Wednesday, November 16, 2011

அறநீதி முறை வழுவாமலே எந்த நேரமும் பூமித் தொழில் செய்து!

மறுநாள் காலயவனனின் உடல் கண்டெடுக்கப்பட்டு தக்க மரியாதைகளுடனும், நியமங்களுடனும் கடைசிச் சடங்குகள் செய்யப்பட்டன. கிருஷ்ணன் இந்தத் துறவிகளின் வித்தியாசமான நடவடிக்கைகளைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். அங்கே மூட்டப்பட்டிருந்த நெருப்பைச் சுற்றி அமர்ந்த வண்ணம் அவர்கள், "சம்போ மஹாதேவா!" என்னும் மந்திரத்தைப் பல மணிநேரம் உச்சரித்த வண்ணம் இருந்தனர். ஒருநாள் ஆவல் பொறுக்கமுடியாமல் கிருஷ்ணன் அந்தப் பெரிய துறவியிடம், "குருவே, இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து நீங்கள் வசிப்பதன் காரணம் என்னவோ?" என்று கேட்டுவிட்டான்.

அதற்கு அவர், "குழந்தாய், நாங்கள் இங்கே பல வருடங்களாக வசிக்கிறோம்." பழைய விஷயங்களை நினைவு கூரும் குரலில் அவர் தொடர்ந்தார். "ஏன், உன் தந்தை கூடப் பிறந்திருக்க மாட்டார். அதற்கும் முன்னரே நாங்கள் இந்தக் குகைக்கு வசிக்க வந்துவிட்டோம். இவை முசுகுந்தன் என்னும் அரசனின் தங்குமிடமாக இருந்து வந்தன. சத்ய யுகத்தில், இந்திரனுக்காக அவனுக்கு உதவி செய்யவெனப் போரிட்ட ஓர் உயர்ந்த மன்னனாம் அந்த முசுகுந்தன். இந்த குகைகளில் அவன் ஓய்வெடுக்க வந்து தங்குவானாம். இவை முசுகுந்தன் குகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. பல காலமாய் இங்கே தங்குவதால் மக்கள் என்னையும் "முசுகுந்தன்" என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்."

"அப்படியா ஐயா, அது சரி, நீங்கள் ஏன் இவ்வளவு தனிமையான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?" கிருஷ்ணன் தொடர்ந்து கேட்டான்.

"மகனே, வாழ்க்கையும், மனிதர்களும் எனக்கு அலுத்துவிட்டனர். எவர்க்கும் பயனில்லாமல் ஒரு வாழ்க்கையை வாழும் இந்த மனிதர்களின் கேவலமான, கொடூரமான நடவடிக்கைகளைக் கண்டு வெறுத்துப் போய்விட்டேன். ஒரு காலத்தில் நான் ஓர் மாபெரும் தலைவனாக இருந்தேன். மனைவி, மக்கள், நண்பர்கள் என அனைவரும் உண்டு. அவர்களை எல்லாம் துறந்துவிட்டேன். அமைதியை நாடி இங்கே வந்துவிட்டேன். இங்கே அமைதி மட்டும் இல்லை; என்ன என்னவோ கிடைத்துவிட்டன." மிகவும் மகிழ்வோடு கூறினார் அந்தத் துறவி.

"குருவே, க்ஷமிக்கவேண்டும். வாழ்க்கை அதிலும் மனிதர்கள் வாழும் இல்வாழ்க்கையைப் பயனற்றது எனக் கூற முடியாது. " மறுத்துக் கூறினாலும் கிருஷ்ணன் குரலில் தெரிந்த விநயம் துறவியைக் கவர்ந்தது. "வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு, முழுமையாக, நல்ல வலுவோடும், ஆற்றலோடும், அழகோடும் அனுபவித்து சந்தோஷமாக வாழ்ந்து காட்டவேண்டும். விதியை மதியால் வெல்லவேண்டும். இது தான் இல்வாழ்க்கையின் உண்மையான தர்மம்." கண்ணன் முடித்தான்.

"மகனே, என் வயதுக்கு வருகையில் நீ வாழ்க்கை எவ்வளவு பயனற்றது! அதிலும் இல்வாழ்க்கையின் துன்பங்களைப் புரிந்து கொள்வாய். ஒருவேளை அப்போதும் நான் உயிரோடு இருந்தேன் எனில் நீ என்னைத் தேடி அலுத்துச் சலித்து வருகையில் நான் உன்னை முழு மனதோடு வரவேற்பேன். துன்பங்களும், துயரங்களும், ஏமாற்றங்களும் நிறைந்த வாழ்க்கையைத் துறப்பதே தர்மம் ஆகும்." துறவி முடித்தார்.

கண்ணன் விடவில்லை. "குருவே, மன்னியுங்கள். என்னால் இதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முற்படுவது அவ்வளவு துயரம்; அதிலிருந்து தப்பிவிடவேண்டும்; என்கிறீர்கள். அதுதான் தர்மம் எனவும் கூறுகிறீர்கள். எனில் படைப்புக்கடவுள் ஏன் தொடர்ந்து தன் தொழிலைச் செய்து வருகிறான்?"

"நீ உன் வாழ்க்கையை எவ்வாறு வாழ்ந்து வருகிறாய், மகனே?"

"வருவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன், குருவே. என்ன கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அதுவே என் தர்மம். அப்படி வாழ்வது தான் சிறப்பாகவும் தோன்றுகிறது எனக்கு."

துறவி சிரித்தார். அவர் குரல் வறண்டு காணப்பட்டது. எவ்வித உணர்ச்சியையும் காட்டாமலே அவர் கண்ணனிடம் மேலும் பேசினார்:" நீ இன்னும் உன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கவே இல்லை, மகனே. நீ போகவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. உனக்கு எவ்வித அனுபவமும் ஏற்படவும் இல்லை. உலகில் வாழ்வதன் கொடூரத்தை நான் கண்டு அனுபவித்தாற்போல் நீ பார்த்திருக்கவே முடியாது." அவர் மனதினுள் கிருஷ்ணன் மேல் அனுதாபம் ஏற்பட்டது. தவறான வழியில் இந்த இளைஞன் செலுத்தப்படுகிறானே எனப் பரிதாபப்படுபவர் போல் காணப்பட்டார். " உனக்கு அமைதி, சாந்தி, திருப்தி வேண்டுமானால் உலக வாழ்க்கையைத் துறந்துவிடு." என்றார் முடிவாக.

2 comments:

priya.r said...

/வருவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன், குருவே. என்ன கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அதுவே என் தர்மம். அப்படி வாழ்வது தான் சிறப்பாகவும் தோன்றுகிறது எனக்கு//

இதை படிக்கும் போது ஏனோ மனதில் ஒரு நிம்மதி உருவாகிறது

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் அல்லது வாழ வேண்டும் என்பதற்கு ஒரு தெளிவு ,வழி கிடைத்த மாதிரி இருக்கிறது என்று கூட சொல்லலாம்

பதிவுக்கு நன்றி கீதாமா

priya.r said...

/வருவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன், குருவே. என்ன கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அதுவே என் தர்மம். அப்படி வாழ்வது தான் சிறப்பாகவும் தோன்றுகிறது எனக்கு//

இதை படிக்கும் போது ஏனோ மனதில் ஒரு நிம்மதி உருவாகிறது

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் அல்லது வாழ வேண்டும் என்பதற்கு ஒரு தெளிவு ,வழி கிடைத்த மாதிரி இருக்கிறது என்று கூட சொல்லலாம்

பதிவுக்கு நன்றி கீதாமா