இருக்கும் பகுதிக்குக் காலை நேரம் வந்தடைந்தான். உடனே காலயவனனுக்கு கர்காசாரியாரின் சீடனும் கிருஷ்ணவாசுதேவனும் ஆகிய தான் மதுராவை ஒப்படைக்க வந்திருப்பதாய்ச் செய்தியும் அனுப்பினான். காலயவனனுக்கு இந்தச் செய்தி போய்ச் சேர்ந்ததும் அதிர்ச்சியும் ஆசரியமும் அடைந்தான். என்றாலும் கிருஷ்ணனை அழைத்துவர ஏற்பாடுகள் செய்தான். மிக மிக மோசமான ஒரு மனிதனின் முன்னிலையில் கண்ணன் நின்றான். அவனுடைய பயங்கரமான முகம், பிசாசுகளின் வாயைப் போல் தெரிந்த வாய், உதடுகள், கன்னாபின்னாவென ஒழுங்கு இல்லாமல் வளர்ந்திருந்த தாடி, மீசைகள், அவனுடைய ஆகிருதியான தேகம், முகத்தில் தெரிந்த கொடூரமான புன்னகை எல்லாமே அவன் எவ்வளவு கொடுமைக்காரன் என்பதைச் சொல்லாமல் சொல்லின.

அவனைச்சுற்றிலும் இருந்த காவலர்களுமே பயங்கரத்தோற்றத்தோடேயே காணப்பட்டார்கள். ஒரு சிலர் ஒழுங்காக ஆடை அணியாமலும், ஒரு சிலர் ஆடையே அணியாமலும் காணப்பட்டனர். நீண்ட செப்பு வாளும், தோலினால் ஆன உறைகளில் மூடப்பட்ட் குறுவாள்களும், சிலர் கைகளில் காணப்பட்ட சிறிய அளவிலான கோடரிகளும் அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் என்பதை நிரூபித்தது. கண்ணன் அவர்களைப் பார்த்துக் கொண்டே, காலயவனனிடம், "யவனர்கள் தலைவனே, நான் மதுராவிலிருந்து வந்துள்ளேன். நான் கிருஷ்ண வாசுதேவன். வசுதேவர் என்னும் யாதவகுல ஷூரர்களின் தலைவரின் மகன். கர்காசாரியாரின் சீடன். உமக்குக் கூட கர்கர் வித்தைகள் கற்பித்தார் என்பதையும் அறிவேன்." என்றான். கண்ணன் குரலில் மிகுந்த பணிவும் விநயமும் இருந்தது.

ஆனால் காலயவனனோ சீறினான்: "ஓஹோ, நீ தான் அந்த மாட்டிடையனா? கம்சனைக் கொன்றவன் நீதானே? ஜராசந்தனின் மாப்பிள்ளையான கம்சனைக் கொல்ல உனக்கு எவ்வளவு திமிர் இருந்திருக்க வேண்டும்!"

"ஆம். ஐயா." கண்ணன் நிதானத்தை இழக்காமலேயே பேசினான். "நான் இப்போது யாதவர்கள் அனைவரின் சார்பாகவும் வந்துள்ளேன். மதுராவை நீங்கள் ஆக்கிரமித்துக்கொள்ளலாம் என்பதைட் தெரிவிக்கவே வந்துள்ளேன்." என்றான். கொடூரமான பார்வையைக் கொண்ட காலயவனனின் கண்கள் ஒரு கணம் வெற்றித் திமிரில் பளிச்சிட்டன. "அது இருக்கட்டும். நீ தான் கிருஷ்ணன் இல்லையா? வசுதேவரின் மகன்! மாட்டிடையன்? நான் என் அருமை நண்பன் ஜராசந்தனுக்கு உன்னை என் வெறும் கைகளாலேயே கிழித்துப் போடுவதாக வாக்களித்திருக்கிறேன். அது சரி, நீ ஏன் இப்ப்போது இங்கே வந்தாய்? நீ சொல்லாவிட்டாலும் என் பயணம் என்னவோ மதுராவை நோக்கித்தான்."

"ஐயா, நான் இங்கே இப்போது வந்ததன் காரணமே மதுராவின் மேல் போர் தொடுத்து நீங்கள் அதை அடையவேண்டிய தேவை இல்லை. யாதவர்களே உங்களுக்கு அதைத் தரத் தயாராக இருக்கின்றனர். ஜராசந்தன் இன்னும் மதுராவை வந்து அடையவில்லை. ஆகவே தாங்கள் அவனுக்கு முன்னரே வந்து மதுராவை உங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம். செல்லும் சரியான வழியை நான் கூடவே வந்து உங்களுக்குக் காட்டுகிறேன்."

