Wednesday, November 30, 2011

கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை!

ஏழு வருடங்களுக்கு முன்னர் வந்த ஒரு சரத் ருதுவில் என் பதின்மூன்று வயதில் உங்களை முதன்முதல் பார்த்தேன். அப்போதே ஜன்ம ஜன்மாந்திரங்களுக்கும் நீ என்னுடைய துணைவனாக வந்திருக்கிறாய்; இனி வரும் ஜன்மங்களிலும் தொடர்ந்து துணையாக வருவாய் எனப் புரிந்துவிட்டது எனக்கு. என்னை அப்போதே, அன்றே, அந்த நிமிடமே உன்னிடம் ஒப்புக் கொடுத்துவிட்டேன் நான்.


நான் விழித்திருந்தாலும், தூக்கத்திலும், என் கனவுகளிலும், நனவுகளிலும் என் முன்னே தெரிவது உங்கள் உருவம் தான். நான் உங்களுடையவள் என்பதை ஒரு நாளும் மறக்கவில்லை. அதே போல் நீங்களும் என்னுடையவர் என்பதையும் மறக்க மாட்டேன். ராக்ஷசனும், கொடுங்கோலனுமான ஜராசந்தனால் சுயம்வரம் வைசாக மாதம் அக்ஷயத்ரிதியை அன்று என நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. என் பிரபுவே! எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லையே! நான் என்ன செய்வேன்!


என் எதிரே எந்த வழியும் புலப்படவில்லை. மணந்தால் வாசுதேவ கிருஷ்ணனின் மனைவியாக ஆகாசவாணி, பூமாதேவி சாட்சியாக மணக்க விரும்புகிறேன். எனக்கு வேறெதுவும் தேவையில்லை. நான் ஏற்கெனவே உம்மை என் பதியாக வரித்துவிட்டேன். என் தேவனே! வா, வந்து என்னை ஆட்கொள்வாயாக! உன்னுடைய கருடக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டு உன் ரதத்தில் கிளம்பி வருவாய்! இந்த மடலைக் கண்டதும் சற்றும் தாமதிக்காதே! தாயைப் பிரிந்த பசுங்கன்று எவ்வாறு துடித்துக் கதறுமோ அப்படி உனக்காக நான் கதறுகின்றேன்.


என் தலைவா, நீ வரும் வேளையில் நான் உயிருடன் இருந்தால் என்னை உன்னுடன் அழைத்துச் சென்று மணம் புரிந்து கொள். அல்லது….அல்லது……. விதிவசத்தால் … உன்னுடைய வருகை தாமதம் ஆனால், என்னுடைய உயிரற்ற உடலை நீ தான் எடுத்துச் சென்று தகனம் செய்ய வேண்டும். அந்தச் சாம்பலை நீ வசிக்கும் துவாரகை நகரெங்கும் தூவிவிடு. இது என் வேண்டுகோள்.

ருக்மிணி மேற்கண்ட கடிதத்தைத் தன் கண்ணீரால் எழுதி ஜாஹ்னுவிடம் கொடுக்க அவனும் அதை எடுத்துக்கொண்டு அவந்திக்கு விரைந்தான்.

3 comments:

அப்பாதுரை said...

beautiful!வேறே எதுவுமே தோணவில்லை.

sambasivam6geetha said...

நன்றி அப்பாதுரை. உங்கள் எழுத்தைப் பார்க்கையில் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. :))))

priya.r said...

சென்ற பதிவின் தலைப்பு

கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ! காற்றில் கரைவ...

இந்த பதிவுக்கும் பொருந்துகிறது !

ருக்மணியின் கடிதம் மெய் சிலிர்க்க வைத்தது !

பதிவுக்கு நன்றி கீதா மா