காலயவனன் தன் வாளை உருவிக்கொண்டே, "அடே, இடையா! உன்னுடைய தந்திரவேலைகளை என்னிடம் காட்ட நினைக்கிறாயா?" என உறுமினான்.

"ஐயா, இது என்ன தாங்கள் கூறுவது? நான் தன்னந்தனியாக அல்லவோ வந்துள்ளேன். நீங்களோ உங்கள் பரிவாரங்களுடன் இருக்கிறீர்கள். நிலவைச் சுற்றிலும் எண்ணிக்கையில்லா நக்ஷத்திரங்கள் காணப்படுவது போல் உங்களைச் சுற்றியும் எண்ணிக்கையில்லா படைவீரர்கள் இருக்கின்றனரே.." என்றான் கண்ணன்.

"உன்னை என்ன செய்யவேண்டும் என்பதை நான் நன்கறிவேன்." காலயவனன் கூறிவிட்டுத் தன் தளபதிகளுடன் கலந்து ஆலோசித்துச் சில கட்டளைகளைப் பிறப்பித்தான். அவர்களோடு அவன் பேசிய மொழி கிருஷ்ணனுக்குப் புரியவில்லை. ஒரு துணைத்தளபதியின் பொறுப்பில் கண்ணன் ஒப்படைக்கப்பட்டான். மற்றவர்களோடு கலந்து ஆலோசித்த காலயவனன் அன்றைய தினத்தையும் அங்கேயே கழிக்க முடிவெடுத்தான். மறுநாள் கண்ணனை அழைத்து, ஜராசந்தனுக்கு முன்னால் மதுராவைத் தான் அடையவேண்டிய வழிகளைப் பற்றிக் கேட்டான். இன்றைக்கு அவன் குரலில் அவநம்பிக்கை குறைந்து காணப்பட்டது.

"மதுராவைச் சீக்கிரமாக அடையக்கூடிய குறுக்குவழியை நான் காட்டுகிறேன் இந்த லவனிகா நதியின் வடகரையோடு சென்றால் மதுராவை அடைய இருபது நாட்கள் பிடிக்கும். நான் உனக்கு அதைவிடக் குறுக்கு வழியைக் காட்டுகிறேன். அகரவனம் வழியாகச் சென்றால் விரைவில் மதுராவை அடையலாம். ஜராசந்தன் அதன் பின்னர் ஒரு மாதம் கழித்தே மதுராவை அடைய முடியும்." கண்ணன் கூறினான்.

"நீ உண்மைதான் பேசுகிறாய் என்பதை நான் எவ்வாறு நம்புவது?" என்றான் காலயவனன். "என்னுடன் வா. புரிந்து கொள்வாய். என் வழிகாட்டியும், நானும் உங்கள் அனைவருக்கும் வழிகாட்டி அழைத்துச் செல்கிறோம்." என்றான் கண்ணன். "ம்ம்ம்ம்ம்,, நீ மட்டும் தவறான பாதையில் என்னை அழைத்துச் சென்றாயானால் உன்னை உயிரோடு கொளுத்திவிடுவேன்." காலயவனன் குரலின் உறுதி அவன் சொன்னதைச் செய்வான் என்பதைக் காட்டியது.

"ஓ, அது எனக்குத் தெரியாதா? அதோடு எப்படி இருந்தாலும் உன் குறிக்கோள் என்னைக் கொல்வதுதான். நீ அப்படித்தானே சபதம் செய்திருக்கிறாய்? எந்த வழியில் சென்றாலும் என் உயிர் உன் கையில் அல்லவா? அதனால் எனக்கு இது ஒரு பொருட்டல்ல. "

காலயவனன் சத்தம் போட்டு பயங்கரமாகச் சிரித்தான். ஆனாலும் அவனுக்கு உள்ளூர ஆச்சரியம் தான். அவன் முன்னிலையில் நடுங்காதவர்களே கிடையாது. இந்தச் சிறுவனோ இவ்வளவு தைரியமாகப் பேசுகிறானே!

1 comment:

priya.r said...

கண்ணனின் தந்திரமும் தைரியமும் இந்த பதிவிலும் தெரிந்து கொள்ள முடிகிறது